Sunday, June 26, 2011

ஊழல், கறுப்பு பணம் விவகாரம் : அன்னாஹசாரே, ராம்தேவ் மீண்டும் போராட்டம் ; மாநிலம் வாரியாக செல்ல முடிவு.

ஊழல், கறுப்பு பணம் விவகாரம்: அன்னாஹசாரே, ராம்தேவ் மீண்டும் போராட்டம் ; மாநிலம் வாரியாக செல்ல முடிவு

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர கோரி காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கூட்டுக் குழு அமைத்தது. 9 தடவை இந்த குழு கூடியும் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

அதுபோல கறுப்பு பணத்தை மீட்க யோகாகுரு பாபாராம்தேவ் டெல்லியில் கடந்த 4-ந்தேதி நடத்திய உண்ணாவிரதமும் முறியடிக்கப்பட்டது. ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக அன்னாஹசாரே, பாபாராம்தேவ் இருவரும் மீண்டும் போராட்டத்தில் குதிக்க தீவிரமாகி வருகிறார்கள்.

அடுத்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி முதல் டெல்லியில் கறுப்பு பணத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பாபாராம்தேவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது என்னுடைய சட்டரீதியான, ஜனநாயக கடமை. அந்த மாற்றத்தை செய்வது தர்மமாகும். எனது இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டேன். எனது திட்டத்தில் நான் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளேன் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், யோகாவும், ஆன்மீகமும் நிச்சயம் அரசியலை மாற்றும். கறுப்பு பணம் நிச்சயம் மீட்கப்படும் என்றார். ஜூலை 26-ந்தேதி போராட்டத்துக்கு திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காந்தியவாதி அன்னா ஹசாரே ஆகஸ்டு 16-ந்தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். வரும் 5, 6-ந்தேதிகளில் டெல்லியில் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலுக்கு எதிராக நடத்த வேண்டிய தொடர் போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.

அதன்பிறகு அன்னா ஹசாரே ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்ட உள்ளார். முக்கிய நகரங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இது நாடெங்கும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இதற்கிடையே முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சிகளில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பா.ஜ.க. தலைவர் அத்வானி, மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ்கரத்தை சந்தித்து பேசி உள்ளனர்.

அடுத்தக்கட்டமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ஏ.பி.பரதன் ஆகியோரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

No comments: