Wednesday, January 4, 2012

முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை - நிபுணர் குழு. - புதிய அணை, கேரள காங்கிரஸ் பின்வாங்காது.



முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்கும் என்றும், 120 அடியாக குறைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு திட்டவட்டமாக கூறி விட்டது.

மேலும், நிலநடுக்கத்தால் அணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் ஐவர் குழு விட்டது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையை நவீனத் தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தினால் போதும். புது அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் கேஎம் மாணி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையில் சமீபத்தில் நேரடியாக ஆய்வு நடத்திய தொழில்நுட்ப உறுப்பினர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அளித்த ஆய்வறிக்கை நேற்று ஐவர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக, கேரள வக்கீல்களின் வாதங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதன் முடிவில் கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அறிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் ஆராய்ந்து அளித்த அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அணைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

மேலும், முல்லைப் பெரியாறு, வைகை, சிறுதோணி உள்ளிட்ட அணைகள் சமீபத்திய நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனவா என்று பார்த்த போது, எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இக்கருத்தை ஐவர் குழுவும் ஏற்கிறது.

தத்தேயும், மேத்தாவும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர் என்று கூறி, அவர்களை நீக்க வேண்டுமென்று கேரளா சார்பில் கூறிய புகாரில், உண்மையில்லை. எனவே இரு உறுப்பினர்களையும் குழுவிலிருந்து நீக்க முடியாது. கேரளாவின் புகார் நிராகரிக்கப்படுகிறது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அணையின் நீர்மட்டத்தை குறைப்பதா, வேண்டாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பாக கேரள எம்.பிக்கள் பிரதமருக்கு அளித்த மனு விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையில் உடைப்போ, விரிசலோ இல்லை என்று கேரள அரசின் வக்கீல்களே தெளிவாக கூறியுள்ளனர். எனவே இதையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ஐவர் குழு தனது அறிக்கையை தாக்கல்செய்ய கால அவகாசம் கேட்கப் போவதில்லை. பிப்ரவரி 28ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை குழு தாக்கல் செய்யும். அடுத்த கூட்டம் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறும். அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தமிழகத்திற்குப் பெரும் சாதகம்

ஐவர் குழுவின் இந்த முடிவு தமிழகத்திற்கு பெரும் சாதகமானதாக கருதப்படுகிறது. கேரளா கூறிய அனைத்துப் புகார்களும், குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்பது அம்பலமாகி விட்டதாலும், அதன் குற்றச்சாட்டுக்கள், கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டதாலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழகத்திற்குச் சாதகமாகவே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை - நிபுணர் குழு.

முல்லைப் பெரியாறு அணையை நவீனத் தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தினால் போதும். புது அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தொழில்நுட்ப நிபுணர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அணைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கையை நேற்று முன்தினம் அவர்கள் ஐவர் குழுவிடம் வழங்கினர். நேற்று இந்த ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐவர் குழுத் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்திடம் உறுப்பினர் தத்தே கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. அதில் நிலநடுக்கத்தால் எந்த வகையான பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போதைய அணையை மேலும் பலப்படுத்தினால் போதுமானது. அதற்கு நவீனத் தொழில்நுட்பங்கள் பல உள்ளன. அதைக் கடைப்பிடித்தால் போதும். உச்சநீதிமன்றம் கூறிய பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில் புதிய அணை கட்டுவதற்கான தேவையும் இல்லை, அவசியமும் இல்லை என்றார்.

புதிய அணைக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் - கேரள அமைச்சர் பேச்சு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கேரள நிதியமைச்சர் கேஎம் மாணி கூறினார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. அப்போது புதிய அணைக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு சொந்தமான இடத்தில்தான் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. தார்மீக அடிப்படையில் இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.

உச்சநீதிமன்றத்தின் உயர்நிலை குழுவுக்கு கூட புதிய அணை கட்ட கூடாது என்று கூற உரிமை இல்லை. புதிய அணைக்கான போராட்டத்தில் இருந்து கேரள காங்கிரஸ் பின்வாங்காது.

தற்போது உள்ள அணை மிகவும் பலகீனமாக உள்ளது. இதனால் தான் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. அணை பகுதியில் வசிக்கும் மக்களின் பீதியை போக்க ஓரே வழி புதிய அணை கட்டுவதுதான். கேரள மக்களின் அச்சத்தை தமிழ்நாடும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாணி கூறினார்..

No comments: