Wednesday, July 20, 2011

தலைமறைவான வீரபாண்டி ஆறுமுகத்தை பிடிக்கத் தனிப்படை.



சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில் சுமார் 21 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 1959-ம் ஆண்டு முதல் 31 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.

2008-ல் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி கே.சுரேஷ்குமார் என்பவர் இந்த நிலம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி அங்கிருந்தவர்களை காலி செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், வீடுகள் இடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.

இது குறித்து, போலீஸில் புகார் அளித்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி பிரச்னைக்குரிய நிலத்தைப் பார்வையிட்ட அப்போதைய கோட்டாட்சியர் ஏ.பாலகுருமூர்த்தி, அங்கம்மாள் காலனி நிலத்தில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தவும், நிலத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் 2008-ல் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 11-ல் மனு அளித்த அங்கம்மாள் காலனி பொதுமக்கள், அப்போதைய கோட்டாட்சியர் அளித்த பொய்யான அறிக்கையை ரத்து செய்யவும், நிலத்தைப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

இது குறித்து, சேலம் மாநகரக் குற்றப்பிரிவு, நில அபகரிப்பு மீட்புப் பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், அவரது தம்பி மகனும், 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவருமான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கெளசிக பூபதி, சேலம் மாநகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி,

முன்னாள் கோட்டாட்சியர் ஏ.பாலகுருமூர்த்தி, காங்கிரஸ் பிரமுகர் உலகநம்பி, மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஜிம் ராமு, கூல் மகேந்திரன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தன், பெட்டிக்கடை கனகராஜ், முருகேசன் (எ) மெக்கானிக் முருகன், அதிமுக பிரமுகரான கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில், எம்.ஏ.டி. கிருஷ்ணசாமி, பெட்டிக்கடை கனகராஜ், முருகேசன் (எ) மெக்கானிக் முருகன் ஆகிய 3 பேரை மட்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147 (சட்ட விரோதமாக கூடுதல்), 148 (ஆபத்தை விளைவிக்கும் ஆயுதம்), 447 (அத்துமீறி நுழைதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 386 (மிரட்டுதல்), 467 (உயில் உள்ளிட்ட ஆவணங்களை திருத்தம் செய்து மோசடி), 506(2) (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டிப் பறித்ததாகவும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், சேலம் தொழிலதிபர்களான ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராமநாதன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.துரைசாமி, அசோக் துரைசாமி, கீதா, சுமித்ரா தேவி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திமுக பிரமுகர் அழகாபுரம் முரளி, விஜய்பாபு ஆகிய 11 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கம்மாள் காலனியை அபகரித்த வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

No comments: