Tuesday, March 15, 2011

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம்.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்திதங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல. இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.


நன்றி : தட்ஸ் தமிழ்

போபால் நஞ்சாகும் நீதி

அ.முத்துக்கிருஷ்ணன்


அன்று காலை முதலே உலக ஊடகங்கள் எல்லாம் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றிய செய்திக்காய்காத்துக் கிடந்தன. அந்த சந்திப்பு எங்கு நிகழவிருக்கிறது என்பது கடைசிநேரம் வரை குழப்பமாக இருந்தது. நாடாளுமன்றத்திலா, பிரதமர் அலுவலகமா அல்லதுபிரதமர் இல்லத்திலா என விதவிதமாய் தகவல்கள் வந்த வண்ணமிருந்தன. மாலை7 மணிக்கு அதிகாரபூர்வ தகவல்கள் வந்தது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் , நேரடிஒளிபரப்புக் கருவிகள் என பெரும்பட்டாளமே ரேஸ்கோர்ஸ் ரோடு நோக்கிவிரைந்தது. செய்தியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ பிரதமர் காமிராக்கள்முன்பு தோன்றினார். அவரது முகம் வழக்கத்தை விடவும் இறுக்கமாகக் காணப்பட்டது. போபால் விஷவாயு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு அன்றுகாலைதான் வெளியாகியிருந்தது. யூனியன் கார்பைடு ரசாயன ஆலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 26 ஆண்டுகள் கழித்து இன்றுதான் நிம்மதியான உறக்கம் பிடிக்கும் என்பதான மனநிலை போபால் எங்கும்நிலவியது. போராளிகள், பொதுமக்கள் அனைவரும் தெருக்களில் இனிப்பு பரிமாறிமகிழ்ந்தனர்.

பிரதமர் தன் முதல் வார்த்தையை உச்சரிக்க கனத்த மௌனம் நிலவியது. மத்தியில் இனி விஷவாயு தொடர்பாக புதிய அமைச்சகம் தொடங்கப்படும் என்பது தான் அவரது முதல் அறிவிப்பு.பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, மருத்துவ உதவிகள் செய்வது,நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளை முடக்குவது என பல தளங்களில் அந்தஅமைச்சகம் செயல்படும். தில்லியில் உள்ள கிமிமிவிஷி போல் மிகப்பெரும்மருத்துவமனை 1000 கோடி ரூபாய் செலவில் போபாலில் நிறுவப்படும் எனவும்அதற்கான பணிகள் இந்த வாரமே தொடங்கும் என்றார் அவர். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி விஷவாயு கசிவில் உயிரிழந்த 25,000 பேரின் குடும்பங்களுக்குத் தலா 5லட்சம் ரூபாயை யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்க வேண்டும். அதனைஉடனடியாகப் பெற்றுத்தரும் பணியில் பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபடும்.அத்துடன் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் வழங்கப்படும் என்றார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் வாழ்நாள் முழுக்கமருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தீர்ப்பு, அதற்கானதொகையை மத்திய அரசு பெற்று இந்தப் புதிய மருத்துவமனை மூலம் அந்த சேவைவழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய நிரந்தரஅடையாள அட்டை வழங்கப்படும்.

உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி யூனியன் கார்பைடு அதிபர் வாரன்ஆன்டர்சனை 5 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும். ஆன்டர்சனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வேலைகளை தூதரக அளவில் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அப்படி 5 நாட்களுக்குள் அமெரிக்க அரசு ஆண்டர்சனை ஒப்படைக்க மறுத்தால் அமெரிக்கா மீது இந்தியா போர்தொடுக்கும் என்றார். இந்தியப் படைகளின் தளபதிகளை ராணுவ அமைச்சர்முன்னிலையில் நாளை சந்திக்க விருப்பதாகவும் மன்மோகன் தெரிவித்தார். உலகமே இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அதே வேளையில் நியூயார்க்நகரத்து வீதிகளில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த தலைவர்கள் திகைத்தனர். மெல்ல மக்கள் கூட்டம் நியூயார்க் நகரத்தின் பிரிட்ஜ் ஹாம்டன் நோக்கி ஊர்வலமாய் செல்லத் தொடங்கியது. அங்குதான் ஆன்டர்சன் கடந்த 25 ஆண்டுகளாக வசிக்கும் சொகுசுப் பண்ணை வீடு உள்ளது.பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கவாழ் இந்தியர்களை இன்னும் ஒரு வாரம் அகிம்சாவழியில் அறப்போரைத் தொடர உத்தரவிட்டார்.

டில்லியிலிருந்து விமானப்படையின் தனி விமானம் உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் வாஷிங்டன் நோக்கி பறந்தது. விமானத்தில் இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்களின் குழு ஆயிரக்கணக்கான போபால் தொடர்புடைய கோப்புகளுடன் சென்றது. அந்த விமானத்தின் ஒரு ஓரமாக போபால் விஷவாயுவால் முடமாக்கப்பட்டு இரத்தசாட்சியாய் விளங்கும் ஐவரும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆன்டர்சனை இந்தியாவசம் அமெரிக்கா ஒப்படைக்கும் வரை உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள் அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களை நிராகரிக்க வேண்டும் என மன்மோகன் உத்தரவிட்டார். அமெரிக்கப் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை செய்யாது நிறுவன வாசலில் அமர்ந்து அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒரு இரவில் 25,000 பேரைக்கொன்று 5 லட்சம் பேரைமுடமாக்கிய ஒரு நிறுவனத்தை சும்மா விட்டுவிடாது இந்திய அரசு என கர்ஜித்தார் மன்மோகன். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிகாரிகளை இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் கைது செய்து, அவர்களுக்குத் தலா ஒரு கோடிரூபாய் அபராதமும் 8 ஆயுள் தண்டனைகளும் நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் உலகின் எந்த நாட்டிலும் தொழில் துவங்க உலக அரசு யாவரும் அனுமதி அளிக்கக்கூடாது என வேண்டுகோள் ஒன்றும் பின் இணைப்பாய் வழங்கப்பட்டிருந்தது...

1984 டிசம்பர் 2-3 நள்ளிரவு 12 மணி முதல் 12.45வரையிலான 45 நிமிடங்களில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரமான போபால் மீதுபடர்ந்த விஷவாயு அந்த நகரத்தை மக்கள் வாழ லாயக்கற்றதாக உருமாற்றிவிட்டது.போபால் நகரத்தில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு ரசாயன ஆலையிலிருந்த தொட்டி எண் 610லிருந்து 47டன் விஷவாயு காற்றில் கலந்தது. அந்த நகரத்தில் வசித்த 8 லட்சம் பேரில் ஏறக்குறைய 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். உறக்கத்தில் இருந்தவாறே பலர் மாண்டனர். விபரம் தெரியத் தெரிய மக்கள் லட்சக்கணக்கில் ஊரைவிட்டு வெளியேறினர். இருப்பினும் விஷவாயு 20,000 பேரின் உயிரை விழுங்கியது. போபால் நகரமே இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டநகரம் போல் காட்சியளித்தது. செத்து மடியும் மனிதக் கூட்டத்தைக் காப்பாற்ற முனைந்த மருத்துவர்களுக்கு அந்த நச்சுப் பொருளின் பெயர் தேவைப்பட்டது. அதனை வழங்கக்கூட யூனியன் கார்பைடு மறுத்துவிட்டது.

யூனியன் கார்பைடு ஆலை இங்கு வந்த கதையை சுருக்கமாகக் காண்போம். 1905-ல் கல்கத்தாவில் யூனியன் கார்பைடு தனது பணியை இந்தியமண்ணில் தொடங்கியது. 1942ல் சென்னை, 1967-ல் ஐதராபாத், 1968-ல் மும்பைமற்றும் போபால் என யூனியன் கார்பைடு பல ரசாயன ஆலைகளை நிறுவியது. 1976முதல் தனது ஆய்வுப் பணிகளை இங்கு தொடங்கியது. 1950 முதல் கடும் சட்டங்கள்அமெரிக்காவில் இயற்றப்பட்டதால் அங்கு திணையியல் சார் விழிப்புணர்வுஏற்பட்டதால் அங்கிருந்து இதுபோன்ற அழுக்கான தொழில் நுட்பத்தை மூன்றாம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. போரில் பயன்படத்தக்கநச்சுப் பொருட்கள் தொடர்புடைய ஆய்வைச் செய்ய யூனியன் கார்பைடு 1970 ஜனவரி1-ல் மனு செய்தது. தொடர்ந்து 5 ஆண்டுகள் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த ரசாயனங்களின் ஆபத்தான தன்மைகளை அறிந்த இந்திய அரசு அனுமதி அளிக்கமறுத்தது. இந்தச் சூழலில் 25 ஜூன் 1975 அன்று நெருக்கடி நிலை இந்திராகாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்டது. அது 21 மாதங்கள் நீடித்தது. இந்த நெருக்கடி நிலையில் தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அக்டோபர்31, 1975 அன்று அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த நிலையில் எல்லா விதிகளையும் மீறி இந்த அனுமதிவழங்கப் பட்டது. பூச்சிகள் தொடர்புடைய 5 ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன. பூச்சிக் கொல்லிகளைப் பரிசோதிக்க பெரும் சோதனை வயல்கள் நிறுவப்பட்டன.

யூனியன் கார்பைடு ஆலை அமெரிக்காவில் உள்ள மேற்குவெர்ஜீனியா ஆலையின் மாதிரி போலத்தான் போபாலில் அமைக்கப்பட்டது. மேற்கு வெர்ஜீனிய ரசாயன ஆலையில் சில பாதுகாப்புக் குளறு படிகளால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்புடைய செய்திகள் 1982களில் வெளிவந்தது. போபால் ரசாயன ஆலையிலும் பாதுகாப்புத் தொடர்புடைய அலட்சியமான போக்குகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஷ்வானி 'எரிமலை மீது போபால்' என்ற கட்டுரையை வெளியிட்டார்.

நரம்பு மண்டலங்கள் முற்றிலும் பாதிப்பு, சுவாசக்கோளாறுகள், தோல் வியாதிகள், புற்றுநோய் என விதவிதமான பரிசுகளை யூனியன்கார்பைடு நிறுவனம் போபால் நகரத்து ஏழைகளுக்கு வழங்கியது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், மந்தமான வளர்ச்சியுடைய குழந்தைகள், 20 வயது வரை பூப் பெய்தாத பெண்கள், 30வயதில் மாதவிடாய் நின்று போனவர்கள் என ஒரு பெரும் மருத்துவ ஆராய்ச்சிக்கூடத்தின் வகை மாதிரிகளைப் போல காட்சியளிக்கிறது போபால். 26 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனையையே தங்கள் இல்லமாகப் பாவித்து வாழ்ந்து வருகிறார்கள். 1984ல் இந்த விபத்து நடந்தது முதலே யூனியன் கார்பைடு அரசுக்கு எந்த ஒத்துழைப்பையும் நல்கவில்லை. சோடியம் தயோ சல்பேட் போன்ற வேதிப்பொருட்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் நடத்திய ஆய்வுகள் என சகலத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது செல்வாக்கை வைத்து தடுத்து நிறுத்தியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விருந்தினர் இல்லம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களின் வீட்டைப் போலவே திகழ்ந்தது. மாநாடுகள் முதல் சிறு கூட்டங்கள்வரை அங்குதான் நடத்தப்பட்டது.

விபத்து நடந்த 4 நாட்கள் கழித்து யூனியன் கார்பைடு உரிமையாளர் ஆன்டர்சன் பாதிப்புகளைப் பார்வையிட போபால் வந்தார். அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். இந்திய அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகே ஆன்டர்சன் போபாலுக்குள் நுழைந்தார். இதனை அறியாத அர்ஜுன் சிங் ஆண்டர்சனைக் கைது செய்த சில மணித்துளிகளில் அவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் யார் பேசியது என்பது இந்த நிமிடம் வரை அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் அது ராஜீவ் காந்திதான் என நம்மால் சுலபமாகவே உணர முடிகிறது. கைது செய்த முதலமைச்சரே தனது தனி விமானத்தில் ஆன்டர்சனை வழியனுப்பிவைக்கிறார். ஒரு தூதருக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ஆன்டர்சனுக்கு வழங்கப்பட்டதாக உடன் பயணித்த அதிகாரி இப்பொழுது தெரிவிக்கிறார். தில்லியிலிருந்து நியூயார்க், அன்று முதலே தனது சொகுசுப் பண்ணை வீட்டில்சௌகர்யமான வாழ்க்கை. தடங்கலற்ற இயல்பு நிலை ஆன்டர்சன் வாழ்வில் மற்றும் தொடர்கிறது - போபால் மக்களின் கதியோ? அன்றிலிருந்து இந்திய அரசாங்கத்தால்தேடப்பட்டு வரும் கிரிமினல் குற்றவாளியே ஆன்டர்சன். ஆன்டர்சன் தப்பிக்கதனது விமானத்தை வழங்கிய அர்ஜுன்சிங் நடத்தும் அறக்கட்டளைக்கு, பின்னர்யூனியன் கார்பைடு நிறுவனம் பெரும் தொகை வழங்கியதும் நினைவில் கொள்ளவேண்டியதே.

விஷவாயுக் கசிவு நிகழ்ந்த இரு வாரங்களில் போபால்நகரத்தில் மிக விரிவான கள ஆய்வினை டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம் (TATAInstitute of Social Sciences ) மேற் கொண்டது. 478 மாணவர்கள் 25,259வீடுகளுக்குச் சென்று பாதிப்பின் கோரத்தைப் பதிவு செய்தனர். இது தான்போபால் விஷவாயு குறித்த முழுமையான பதிவு செய்த ஒரே ஆவணம். டாடா சமூகவியல்ஆய்வு நிறுவனத்தை இந்தக் களப்பணியில் ஈடுபடும்படி விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்களுக்கான மறுவாழ்வு மீட்பு மையத்தின் ஆணையர்தான் கேட்டுக் கொண்டார். ஆனால் களப் பணியாளர்கள் போபால் வந்தடைந்த பொழுது அரசாங்கம் இதற்கான செலவுகளை ஈடுசெய்ய மறுத்துவிட்டது. உடன் சர் தோரப்ஜிடாடா அறக்கட்டளை நிதியளிக்க முன்வந்தது. அன்றைய காலகட்டத்தில் டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திடம் பெரும் கட்டமைப்பு கொண்ட கணினி வசதிகள் இல்லை. இந்த கள ஆய்வின் புள்ளி விபரங்களை அத்தகைய கணினிகள் மூலமே பகுப்பாய்வு செய்ய இயலும். அப்படியான கட்டமைப்பு மத்தியப் பிரதேச அரசிடம்இருந்தது. முதலமைச்சர் அர்ஜுன்சிங் அந்த விபரங்களை தன் அரசு பகுப்பாய்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முன்வந்தார். ஒரு லாரி லோடு நிறைய கள ஆய்வின் ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்தது டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம். விபரங்களைப் பாவித்துவிட்டு அரசு அந்த ஆவணங்களைத் திருப்பி அளிக்கும் என அர்ஜுன் சிங் வாக்குறுதி அளித்தார். அன்றிலிருந்து டாடா நிறுவனம் மத்தியப்பிரதேச மாநில அரசுகளிடம் நடையாய் நடந்து தவித்தது. 1985 ராஜீவ்காந்தி மும்பையிலுள்ள டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திற்கு வருகை புரிந்த பொழுது இந்த ஆவணங்கள் தொடர்பாக அவரிடமே நேரடியாக முறையிட்டது அந்த நிறுவனம். இன்றுவரை அந்த லாரி லோடு நிறைந்த ஆவணங்களை அந் நிறுவனமும் போபால்சார் போராளிகளும் தேடி வருகின்றனர். அர்ஜுன்சிங் ஆன்டர்சனுக்கே இதைக் கப்பலேற்றி அனுப்பியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவல்லவோ மக்கள் அரசு!

வழக்குகள், சட்டவிதிமுறைகள் என மக்கள் பரிதவித்து நீதிமன்றங்களுக்கு அலைந்த காட்சி மிகவும் அவலமானது. 3900 கோடி கேட்டு இந்திய அரசு தொடர்ந்த வழக்கிற்கு 450 கோடி மட்டுமே வழங்க இயலும் என்றது யூனியன் கார்பைடு. இது ஏறக்குறைய 10% மட்டுமே. இதனை நீங்கள் இன்றைய நிதிஅமைச்சரின் 10% வுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. 1989ல் ஒருஅமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் 11 ஆக விளங்கியது. இன்று அது 50ரூபாயைத் தொட்டு நிற்கும் சூழலிலும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வந்தடையவில்லை, 5,74,736 பேருக்கு அந்தத் தொகையைப் பகிர்ந்து அளித்தால் தலைக்கு வெறும் ரூபாய் 12,414 மட்டுமே கிட்டும். இழப்பீடுகள் குறித்த இத்தகைய தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கிவந்தது இந்திய நீதிமன்றம்.

1996ல்சட்டப்பிரிவு நீதிபதி அஹமதி அவர்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றினை வழங்கினார். அதன்படி குற்றச்சாட்டு 304 பி-யிலிருந்து 304 ஏ-வுக்கு மாற்றப் பட்டிருந்தது. (Culpable Homicide to Criminal Negligence) கொலைப்பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. போபாலில் விஷவாயு ஏற்படுத்திய பாதிப்பைவிட கொடிய விளைவை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியது இந்தத் தீர்ப்பு. பழுதான வடி வமைப்பு, அலட்சியமான நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு என ஒரு மூன்றாம் உலக நாட்டில் கல்லா கட்டும் அருவருப்பான முதலாளித்துவ மனோபாவத்தின் மொத்த வெளிப்பாடுதான் போபால். ஒரு புலியை நீங்கள் குடியிருப்பு பகுதிக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள். அந்தப் புலி உங்களுக்குச் சொந்தமானது. குடியிருப்புப் பகுதிக்குள் புலிகளைத் தங்கவைக்க அனுமதியில்லை. ஒரு இரவு புலி தப்பித்து அங்கிருந்த பலரைக்கொன்று குவிக்கிறது. நீதிபதி அஹமதியின் கூற்றுப்படி 'அவர் என்னப்பாசெய்வார்.. புலி அதுவா தப்பித்துப் போயிருச்சு.' தீர்ப்பு வழங்கிய அஹமதிபின்னர் போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்புலங்களில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. 2001 ஆம்ஆண்டு இந்தஒப்பந்தம் கையெழுத்தானது.டவ் நிறுவனத்திடம் உங்களுக்கும் யூனியன் கார்பைடின் பழைய வழக்குகளுக்கும் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என அப்பொழுதே நிதியமைச்சர் சிதம்பரமும், வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும் பொறுப்பேற்று அதனைச் செவ்வனே நிறைவேற்றினர். போபால் ஆலையின் நிலத்தில் இன்றளவும் நச்சுக் கழிவு டன் கணக்கில் கிடக்கிறது. அதனைச் சுத்தப்படுத்த டவ் நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென பெரும் கோரிக்கை எழுந்தது. கமல்நாத்தும் சிதம்பரமும் பதறிப்போனார்கள். கொலை செய்து விட்டு நீங்கள் இனி பெயரை மாற்றினால் போதும், கொலைக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லை என வாதாட இலவச வழக்கறிஞர் தயார்.... பராக் பராக் பராக்....

இவர்கள் ஒருபுறம் வக்காலத்து வாங்கினால் அதைவிட ஒருபடிமேலே சென்றார் ஒருவர். இந்தியத் தொழில் நிறுவனங்களில் பணம் வசூலித்து ஏன் நாமே... இல்லை நானே சுத்தம் செய்கிறேனே என அமெரிக்க மலத்தை அள்ள பீவாளியுடன் களம் இறங்கினார் ரத்தன் டாடா. 1984ல் கள ஆய்வினை மேற்கொண்ட அதே டாடா குழுமம் உலக மயத்தில் உருமாற்றம், மன மாற்றம் அடைந்து இத்தகைய புதிய அவதாரத்தை 2001-ல் எடுத்தது. காலம் செய்த கோலமா??

காங்கிரசின் இன்றைய செய்தித் தொடர்பாளர் அபிஷேக்சிங்வி காங்கிரஸ் லெட்டர் பேடிலேயே பிரதமருக்கு டவ் நிறுவனத்தை பூர்வ ஜென்மப் பாவங்களிலிருந்து ரட்சித்து மீட்கும்படி மன்றாடினார். டவ்வின் கண்ணீரைத் துடைக்க மாண்டேக்சிங் அலுவாலியா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார்.

2002ல் அமெரிக்காவில் உள்ள கிரீன் பீஸ் (Green Peace)நிறுவனத்தினர் பெரும் ஊர்வலமாக ஆன்டர்சனின் வீட்டிற்கே சென்று பிடிவாரண்டின் மாதிரியைக் கொடுக்க முயன்றனர். உடன் அரசு தலையிட்டு அங்கு பெரும் தடியடியை நிகழ்த்தியது. அரசு கவனித்த கவனிப்பில் அதன்பிறகு கிரீன்பீஸ் தொடர்புடைய அமெரிக்க நடவடிக்கைகள் தொடர்புடைய தகவல்கள் ஏதுமில்லை.

போபாலில்பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு போராட்டங்கள், இழப்பீடுகள் தொடர்புடைய தொடர்ந்த இயக்கம் நடைபெற்று வருகிறது. சகலத்தையும் இழந்த பின்பும் தங்கள் மனத் துணிவு அவர்களைக் கைவிடாது வழி நடத்துகிறது - உலகை வழிகாட்டுகிறது.போபாலிலிருந்து 800 கிமீ தொலைவிலுள்ள தில்லிக்கு பாதயாத்திரைகள் கடந்த கால்நூற்றாண்டாகத் தொடர்கிறது. தில்லி போலீசார் தங்கள் தடிகளைக் கொண்டு அவர்களை உபசரிக்க மறந்ததில்லை - போபால் போன்ற விசயங்கள் நடந்தாலும் நாம் முன்னேறியாக வேண்டும்- என மன்மோகன் இவர்களின் தோளைத் தட்டி அறிவுறுத்தி வழியனுப்பியதும் உண்டு. ஜெயராம் ரமேஷ் போபால் சென்று மக்களைச் சந்தித்து அங்கிருந்த மண்ணை ஒரு பிடி தன் கையில் அள்ளி 'பாருங்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என வித்தை காட்டிச் சென்றார். இதே நிறுவனம் சமீபத்தில் பல கொடிய விஷ ரசாயனங்களைத் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்தஅனுமதியைப் பெற 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான இரு வழக்குகள்இந்த நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் பி.ஜே.பி.கட்சி டவ் நிறுவனத்திடம் பெரும் தொகை நன்கொடை பெற்றுள்ளது. பி.ஜே.பி.யும் காங்கிரசும் சங்கமிக்கும் இடம் இதுவல்லவோ!

2010 ஜூன் முதல் வாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கி உலகையே ஆச்சரியப் படுத்தியது நீதிமன்றம். அன்று காலை முதலே நீதிமன்றவளாகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டது. நீதிமன்றத்தைச் சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போபாலிலிருந்து தீர்ப்பைக் கேட்கவந்த முக்கியப் பொறுப்பாளர்கள் - பத்திரிகையாளர்கள் எவரும் நீதிமன்றவளாகத்தில் அனுமதிக்கப் படவில்லை. ஏழு அதிகாரிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூபாய் 1,01,750 அபராதமும் விதித்து மொத்த வழக்கையும் முடித்து பாதிக்கப் பட்டவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஏழு அதிகாரிகளும் இந்தியர்களே. தீர்ப்பு முழுக்க சல்லடை போட்டுத் தேடியும் ஆன்டர்சனின் பெயரை எங்கும் காணவில்லை. 25,000 ரூ. பிணைத் தொகை கட்டி அந்த ஏழுபேரும் மாலையே விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வெளிவந்ததை ஒட்டி சிவில் சமூகம் முழுவதிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு சேர ஒப்பாரி வைத்தன. 26 ஆண்டுகளாய் வாய் திறக்காதவர்கள் அனைவரும் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து கொண்டு போபால் தெருக்களில் உலாவந்தனர்.

இதில் ஆகப் பெரிய ஒப்பாரி பி.ஜே.பி. - காங்கிரசுடையது. இந்த இரு கட்சிகள்தான் மத்தியிலும், மத்தியப் பிரதேசத்திலும் மாறி மாறிஆட்சியில் இருந்து வந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் இன்றுவரை குடிக்க சுகாதாரமான தண்ணீரைக் கூட அவர்களுக்கு வழங்கியதில்லை. டவ்வின் காலைக் கழுவ காங்கிரஸ் முயன்றால், பி.ஜே.பி.யோ ஆட்சியில் இருந்தபொழுது ஆன்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முயன்றது. இரு கட்சிகளின் பழி சுமத்தும் கூப்பாடுகள் சமூகத்தில் நாராசமாய் ஒலிக்கின்றன.

ஊடகங்களின் வாயிலாகச் செய்யப்பட்டுவரும் விவாதங்கள், பிரச்சாரங்களின் வீரியத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் மீண்டும் ஒரு முறை அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சிதம்பரமும் - கமல்நாத்தும் இந்தக் குழுவிலும் உள்ளனர். என்ன ஒரு சமத்துவம். இவர்கள் எல்லோரும்கூடி விரைவில் போபால் நகரைத் தூய்மைப் படுத்தப் போகிறார்களாம். இவர்களின் குணமளிக்கும் தொடுதலால் எல்லா நோய்களும் தீரப்போகின்றன.. இத்தகைய தொடர் அநீதிகளை ஒரு மக்கள் சமூகம் அனுபவிக்க நேர்ந்தால் ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை, நீதித்துறை மீதான அவர்களின் நம்பிக்கைகள் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவர்களின் ரௌத்திரத்தை அடக்கத்தான் பலவிதப் படைகள் அரசு வசம் உள்ளதே. பச்சை வேட்டையைப் போல ஒரு போபால் வேட்டை நடவடிக்கையைத் தொடங்கிவிட்டால் முடிந்தது.

போபாலுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு அணு விபத்து பொறுப்பு மசோதாவுக்கு உயிர் கொடுக்க முனைகிறது மன்மோகன் அரசு. இந்த மசோதாவைச் சட்டமாக்கக் கோரி அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது நம்மால் வெளிப்படையாகவே காணமுடிகிறது. இந்த மசோதா சட்டமானால் போபாலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்குகளைக்கூட நம்மால் தொடுக்க இயலாது. ஜனநாயகம் வழங்கும் எல்லா உரிமைகளையும் மெல்ல மெல்ல பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளுக்கு அழுத்தம்கொடுத்து அவர்களுக்கேற்றாற்போல் உருமாற்றி வருகிறது. அதன்படி ஒரு அணுஉலையை இந்தியாவில் நிறுவிய நிறுவனத்திற்கும் அந்த உலையில் நடக்கும் விபத்துகளுக்கும் தொடர்பேதும் இல்லை. அதனை இயக்குபவர்களே அதற்குப்பொறுப்பு. காலம் மாறும்போது எல்லாம் தலைகீழாய் மாறுகிறது. அதைவிட வேடிக்கை, விபத்து நடந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கேட்கவே இயலாது. மறுபுறம், கடந்த மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில் பிரிட்டிஷ்பெட்ரோலியம் நிறுவனத்தால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் 11 பேர் மாண்டனர்.அதற்கும் கடல் சுத்திகரிப்பிற்கும் ஒபாமா 500 கோடி ரூபாய் கேட்டு அதன் அதிபரை வெளிப்படையாக மிரட்டுகிறார்.

மக்களின் நம்பிக்கையைப் பெற ஒரு மக்கள் நல அரசு தவறிவருகிறது, இல்லை நாம் தான் இன்னும் இதை மக்கள் நல அரசு என நம்பிஆரம்பத்தில் விவரித்தது போல் கனவு கண்டு வருகிறோமா? அதே 1984ல் நடந்தசீக்கியப் படுகொலைக்குப் புதிய இழப்பீடு திட்டங்களை - ஒதுக்கீடுகளை அரசால் செய்யமுடிகிறது. நக்சல் ஒழிப்பு என்றால் தனியே சிறப்பு பட்ஜட்ஒதுக்கீடுகள் செய்ய முடிகிறது. ஆனால் இப்படியான விளிம்பு நிலை மக்கள்சார்ந்த அழிவுகள், பெரும் திட்டங்களால் ஏற்படுகிற இடப்பெயர்வு என மறுவாழ்வு சார்ந்தயாவற்றுக்கும் அரசு-நீதிமன்றங்கள் ஒன்று போலவே கசந்த மனோபாவத்துடன் நடந்து கொள்கின்றன.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் ஒரு முறை நீதியை உத்தரவாதப்படுத்த தவறியுள்ளது வருத்தத்திற்குரியது.

போபால் வழக்கை மக்கள் சார்பாக அரசு நடத்தினால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மூலதனங்கள் தடுக்கப்பட்டு விடும் என அரசும் முதலாளிகளும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். ஒரு தேசம் அதன் பெரும்பகுதி மக்களைக் கணக்கில் எடுக்காது தன் பயணத்தை தொடர்வது பெரும் இடர்களை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் சார் வளர்ச்சி (G D B) யைஉயர்த்தலாம். ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கையை கடந்த 20ஆண்டுகளில் அது மிகவும் கேவலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

Sunday, March 13, 2011

கலைஞருக்கு ஒரு திறந்த மடல்!

தமிழருவி மணியன்


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜ...ரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமை ஆக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்! ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்தி லிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது! ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்?


அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார், செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? ‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார் திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம். ‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன் (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா? ‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? .

ஐந்து கொள்கைகள்தான்.

கடவுள் ஒழிய வேண்டும்.


மதம் ஒழிய வேண்டும்.

காங்கிரஸ் ஒழிய வேண்டும்.


காந்தி ஒழிய வேண்டும்.


பார்ப்பான் ஒழிய வேண்டும்.

அன்று முதல் இன்று வரை அதேகொள்கைதான் கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார்.

இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர் என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல் என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்புக்குரியது அல்லவா! பக்திப் பரவசத்தில் கோயில் கோயிலாகச் சுற்றுவது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப் படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. ‘அண்ணா! அண்ணா! என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்கும். (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிரஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்? ‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை. என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்கள் குடியேறத்தான் செய்யும். என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி–1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்துவிட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழுரைகள்(!). நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா? என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். ‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா? என்று கேட்கத் தோன்றுகிறது கலைஞரே!

‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை. (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? ‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின் கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே! கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டியில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமையாற்றினீர்கள்.

இப்போது இரண்டாவது முறையாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே! ‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலானாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும். (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றிவிட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார் என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடைபெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான். என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று ‘நகைச்சுவை ததும்பப் பேசியிருக்கிறீர்கள்.

இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானிகளாய் உருமாறிய ரகசியத்தை உருக்குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்களுக்கே இடமிருக்காது கலைஞரே! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை. என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே! ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்தீர்கள்?

மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா? ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலாவை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்! இப்படிக்கு, ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த, தமிழருவி மணியன்.

நன்றி : விகடன்

Saturday, March 12, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-4.


தில்லியில் இருந்து கிடைத்த உத்திரவின்படி IPKF புதிய அணுகுமுறையில் செயல்பட ஆரம்பித்தது.

விடுதலைப்புலிகள் அமைப்புகள் குறி வைத்து தாக்கப்பட்டன. புலிகளின் பத்திரிகை அலுவலகங்கள் அழிக்கப்பட்டன. வானொலி மற்றும் பிற ஊடகங்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்கள் தாக்கி எரிக்கப்பட்டன. உண்மையான போர்த் தகவல்கள் வெளியே வர வழி இல்லாத நிலை உருவானது. புலிகளும் திரும்பத் தாக்க ஆரம்பித்தன. புலிகளுக்கும், இந்திய அமைதி காக்கும் படைக்குமிடையே முழு அளவிலான போர் மூண்டது.

அமைதி காக்க வந்த படை

அழிக்கும் பணியைத் தொடர்ந்தது.

ஜெயவர்த்தனே சத்தம் போட்டே சிரிக்க ஆரம்பித்தார். இலங்கை ராணுவம் பூப்பந்து ஆடிக்கொண்டிருக்க – இந்திய ராணுவமும் புலிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்தனர்.

அக்டோபர் 10 ந்தேதி இந்திய ராணுவத்திற்கு ஒரு உளவுத் தகவல் கிடைத்தது. மறுநாள் 11ந்தேதி இரவு யாழ் பல்கலை கட்டிடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களும், தளபதிகளும், பிரபாகரனைச் சந்திக்கும் அதி முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நிகழப்போகிறது என்பதே அது.

பிரபாகரன், மாத்தையா மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரையும் கூண்டோடு பிடிக்கவும், அது இயலா விட்டால் - அத்தனை பேரையும்
அழிக்கவும் IPKF திட்டம் ஒன்றை வகுத்தது. 5 விமானப்படை ஹெலிகாப்டர்கள், 10வது பாரா கமாண்டோ படையின் 120 கமாண்டோ வீரர்கள், 13வது சீக்கிய படையின் 360 சிப்பாய்கள் கொண்ட ஒரு பெரிய படைக்குழுவினர் யாழ் பல்கலைக்கழகத்தை 11ந் தேதி இரவு முற்றுகை
இட்டனர். ஹெலிகாப்டர்களிலிருந்து குறி பார்த்து துல்லியமாகச் சுடும் கமாண்டோக்கள் இறக்கப்பட்டனர்.

90 நிமிடங்களுக்குள் முழு ஆபரேஷனையும் வெற்றிகரமாக முடித்து, அங்கு கூடும் புலிகள் அத்தனை பேரையும் பிடிக்க அல்லது அழிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்தியப்படை சற்றும் சந்தேகப்படாத நிலையில்,முற்றிலும் எதிர்பாராத விதமாக விடுதலைப்புலிகள், இவர்களது திட்டங்களை,
சிக்னல்களை ஒட்டுக்கேட்பதன் மூலம் இடைமறித்து முற்றிலுமாகத் தெரிந்து கொண்டார்கள்.

மிகத்துல்லியமாக பதில் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. யாழ் பல்கலையில் இந்தியப்படை சற்றும் அறியா வண்ணம், அதிரடிப் போராளிகள் தகுந்த நிலையில் முன்னேற்பாடாக நிலை கொண்டனர். ஹெலிகாப்டரின் விளக்குகளையும் அணைத்து விட்டு, கமாண்டோக்கள் ஒவ்வொருவராக இறக்கக்ப்பட விடுதலைப்புலிகளின் மெஷின்கன்களில் பொறி பறந்தது.

19 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இறுதியாக IPKF தரப்பில் மிஞ்சியது கோரா சிங் என்கிற ஒரே ஒரு சிப்பாய் மட்டுமே. அவரையும் பிடித்து வைத்திருந்தது, நடந்த விவரங்களை பின்னர் அவர் மூலமாக வெளி உலகுக்கு தெரிய வைக்கவே என்பது பிற்பாடு தெரிந்தது.

பெருத்த ஆட்சேதம், ஆயுதங்கள், டேங்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் இழப்பு ஆகியவற்றில் முடிவடைந்த இந்த தாக்குதல்

IPKFக்கு ஒரு அழியாத அவமானத்தை தேடித்தந்தது.


இதன் பிறகு, இந்தியத் தரப்பில் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லும் blame game துவங்கியது. நிலா வெளிச்சத்தில், கமாண்டோக்களை இறக்கி அநாவசியமாக உயிர் பலி கொடுத்த முட்டாள் தளபதி என்று இந்திய தூதர் ஜெ.என்.தீக்ஷித், ஜெனரல் ஹர்கிரத் சிங்கை குறை கூற,

உளவுத்துறை ஏமாந்தது, 9 ஹெலிகாப்டர் தருகிறேன் என்று கூறி விட்டு கடைசி நேரத்தில் தகுந்த அளவு விமானப்படை உதவியை அளிக்காதது ஆகியவற்றை காரணமாகச் கூறினார் ஜெனரல் ஹர்கிரத் சிங்.

இந்த தகவல்கள் எதுவுமே அந்த சமயத்தில் வெளியுலகத்திற்கு முழுமை யாகத் தரப்படவில்லை. பிற்காலத்தில், ஒருவரை ஒருவர் குறை கூற ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய செய்திகள் வெளி வந்தன.

நினைத்தது நடக்காததாலும், ஏகப்பட்ட இழப்புகளாலும்,

விரோதம் மேலும் மேலும் வளர்ந்தது.

ஜெயவரத்தனே- ராஜீவ் காந்தி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து - இலங்கையில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும், போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிகழ்ந்து வந்த போரை நிறுத்தி, அமைதியான சூழ்நிலை நிலவ உதவியாக இருக்கவும் தான் இலங்கை சென்றது IPKF – இந்திய அமைதி காக்கும் படை.

வெளியே கூறப்பட்ட நோக்கம் இது தான்.

ஆனால் நடைமுறையில் நிகழ்ந்தது என்ன ?

ஈழப்போராளிகளைப் பிரித்து, புலிகளுக்கு எதிரான குழுக்களை ஊக்குவித்து, விடுதலைப்புலிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும்படி தில்லி அரசியல் தலைமையால் IPKF கமாண்டருக்கு உத்திரவு இடப்பட்டது.

ஈழப்போராளிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரசின் பணியை, இந்திய ராணுவம் மேற்கொண்டது.

தமிழ் மக்களை அழிக்கும் பணியில் இந்திய ராணுவத்தையே ஈடுபடுத்தினார் ஜெயவர்த்தனே.

விளைவு -?

தமிழர்களின் தரப்பில் ஏற்பட்ட சேதங்கள் -

போராளிகளின் சக்தி ஒடுக்கப்பட்டது. வானொலி நிலையம், பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கி, அழிக்ககப்பட்டன. கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை – 7000 க்கும் மேல். கை,கால்கள், மற்ற உறுப்புகளை இழந்த அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் மேல். கற்பழிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் சரியான எண்ணிக்கை – வெளியிடப்படவில்லை.

IPKF தரப்பில் ஏற்பட்ட சேதங்கள் -

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட உயிர் இழந்த இந்திய ராணுவ வீரர்கள் – 1255 பேர். உறுப்புக்களை இழந்தவர்கள் – 5000 க்கும் மேல்.

ஆரம்பத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட படையில் இருந்த இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை -40,000. ஒரு கட்டத்தில் இது உயர்ந்தது – 1,00,000 வரை. இந்திய விமானப்படை வெளியிட்ட விவரங்களின்படி அது சுமார் 70,000 தடவை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே விமானப் பயணங்களை நிகழ்த்தி இருக்கிறது.

கப்பல் படை மேற்கொண்ட பயணங்கள் தனி.

ஒரு லட்சம் ராணுவ வீரர்களை இந்தியாவின் பல பகுதி ராணுவ முகாம்களி லிருந்து - இலங்கையின் வட பகுதிகளுக்கு நகர்த்திச் செல்ல ஆன செலவு - சுமார் ஒரு லட்சம் படையினருக்குத் தேவையான, உணவு, உடை, இருப்பிட வசதிகள், ஆயுதங்கள், டாங்கிகள், கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் முதலியவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றன.

காயம் அடைந்த வீரர்களை போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தனை பேருக்கும் சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கு சம்பளம், அலவன்சுகள், உணவு, இருப்பிட வசதி, அங்கஹீனம் அடைந்தவர்களுக்கும், உயிர் இழந்தவர் குடும்பத்திற்கும் – போதிய நஷ்ட ஈடு .. இது குறித்து ஏற்பட்ட மொத்த செலவு எவ்வளவு என்பது குறித்து தனியே விவரங்கள் வெளிவரவில்லை. ஆனால் இத்தனை செலவுகளும், இந்திய மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் தான் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதில் புத்திசாலி யார் ?

தமிழ் இனத்தவரை அழிக்க இந்திய ராணுவத்தையே பயன் படுத்தியதோடு அல்லாமல், இத்தனை செலவுகளையும் இந்திய மக்களின் தலையிலேயே சுமத்திய ஜெயவர்த்தனேயா ?

அல்லது

அரசியல் அனுபவமின்மையாலும், அறிவு முதிர்ச்சியின்மையினாலும், வீண் பிடிவாதத்தினாலும், இத்தனை இழப்புக்களுக்கும் காரணமான இந்திய அரசியல் தலைமையா ?

இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம் - இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கோ, இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவோ,
இந்திய பாராளுமன்றத்தின் முன் ஒப்புதல் பெறப்படவில்லை என்பது. இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கும், தமிழ்ப் போராளிகளுக்கும்,
ஏற்பட்ட இன்னல்களும் - இந்திய ராணுவத்திற்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட பல அவமானங்களும், பல ஆண்டுகளுக்கு வெளியில் வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு -

ஹர்கிரத் சிங்கிற்கு பிறகு IPKF கமாண்டராகப் பொறுப்பு வகித்த ஜெனரல் ஏ.எஸ்.கல்கத் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

“ராணுவ நடவடிக்கையின் மூலம் ஒரு நாட்டில் நிம்மதியைக் கொண்டு வர முடியும் என்று நினப்பது சரியான எண்ணமல்ல.

நாம் அவர்களுக்கு ( இலங்கைத் தமிழர்களுக்கு ) சுதந்திரம் வாங்கித் தரவில்லை. அதிக அதிகாரமும் பெற்றுத் தர முடியவில்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட அவர்களது வடகிழக்கு முதலமைச்சருக்கு எந்த வித நிதி சம்பந்தப்பட்ட அதிகாரங்களையும் பெற்றுத்தர முடியவில்லை. அவர்களுக்கு நம்பிக்கை யான ஒரு அரசியல் கட்டமைப்பை நம்மால் ஏற்படுத்தித் தர முடியவில்லை.”

இது தான் ராஜீவ் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளைக் குறித்து அவரால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட IPKF ராணுவ தளபதியின் கருத்து.

“இந்தியாவின் வியட்னாம்” என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் பல ஆண்டுகள் கழித்து, பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு ஜெனெரல் கல்கத் கூறிய கருத்து இது.


முற்றும்

Friday, March 11, 2011

ஜப்பானில் சுனாமி - வீடியோ இணைப்பு.

Thursday, March 10, 2011

வீணாகும் தாணியங்கள்

அ.முத்துக்கிருஷ்ணன்.


மதுரை நகரத்து தெருக்களில் தினந்தோறும் நான் சந்திக்கும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. தெருக்களில் பிச்சை எடுத்து அலையும் பசியின் ரேகைகள் படிந்த முகங்கள் காணும் இடமெல்லாம் விரவியுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பலகாரக்கடைகள், உணவு விடுதிகள், ஜவுளிக்கடை வாயில்கள் என எங்கும் அவர்களின் அழுகையும் முனகலும் அவலமாய் ஒலிக்கிறது. அவர்கள் ஏன் இத்தனை ஆயிரம் மைல் தொலைவு பயணித்து இங்கு வந்து பிச்சை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி என் மனதில் பல காலமாக இருந்தது.

பல சமயங்களில் அவர்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறேன். சில சமயம் அது நிகழ்ந்தும் உள்ளது. இவர்கள் பெரும்பான்மையாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், குஜராத், சத்திஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம் என மத்திய இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள். மழை பொய்த்தது, விவசாயக் கூலி வேலை இன்மை, தொழில்- வேலை வாய்ப்பு இல்லை, விவசாயக் கடன், வறுமை என இதை ஒத்த காரணங்களாகவே அனைவரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும், எங்கள் வீட்டு குதிர்களில் எந்தத் தானியமும் இல்லை. ஆகையால் அதனை- தானியத்தை- தேடி வந்தோம்” என்றார் கச்சிதமான வார்த்தைகளில். இதன் பின்னர் நான் விவசாயத் தற்கொலை, வறுமை, பசி, இடப்பெயர்வு என எத்தனையோ பிரதிகளை வாசித்தபோதும், அவை அனைத்தும் எனக்கு சுருக்கமாக இந்த வார்த்தைகளில் கூறிய பெரியவரின் பார்வைக்கு மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. இவர்களில் பெரும்பகுதியானவர்கள் விவசாயக் கூலிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உயிர் பிழைத்து எப்படியேனும் வாழ்ந்திட முற்படும் இவர்களை வாழ்க்கை தொலை தூரங்கள் வரை அலைக்கழிக்கிறது. ஒருவேளை இவர்கள் தங்களின் ஊர்களிலேயே இருந்திட நேர்ந்தால், அது இன்னும் ஒரு தற்கொலையாக அரசு ஆவணங்களில் பதிவு பெற்று இருக்கக்கூடும். பசி மனிதனை எத்தனை கொடூரமாக வதைக்கிறது என்பதற்கு இந்த நூற்றாண்டின் ரத்த சாட்சியாக விளங்குபவர்கள் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள். ஆனால் அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக நம் மனதில் பெரும்வலியுடன் ஒரு குறியீடாக முதலில் தங்கியவர்கள் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதி மக்கள்.

1980களில் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதியைப் பற்றிய சித்திரங்கள் பல இந்தியாவின் மையங்கள் நோக்கி வந்தன. வறுமையின் பல வடிவங்கள் அங்கு எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்பது செய்திகளாக, முகப்பு கட்டுரைகளாக தேசிய நாளிதழ்களில் அச்சேறின. முதன்முதலில் பணிதாவின் கதைதான் பெரும் அதிர்ச்சியை விதைத்தது. அதனை அடுத்து 1984ல் ஒரிசாவின் ஆங்கூல் மாவட்டத்தின் பதிபஹால் கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா பஹேரா (35) தனக்குப் பிறந்த குழந்தையை ரூ.10/-க்கு விற்றார். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அவள் அதற்குக் கூறிய விளக்கம்: ‘ஊர்வசி (10), பன்பாசி (2) ஆகிய என் இரு குழந்தைகள் பட்டினியில் வாடி சாகக்கிடக்கின்றன, அவர்களுக்கு உணவளிக்கவே என் ஒரு மாதக் குழந்தையை விற்றேன்.’ இந்த வார்த்தைகள் போதுமானவை ஒரு தேசத்தை உலுக்க. ஆனால் இவ்வாறான எந்தக் குரலுக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த தேசம் செவிமடுக்கவில்லை. அதே 1980ல் ஒரு தேசிய நாளிதழ் ஒரிசாவின் நிலையை இந்த உலகுக்கு உணர்த்த ஒரு பெண்ணை ரூ.2000/-க்கு விலைக்கு வாங்கி, இங்குள்ள நிலையை நாட்டிற்குப் பெரும் பரபரப்பாக உணர்த்தியது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தின.

2001ல் இந்தியாவின் 13 மாநிலங்களில் பசி - வறுமையால் மக்கள் செத்து மடிவது பதிவு செய்யப்பட்டது. அந்த சமயம் பி.யு.சி.எல். அமைப்பு அன்று தேசம் வசம் இருந்த உணவு தானிய இருப்புகளையும், அந்த தானியங்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தைப் பெற்றது. அப்பொழுது அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவைகளை மனிதன் உட்கொள்ள முடியாமல் போகும் நிலையைத் தடுத்து, பசியால் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே என்றது வழக்கு. நீதிபதிகளும் அன்று இதனை ஒத்த பார்வையுடைய தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் பிரதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களது அலுவலகங்களுக்கு எதிரில் உள்ள தேனீர்க்கடைகளுக்கு வடை சுருட்ட அனுப்பினார்கள்.

வறுமையும் பசியும் இந்திய விளிம்புநிலை மக்களின் தனிச்சொத்தாக நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்நிலை, அவர்களின் வறுமையைக் கணக்கிடும் சுதந்திரங்கள் என பலவற்றை ஆராய பல கமிட்டிகளை இந்திய அரசு நியமித்தவண்ணம் உள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி இந்திய ஜனத் தொகையில் 37% பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகத் தெரிவித்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா குழு இந்திய ஜனங்களில் 77% பேர் ஒரு நாளில் ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது. அடுத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது. இவை எல்லாம் வறுமையை அல்லது மக்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ளப் போதுமான குறியீடுகளாக விளங்கும்போதும் இவை எதுவும் ஆட்சியில்-நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளில் விழுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வறுமை, பஞ்சம்கூட ஒருவிதத்தில் பல ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும் அரிய சந்தர்ப்பங்களே. பசியால் வாடுபவனுக்கு உடனடியாக இனி உணவு அளித்தால்தான் அடுத்த அரசு அமைக்கும் கமிட்டிக்கு முன்பாக அவன் ஆஜராகிப் பேச இயலும் என்பது தான் எதார்த்த நிலை.

இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடுவது 6 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான். இந்த இடத்தில் சிலருக்கு 1947, இந்தியா, காந்தி, நாடு, முதுகெலும்பு போன்ற வார்த்தைகள் மனதில் வரக்கூடும். பசுமைப் புரட்சியை இங்கு செயல்படுத்த காரணமானவர்கள் அன்று சொன்ன முதன்மைக் காரணம், ‘இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின்தங்கியுள்ளது, சமூகத்தில் மக்கள் பலர் பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கவே பசுமைப் புரட்சி.’ இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தில்லி அமைச்சக அலுவலகங்களும், மாநிலங்களில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவருக்கும் இதே உணவு தானியத்தின் உற்பத்தியில் ஈடுபட்டு பட்டினியால் வாடுபவர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் இன்று விநியோகம்சார் கோளாறுகள் குறித்து திருவாய் மலர்வதில்லை. இந்தியாவின் மக்களை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப ரகம் பிரித்து, விதவிதமான வண்ணங்களில் அட்டை கொடுத்து உணவு தானியங்களை வழங்க வேண்டிய ஏற்பாடுகள் இருக்கிறது. ஆனால் அதன் பலன் எவ்வாறு உள்ளது.

பொது விநியோக முறை என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்தியாவில் அது எப்படி செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் மிக முதன் மையானதாக, பலமானதாக, சாமானிய ஜனங்களின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டிய துறை அது. நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது அதில் பொருட்களை வாங்கும் உரிமையை அவர்கள் வீட்டில் வேலைக்காரிகளின் அட்டையாக’ விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் இன்று கோடானுகோடி மக்களின் நிலை அப்படி இல்லை. இன்றும் ரேஷன் கடைகளில் பெரும் வரிசை நின்றபடியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்கிறது. எப்பொழுது அரிசி போடுவார்கள், எப்பொழுது மண்ணெண்ணை ஊற்றுவார்கள், ஜீனியை இந்தமாதம் வாங்கிவிட முடியுமா என்பது எல்லாம் இன்று ஆய்வு செய்ய வேண்டிய தலைப்புகளாகவே உள்ளன. ஒரு ரேஷன் கடையின் இந்த விபரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்தவர் என்றால், அரசு அலுவலகங்களில் அரசாணைகளைப் பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர் போல் உங்களின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏறக்கூடும்.

இந்தியா முழுமையிலும் ரேஷன் கடைகளில் மக்கள் ஒன்றுபோலத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு பொருட்களை சிட்டை போட்டு வழங்குபவரின் கருணைக்காக காத்திருக்க வேண்டும். எல்லா கடைகளிலும் ஒருவர் இருப்பார். அவர் அந்தப் பகுதியின் அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு புள்ளியின் நேசத்திற்குரியவராக இருப்பார். எப்பொழுது சரக்கு வரும், எப்பொழுது அதனைக் கடத்துவது, கள்ளச்சந்தையில் விற்பது, வரும் மக்களுக்குப் பெயரளவில் சில பொருட்களைப் போட்டுவிட்டு மிச்சத்தைப் பதுக்குவது என இது தேசம் முழுமைக்கும் இபிகோ போல ஒன்றாகவே உள்ளது, சமமாகவே உள்ளது. பொருட்கள் வாங்காதவர்களின் அட்டைகளில் அதை வாங்கியது போல் நொடிகளில் இவர்கள் குறிக்கும் பாங்கைப் பார்க்கும்போது சி.ஐ. படித்தவர்களை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றே தோன்றுகிறது. நம் வீட்டுப் பெண்கள் இரண்டு கிலோ ஜீனியைக் கூட நகரங்களில் பெற்றுவிட முடியும், ஆனால் தொலை தூரங்களில் வசிக்கும் இந்த நாட்டின் முதுகெலும்புகளுக்கு எல்லாம் இன்று இது ஒரு கனவே. மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாத கனவு, அவமானங்கள் நிறைந்த - வலி நிறைந்த, தழும்பேறிய கனவு. அது கிடக்கட்டும், யாருக்கு இப்பொழுது அது பற்றி எல்லாம் கவலை? இந்த முது கெலும்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று சுருக்கமாகப் பார்க்கலாம்.

இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். உலகில் தினசரி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14,900 குழந்தைகள் சாகின்றன. அதில் இந்தியாவில் மட்டும் தினசரி 5000 குழந்தைகள் செத்து மடிகின்றன. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன.

உலகின் மிகப் பின்தங்கிய 26 ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் உழல்பவர்களை விட அதிகமானவர்கள் இந்தியாவில் வறுமையில், பட்டினியில் உதடுகள் காய்ந்து, உதவிக்கரம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் ஏறக்குறைய 30 கோடிப் பேரின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த 30 கோடிப் பேரைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது வெற்றுச் சொல். அந்த வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வெள்ளையனின் பிடியில் இருந்த அடிமை இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி அனுபவித்ததே இல்லை. ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப அங்கு 800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும், ஆனால் அங்கு இப்பொழுது 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்ட 2468 பேரில், ஏறக்குறைய 2000 பேர் அரசு வேலையை உதறிவிட்டு, பெருநகரங்கள் நோக்கிப் பயணப்பட்டனர். ரயில்வேயின் மிகவும் அடிமட்ட, கூலி குறைவான 38000 வேலை இடங்களுக்கு சமீபத்தில் 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் மத்திய இந்திய நிலப்பரப்பை பற்றிய சித்திரம். .

இந்தியாவின் மிக பணக்காரர்கள் 100 பேர் வசம், நம் நாட்டின் மொத்த GDPயின் 25% சொத்துகள் உள்ளது. உலகின் மிகவும் Vulnerable நாடுகளின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பின்புலத்தில் 2009 குடியரசு தினத்தில் பிரதிபாபாட்டில் தேசிய உணவு உத்தரவாதச் சட்டம் பற்றிப் பேசியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நபர் ஒன்றுக்கு கிலோ ரூ.3க்கு 25ளீரீ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். பிரதிபாவின் பேச்சு இந்தியாவின் 47% பேருக்கு வாக்குறுதியை வழங்கியது. ஆனால் விடிவை வழங்கவில்லை. இது போன்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர். விதர்பா பகுதிக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அங்கு பல வாக்குறுதிகளை வழங்கி வந்தார். அதனை நம்பி வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

மன்மோகனின் வருகைக்குக் பின் தற்கொலைகள் கூடியதாகப் பல புள்ளிவிபரங்களை எடுத்துரைத்தார் பி.சாயிநாத். இப்படித்தான் உள்ளதுநிலை. அதன் பின் தற்கொலை செய்துகொன்ட பலர் தாங்கள் விட்டுச் சென்ற குறிப்புகளைப் பிரதமருக்குத்தான் எழுதியிருந்தார்கள்.

கடந்த மே மாதம் மத்தியப் பிரதேசத்தின் கணே நகரத்தில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் டன் கோதுமை திறந்தவெளியில் அழுகிப் போக, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நமக்கு ஒளிபரப்பின. அடுத்த அறுவடை நெருங்குவதால் புதிய தானியங்களை வைக்க இடம் வேண்டும். அதனால் கையிருப்புள்ள தானியங்களைக் கடலில் கொட்டிவிடலாம் என்று ஆலோசிக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசின் கையிருப்பில் இருக்க வேண்டியது 27 மில்லியன் டன் தானியங்கள். ஆனால் அரசின் கையில் இருந்ததோ 55 மில்லியன் டன். இப்படிப்பட்ட சூழலில்தான் பி.யு.சி.எல். சார்பாக வழக்குபதிவு செய்தார் கொலின் கொன்சால்வேஸ். ஆகஸ்டு 12ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் அரசிற்கு ஆலோசனை அல்ல, மாறாக உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஒன்று குறைந்த விலையில் பசியால் வாடுபவர்களுக்குத் தானியங்களை வழங்குங்கள் அல்லது இலவசமாக உடனடியாக வழங்குங்கள் என்றது தீர்ப்பு. இருப்பினும் மெல்ல செப்டம்பர் 3ஆம் தேதி, 2.5 மில்லியன் டன் அடுத்த 6 மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று வேண்டா வெறுப்பாகக் கூறியது மைய அரசு. இது எல்லாம் அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார் மன்மோகன்.

அமெரிக்கா கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் இந்த குமாஸ்தாவுக்கு, இந்திய நீதிமன்றம் எப்பொழுதாவது தப்பிக்கூறும் இந்த வார்த்தைகளைச் சகிக்க முடியவில்லை. அரசு மக்களைப் பட்டினியால் கொல்ல முடிவு செய்தால் பின் யார்தான் அதில் தலையிட முடியும்? பெருநகரங்களில் மால்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏர்போர்ட்கள், மென்பொருள் பூங்காக்கள் கட்டப் போதுமான மானியங்களை வழங்க மத்திய அரசால் முடியும். ஆனால் உணவு தானியங்களைச் சேமிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இயலாது. அரசு இனி உணவு தானிய கிட்டங்கிகளைத் தன் செலவில் கட்டக் கூடாது என ஆலோசனை வழங்கிய பன்னாட்டு நிறுவனம்தான் இங்கு பல களங்களை, பெரும் குளிரூட்டிகளை நிறுவி வருகிறது.

அவர்களின் இடத்தில்தான் மைய அரசு பெரும் வாடகை கொடுத்து தன் சேமிப்பை வைத்துள்ளது. 5 வருடமாக இருந்த அந்தக் குத்தகையை 10 வருடமாக கடந்த பட்ஜட்டில்தான் பிரணாப் முகர்ஜி மாற்றினார். உணவு உத்தரவாத சட்டம் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் வார்த்தைகள் இவை: சமூகத்தின் பின்தங்கியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள் என இவர்கள் பசியால், பட்டினியால் வாடாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை. அது மாநில அரசோ - மத்திய அரசோ, இதனை எந்தக் கொள்கை துணையுடனும் நீங்கள் நிறைவேற்றலாம். அது உங்களின் முடிவே. தானியங்கள் வீணாகக்கூடாது, எலிகளை விட அதனைப் பட்டினியால் சாகக்கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். இது ஒன்றே இந்த நீதிமன்றத்தின் பேராவல். இந்தக் கணக்கிடப்பட்ட ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க அரசிற்குத் தேவையான மானியம் ஆண்டிற்கு வெறும் ரு.56,000 கோடி மட்டுமே. ஆனால் 2010-11இல் ஒதுக்கப்பட்ட தொகை ரு.28,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையைக்கூட பல மாநிலங்கள் இலவச திட்டங்களுக்கு செலவிட்டது தனிக்கதை. தேவையான நிதியை ஒதுக்காமல் புலம்பும் மத்திய அரசு இந்த ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடி ருபாய் .

இந்த சலுகைகளில் ஒரு பாதியை அளித்தால் ஒரு பெரும் மனித சமூகத்தின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும் பொருளாதார உற்பத்தியின் காத்திரமான மனிதவளமாக அவர்கள் திகழ்வார்கள். மீண்டும் மீண்டும் வயிறு பசித்துக் கிடக்கும் இந்த மக்களை அரசு ஒரு சுமையாகவே கருதுகிறது. கிரிக்கெட் பேரங்களில் அலையும் நம் உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு இதை எல்லாம் யாராவது புரிய வைத்தால் உசிதம். அவர் கிரிக்கெட் வீரர்களின் வீட்டு நாய்களுக்கான உணவுக்கு இறக்குமதிவரியை ரத்து செய்வதில் பிசியாக அலைகிறார்.

மத்திய அரசு வறுமை மற்றும் பசி, பட்டினியைப் போக்க 22 திட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக நடை முறைப்படுத்தி வருகிறது. இதைவிட பசி- பட்டினியைப் போக்க ஒரு அமைச்சகம் தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும், மத்திய பிரதேசத்தில் போபால் விஷவாயு தொடர்பாக ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் பசியால் வாடும் போது அவர்களுக்குத் தேவைப்படும் அன்றாட தானியத்தை ஏற்றுமதி செய்யும் அரசை எப்படி வகைப்படுத்துவது. இதைப் போலவே நம் அரசிற்கு சற்றும் குறைவில்லாதவர்களாக, நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கம் முதல் பணக்காரர்கள் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. ஆடம்பர கல்யாணங்கள் முதல் இலையில் 25-35 வகை பலகாரங்கள் அடுக்கும் சாதாரன கல்யாணங்கள் வரை உணவைச் சற்றும் மதிக்காத ஒரு தலைமுறை நகரங்களில் வசித்து வளர்ந்து வருகிறது. இவர்களுக்கும் கூட உணவை வீணடிப்பது என்பது தங்களின் பகட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.

கொலின் கொன்சால்வேஸ் அந்த வழக்கில் 67,000 டன் தானியங்கள் அழுகி வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது 2 லட்சம் பேருக்கு ஆறு மாதத்திற்கு உணவளிக்கப் போதுமானது. இதுவரை இந்திய அரசால் இப்படி வீணடிக்கப்பட்ட தானியங்களின் மூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் மனிதன் நிலாவுக்கு நடந்தே போய் வரலாம். அப்படிச் செய்தால் ஆயிரம் ஆயிரம் கோடிகள் நிலாவுக்குச் செல்ல ராக்கெட் ஆராய்ச்சியின் செலவு மிச்சம்தானே. தானியங்களை வழங்காவிட்டால் பரவாயில்லை. மன்மோகன் அவர்களே, நிலாவுக்காவது போய்வர ஏற்பாடு செய்யுங்கள்.

Wednesday, March 9, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-3.


ஜூலை 29, 1987ஆம் வருடம். ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக 40,000 இந்தியராணுவ வீரர்களைக் கொண்ட IPKF – அமைதி காக்கும் இந்தியப் படை அனறே இலங்கை விரைகிறது. அதன் முதல் கமாண்டராக ஜெனரல் ஹர்கிரத் சிங் பொறுப்பு ஏற்கிறார். இனி அவரது வார்த்தைகளில்,

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே இடையிலான, இந்திய இலங்கை உடன் பாட்டின்படி, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும். இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும்.அனைத்து போராளிக்குழுக்களும், இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் வசம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும். துவக்கத்தில் IPKF கமாண்டரான என்னிடம் கூறப்பட்ட அணுகுமுறை இது தான்.

எனவே நான் விடுதலைப்புலிகளிடமும், அதன் தலைவர் பிரபாகரனுடனும் நல்ல அணுகுமுறையிலும், நட்புமுறையிலும் பழகினேன். தினமும் அவர்களுடன் உட்கார்ந்து கலந்து பேசி டீ சாப்பிடும் அளவிற்கு எங்கள் உறவு சுமுகமாக இருந்தது. ஆனால், பிறகு நடந்தது வேறு. விடுதலைப் புலிகளிட மிருந்து மட்டுமே ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டன. மற்ற போராளிக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதுடன், மேற்கொண்டு ம் இந்திய அரசால் அவர்களுக்கு ஆயுதங்கள் தரப்பட்டன. அந்த போட்டி குழுக்கள், புலிகளை அழிக்கும் பணியில் ஊக்குவிக்கப்பட்டன.

இவ்வாறு அமைதி காக்க வேண்டிய படையை, டபுள் கேம் (இரண்டு வித ஆட்டங்களை) ஆடும்படி இந்திய அரசியல் தலைமை எங்களுக்கு உத்திர விட்டது. எனவே, விடுதலைப் போராளிகளை அழிக்கும் பணியில் IPKF படை துணை போக ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் இதைப்பற்றி வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தபோது, அதை இந்திய அரசு சட்டை செய்ய வில்லை. மாறாக,இந்திய அமைதி காக்கும்படைக்கு இன்னுமொரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிளவையும், அவ நம்பிக்கையையும் உண்டாக்கும் வேலை அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை பலவீனமாக்கி அழித்து ஒழிக்கும்படி அமைதி காக்கும் படைக்கு தில்லியிலிருந்து உத்திரவு கொடுக்கப்பட்டது

புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிப்பது நடவாத காரியம் – தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்கு புலிகளையே நம்பி இருக்கிறார்கள் என்பது எனக்கு (ஜெனரல் ஹர்கிரத் சிங் ) நன்றாகப் புரிந்தது. இதை நான் அப்போதைய இந்தியத் தூதர் ஜெ.என்.தீக்ஷித் திடம் சொன்னபோது அவர் அதை ஏற்பதாக இல்லை. மாறாக, “ஜெனரல் – நான், பிரதமர் ராஜீவ்காந்தியுடன் தில்லியில் நடத்திய பேச்சு வார்த்தைகளில் கிடைத்துள்ள உத்திரவுகளின்படி நான் சொல்வதை நீங்கள் ஏற்று செயல்பட வேண்டும். புலிகளிடம் சமாதானப் பேச்சுநடத்துவதைக் கைவிட்டு விட்டு மிரட்டி அடிபணிய வைக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாக தீக்ஷித் திடமிருந்து 1987 செப்டம்பர் மாதம் 14/15 தேதி இரவு கிடைத்த உத்திரவு, என்னை நிலை குலையச் செய்தது.

நான் பிரபாகரனையும் மற்றவர்களையும், அவ்வப்போது தோன்றும் பிரச்சினை களைப்பற்றி விவாதித்து சுமுகமுடிவுகளை எடுக்க, தேவைப்படும்போது இரவு நேரங்களில் 12 மணி வாக்கில் சந்திப்பது வழக்கம்.

1987 செப்டம்பர் 14/15ந் தேதி இரவு, அப்போது இலங்கையில் இந்திய தூதராக இருந்த ஜெ.என்.தீக்ஷித் “பேச்சு வார்த்தை நடத்த வரும்போது பிரபாகரனை கைது செய்யுங்கள் - முடியவில்லை என்றால் - சுட்டு வீழ்த்துங்கள். என்று என்னிடம் கூறினார்.

அதற்கு நான், “பிரபாகரன் இந்திய ராணுவத்தின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த வருகிறார். வெள்ளைக்கொடி ஏந்தி பேச்சு வார்த்தை நடத்த வருபவர்களை சுடுவது ராணுவத்திற்கு இழுக்கு. அத்தகைய செயல்களில் ஈடுபட நாங்கள் தயாரில்லை. மேலும் நீங்கள் போடும் உத்திரவை நான் ஏற்க வேண்டிய அவசியமில்லை- எனக்கு உத்திரவு போட வேண்டியவர்கள் ராணுவத் தலைமையகத்தில் இருக்கிறார்கள் என்றேன்.

எனக்கு ராஜீவ் உத்திரவு கொடுத்திருக்கிறார், என்றார் தீக்ஷித்.

நான் “உங்கள் உத்திரவை ஏற்பதற்கில்லை. என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

ஜெனரல் ஹர்கிரத்சிங் , இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய தளபதிபொறுப்பில் இருந்தவர். ரிடையர் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு அவர் கொடுக்கும் பேட்டி யில், எழுதும் புத்தகத்தில் கூறுபவை நம்பத் தகுந்ததாகத் தானே இருக்கும்? (இதன் பின்னர் ஜெனரல் ஹர்கிரத் சிங், விடுதலைப்புலிகளுடன் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஜனவரி, 1988-ல் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப் பட்டார் )

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு, போரிடுவதை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்த குறைகளைத் தீர்த்து வைக்க IPKF சார்பில் எந்தவித நடவடிக் கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரான, 25 வயது இளைஞன் பார்த்திபன் ராசையா என்கிற இயற்பெயரைக் கொண்ட லெப்டினண்ட் கேனல் திலீபன் 5 அம்ச கோரிக்கைகளை IPKF முன் வைத்து, அவற்றை நிறைவேற்றக் கோரி, காந்தீய வழியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

வடக்கிலும், கிழக்கிலும் புதிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

அவசர கால சட்டம் நீக்கப்பட வேண்டும்.

ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில், அரசாங்கம் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதை நிறுத்த வேண்டும் என்பனவே அவை.

1987 செப்டம்பர் 15ந்தேதி உண்ணாவிரதத்தைத் துவங்கிய திலீபன் தண்ணீர் கூட அருந்தவில்லை. தமிழீழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் முதல்முறையாக(பிரபாகரனின் சென்னை உண்ணாவிரதத்தைத் தவிர்த்து ) காந்தீய வழியில் உண்ணாவிரதம் இருந்து புதிய வழியில், சாத்வீக முறையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை இந்திய அரசு இதை சற்றும் கண்டுகொள்ள வில்லை.

தில்லி அரசியல் தலைமை - இதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் கூறியது. திலீபனின் உண்ணாவிரதம் பற்றிய செய்திகள் அவ்வப்போது புலிகளின் செய்திஊடகங்களிலும்,வானொலியிலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்ததால், திலீபனின் உண்ணாவிரதம் தமிழர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த இளைஞர் திலீபன் அவரது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையிலேயே செப்டம்பர் 26ந்தேதி உண்ணாவிரதம் காரணமாகவே துடிக்கத் துடிக்க தன் உயிரைத் துறந்தார். இது விடுதலைப் போராளிகளிடையேயும், ஈழத்தமிழ் மக்களிடையேயும் பெருத்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டு பண்ணியது.

IPKFக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின.

இங்கே விரோதம் வலுக்கிறது.

இந்த விரோதம் துவங்கவும், தொடர்ந்து வளரவும் ராஜீவ் காந்தியே முக்கிய காரணமாகிறார் என்பது கவனிக்கத் தகுந்தது.

அக்டோபர் 4, 1988. பாயிண்ட் பெட்ரோவிற்கு அருகே, கடலில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இலங்கை கடற்படை வழிமறித்துப் பிடித்தது. அதில் 17போராளிகள் இருந்தனர். போராளிகளின் முக்கியத் தலைவர்களான லெப்டினண்ட கேனல் குமரப்பாவும், புலேந்திரனும் அதில் அடங்குவர். ஒப்பந்தத்திற்கு முன்னதாக சில கொலை வழக்குகளின் காரணமாக தேடப்பட்டு வந்த இவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் விலை அறிவித்து இருந்தது சிங்கள அரசு. இப்போது சிக்கிய இவர்கள் மீது மேற்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்கு ஆயுதங்களைக் கள்ளத்தனமாக கடத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியது இலங்கை அரசு. விசாரணைக்காக, இவர்களை கொழும்பு கொண்டு செல்லப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுபட்டு விட்டதாகவும், ஆயுதங்களைக் கடத்தியதாக இலங்கைஅரசு குற்றம்சாட்டுவது வடிகட்டிய பொய் என்றும் கூறி உடனே அவர்களை விடுவிக்குமாறு IPKF கமாண்டர் ஹர்கிரத் சிங்கிடம் கேட்டது புலிகள் அமைப்பு.

ஹர்கிரத் சிங்கின் சார்பாக, அவரது துணைத் தளபதி IPKF பிரிகேடியர் பெர்னாண்டஸ் பொறுப்பேற்றுக்கொண்ட இந்த நிகழ்வு பற்றி அவரே கூறி இருப்பது .

உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்த பிரிகேடியர் பெர்னாண்டஸ் 17 கைதிகளையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அவர்களை பலாலி விமான தளத்திற்கு அனுப்பி வைத்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த இலங்கை ராணுவத்திடம் பேச்சு வார்த்தை நிகழத்திய பிறகு, போராளிகள் பலாலி விமான தளத்தில் பயணிகள் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களைச் சூழ்ந்துகொண்டு உள் வளையத்தில் AK- 47 துப்பாக்கிகளுடன் இலங்கை ராணுவம் இருந்தது. வெளிவட்டத்தில் இந்திய ராணுவம் இருந்தது. போராளிகளிடம் இருந்த ஆயுதங்கள் ஏற்கெனவே பறிக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் 5ந்தேதி காலை பிரிகேடியர் பெர்னாண்டஸுக்கு கிடைத்த தகவல் அவரை நிம்மதி இழக்கச் செய்தது. ஆம் -இலங்கை ராணுவம் போராளிகளை கொழும்புக்கு கொண்டு போகப்போவதாக அறிவித்தது. காலையில் கொழும்பி லிருந்து பலாலி வரும் இலங்கை ஆகாயப்படை விமானத்தில் போராளிகளை ஏற்றிச்செல்லப்போவதாகத் தெரிந்தது.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் துரிதமாகச் செயல்பட்டார். இந்த தருணம் வரை – எதைச் செய்தாவது, IPKF போராளிகளைக் காப்பாற்றி விடுவிக்கவே விரும்பி செயல்பட்டது. இலங்கை விமானம் தரை இறங்கியவுடன், அது மீண்டும் மேலெழும்பாத வண்ணம் ஓடுபாதையில் அதைச்சுற்றி நான்கு புறங்களிலும், IPFK ன் BMP கவச போர் வாகனங்கள் விரைவாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

இலங்கை ராணுவம் கடுங்கோபம் கொண்டது. எந்த நேரத்திலும் இரு தரப்பாருக்கும் சண்டை நிகழக்கூடிய சூழ்நிலை உருவானது.

இந்த சம்பவத்தை நினைவுகூறும்போது கூறுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் -

“பத்தே நிமிடங்களில் இலங்கைப் படையை மௌனிக்கச் செய்து விட்டு 17 போராளிகளையும் கவச வாகனங்களில் ஏற்றிச்சென்று பத்திரமாக விடுதலை செய்திருக்க எங்களால் முடிந்திருக்கும் .

ஆனால் – துரதிருஷ்டவசமாக தில்லி அரசியல் தலைமையிலிருந்து, அவசரமான கட்டளை ஒன்று பறந்து வந்தது. “உங்களை யார் இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னது ? உடனடியாக விலகி இருங்கள். இலங்கை ராணுவம் விரும்புவதைச் செய்யட்டும்” என்று. எங்கள் இயலாமையை எண்ணி வருந்துவதை விட வேறோன்றும் செய்ய முடியவில்லை எங்களால் “.

ஆம் – உடனடியாக சம்பவ இடத்திலிருந்து நகர்வதைத் தவிர IPKF ஆல் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் – போராளிகளிடம் சென்று விஷயத்தை விளக்கி விட்டு, தன் இயலாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மிகுந்த வருத்தத்துடன் வெளியேறினார்.

விளைவு – இலங்கை ராணுவம் 17 போராளிகளையும் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்க, அத்தனை பேரும் சயனைடு அருந்தி உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது.

தெரிந்தே, ராஜீவ் காந்தி எடுத்த இந்த முடிவு - போராளிகளை இலங்கை அரசுக்கு பலி கொடுப்பது என்கிற முடிவு.

விரோதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும், இந்திய அரசின் மீதும், IPKF மீதும் கடும் கோபம் கொண்டனர். உடனடியாக வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. சில மணி நேரங்களுக்குள்ளாகவே விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாம்களின் மீது தாக்குதல்களை நிகழ்த்தினார்கள்.

புலிகளை அடக்க முடியவில்லை என்றால் IPKF எதற்கு என்று ஜனாதிபதி ஜெயவர்த்தனே கேட்க,

முழு பலத்துடன் விடுதலைப்புலிகளை அடக்கவும், அழிக்கவும், தில்லியிலிருந்து உத்திரவு வந்தது.

விரோதம் தொடர்கிறது.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.