Monday, December 19, 2011

சசிகலாவும் 69 எம்.எல்.ஏக்களும், ஜெயலலிதா அதிரடி முடிவு.



அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா 19.12.2011 வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்)

2. ம.நடராஜன்

3. திவாகர் (மன்னார்குடி)

4. டி.டி.வி. தினகரன்

5. வி. பாஸ்கரன்

6. வி.எம்.சுதாகரன்

7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்

8. எம்.ராமச்சந்திரன்

9. ராவணன்

10. மோகன் (அடையாறு)

11. குலோத்துங்கன்

12. ராஜராஜன்

13. மகாதேவன்

14. தங்கமணி

ஆகியோர் இன்று (19.12.2011) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிக்கையில் கூறி உள்ளார்.

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையால் சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்படவிருப்பதை முன்னரே அறிந்த சசிகலா 2 ஸ்கார்பியோ கார்களில் தனது உடைமைகளுடன் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டம்

அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா முக்கிய அதிகார மையமாக உருவெடுத்து பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் சமுகமான முக்குளத்தோர் சமுகத்தை சார்ந்த எம்.எல்.ஏ வினர் 69பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்



சசிகலாவின் அதிகாரத் தலையீடு

உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார்.

உளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அவரது செயல்பாடுகள் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து பொன் மாணிக்கவேலை தூக்கினார். இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.

அதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.

இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.




ஜெ. வீடு, அதிமுக அலுவலகம் முன்பு இனிப்பு வழஙகி கட்சியினர் மகிழ்ச்சி.

சென்னையில் ஜெயலலிதாவின் இல்லம் முன்பு கூடிய அதிமுகவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். அதிமுக தலைமை அலுவலகம் முன்பும் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டிவனம், உளுந்தூர் பேட்டை, விழுப்புரத்திலும் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்து கொண்டாடினர்.

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை வரவேற்று, உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் பழனிவேலு, நகர செயலாளர் துரை, ஒன்றிய சேர்மேன் பாலு உள்பட அதிமுகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர், உளுந்தூர் பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஜெயலலிதா, சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொள்வாரா?

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

No comments: