Tuesday, February 15, 2011

'லோக் சபா'வில் குடித்துக் கொண்டே ஒரு பேட்டி!


குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும் என்று நாடுதழுவிய அளவில் விளம்பரம் செய்யும் அரசு, திரைப்படங்களில் குடிப்பது போன்ற காட்சிகளை சென்சார் மூலம் தடைசெய்கிறது. இதே விதிதான் தொலைக்காட்சிக்கும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 'லோக் சபா' தொலைகாட்சியில் இரு எழுத்தாளர்கள் குடித்துக் கொண்டே பேட்டி காணும் நிகழ்வொன்றை கண்டு அதிர்ந்தேன். பிற ஊடகங்களில் இது போன்ற நிகழ்வுகளை அனுமதிக்காமல் பாதுகாக்கும் அரசாங்கம், அரசு தொலைக்காட்சியில் எப்படி அனுமதித்தது?.

அடுத்து, ஏற்கனவே எழுத்தாளர்களின் தனிமனித ஒழுக்கம் விமர்சனைக்கு உள்ளாகி அடிக்கடி சர்ச்சயை கிளப்பிவரும் நிலையில், இது போன்ற பொது நிகழ்வில், அதுவும் அரசுத் தொலைகாட்சியில், என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் இது போன்ற அசிங்கங்களை அசால்ட்டாக செய்வார்கள்.

தொலைக்காட்சி அரங்கினுள் அமர்ந்துள்ளவர்கள் உறைந்து இருப்பது போல் அல்லாமல் பொதுமக்கள் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.



மதுபாட்டில் அருகே இருப்பவர் எழுத்தாளர் விக்ரம் சேத்., மதுகோப்பையை கையிலெடுப்பவர் மில்லர்.


மது நிறைந்த பாட்டில் பொதுமக்கள் பார்க்கும்படி ஒளிபரப்பாகிவிட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது.




போதையில் விக்ரம் சேத்.



தொலைக்காட்சி அரங்கினுள் அமர்ந்துள்ளவர்கள்







மில்லர்

Monday, February 14, 2011

ஒரு சுயசரிதை.- முன்னால் மத்திய அமைச்சர். ஆ.இராசா



சில

இலக்கியங்களில்
எழுத்துவடிவில்
இருந்த நான்
இந்தியாவில்
அவதாரம்
எடுத்தது
1947க்கு
பிறகுதான்!

என்னை
உணர்வுகளால்ல;
உச்சரிக்க
அழகாய்
இருப்பதால்
ஜனநாயகம்
என்று
பெயர்சூட்டி
இழுத்தணைத்துக்
கொண்டவர்கள்
இந்தியர்கள்!

மெஜாரிட்டி
மாங்கல்யம்
சூட்டப்பட்டதால்
ஆளுங்கட்சிக்கு
அடிமையாகிப்போன
பெண்டாட்டி
நான்.

எனது
கல்யாணத்தேர்தல்
ஆயிரங்காலத்துப்
பயிரல்ல;
அய்ந்தாண்டுப்
பயிர்!
அது
நடந்தேறிய
காட்சியை
நான்
மறக்கவில்லை!

மேடை

முழக்கத்தின்

தாளத்தில்-
எண்ணமுடியாத
வாக்குறுதி
ஒப்பந்தத்தின்படி-

ஒரு
நேரத்து
சிற்றுண்டிப்
பொட்டலத்தை

வரதட்சனையாக்கி

அள்ளிவீசப்பட்ட

ஓட்டுமலர்களால்
.



அய்ந்தாண்டுக்கு

ஆளுங்கட்சியோடு
வாழ்க்கைப்பட
ஒப்புதல்அளித்து
புகுந்தவீட்டுக்கு
போனபோதுதான்
என்னை
வாழ்த்தினார்கள்
'ஜனநாயகம் வாழ்க!'
என்று.


அய்ந்தாண்டுக்கு
ஒப்பந்தப்படுத்தப்பட்ட
நான்
மத்தியரசு
மாமியாரோடு
சண்டைபோட்டு
இடையிலேயே
வாழாவெட்டியாவதும்
உண்டு!

எதிர்கட்சி
நாத்திகள்
என்னை
விபச்சாரியாக்கும்
முயற்சியையே
இலட்சியமாக
கொண்டார்கள்!

இந்திய
கெளரவர்கள்
என்னை
துகிலுரிக்கிறார்கள்;

சபதம்

செய்யஅல்ல;
சப்தம்
செய்யக்கூட
பாண்டவர்களைக்
காணோம்.

பாஞ்சாலிக்கு
பதிவிரதை
பட்டம்சூட்டிய
இந்தியர்களே!

இல்லாததை

இருப்பதாக
கூறுவதில்
நீங்களே
முதல்

Saturday, February 12, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -2)



16.வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை நாம் எப்படி கட்டுப்படுத்துவது? செல்வசிவாகணேஷ், செங்கல்வராயா பாலிடெக்னிக், சென்னை. சன்சித், பிளேட்டோ அகடமி மெட்ரிக் பள்ளி, திருப்பூர். ராஜயோகன், மகாராஜா பிருத்வி இன்ஜினியரிங் கல்லூரி, அவினாசி. கிரீஷ், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா பாலிடெக்னிக், கோவை. அனீஷ், திருநகர், வில்லிவாக்கம், சென்னை. விக்னேஷ், லட்சுமி மில்ஸ் பள்ளி, தூத்துக்குடி. விஷ்ணு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் :
சமுதாய கட்டமைப்பின் நிலையற்ற தன்மையால்தான் பயங்கரவாதம் உருவாகிறது. பல்வேறு நாடுகளில் இப்பயங்கரவாதம் உள்ளது. இளைஞர்களுக்கு நாம் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கும் போது அதை தடுக்கலாம். நிதி வசதியில் உள்ள சமச்சீரற்ற தன்மையை நாம் மாற்றும் போது, சமூகத்தில் உள்ள பல்வேறு வகையான பாகுபாடுகள் களையப்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கலாம். மதம் என்பது ஆன்மிகமாக மாற்றம் அடைய வேண்டும். பசி பட்டினியை ஒழித்து வளர்ந்த நாடாக நாம் மாற வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அமைதி தவழும் நாடாக இந்தியா மாறும்.

17. 2020ம் ஆண்டில் இந்தியா அறிவு சார் சூப்பர்பவர் ஆகுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மணிகண்டன், வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர். நாகேந்திர குமார், வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. ஈஸ்வரன், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம். சந்தோஷ், மேரி மாதா மெட்ரிக் பள்ளி, மதுரை. ஜனனி, ஸ்ரீதாராசந்த் ஜெயின் வித்யாலயா, சென்னை. சத்யராஜ், கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம். மோனிஷ்குரு, செயின்ட் மேரி மெட்ரிக் பள்ளி, கோவை. மணிகண்டன், பி.கே.என்., கல்லூரி, திருமங்கலம். சுரேஷ்குமார், தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை/பிரவீன், சர் எம்.சி.டி.எம், டிரஸ்ட் பள்ளி, கீழ்ப்பாக்கம். மாது, ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. குருபரன், ஸ்ரீஆனந்த் ஜோதி வித்யாயலயா, சென்னை. கார்த்திகேயன், வேல்டெக், ஆவடி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : நாம் கல்வியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம் சமுதாயத்துக்கு தரமான கல்வியை அளித்தாலே அறிவுசார் சமுதாயம் உருவாகும். இளைஞர்கள் அனைவரும் கல்லாமையை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கிராமப்புறங்களில் சிறு சிறு தொழில்கள் துவங்க உதவி செய்து அங்குள்ள இளைஞர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்க வேண்டும். இதுவே இந்தியாவை 2020ம் ஆண்டில் அறிவுசார் சூப்பர்பவர் ஆக்க உதவும்.

18.உலகம் வெப்பமடைந்து வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வெங்கட் சுப்ரமணியன், லட்சுமி மெட்ரிக்பள்ளி, கருப்பாயூரணி, மதுரை. பிரசன்ன குமார், டி.எம்.எச்.என்.யு., பள்ளி தேனி.சுகன்யா ராஜமன்னார், நடராஜன் நகர், தஞ்சாவூர்

டாகடர் அப்துல்கலாம் : உலகம் வெப்பமடைதல் என்பது கட்டுக்கதை என்று இனி சொல்ல முடியாது. அது உண்மையாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பூமி தற்போது 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துவிட்டது.

உறைபனி மற்றும் பனிக்கட்டிகள் இந்த வெப்ப உயர்வில் மாற்றங்கள் அடையும். பனிக்கட்டிகள் இந்த வெப்பநிலை மாற்றத்தால் உருக தொடங்கியுள்ளன. மலைகளில் உள்ள பனி உருகுவதால் அவை கடல் மட்டத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் கடல்மட்டத்தை உயர்த்தும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகள், நம் வாழ்க்கை முறையில் கடைபிடிக்கப்படும் எளிய முறைகள் ஆகியவற்றால் உலகம் வெப்பமடைதலை தடுக்கலாம்

19..உள்நாட்டிலேயே உருவான நீங்கள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது ஏன்?
சந்திரன், யாதவா கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஆனால் 0.8 சதவீத எண்ணெய் மற்றும் காஸ் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 2030ம் ஆண்டில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் எரிசக்தி தேவைப்படும். தற்போது ஒரு லட்சத்து 44 ஆயிரம் மெகாவாட் எரிசக்தி மட்டுமே கிடைக்கிறது. இந்த தேவையை நிறைவேற்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி (சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி) அணு சக்தி மற்றும் உயிரி எரிசக்தியிலிருந்துதான் பெற வேண்டும்.

அணுசக்தி உற்பத்தி தற்போது 3,900 மெகாவாட் ஆக உள்ளது. 2012ம் ஆண்டில் 9 புதிய அணு உலைகளின் உதவியால் 7,160 மெகாவாட்டாக உற்பத்தியை உயர்த்த வேண்டும். 2030ம் ஆண்டில் 50 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த தேவையான பணிகள் தற்போது அணுசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் தோரியம் அடிப்படையிலான அணு உலைகளில் உற்பத்தி சிக்கல் ஏற்படும் போது, தேவைப்படும் யுரேனியம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள யுரேனியம் இறக்குமதி அவசியம். 2030க்குப் பிறகு நமக்கு அந்த தேவை இருக்காது.

20.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவுகள் என்ன?
ஹரிப்பிரியா, ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை

டாகடர் அப்துல்கலாம் : நம்மிடம் 61 ஆயிரம் டன் யுரேனியம் மட்டுமே உள்ளது. இது 10 ஆயிரம் மெகாவாட் மின் சக்தி உற்பத்திக்கு மட்டுமே பயன்படும். எனவே நமது அணு உலைகளை 50-55 சதவீதமே பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளோம். எல்லாவகையில் உள்ள எரிசக்தியை பயன்படுத்தினாலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியா எரிசக்திக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் நாம் எரிசக்திக்கு பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தடை இல்லை. ஆகவே எரிசக்தி தேவையை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும்.

21.அணு சக்தி ஒப்பந்தம் நமக்கு நல்லதா... கெட்டதா?
ரம்யா கேசவ குமார், தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, பெரம்பலூர். செந்தில், நாகசாமி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவும் இந்தியாவும் தனது தேசிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வதற்கே இந்த உடன்படிக்கை. அமெரிக்க விதிமுறைகளை மீறி அங்குள்ள நிறுவனங்கள் நடந்து கொள்ளாது

22. தற்போதுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு என்ன?
வி.ஹரிஷ், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் மெட்ரிக் பள்ளி, மதுரை. கார்த்திகாயினி, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சென்னை

டாகடர் அப்துல்கலாம் : பணவீக்கத்தை கட்டுப்படுத்த தற்போது அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கிராமப்புற வளர்ச்சி திட்டமும் உள்ளது. ‘ஒரு கிராமம் - ஒரு பொருள்’ என்னும் திட்டப்படி, ஒரு கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யுமளவுக்கு தரமாக இருக்கும்படி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயரும்.

23.கல்வியின் நோக்கம் என்ன, அறிவை வளர்ப்பது எப்படி?
மாதேஸ்வரன், ஒச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி. அழகு முருகேசன், எஸ்.பி.எம்., பள்ளி,விழுப்புரம். கோகுலகிருஷ்ணா, ஸ்ரீஅரவிந்த வித்யாலயா, நெய்வேலி

டாகடர் அப்துல்கலாம் : கல்வியின் நோக்கம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே. அறிவார்ந்த சமுதாயத்துக்கு மூன்று அடிப்படை குணாதிசயங்கள் உள்ளன. மதிப்பீடு அடிப்படையிலான கல்வி, ஆன்மிக நெறிகளாக மாறக்கூடிய மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி. பள்ளியில் கற்பிக்கப்படுவது அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான பணி. இது தேசிய வளர்ச்சிக்கு உதவும்.

24.நல்ல ஆசிரியராவதற்கான குணாதிசயங்கள் என்ன?
ஆனந்த், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, சாத்தான்குளம். ராஜேஸ் குமார், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : ஆசிரியர் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும். கற்பிப்பதில் விரும்புபவராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
நாகரிக சமுதாயத்தையும் நல்ல மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர்களை சுயமாக கற்றுக்கொள்பவர்களாக உருவாக்க வேண்டும்.

25.கிராமப்புறங்களை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?
சீனிவாசன், அன்னை தெரசா முதுநிலை மற்றும் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.. மிதுன்சிங், காமராஜர் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர்

டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் புரா (PURA). இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களிலேயே நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வசதிகளை செய்து கொடுக்க நான்கு விதமான இணைப்புகள் அவசியம். முதல் இணைப்பு சாலை போக்குவரத்து. இரண்டாவது தகவல் தொடர்பு இணைப்பு. மூன்றாவது அறிவுசார்ந்த இணைப்பு. இந்த மூன்றையும் சேர்த்தால்தான் நான்காவதாக பொருளாதார இணைப்பு உருவாகும்.

அருகில் உள்ள கிராமங்களை இணைத்து புரா குழுமம் அமைய வேண்டும். பிறகு புரா திட்டத்தின் முதல் இணைப்பாக அக்கிராமங்களுக்கு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள், எலக்ட்ரானிக் தொடர்புகள், மின்னணு தொலைபேசி வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு சுற்றிலும் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். புரா அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றி கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதன் வழியாக சிறுதொழில்கள் பெருகி குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

26.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கூறுங்களேன்?
செந்தில் பாலாஜி, சி.பி.டி., கல்லூரி, தரமணி, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : தற்போது அணுசக்தி மூலம் நாம் பெறும் மின்சாரம் 3 சதவீதம் மட்டுமே. 2030ம் ஆண்டு வாக்கில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அப்போதுதான் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அணு உலைகளிலிருந்து பெற்றாக வேண்டும். அப்போதுதான் நிலக்கரியை சார்ந்து மின் உற்பத்தி செய்வதை நாம் தவிர்க்க முடியும். தற்போது 55 சதவீத மின் உற்பத்தி நிலக்கரி மூலம் நடைபெறுகிறது. இதை 2030ம் ஆண்டில் 33 சதவீதமாக குறைக்க வேண்டும்.

27.வெற்றியின் ரகசியம் என்ன?
விமல்ராஜ், பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி, கோவை. ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை. ஐஸ்வர்யா, டி.ஏ.வி., பள்ளி,வில்லிவாக்கம்.புஷ்பம், ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி,திருநின்றவூர்

டாகடர் அப்துல்கலாம் : எனது வெற்றியின் ரகசியம் எனது பெற்றோர்கள்தான். நான் எப்போதுமே என்னுடைய ஆசிரியர்களை நினைக்கிறேன். அவர்கள்தான் என்னுடைய வாழ்க்கைக்கான லட்சியத்தை அளித்தனர். நீங்கள் கடினமாக உழைக்கும் போது, சில பிரச்னைகள் உங்களை தேடி வரும். பிரச்னைகளை வரவிடாமல் தடுத்து வெற்றி அடையுங்கள். அப்போது நீங்கள் தோல்வியை துவள செய்து
வெற்றியாளராக உருவாவீர்கள்

28.பூமியைத் தவிர வேறு எங்காவது உயிர்கள் இருக்கின்றனவா?
சிவக்குமார், ஸ்ரீசாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

டாகடர் அப்துல்கலாம் : உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் பிற கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து வருகிறார்கள். நமது சூரிய குடும்பத்தில் பூமியில் எப்படி உயிர்கள் தோன்றியதோ, அதேபோல் வேறு எங்கும் உயிர்கள் உருவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன. சூரியனைப் போல் கோடானு கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.

29.பெர்முடா முக்கோணத்தின் அதிசயம் என்ன?
குருமூர்த்தி, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சாத்தூர். நந்தினி, ஜவஹர் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி. நித்தியேஸ்வர், விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவை.. சதீஷ்குமார், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை. ராஜா, வி.கே. மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்

டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவின் தென்கிழக்கு அட்லான்டிக் கடற்கரையை ஒட்டிய பகுதி பெர்முடா முக்கோணம் அல்லது சாத்தான்களின் முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. அதற்கான காரணங்கள் வெவ்வேறாக கூறப்படுகின்றன. இந்த இடத்தில் விபத்துகள் நடப்பதற்கு மனிதத் தவறுகள்தான் காரணம். உலகின் இரு இடங்களில் காந்த துருவம் வடக்கு நோக்கி காட்டாது. அதில் ஓர் இடம் இந்த பகுதி. இது கப்பல் மற்றும் விமானிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

30.இளைஞர்கள், மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? கோபிநாத், சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். தீப்தி, டாக்டர் ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரி, கோவை. ராம்குமார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். ஆர். ஹரிஹரன், முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, ராமநாதபுரம். பி.கே. சுவாமிநாதன், சாஸ்தா பல்கலைக்கழகம், சென்னை. ராணி, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை. கீர்த்தி குமார், சி.எஸ்.ஐ., பள்ளி, கோவை. சிவஹரிநாதன், ஜேசிஸ் பள்ளி, சிவகாசி. ரமேஷ் சண்முகம், நேஷனல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர். மகேஸ்வரம், தியாகராஜர் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : அரசியல் இளைஞர்களை வரவேற்கிறது. அரசியலில் ஈடுபட நினைப்போர், காந்தியடிகளுக்கு அவரது தாயார் சொன்ன அறிவுரையை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் சொன்னது, “மகனே உனது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் மாற்றத்தை உருவாக்கி அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றால், நீ மனிதனாக பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்து அடையும், என்றார். மாணவர்கள் முதலில் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் உங்கள் திறனுக்கேற்ப நீங்கள் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யலாம்.

வளரும்.

நன்றி : கல்வி மலர்

Thursday, February 10, 2011

குறள் கொடுத்த வாழ்வு. பகுதி-2

தேன்தமிழ்ப் புலவர் மு.வைத்திலிங்கம்.


ஒரு சமயம் எங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தில் பேச ஒரு தமிழரிஞர் வந்தார். அவர் காரில் வந்து இறங்கினார். அது எங்களைக் கவர்ந்தது. அவர் அழகாகப் பேசினார். அந்த காரை எல்லோரும் சுற்றிக் கொண்டு தொட்டுப் பார்த்தனர் எவ்வளவு 'அருமையான காருடா!' என்று ஒருவன் பாராட்டினான்.

'இந்த மாதிரிக் காரெல்லாம் நம்மாள வாங்க முடியுமாடா?' என்று கேட்டான். ஏன் முடியாது; ஒரு நாளைக்கு நானே வாங்கிக் காட்டுகிறேன் பாரு என்றேன். எல்லோரும் 'கொல்' ன்று சிரித்தர், எனக்கு வெட்கக் கேடாகி விட்டது. ஒரு நாள் நிச்சயம் இதை விட நல்ல கார் நான் வாங்குவேன்டா என்று உரத்த குரலில் சொன்னேன். அதற்குள் தலைமையாசிரியர் அந்தப் பக்கம் வந்தார். அதனால் அனைவரும் கலைந்து சென்றோம்.ஆனால் என்னுள் ஏற்பட்ட உறுதி மட்டும் கலையவில்லை.

அந்தப் பேச்சாளர் எழுதிய நூலொன்றைக் கூட்டத்தில் மாணவர்களிடம் காட்டி அவர்தம் பெருமை பற்றித் தலைமையாசிரியர் பேசினார். ஒரு மாணவன் அந்த நூலைக் குறித்து பேசும்போது , 'அந்த மாதிரிப் புத்தகம் உன்னால் எழுத முடியுமாடா?' என்றான். 'என்னால் உறுதியாகப் புத்தகம் எழுத முடியும்டா!' என்றேன். மாணவர்கள் மீண்டும் சிரித்தனர்.

இவன் என்னடா எல்லாம் தன்னால் முடியும் என்கிறான்! என்றான் ஒருவன். 'எல்லாம் என்னால் முடியுமடா!' என்று மீண்டும் உரத்தக் குரலில் சொன்னேன். அப்போது என் நெஞ்சில் வள்ளுவரின் குறள் தோன்றி 'முடியும்! முடியும்!' என்றது.

இப்படி எத்தனையோ எண்ணங்கள் என் நெஞ்சில் வளர்த்துக் கொண்டே நான் வளர்ந்தேன். இந்த நேரத்தில் தான் 'இளைஞர் இதயம்' என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். தமிழாசிரியர் எனக்குத் துணை நின்றார். நண்பர்களும் ஆவலுடன் உதவினர். கட்டுரைகளும், கதைகளும், கவிதைகளும் கலந்து அந்த இதழைச் சிறப்பித்தன. என்றாலும் ஓரிதலுடன் அது நின்று போயிற்று.

அடுத்த ஆண்டு ஆறாம் படிவத்திற்கு (S.S.L.C) வந்தோம். அந்த ஆண்டு அரசுப் பொதுத் தேர்வு என்பதால் தலைமையாசிரியர் எங்களைப் பள்ளியில் இரவு தங்கிப் படிக்கச் சொன்னார். எட்டு மணிவரை எங்களுடன் இருந்து வீடு செல்லும் அவர், விடியற்காலை ஐந்து மணிக்கு வந்து எழுப்பி விடுவார். காலை ஏழுவரை படித்து விட்டு, வீட்டுக்குச் சென்று குளித்து, உண்டு விட்டு, பகல், இரவு உணவுடன் பள்ளிக்கு ஓடிவர வேண்டும். இப்படி எங்கள் நலனில் அக்கறை காட்டிய தலைமையாசிரியர் திரு. இராசரத்தினம் போல் வேறொரு தலைமையாசிரியரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை.

அந்த ஆண்டு எம் பள்ளியில் தேர்வுக்குச் சென்ற அத்தனைப் பேரும் தேறினோம். மேலே என்ன செய்வது? இது பெரிய வினாவாக என முன் நின்றது. கல்லூரிக்குச் சென்று படிக்க எனக்கு விருப்பம். மழை வறண்டு கிணறுகள் வற்றிப் போனதால் உணவுக்கே தடுமாற்றம். இந்தச் சூழ்நிலையில் கல்லூரி பற்றி எண்ணவே இயலவில்லை.

ஒரு நாள் சேலத்துத் தெருவில் எம் தலைமையாசிரியரைக் கண்டேன். மகிழ்வுடன் வணங்கினேன். 'என்னப்பா! கல்லூரிக்குச் செல்லவில்லையா?! என்றார்.

'விரும்புகிறேன் ஐயா! வீட்டுப் பொருளாதாரம் இடந்தரவில்லை' என்றேன்.

பரவாயில்லை.திருப்பதியில் கோயில் சார்பில் தமிழ்க் கல்லூரி நடத்துகிறார்கள். என் நண்பர் தமிழ் துறையில் இருக்கிறார். நான் கடிதம் தருகிறேன். அவரைப் போய்ப் பார். இலவச உணவுடன் படிக்க இடங் கிடைக்கும்.

நான் மகிழ்ந்தேன். 'இன்றே புறப்படு' என்று கடிதமொன்றும் தந்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்டு தயங்கி நின்றேன் 'ஏன் தயக்கம்?' என்றார். 'என்னிடம் பணம் ஏதும் இல்லை ஐயா!' என்றேன். 'கவலைப் படாதே! இதை வைத்துக் கொண்டு போய் வா' என்று ஒரு தொகையை அவரே தந்தார். பெற்றுக் கொண்டு கலங்கினேன். 'கவலை வேண்டாம். இப்போதே புறப்படு' என்று தட்டிக் கொடுத்தார்.

என் நலனில் அக்கறை கொண்ட அந்தப் பேருள்ளத்தை வியந்தவாறே திருப்பதி சென்றேன். உரியவரிடம் அந்த மடலை தந்தேன். அவர் மகிழ்வுடன், '' நண்பர் இராசரத்தினத்தின் மாணவனா நீ? உனக்கு இலவச உணவு விடுதியில் இடம் கொடுக்கிறேன். சேர்க்கை அட்டை அனுப்புவேன். வந்து சேர்ந்துக் கொள்!'' என்று என்னை அனுப்பி வைத்தார்.

கல்லூரி கனவுகளுடன் ஊர் தரும்பினேன். தலைமையாசிரியரிடம் நன்றி சொன்னேன். என் வீட்டாரும் பெருமை கொண்டனர். நண்பர் பலரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன்.

ஒரு நாள் திருப்பதிக் கல்லூரியிலிருந்து மடல் வந்தது. '' தம்பி! கவலைப்படாதே அமைச்சர் ஒருவரின் பரிந்துரையால் உன் இடத்தை வேறொருவருக்குத் தர வேண்டியதாயிற்று. அடுத்த ஆண்டு கட்டாயம் உனக்கு இடங் கிடைக்கும். நம்பிக்கையுடன் காத்திரு'' என்று அந்தப் பேராசிரியர் மடல் எழுதியிருந்தார்.

என் நம்பிக்கைக் கோட்டை நொறுங்கியது. தளர்ந்து போனேன். ''தம்பி! வீணாக வருந்தாதே. எல்லாம் விதிப்படியே நடக்கும். பண்ணையத்தை நாம் கவனிப்போம்'' என்றார் என் தந்தை.

''ஊழையும் உப்பக்கம் காண்பர்'' என்ற குறள் என்னுள் எழுந்து முழங்கியது. விதியை வெல்ல உறுதி கொண்டேன். நான் ஒரு நாள் தமிழாசிரியர் ஆவேன் என்னும் நம்பிக்கையை செஞ்சில் வளர்த்தேன். முயன்றேன். ஓர் உயர் தொடக்கப்பள்ளியில், பயிற்சி இல்லா ஆசிரியனாக ஆறு திங்கள் பணியாற்றினேன். அதில் பெற்ற ஊதியத்தைச் சேமித்து அடுத்த ஆண்டு ஈரோடு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். இரண்டாண்டுகள் பயிற்சி பெற்று வீடு திரும்பினேன்.

திடீரென்று ஒருநாள் என் தாயார் இயற்கையடைந்தார்கள். வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்த கதையாயிற்று. என் தந்தையார் மனம் குழம்பிப் போனார். எங்களைத் தவிக்க விட்டுக் கோயில் கோயிலாகப் போகத் தொடங்கினார். ஆறு திங்கள் அவர் எங்குள்ளார் என்றே தெரியவில்லை. எனக்குக் கீழ் எட்டுப்பேர். ஆணகள் நால்வர். பெண்கள் நால்வர். எல்லோரும் படித்துக் கொண்டிருந்தனர். நடுக்கடலில் கலம் நொறுங்கியது போல் தத்தளித்தோம்.

'இடுக்கண் வருங்கால் நகுக' என்னும் குறள் என்னைத் தட்டி வழி நடத்தத் தொடங்கியது. துணிவுடன் பண்ணையத்தை நடத்தத் தொடங்கினேன். நல்ல மழை பெய்த நேரம் அது. உறவினர் ஒருவரிடம் கடனாக ஓரினை மாடுகள் வாங்கி நிலத்தை உழுதோம். என் தம்பிகளில் ஒருவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு வேலைகள் நடைபெற்றன. வயல்களில் கரும்பு பயிர் செய்தோம். பள்ளி சென்று வந்த எம் பெரிய தங்கை எங்களுக்குச் சமைத்துப் போட்டாள். எமக்கு வேண்டியவர்களும் சிற்சில வகைகளில் உதவினர். கரும்பு வளர்ந்து வெட்டுக்குத் தயாரானது.

என் தந்தை வீடு வந்து சேர்ந்தார். எங்கள் உழைப்பைக் கண்டு பூரித்தார். சந்தைக்குக் கரும்பு கொண்டு போகும் பணி தொடங்கியது. என் கவலை ஓரளவு குறைந்தது.

நான் ஆசிரியப் பணி தேட ஆரம்பித்தேன். என் ஆசிரியர் ஈ.எஸ்.ஆறுமுகம் அவரகள் துணையால் கோவை மாவட்டம் நம்பியூர் உயர் பள்ளியில் எனக்குப் பணி கிடைத்தது. திறம்படச் செய்தேன். அங்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் தேர்வுக்கெனப் படிக்கத் தொடங்கினேன்.

அடுத்த ஆண்டு அந்தியூர் வந்தேன். அது பெரிய பள்ளி, எனக்கு நிறைய தமிழ் வகுப்புகள் கொடுக்கப்பட்டன. பாராட்டும் வகையில் அப் பணியைச் செய்தேன். அங்குப் புலவர் கு.மா.திருநாவுக்கரசு எனக்கு நண்பரானார். நாங்கள் இருவரும் சேர்ந்து மாணவர்களுக்கு ஞாயிறுதோறும் குறள் வகுப்பு நடத்தினோம். ஆசனங்கள் பயிற்றுவித்தோம். அங்கு வள்ளுவம் என்ற நாடகத்தை சிறப்பாக நடத்தி பாராட்டுப் பெற்றோம்.

அடுத்த ஆண்டு ஒலகடம் வந்தேன். அங்கு ஆறாண்டுக் காலம் என் பணி நடந்தது. என் தங்கை இருவரையும், என் பெரியப்பா வழி அண்ணன் பெண்கள் இருவரையும் அழைத்து வந்து படிக்க வைத்தேன். பெண்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலினால் அவர்களைப் படிக்க வைத்தேன். அங்குதான் புலவர் இளநிலைத் தேர்வெழுதினேன். புலவராக வேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் சிறிதும் குறையவில்லை. 'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற குறள் எனக்குத் துணையாகி வந்தது. இந்தப் பள்ளியிலும் வள்ளுவம் நாடகத்தை நடத்தினேன். ஊர்ப் பெருமக்கள் மேடையிலேயே எனக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

ஓலகடத்தில் ஓவியர் நடேசன், தொழிலாசிரியர் இராமசாமி, ஆசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஓரறையில் தங்கியிருந்தோம். அந்த அறைக்கு வள்ளுவர் இல்லம் எனப் பெயரிட்டோம். ஓய்வு கிடைத்த போதெல்லாம் திருக்குறள் படிப்போம். ஐயம் ஏற்படும் போது அனைவரும் சேர்ந்து அது பற்றிச் சிந்திப்போம். ஒரு சமயம் எனக்குத் திடீரென்று நச்சுக் காய்ச்சல் வந்தது. நண்பர்கள் துடித்துப் போயினர். உள்ளூரிலிருந்து மருத்துவரை அழைத்து வந்து காட்டினர். அவரும் மருந்துகள் தந்தார். ஒரு வாரமாகியும் காய்ச்சல் தணியவில்லை. எதிர் வீட்டு நண்பர் சுப்பிரமணியம் சீரகம் சேர்த்து வெந்நீர் வைத்து நாள் தோறும் கொடுப்பார்.

எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கோபி மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்லி விட்டார். நண்பர் சுப்பிரமணியம் தனக்கு வேண்டியவரிடம் 'ஜீப்' ஒன்று இரவல் வாங்கித் தர, அதில் நண்பர்கள் என்னைக் கோபி மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றனர். அங்குத் தங்கி மருத்துவம் பார்க்கக் கூறி அந்த மருத்துவர் ஓர் அறை ஒதுக்கித் தந்தார்.

என் வீட்டிலிருந்து எனக்குத் துணையிருக்க எவரும் வரவில்லை. வரவும் வாய்ப்பில்லை. என் இனிய நண்பர்களே எல்லாவகை உதவிகளையும் செய்தனர். முதல் நாள் ஒருவர் துணையிருப்பார். அடுத்த நாள் மாலை ஒருவர் ஓலகடத்திலிருந்து நேர்வு விடுப்பு எடுத்துக் கொண்டு வருவார்.துணையிருந்த நண்பர் சென்று விடுவார். மறு நாள் மாலை முதல் நாள் வந்தவர் வருவார். இப்படிப் பதினைந்து நாட்கள் நேர்வு விடுப்பு எடுத்துக் கொண்டு மாறி மாறி வந்தனர். பள்ளித் தலைமையாசிரியரும் அவர்களுக்கு விடுப்பு தந்து அனுப்புவதில் சுணக்கம் காட்ட மாட்டார்.

படுக்கையிலேயே சிறுநீரும், மலமும் கழிக்க வேண்டிய நிலை வந்த போதும் நண்பர்கள் தயங்கவில்லை. படுக்கைக் கோப்பையில் அவற்றை ஏற்று அப்புறப் படுத்தினர். அவர்கள் செய்த உதவிகளைக் கண்டு நான் பலமுறை கண்ணீர் மல்கியிருக்கிறேன். தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். 'நீங்கள் கவலைப் படாதீங்க. எங்கள் நண்பருக்கு இப்படிச் செய்வதில் நாங்கள் பெருமைப் படுகிறோம்' என்று சொன்னதை நான் இன்றளவும் மறக்கவில்லை.

இந்த நிலையில் எப்படியோ செய்தி கேட்டு என் தந்தையும், பெரியப்பார் மகனும் மருத்துவ மனைக்கு வந்தார்கள். என் நிலை கண்டு என் தந்தை கலங்கிப் போனார். ஒரு நாள் இரவு முழுவதும் அங்குத் தங்கி என் நண்பர்கள் எனக்குச் செய்த உதவிகளைக் கண்டு வியந்து போயினர். நாமே இருந்தாலும் இத்தனை உதவிகள் செய்ய முடியாது என என் அண்ணன் சொல்லியதைக் கேட்டு என் தந்தை கலங்கினார்.

'உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே

இடுக்கன் களைவதாம் நட்பு'

என்ற வள்ளுவர் வாக்கை எண்ணி எண்ணி பெருமிதம் கொண்டேன். உடல் நலம் பெற்று வீடு திரும்பும் வரை நண்பர்கள் உடன் இருந்து என்னைத் திரும்ப அழைத்து வந்தனர். எனக்காகவே சமையல்காரன் ஒருவனை அமர்த்தினர். அதுவரை விடுதியில் உண்டு வந்த நாங்கள் அதன் பிறகு சொந்த சமையல்காரனை வைத்துச் சமைத்து உண்ணத் தொடங்கினோம்.

அங்குத் தான் எனக்குத் திருமணமும் நடந்தது. வீட்டினர்க்கு எந்த செலவும் வைக்காமல் நானே முயன்று என் செலவில் தமிழரிஞர் கு.சிவமணி தலைமையில் சடங்குகள் எதுவுமின்றி மணம் முடித்துக் கொண்டேன். ஒலகடத்தில் இருக்கும் போதே எனக்குப் பெண் மகவு பிறந்தது. 'கலைச்செல்வி' என்று பெயரிட்டுப் பேணி வளர்த்தோம்.

1962 வாக்கில் சேலம் மாவட்டத்துக் குமாரபாளையம் உயர் பள்ளிக்கு மாவட்ட மாறுதல் பெற்று வந்தேன். இந்தப் பள்ளியிலும் வள்ளுவம் நாடகம் நடத்தப் பெற்றது. பெரும் பாராட்டும் கிடைத்தது. குடும்பம் பெருகியது. பொருள் நெருக்கடியும் வந்தது. என்றாலும் கலங்கவில்லை. 'புதையம்பில் பட்டுப் பாடூன்றும் களிறு' என்ற குறள் என் நினைவில் நின்று காத்தது.

அடுத்த ஆண்டு வனவாசி உயர் பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் சென்றேன். இடையிடையே எம் தோட்டத்திற்குச் சென்று கவனித்து வந்தேன். இங்குப் புலவர் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். தமிழாசிரியருமானேன். நங்கவள்ளியில் ஊர்ப் பெருமக்களுக்கு குறள் வகுப்பு நடத்தி வந்தேன். பலர் விரும்பிக் குறள் கற்றனர். பள்ளியிலும் இலக்கிய விழாக்கள் பல நடத்தினேன்.

1965-ல் மேச்சேரிக்கு நான் பயின்ற பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் சென்றேன். அங்குத்தான் அச்சகம் தொடங்கினேன். 'தேனமுதம்' என்ற இலக்கிய திங்களிதழும் அங்குத்தான் தொடங்கப்பட்டது. படிக்கும் போது நான் நண்பர்களிடம் சொன்னவாறு ஒவ்வொன்றாகச் செயல் படுத்தினேன்.எளிய இனிய நறுந்தமிழில் 'தேன்தமிழ்த் துணைவன்' என்ற உரைநூலும் வெளியிட்டேன். இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் போது சேலத்துக்குக் குடிபெயர்ந்தேன். சேலத்துக்கு அண்மையிலுள்ள சுக்கம்பட்டி உயர் பள்ளிக்கு மாறுதலும் பெற்றேன். அந்தப் பள்ளியிலும் பகல் இடைவேளையில் குறள் வகுப்பு நடத்தினேன்.

அதன் பின் பல பள்ளிகளுக்கு மாற்றப்பட்டேன். என் எண்ணம் மட்டும் மாறவில்லை. சேலத்தில் 'தேன்தமிழ்ப் பதிப்பகம்' தொடங்கி நூல்கள் பதிப்பித்தேன். இதுவரை நூற்றியெழுபது நூல்கள் வெளியிட்டுள்ளேன். நான் எழுதிய பதினைந்து .நூல்களும் அவற்றில் அடங்கும். உயர்ந்த இலக்கியங்கள், சிறந்த புதினங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பலதரத்து .நூல்களும் எம் பதிப்பகத்தில் வெளி வந்துள்ளன. தேன்தமிழ்த் துணைவனும் பெருகி வளர்ந்து மாணவர்களுக்கு நல்ல துணையாக விளங்குகிறது.

ஓய்வு பெற்று வீட்டில் அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில் நான் வளர்ந்தவகையை எண்ணிப் பார்க்கிறேன். என் தமிழாசிரியர் எனக்கு நினைவில் நிற்கும்படிச் சொன்ன 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப' என்ற குறள் என்னை வளர்த்திருக்கிறது. எணபதை எண்ணி மகிழ்கிறேன். பள்ளி நாட்களில் நான் கொண்ட உறுதிகள் ஒவ்வொன்றாகச் செயல்பட்டு வந்துள்ளன.

நல்ல அச்சகம் நிறுவினேன்.

பத்திரிகை தொடங்கி நடத்தி வருகிறேன்.

நூல்கள் பல எழுதியுள்ளேன்.

நல்ல காரும், மாடி வீடும் என்னிடம் உள்ளன. என் மகள் கலைச்செல்வி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறாள். என் முதல் மகன் அருள்மொழி புத்தகக் கடை நடத்தி வருகிறான். இளையவன் புத்தகக் கடை நடத்தி வருகிறான் கதிரவன் கணினி அச்சகமும் நடந்து வருகிறது..

இன்று நான் பெற்றுள்ள வள வாழ்வு குறள் கொடுத்த வாழ்வே என எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

என் தமிழாசிரியர் சு. பழனியாண்டி அவர்களை நினைத்து நினைத்து வணங்குகிறேன்.

முற்றும்.


Wednesday, February 9, 2011

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க.... ஒரு வலைத் தளம்.

www.cvc.nic.in


கண் எதிரே ஊழல் நடக்கிறது. அது தொடர்பான குற்றச்சாட்டுகளை யாரிடம் தெரிவிப்பது? அதற்கு ஆதாரமான ஒலி & ஒளி கோப்புகள் இருப்பின் எங்கு ஒப்படைப்பது? மேற்கண்ட வினாக்கள் இருப்பின் www.cvc.nic.in வலைத் தளத்தை அணுகிப் பாருங்களேன். இது எனக்கு குறுஞ் செய்தியில் கிடைத்த தகவல்.

Saturday, February 5, 2011

ஓ.ஹென்றியின் சிறுகதை.

கடைசி இலை. The Last Leaf.


வாஷிங்டனில் ஓவியக் கலைஞர்கள் குடியிருக்கும் பகுதி அது.

அந்த மூன்று மாடி செங்கல் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில்தான் இணைபிரியாத தோழிகளான 'சூ'வும் 'ஜான்சி'யும் ஓவியக்கூடம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் இடமும் அதுதான்.

திடீரென அந்தப் பகுதியிலுள்ளவர்களைத் தாக்கிய நிமோனியா காய்ச்சலினால் படுத்த படுக்கையானாள் ஜான்சி. படுக்கையில் படுத்தபடியே ஜன்னல் வழியே தெரியும் அடுத்த வீட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

டாக்டர் வந்து ஜான்சியைப் பரிசோதித்தார்.

பிழைக்கமாட்டோம் என்று அவளாகவே எண்ணிக் கொண்டிருக்கிறாள்.அவள் மனதில் ஏதாவது ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாளா? என்று சூ விடம் விசாரித்தார் டாக்டர்.

நேபிள்ஸ் கடலை ஓவியமாகத் தீட்டவேண்டும் என்பது தான் அவளுடைய இலட்சியம், என்றாள் சூ.

வேறு ஏதாவது அவள் மனதில் இருக்கிதா? யாரேனும் ண் பிள்ளையை நினைத்துக் கொண்டு.........

அப்படி எதுவும் இல்லையே டாக்டர்!

அப்படியானால் பலவீனம் காரணமாக அவள் தன்னம்பிக்கையை இழந்திருக்கலாம். என்னால் முடிந்தவரை சிகிச்சை செய்கிறேன். ஆனால் ஒன்று. நோயாளி எப்போது தனது முடிவை-சவ ஊர்வலத்தைப் பற்றியெல்லாம் எண்ணத் தொடங்கிவிட்டாளோ அப்போதே மருந்தின் சக்தி பாதியாகக் குறைந்துவிட்டது. அவளுக்கு மனநிம்மதி ஏற்படுமேயானால் அவள் பிழைக்க கூடும் என்ற உறுதி மொழியை என்னால் தர முடியும்.

இப்படிக் கூறி விட்டு டாக்டர் போய்விட்டார். படம் வரைவதற்கான கருவிகளுடன் ஜான்சியின் அறைக்குள் நுழைந்தாள் சூ.

ஜன்னல் பக்கம் பார்த்தபடி ஜான்சி படுத்திருந்தாள். சூ படம் வரைந்து கொண்டிருந்த போது ஜான்சியிடமிருந்து மெல்லிய சப்தம் வந்தது. உடனே ஜான்சி அருகே அவள் ஓடினாள்.

ஜான்சி, ஜன்னலை பார்த்தபடி இறங்கு வரிசையில் எண்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். பன்னிரண்டு என்றாள்; பின்னர் பதினொன்று என்றாள்; அப்புறம் பத்து, ஒன்பது, எட்டு, ஏழு என்று வரிசையாகச் சொன்னாள்.

ஜன்னல் வழியாக ஜான்சி எதை எண்ணுகிறாள் என்பதைப் பார்ப்பதற்காக சூவும் ஜன்னல் அருகே சென்று பார்த்தாள்

கொஞ்ச தூரத்தில் ஒரு செங்கல் வீடுதான் இருந்தது. அதன் சுவரில் ஒரு திராட்சைக்கொடி படர்ந்திருந்தது. இலையுதிர்காலமாக இருந்ததினால் பெரும்பாலான இலைகள் உதிர்ந்து 'எலும்புக்கூடு' போல் காட்சியளித்தது.

'என்ன அது?' என்றாள் சூ ஜான்சியைப் பார்த்து.

'ஆறு' என்றாள் ஜான்சி. அவை வெகு வேகமாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன்னால் சுமார் நூறு இருந்தது; அவற்றை எண்ணினாலே தலைவலி வரும் போலிருந்தது. இப்போது எண்ணுவதில் கடினம் இல்லை. அதோ, இன்னொன்றும் உதிர்கிறது. இப்போது ஐந்துதான் மீதம் இருக்கிறது.

'ஐந்துதான் மீதியா? நீ எதைச் சொல்கிறாய் ஜான்சி?'

இலைகள். அந்த திராட்சைக் கொடியிலிருக்கும் இலைகள். அதிலிருந்து கடைசி இலை உதிர்ந்து விட்டால், நானும் போய்விடுவேன். மூன்று நாளாக இதை நான் அறிவேன். டாக்டர் உன்னிடம் சொல்லவில்லையா?.

ச்சீ அப்படியெல்லாம் உளறாதே. திராட்சைக் கொடியிலிருந்து இலைகள் உதிர்வதற்கும், நீ சுகம் அடைவதற்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் நீ பிழைத்துக் கொள்வாய் என்று டாக்டர் கூறியிருக்கிறார். அமைதியாக இரு. நான் போய், நீ சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டு வருகிறேன்.

எனக்காக நீ எதுவும் கொண்டுவரவேண்டிய தேவை இருக்காது. அதோ இன்னொன்றும் உதிர்கிறது. இனி நாலே நாலுதான் இருக்கிறது. அந்தி சாய்வதற்கு முன்னால் கடைசி இலை உதிர்வதை நான் பார்க்கவேண்டும். அப்புறம் நானும் போய்விடுவேன்.

ஜான்சி, பேசாமல் கண்ணை மூடித்தூங்கு. ஜன்னலைப் பார்க்காதே, நாளைக்குள் இந்தப் படத்தை நான் வரைந்து முடிக்கவேண்டும்.

சரி,சரி நீ வரைந்து முடித்தவுடன் சொல் ஏனென்றால் அந்தக் கடைசி இலை உதிர்வதை நான் பார்க்கவேண்டும்.

நீ அமைதியாகத் தூங்கு, என் படத்திற்கு 'போஸ்' தர பெர்மனை நான் அழைத்து வருகிறேன். ஒரு நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று கூறிவிட்டுக் கீழே இறங்கினாள் சூ.

சூ வின் கலைக்கூடம் இருந்த கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் வசித்து வந்த பெர்மனுக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். 'மோசஸ்' மாதிரி தாடி வைத்திருந்தார். அவரும் ஒரு ஓவியர். ஆனால் ஓவியக் கலையில் அவரால் முன்னேற முடியவில்லை. 'ஒரு மகத்தான ஓவியத்தை தீட்டப்போகிறேன்' என்றுதான் வேலையைத் தொடங்குமுன் கூறுவார். ஆனால் அவர் தீட்டிய ஓவியத்தை எவரும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள்.

அந்தப் பகுதியிலுள்ள ஓவியர்கள் தாங்கள் தீட்டும் சில படங்களுக்கு மாடலாக அவரைப் பயன்படுத்தி வந்தார்கள். இதில் கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் அவர் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். 'இறப்பதற்குள் இலட்சிய ஓவியம் ஒன்றை வரைந்து விட்டுத்தான் சாவேன்' என்று எல்லோரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்.

பெர்மனிடம் ஜான்சியின் பயத்தையும், பீதியையும் பற்றிக் கூறினாள் சூ.

இந்தப் பெண்களே இப்படித்தான்! எதையும் கண்டு நடுங்குவார்கள் என்றார் பெர்மன்.

சூவும், பெர்மனும் மாடிக்குச் சென்ற போது, ஜான்சி தூங்கிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கதவை மூடிவிட்டு படம் வரையத் தொடங்கினாள் சூ.

மறுநாள் காலை.

படுக்கையை விட்டு சூ எழுந்தவுடன், ஜான்சி அவளை அழைத்தாள்.

முதலில் ஜன்னல் கதவைத் திற நான் பார்க்கவேண்டும் என்று ஆணையிட்டாள் ஜான்சி.

சூ ஜன்னல் கதவைத் திறந்தாள்.

என்ன ஆச்சரியம்!

இரவு பெய்த மழை, வீசிய சூறாவளிக்குப் பிறகும், அந்த திராட்சைக் கொடியில் ஒரே ஒரு இலை மட்டும் இன்னும் மீதமிருந்தது. அது செங்கல் சுவருடன் ஒட்டியிருந்தது

அது தான் கடைசி இலை. நிச்சயம் நேற்றிரவே உதிர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். இன்று உதிர்ந்துவிடும். அதே சமயத்தில் நானும் இறந்து விடுவேன். என்று கூறினாள்.

சூ அவளுக்கு தைரியம் கூறினாள்.

பகல் கழிந்தது. இருள் கவிழ்ந்தது. காற்று அடித்தது. மழையும் நிற்கவில்லை.

பொழுது புலர்ந்தது. ஜன்னல் கதவைத் திறக்கச்சொன்னாள் ஜான்சி.

அவ்வாறே செய்தாள் சூ.

அந்த திராட்சை இலை இன்னும் அதே இடத்தில் அசையாமல் இருந்தது.

அந்த இலையையே நீண்ட நேரம் உற்றுப் பார்த்தாள் ஜான்சி. பிறகு சூவை அழைத்தாள்.

'நான் ரொம்ப மோசம் சூ!. இதை எனக்கு உணர்த்துவதற்காகத் தான் ஏதோ ஒன்று அந்த இலையை மட்டும் கொடியில் தங்க வைத்திருக்கிறது. சாக வேண்டும் என்று விரும்புவது பாவம்... எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா... முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு வா... நான் வசதியாக உட்கார்ந்து கொண்டு, நீ சமைப்பதைப் பார்க்கிறேன்', என்று உற்சாகத்துடன் கூறினாள் ஜான்சி.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவள் சொன்னாள்; 'சூ எப்படியும் நேபிள்ஸ் கடலை ஓவியமாகத் தீட்டுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மாலையில் டாக்டர் வந்தார். 'உனது பராமரிப்பில் நிச்சயம் உன்தோழி பிழைத்துக் கொள்வாள்' என்று சூவிடம் கூறிவிட்டுப் புறப்படத் தயாரானார்.

இதே கட்டிடத்தின் கீழ்தளத்தில் ஒரு நோயாளி இருக்கிறார். பெர்மன் என்று பெயர்.அவருக்கு நிமோனியா, பிழைப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. இன்று அவர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்படுகிறார். என்றார் டாக்டர்.

மாலையில் ஜான்சியிடம் வந்தாள் சூ

.'பெர்மன் நிமோனியாவினால் இறந்து விட்டார். அவர் இரண்டே இரண்டு நாள் தான் படுத்திருந்தார். முந்தாநாள் காலையில் தனது அறைக்கு அருகில் அவர் கீழே கிடந்தார். ஆடைகளெல்லாம் நனைந்திருந்தன. இரவு எங்கே போய்வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.பின்னர் தான் ஜன்னல் வழியே தெரிகிறதே ஒரு சுவர். அதன் அருகில் ஒரு கைவிளக்கு, ஏணி, வண்ணங்கள், சில பிரஷ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீயும் ஜன்னல் வழியே பார். காற்றடிக்கும் போது அந்த கடைசி இலை மட்டும் விழவில்லையே என்று ஆச்சரியப்பட்டாய் அல்லவா! உண்மையில் அது இலை அல்ல. பெர்மன் தீட்டிய விலைமதிப்பற்ற சித்திரம்!

கடைசி இலை விழுந்ததே, மழை பெய்தஅந்த இரவில் தான். அந்த செங்கல் சுவரில் இந்த இலையைத்தான் பெர்மன் தீட்டிக்கொண்டிருந்திருக்கிறார்'.


Thursday, February 3, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -1)


1.இந்தியாவை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல இளைய சமுதாயத்துக்கு தங்களுடைய அறிவுரை என்ன?
ஆர்.சரண்யா, சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

டாக்டர் அப்துல் கலாம் : நாம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையின் படி, எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக கீழ்க்கண்ட 5-விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை.

1. பெண் கல்வி மற்றும் உடல்நலம்

2. விவசாயம் மற்றும் உணவு பதனிடல்
3.தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம்
4.உள்கட்டமைப்பு வளர்ச்சி
5.முக்கிய தொழில்நுட்பங்களில் சுயசார்பு ஆகியன.

இவ்விஷயங்களை மனதில் கொண்டு இளைஞர்கள் தங்கள் படிப்பில் மிகச்சிறந்து விளங்குவதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக்க உதவலாம். நீங்கள் ஒவ்வொருவரும், வாரவிடுமுறை நாட்களில் உங்களை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு சென்று அங்கு 5 பேருக்கு படிக்க எழுத உதவலாம். உங்கள் வீட்டை சுற்றியும் பள்ளியை சுற்றியும் ஐந்து மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கலாம். எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

2.பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் கண்டிப்புடன் கடைபிடிப்பதில்லை. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நடந்து கொள்ள உங்கள் ஆலோசனையைக் கூறுங்களேன்?
பசுவலிங்கப்பா, கோகுலம் காலனி, கோவை-41

டாக்டர் அப்துல் கலாம் : புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். நல்ல உடல்நலம் நல்ல மனநலம் ஆகியனதான் நல்ல வாழ்க்கைக்கான, நல்ல குடும்பத்துக்கான, நல்ல நாட்டுக்கான அடித்தளம். முடிவு எடுக்க வேண்டியது தனிநபர்கள்தான். ஆனால் அது அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாட்டுக்கும் நல்லதாக இருக்க வேண்டும்.

3.இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் தகவல் தொழில்நுட்பம் என்ன பங்கு வகிக்கும்?
வி.கண்ணன், வி.எச்.என்.எஸ்.என்., கல்லூரி, விருதுநகர்.

டாக்டர் அப்துல் கலாம் :
சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க முடியும். குறிப்பாக கிராமப்புற வளர்ச்சியிலும் அதிக பங்கு வகிக்க முடியும். தொலை தொடர்பு கல்வி, மின்னணு நிர்வாகம், தொலை மருத்துவம், மின்னணு நுõலக வசதி மற்றும் அறிவு மையங்கள் ஆகியவற்றை அமைக்க அவை உதவும். இது அறிவு மற்றும் திறன் அளிக்கும். மக்களிடம் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம் மற்றும் மின்னணு நிர்வாக சேவையை மக்களுக்கு அளித்து அவர்களை சக்தி மிக்கவர்களாக்கி தரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது. பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயம், சேவை மற்றும் உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. தொழில் சிறப்பாக நடத்துவதற்கான களம்தான் தகவல் தொழில்நுட்பத்துறை.

4.இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிறார். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகுமா?
வனிதா, அசோக்நகர், சென்னை, திவ்யா, ஸ்ரீ அகோபில மட ஓரியண்டல் பள்ளி, சென்னை. முகில் வண்ணன், காருண்யா பல்கலை. கோவை. மோகன் சிவானந்தம், புதுச்சேரி பல்கலை. சண்முக சுந்தரம், திருவள்ளுவர் நகர், ராஜபாளையம்.

டாக்டர் அப்துல் கலாம் : கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கும் 22 கோடி மக்களை கைதுவக்கி விடவும் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே நம் நாட்டின் முன் உள்ள சவால். அடுத்த பத்தாண்டுகளுக்கு நம் கடின உழைப்பால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 10 சதவீதமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வி, சுகாதார சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் மதிப்பு கூடுதல் சேவை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இப்போதுள்ள தனிநபர் சராசரி வருமானத்தை மும்மடங்காக உயர்த்த வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும். பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சியை உள்ளடக்கிய உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அடுத்த 12 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தலைவர்கள் செயல்பட வேண்டும்.
இதுபோன்று உழைத்தால் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகும். அதுவரை நம்வீட்டையும், தெருவையும், கிராமத்தையும், நகர்ப்புறத்தையும், மாநிலத்தையும் மற்றும் தேசத்தையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்துதான் சுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்.

5.வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்றுவது எப்படி... இலக்குகளை அடைவதில் சில நேரங்களில் தடைகள் ஏற்படுகின்றன. இவற்றை கடந்து சாதிப்பது எப்படி?
செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. பிரீத்தா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மதுரை. புருஷோத்தமன், பாங்காக், தாய்லாந்து
ஐஸ்வர்யா, டி.ஏ.வி. பள்ளி, சென்னை.சுப்பையா, லீடர்ஸ் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி. ஐஸ்வர்யா, ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி, சென்னை. சுரேஷ்கிருஷ்ணா, ஐ.சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட், சிவகாசி.

டாக்டர் அப்துல் கலாம் : கீழ்கண்ட நான்கு விஷயங்களை நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
1. உங்கள் வாழ்க்கையின் தெளிவான லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
2. அது தொடர்பான உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.அதை அடைவதற்காக மிகக் கடினமாக உழையுங்கள்.
4. விடாமுயற்சி அவசியம். பிரச்னை உங்களை தோற்கடிக்கக்கூடாது. நீங்கள்தான் பிரச்னைகளை வெல்ல வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் லட்சியத்தை அடைவதிலிருந்து யாரும் தடுக்க முடியாது. நீங்கள் கண்டிப்பாக லட்சிய சிகரத்தை தொடுவீர்கள். எந்த பணியானாலும் அதை மிகச்சிறப்பாக செய்து முடியுங்கள். அதன் மூலம் நீங்கள் தேச வளர்ச்சிக்கு பாடுபடுகிறீர்கள்.

6.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்தில் பயன்படும்?
சவும்யா, கேந்திரிய வித்யாலயா, அசோக்நகர், சென்னை. பாலாஜி கவுலா, மதுரை காமராஜ் பல்கலை., மதுரை. மன்னர் மன்னன், அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால். காசிநாதன், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுவரி, சிவகாசி.நெல்சன், பயனியர் கலை அறிவியல் கல்லுவரி, கோவை.ராம்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி

டாக்டர் அப்துல் கலாம் : யுரேனியம் அணு உலைகள் மூலமாக நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியமானது. தற்போது யுரேனிய அணு உலைகள் 55 சதவீத திறனையே வெளிப்படுத்துகின்றன.

உயர்திறன் கொண்ட அணு உலைகளுக்குத் தேவையான தோரியம் எரிபொருளுக்கு வெளிநாடுகளை சாராமல் நம் ஆராய்ச்சியின் வழியாக சொந்தக் காலில் நிற்கும் நிலை வரும் வரையில் யுரேனியம் நமக்குத் தேவைப்படும்.

2030ம் ஆண்டுக்குள் எரிசக்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே நம் லட்சியம். பூமியிலிருந்து எடுக்கப்படும் மரபுசார்ந்த எரிபொருள் குறைந்துவருவதால், சூரிய சக்தி, அணுசக்தி மற்றும் உயிரி எரிபொருள் வழியாகவும் காற்றாலை, ஹைட்ரஜன் சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல பிற சக்தி மூலமாகவும் நாம் இந்த லட்சியத்தை அடைய வேண்டும். எனவே அணு எரிபொருள் எங்கு கிடைத்தாலும் அதை வாங்குவதுதான் புத்திசாலித்தனமானது.

இதே கேள்வியை இளைஞர்களும் பொதுமக்களும் என்னிடம் இமெயில் வழியாக கேட்டு வருகிறார்கள். அந்த கேள்விகளுக்கு பலமுறை நான் மீடியா வாயிலாக பதில் அளித்திருக்கிறேன். இருந்த போதிலும் இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காணும் விதமாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நான் அளித்துள்ள விரிவான விளக்கம் பில்லியன் பீட்ஸ் இபேப்பரின் அடுத்த இதழில் வெளியாகிறது. www.abdulkalam.com இணையதளம் வழியாக இந்த இதழை நீங்கள் படித்து எளிதாக புரிந்து கொள்ளலாம்.

7. மனிதன் கால் வைத்ததற்கும் இப்போது அனுப்பியுள்ள சந்திரயானுக்கும் என்ன வேறுபாடு?
ஜோ பெர்னாண்டோ, கேந்திரிய வித்யாலயா, மண்டபம்.ரேஷ்மா, ஸ்ரீஅரவிந்த மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை.மணிகண்டன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், வேலூர்.சுகன்யா, கே.சி.இ.டி., விருதுநகர்.சிதம்பரம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம்.விக்கி, எஸ்.டி.ஏ., மெட்ரிக் பள்ளி, திருச்சி

டாக்டர் அப்துல் கலாம் : சந்திரயான் 100 கி.மீ., கொண்ட சுற்றுப்பாதையிலிருந்து சந்திரனை சுற்றி வருகிறது. மிகக்குறைந்த செலவில் சந்திரனுக்கு செல்ல முடியும் என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது. சந்திரனின் தொலையுணர்வு செயற்கைக்கோளாக சந்திராயன் செயல்படும். சந்திரனின் தரைப்பகுதியை ஆராய்ந்து, ரசாயன மற்றும் தனிமங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான தகவல்களை அனுப்புவதே சந்திரயானின் நோக்கம். மனிதர்கள் யாரும் சந்திரயான் திட்டத்தில் செல்லவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் நிலவிலும் ஓர் இந்தியரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.

8.தலைவர் ஆவதற்கு தேவைப்படும் தகுதிகள் என்ன? தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி?
வசந்த் தங்கவேல், ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை

டாக்டர் அப்துல் கலாம் :தொலைநோக்கு பார்வை, நடுநிலை நோக்கு, நம்மால் முடியும் என்ற எண்ணம், வெல்ல முடியாததை வெல்லும் எண்ணம் ஆகியனவே தற்போது வளர்ந்து வரும் பொருளாதார யுகத்தில் தலைமைப்பண்புக்கு தேவைப்படக்கூடியன. ஆய்வு மனப்பான்மை, கற்பனை வளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9.லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
கார்த்திக், அரசு கலைக் கல்லூரி, திருநெல்வேலி. குழந்தை வேல், அண்ணாமலை பல்கலை., சிதம்பரம். முகுந்தன், பிஷப் அம்புரோஸ் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல்கலாம் : குடும்பத்தில்தான் அறிவார்ந்த குடிமக்கள் உருவாகின்றனர். இந்த சூழ்நிலை உருவாகவில்லை என்றால் இப்போது நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலையைத்தான் உணர முடியும். லஞ்சத்தை ஒழிப்பதற்கான நாடு தழுவிய இயக்கம் தேவைப்படுகிறது. குடும்பத்திலும் பள்ளிகளிலும்தான் தோன்ற வேண்டும்.

மூன்று பேரால் மட்டும்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்தான் அவர்கள். குழந்தைப் பருவத்திலேயே நேர்மையை அவர்கள் கற்பித்தால் அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். பொது வாழ்வில் ஊழலை தடுக்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இயக்கம் துவங்க வேண்டும்.

குடும்பத்தில், கல்வி பயிலும் இடத்தில், பணியிடத்தில், தொழிலில், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலையில், நிர்வாகத்தில், அரசியலில், அரசில், நீதித்துறையில் நேர்மை இருக்க வேண்டும்.

10.விண்வெளி வீரர் ஆவதற்கு நான் எந்த பிரிவு பாடத்தை படிக்க வேண்டும்?
கோகுல், சாந்தோம் மேல்நிலை பள்ளி, சென்னை. சண்முகராஜ், சின்மயா வித்யாலயா மேல்நிலை பள்ளி, சென்னை. தமிழ் அரசி, இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மேல்நிலை பள்ளி, புதுச்சேரி. திருநாவுக்கரசு, பூர்ணம்விஸ்வநாத், ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, மேல்மருவத்தூர். காமாட்சி, ஸ்ரீலதாங்கி வித்யா மந்திர், கோவை

டாக்டர் அப்துல் கலாம் : வான் இயற்பியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டுள்ள முதுநிலை படிப்பை படிப்பது, விண்வெளி வீரர் ஆவதற்கான தகுதிகளைப் பெற்றுத்தரும்.

11.விமானவியல் படித்து விஞ்ஞானி ஆக ஆசை. இத்துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
முகமதுஅப்துல் ரஹ்மான், சாம்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. கோகுல் அமிர்தா வித்யாலயம், கோவை. கவுசிக் சுந்தரராஜன், அகோபிலமட ஓரியன்டல் மேல்நிலை பள்ளி, சென்னை. ராஜேஸ்வர், ஆஸ்ரம் ஐ.சி.எஸ்.இ., டி.ஏ.எஸ்.எஸ்.சி., பள்ளி, சென்னை. தானியா, சி.இ.ஓ.ஏ., மாஸ்டர்ஸ் ஸ்கூல், மதுரை. குமரகுரு, பாரதி மெட்ரிக் பள்ளி, கோவை. வினோத், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல் கலாம் : பிளஸ் 2வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் படித்த பின், பி.இ., படிப்பில் விமானவியல் துறையை படிக்கலாம். விமானத்துறை மற்றும் விண்வெளித் துறையில் இத்துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே சொந்த போர் விமானங்கள் தயாரிக்கிறோம். 50 -90 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்கள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பும் நடந்து கொண்டுள்ளன. விண்வெளியில் நாம் அடுத்ததாக செவ்வாய் கிரகத்துக்கு செல்ல விருக்கிறோம். எனவே இத்துறையில் சிறந்த விஞ்ஞானியாக ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

12.தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். தேர்வு பயத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
திலீபன், ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர். சுகன்யா, பாஸ்கோ அகடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சென்னை. ஆஷா, முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர்.ஜகதீஸ், ஸ்ரீவேணுகோபால் வித்யாலயா, சென்னை.சந்தோஷ்குமார், லட்சுமி நகர், போரூர்.

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் படிப்புடன் விளையாட்டு, இசை, கலை மற்றும் கலாச்சார விஷயங்களில் பங்கு கொள்ளுங்கள். படிப்பதற்காக நன்றாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். படிக்கும்போது உங்கள் சிந்தனைகளை படிப்பில் மட்டுமே முழுமையாக செலுத்துங்கள். நீங்கள் இதை தொடர்ந்து செய்யும் போது உங்களுக்கு போதுமான அறிவு வளரும். அப்போது தேர்வு பயம் வராது. நீங்கள் மிகச்சிறப்பாக மதிப்பெண் எடுப்பீர்கள்.

13..என்னைப் போன்ற மாணவர்கள் எதிர்காலம் சிறக்க தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்ன?
பிரியங்கா, கக்கன் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-45. மனோஜ், ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர், ஈரோடு.

டாக்டர் அப்துல் கலாம் : உங்களுடைய லட்சியத்தை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து வெற்றி அடையுங்கள். நேர்மையான சிந்தனையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலம் சிறக்கும்.

14.கடலிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யுமா?
சித்ரா சத்தியமூர்த்தி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, திருவேற்காடு.

டாக்டர் அப்துல் கலாம் : இந்தியாவின் கடற்கரை நீளம் 7,500 கி.மீ., அலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யக்கூடிய சிறிய மின் உற்பத்தி ஆலைகளை நிறுவிக்கொள்ள வாய்ப்புள்ளது. குஜராத்திலும், கேரளாவிலும் இரு வகையான முன்மாதிரி திட்டங்கள் தற்போது செயல்படுகின்றன.

இந்தியாவின் எரிசக்தி உற்பத்தியில் அணு, நீர் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ம் ஆண்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் இந்தியாவுக்கு தேவைப்படும். இது தற்போதுள்ள தேவையை விட மும்மடங்காக இருக்கும். தோரியம் அடிப்படையிலான அணு உலைகள், சூரிய மின்சக்தியை பரவலாக பயன்படுத்துதல், கடல் அலை மின்சாரம் உள்ளிட்டவற்றிலிருந்து நாம் மின்சக்தி பெற வேண்டும்.


15.சிறந்த விஞ்ஞானி ஆக என்ன செய்ய வேண்டும்?
விகாஸ், கார்மல்ஸ் பள்ளி, திருச்சி. ரோகிணி, சாய் மெட்ரிக் மேனிலை பள்ளி, மடிப்பாக்கம், சென்னை. சரண்யா தேவி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் கல்லூரி, மதுரை. வெங்கடராமன், அரசு கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி. பாலசுப்ரமணியன், டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி, சென்னை. முகமது பர்ஹான், எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல். ராமசுப்ரமணியன், காமராஜ் மேனிலைப்பள்ளி, குரும்பூர், துõத்துக்குடி. அன்பு செல்வம், எம்.ஏ.வி.எம்.எம்., இன்ஜினியரிங் கல்லூரி, கிடாரிபட்டி, மதுரை. விக்னேஷ், என்.எஸ்.என்., மெட்ரிக் மேனிலைப்பள்ளி, சிட்லபாக்கம், சென்னை. விஜய் கார்த்திக், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, மதுரை. சுதா, டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, சீனிவாசா நகர், சென்னை. கீர்த்தனா, ஏ.வி.மெய்யப்பன் மெட்ரிக் பள்ளி, சென்னை. ராகவி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, திருமுல்லைவாயல், சென்னை.பாஸில் கான், என்.எஸ்.என்.மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் வாழ்க்கையில் முதலில் லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இது விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே லட்சியம் வேண்டும். நீங்கள் என்னவாக உருவாகப் போகிறீர்கள் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அது தொடர்பாக உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கடினமாக அதை நோக்கி உழையுங்கள். விடா முயற்சியுடன் இவற்றை எல்லாம் செய்து வந்தால் நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையாலாம்.

வளரும்.

நன்றி : கல்வி மலர்.