Sunday, March 27, 2011

தங்கபாலுவை கைது செய்ய தேர்தல் ஆணையத்திடம் மனு.

கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சயத்திடம் ரூ. 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டு, அவருக்கு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜானை வேட்பு மனு தாக்கல் செய்யாமல் தடுத்து, அவருக்கு ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் தங்கபாலு. எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சாந்தி என்பவர்.

திமுகவிடம் ஓரணியாக நின்று 63 தொகுதிகளைப் போராடி வாங்கி விட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சாக்கடை சண்டையில் குதித்துள்ளனர். கோஷ்டிகளின் குத்து வெட்டில் சிக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிடம் திகைத்துப் போய் நிற்கிறது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்று கிருஷ்ணகிரி. கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சையத்துக்கு தொகுதியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சோனியா உத்தரவுப்படி கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக மக்பூல் ஜான் அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று பிற்பகல் 3 மணி வரை கிருஷ்ணகிரி வேட்பாளர் மக்பூல் ஜான் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பழைய வேட்பாளர் ஹசீனா சையத்தும் மற்றும் சில காங்கிரசாரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டனர். அதிகாரப்பூர்வ வேட்பாளர் மக்பூல் ஜான் எங்கே சென்றார்? அவர் கடத்தப்பட்டதாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி 155வது வட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சாந்தி இன்று காலை சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரைச் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார். அதில்,

கிருஷ்ணகிரி தொகுதிக்கு முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஹசீனா சையத். இரண்டாவதாக வெளியிட்ட பட்டியலில் இவருக்கு பதிலாக மகபூல் ஜான் என்பவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான நேற்று மகபூல்கானை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தடுத்துள்ளார்.

மேலும் அவருக்கு வேண்டப்பட்டவரான ஹசீனா சயத் என்பவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். இதற்காக அவரிடம் தங்கபாலு ரூ. 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு இவருக்கு சீட் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்தப் பணத்தில் 10 லட்ச ரூபாயை மகபூல் ஜானுக்கு தங்கபாலு கொடுத்துள்ளார்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு துரோகம் செய்துள்ளதுடன், லஞ்ச ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தங்கபாலு லஞ்சம் வாங்கியது தெளிவாக தெரிய வருவதால் தங்கபாலுவையும் மற்றவர்களையும் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த கோஷ்டிக் கலவரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

No comments: