Thursday, December 8, 2011

எங்களைப் பற்றிக் கவலைப்படாத கேரள அரசு - மலையாள வியாபாரிகள் குற்றச்சாட்டு.



முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கேரள வியாபாரிகள் தங்களது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்பில் குதித்துள்ளனர். மேலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தமிழர்களையும், தமிழர் வாகனங்களையும், ஐயப்ப பக்தர்களையும் சமூக விரோத கும்பல் கடுமையாக தாக்கியது. பணம் பறிப்பு, பொருட்களை நஷ்டப்படுத்துவது, பெண்களை மானபங்கப்படுத்துவது என்று அநாகரீகமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். ஆனால் இதுதொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.

இதனால் கொதித்தெழுந்த தமிழகத்தில் சிலர் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் கேரளாக்காரர்களின் கடைகள், வர்த்தக நிறுவனங்களைத் தாக்கினர். இதையடுத்து போலீஸார் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த பலரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த கடைக்காரர்கள், தங்களது நிறுவனங்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்கும்வகையில் தமிழக அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் இன்று கடைகளை மூடியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஈரோட்டில் கேரளத்தவர் நடத்தும் டீக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டம் குறித்து ஈரோடு மலையாளிகள் அமைப்பைச் சேர்ந்த சைகோல் என்பவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு இரு மாநில அரசுகளும் நடப்பதே சரியானது. அதை விட்டு விட்டு வன்முறையில் கேரள மக்கள் இறங்கியது தவறானது, கண்டனத்துக்குரியது.

அங்குள்ள தமிழர்களைத் தாக்கியதால்தான் தமிழகத்தில் மலையாளிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. எங்களைப் பற்றி கேரள அரசும் சரி, அங்குள்ள கட்சிகளும் சரி சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது வருத்தம் தருகிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை பொருத்தமட்டில் நாங்கள் தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம். தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவாக இருப்போம். கேரளாவில் நிலைமை மோசமானால் எங்களது ஆதரவும் தமிழக அரசுக்கு அதிகரிக்கும் என்றார் அவர்.

1 comment:

ad said...

அப்பிடிப்போடு... போடு..!