Tuesday, December 13, 2011

நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை தண்ணீரை திறந்து விடாமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் கேரளஅரசை நம்பமுடியாது. : காங். எம்.எல்.ஏ. விஜயதரணி.



குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக கேரள எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கேரளாவின் இன்னொரு எல்லையான குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் இப்பிரச்சினைக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக பாறசாலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது பற்றி குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதை கேரள அரசு நிறைவேற்றவில்லை. மாறாக முல்லை பெரியாறு அணையை உடைக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

உள்ளபடியே அணையில் நீரை தேக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அதை செய்யாமல் மாற்று கருத்தை தெரிவிக்கும் கேரள அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்று உம்மன்சாண்டி அரசு கூறுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முதலில் அவர்கள் நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதற்கு பிறகு முல்லை பெரியாறு பிரச்சினைக்கு போராடட்டும். முல்லை பெரியாறில் பாதுகாப்புத்தான் பிரச்சினை என்றால் அணையை வலுப்படுத்தும் ஏற்பாடுகளை செய்யட்டும். அதை விடுத்து புதிய அணை கட்டுவோம் என்பதை ஒரு போதும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது.

இது தொடர்பாக நான் டெல்லியில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்து உள்ளேன். அதற்கான நகலை தமிழக முதல் அமைச்சருக்கும் அனுப்பியுள்ளேன்.முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் வருகிற 15 ந்தேதி கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கருத்தாக முல்லை பெரியாறில் புதிய அணை கட்டக்கூடாது என்பதை பதிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: