Friday, March 18, 2011

கருணாநிதியா ? அல்லது ஜெயலலிதாவா ? மரியாதை மனிதர்களின் மதிப்பெண் !

விகடன் டீம்


மீண்டும் கருணாநிதியா? அல்லது ஜெயலலிதாவா? இந்த இரட்டைக் கேள்விகளிலதான் அடுத்து வரும் இரண்டு மாதங்கள் காத்திருக்கப் போகிறோம்!

மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கு முன்னால், மதிப்புக்குரிய மனிதர்கள் சிலரின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ள ஆர்வமானோம்!

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரின் கடந்த கால மற்றும் தற்கால நடைமுறைகளைப் பரிசீலித்து மதிப்பிடுவது மட்டுமே நம் நோக்கம். மாற்று அரசியல், தீவிர இலக்கியம், மனித உரிமைகள், இயற்கை விவசாயம், பெண்கள் பிரச்னைகள் என்று பல்வேறு களங்களில் பணியாற்றும் சிலரிடம் இந்தக் கேள்வித்தாளை நீட்டினோம். அதில் விழுந்த மதிப்பெண்களைக் கூட்டி, சதவிகிதங்களாக ஆக்கினால், கருணாநிதி 45.6 மதிப்பெண்களையும் ஜெயலலிதா 41.1 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்கள்.

''கருணாநிதி ஆட்சியில் நடந்த என்கவுன்ட்டர்கள் மனித உரிமை வரலாற்றில் மறக்க முடியாத, அழிக்க முடியாத கரும்புள்ளிகள். ஜெயலலிதா ஆட்சியும் என்கவுன்ட்டர்களுக்குச் சளைத்தது அல்ல. வாச்சாத்தி கொடுமைகள், சிதம்பரம் பத்மினி பாலியல் பலாத்காரம், தாமிரபரணிப் படுகொலைகள், உத்தப்புரம் பிரச்னை என்று இரண்டு கழகங்களின் ஆட்சிகளும் இதுவரை மனித உரிமைகளை மதித்தது இல்லை. இனிவரும் ஆட்சியிலாவது இந்தப் பிரச்னைகளைக் கவனத்தில்கொள்ள வேண்டும்'' என்றார் எவிடென்ஸ் கதிர்.

''மதிப்பெண் போடும் அளவுக்கு உங்கள் பட்டியலில் உள்ள எந்தத் தலைவரும் நேர்மையானவர் இல்லை'' என்றார் ஓவியா.

''கருணாநிதி, ஜெயலலிதா இவர்களுக்கு மாற்றாக ஓர் அரசியல் தலைமை உருவாக வேண்டும். ஆனால், அது நிச்சயமாக விஜயகாந்த் அல்ல. அப்படி ஒரு மாற்று உருவாகாத வரை, இரண்டு பேரில் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்புதான் தமிழக மக்களுக்கு'' என்பது தியாகுவின் ஆதங்கம்.

''பிரச்னைகளின் பட்டியலில் தலித் பிரச்னைகளையும் சேர்த்திருக்க வேண்டும்'' என்ற புனித பாண்டியன், ''அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடு, திருநங்கைகளுக்கான நல வாரியம் போன்றவை கருணாநிதி ஆட்சியில் குறிப்பிடத்தக்கவை. ஆனால், உத்தப்புரம் போன்ற பிரச்னைகளில் தலித் மக்களுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கவில்லை'' என்றார்.

அரசியல் ராஜதந்திரம், நிர்வாகத் திறமை, தொண்டர்களுடனான அரவணைப்பு ஆகியவற்றில் கருணாநிதி பாஸ் மார்க் வாங்கினால், துணிச்சலாக முடிவெடுப்பதில் கூடுதல் மதிப்பெண்களைத் தட்டிச் சென்றார் ஜெயலலிதா. எந்த ஒரு பிரச்னையையும் ஆறப்போட்டு, ஊறப்போடுவதே கருணாநிதியின் பலவீனம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

தொண்டர்களிடம் இருந்து அதிகமான இடைவெளி, அசட்டுத் துணிச்சலுடன் கூடிய அவசர நடவடிக்கைகள் இரண்டும் ஜெயலலிதாவின் மைனஸ்கள் என்கிறார்கள். கறை படியாத தன்மையில் 100-க்கு 10 மார்க் வாங்குவதற்குள் திணறிப்போனார்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.

தலைவர்களுக்கான மதிப்பெண்களில் தா.பாண்டியனும் வைகோவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். குறைந்தபட்ச அரசியல் நேர்மையோடு செயல்படுவதால், இந்த மரியாதை.

திருமாவளவனும் தனது தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் நல்ல இடத்தைப் பெற்றிருக்கிறார்.

கூட்டணி பலம் ஒருபுறம் தி.மு.க-வுக்குத் தெம்பைக் கொடுத்தாலும், குடும்ப அரசியல் ஆதிக்கம் தி.மு.க மீது வெறுப்பை விதைத்திருக்கிறது. அதேபோல் அ.தி.மு.க-வும் தி.மு.க கூட்டணிக்கு எதிராக மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பாதிப் பேர், 'கருணாநிதி அரசு மிக மோசம் என்று கருத்து சொல்லியிருப்பதும், ஒருவர்கூட ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியை ஆதரிக்கவில்லை என்பதும் இரண்டு கட்சித் தலைமைகளும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

ஜெயலலிதாவுக்கு: உங்களின் கடந்த கால ஆட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும், சிறுபான்மையினர் மனதில் அவநம்பிக்கையையும் அச்சத்தையுமே ஏற்படுத்தியுள்ளது. கணிசமான வாக்கு வங்கியாக இருக்கும் சிறுபான்மையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த நீங்கள் முழுமையாக மாற வேண்டும். வைகோ, தா.பாண்டியன் போன்ற ஈழ ஆதரவாளர்கள் உங்கள் அணியில் இருந்தாலும், பொது மக்களோ, தமிழின உணர்வாளர்களோ, உங்களை முழுமையாக நம்பத் தயாராக இல்லை. அதற்குக் காரணம், உங்கள் கடந்த கால நடவடிக்கைகள். 'ஈழப் பிரச்னையில் கருணாநிதிக்கும் ஜெயலிதாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. சட்டம் - ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஜெயலலிதாவால்தான் முடியும் என்கிற சான்றிதழ் கிடைத்திருப்பது உண்மையிலேயே உங்களுக்கு ப்ளஸ்!

கருணாநிதிக்கு: தொண்டர்களுடனான இடைவெளி, சிறுபான்மையினர் விரோதப் போக்கு, தடாலடி முடிவுகள் போன்ற ஜெயலலிதாவின் பல மைனஸ்கள், உங்க ளுக்கு ப்ளஸ்களாக அமைந்திருக்கின்றன. இருந்தாலும், உங்கள் குடும்ப அரசியல் ஆதிக்கமும், அதிகார துஷ்பிரயோகமும், ஸ்பெக்ட்ரம் விவகாரமும், உங்கள் மீதான மதிப்பைக் குறைத்துக்கொண்டே போகின் றன. நதிநீர்ப் பிரச்னை, இலங்கைப் பிரச்னை போன்றவற்றில் உங்களின் தவறான அணுகுமுறையால், தமிழர்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டிஇருக்கிறது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. நீண்ட கால அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை, ராஜதந்திர அணுகுமுறைகொண்ட உங்களைப் போன்ற மூத்த தலைவர்... இன்னமும் முதிர்ச்சியோடும், பொறுமையோடும், நேர்மையோடும் நடந்துகொண்டால், தமிழகம் வளம்பெறும்!

மரியாதைக்குரியவர்களின் மதிப்பெண்கள் இப்படி! மக்களின் மதிப்பெண்கள் எப்படி இருக்குமோ?

No comments: