Tuesday, September 20, 2011

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்.


Justify Full

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1994-ல் டக்ளசுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவரை உடனடியாக கைது செய்யுமாறு சென்னை போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் இலங்கைக்கான வெளியுறவு துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978-ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.

ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடுத்தக்கட்ட விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

No comments: