Sunday, March 20, 2011

வருத்தம் அளிப்பதாக வைகோவுக்கு ஜெயலலிதா கடிதம்

மதிமுக தேர்தலை புறக்கணிக்கும் என்று அறிவித்திருப்பது, தனக்கு வருத்தம் அளிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோவுக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், "அதிமுக தலைமையிலான கூட்டணியில் தங்கள் தலைமையிலான மதிமுக 2006-ம் ஆண்டு முதலே அங்கம் வகித்து வருகிறது.

நடைபெற இருக்கின்ற 2011 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளையும், அ.தி.மு.க. வின் தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதையும் முதிர்ந்த அரசியல்வாதியான தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்தச் சூழ்நிலையில், வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி 21 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்பதையும், தங்கள் கட்சிக்கு 12 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கித் தருகிறேன் என்பதையும் கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் மூலம் தகவல் சொல்லி அனுப்பி இருந்தேன்.

அவர்களும் தங்களை நேரில் சந்தித்து இதைத் தெரிவித்தார்கள். இருப்பினும், ம.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கும் என்று தாங்கள் அறிவித்து இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது. தங்களுடைய முடிவு எப்படி இருந்தாலும், உங்களுடைய அன்புச் சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் உங்கள் மீது எப்போதும் இருக்கும்," என்று அந்தக் கடித்தத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: