Sunday, December 11, 2011

தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடா... கேரள எல்லையில் சேட்டன்களின் கேவல சேட்டைகள் !



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.


''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்!

- சண்.சரவணக்குமார்

கேரள எல்லையில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பி இருக்கிறது 'எவிடன்ஸ்’ அமைப்பின் உண்மை அறியும் குழு. 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது. உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல்... எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள்.

கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேசியப் பெண்கள் ஆணையமும் மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். கேரள எல்லையில் நடக்கும் அராஜகங்களைத் தடுக்க முடியாவிட்டால், மன்மோகன் அரசு பதவி விலக வேண்டும்'' என்றார் கதிர்!

- சமஸ்

-நன்றி விகடன்.

No comments: