Sunday, March 20, 2011

நீதிபதி பி.டி.தினகரன் மீது 16 ஊழல் குற்றச்சாட்டு.

நீதிபதி பி.டி. தினகரன் மீது 16 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நீதிபதி அட்லப் ஆலம், கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். கேகர், மூத்த வழக்கறிஞர் பி.பி. ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்த மாநிலங்களவை நியமித்த நீதிபதிகள் குழு அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. அவற்றை நீதிபதி தினகரனுக்கு அனுப்பி, அதற்கு ஏப்ரல் 9-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தினகரன் மீதான குற்றச்சாட்டுகளில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்தது, பொதுச் சொத்துகளை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்தது, அதிலும் குறிப்பாக தலித் மற்றும் சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து 5 வீட்டுமனைகளை தனது மனைவி மற்றும் 2 மகள்களுக்கு வாங்கியது,

பினாமி பெயரில் பரிவர்த்தனை நடத்தியது, தமிழக அரசின் நில உச்ச வரம்பு சட்டத்திற்கும் அதிகமாக விவசாய நிலங்களை வாங்கியது, விற்பனை நடவடிக்கைகளின்போது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது, முத்திரைத்தாள் குறைத்து வாங்கியது, சட்டவிரோத கட்டுமானம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது நிர்வாக ரீதியில் நேர்மையற்ற வகையில் செயல்பட்டு நீதிபதிகளை சட்டவிரோதமாக மாறுதல் செய்தது, ஊழியர்களை நியமித்தது உள்ளிட்டவை தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள தினகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.டி. தினகரன் நியமிப்பது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது கூறப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரது நியமனம் நிறுத்திவைக்கப்பட்டது.

பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் 2009-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி கொண்டு வரப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்தார்.

இந்தக் குழுவுக்கு தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு சென்னை வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தினகரனுடன் இணைந்து சென்னையில் பணியாற்றியவர் சிர்புர்கர் என்றும் அவர் விசாரிக்கக் கூடாது என்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்தது.

தினகரன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் முன்னதாக அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான பல்வேறு ஆதாரங்களை குழு திரட்டியுள்ளது. குறிப்பாக வருமான வரித்துறை சான்று, தமிழக அரசு ஆவணங்களையும் ஆதாரமாக திரட்டியுள்ளது.

No comments: