Thursday, March 17, 2011
தி.மு.க. போட்டியிடும் 119 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு
2. சேப்பாக்கம்- ஜே. அன்பழகன்
3. விருகம்பாக்கம் - தனசேகரன்
4. சைதாப்பேட்டை - மகேஷ்குமார்.
5. வில்லிவாக்கம் - க. அன்பழகன்
6. ஆர்கே நகர் - பி.கே.சேகர்பாபு
7. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
8. எழும்பூர் தனி - பரிதிஇளம்வழுதி
9. பொன்னேரி தனி -மணிமகேலை
10. திருவள்ளூர் - இஏபி சிவாஜி
11. அம்பத்தூர் - புரசை ரங்கநாதன்
12. மாதவரம் - டாக்டர் கனிமொழி
13. திருவொற்றியூர் - கேபிபி சாமி
14. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்
15. தாம்பரம் - எஸ்ஆர் ராஜா
16. உத்திரமேரூர் - பொன்குமார்
17. காட்பாடி - துரைமுருகன்
18. கேவி குப்பம் - சீதாராமன்
19. ராணிப்பேட்டை - காந்தி
20. குடியாத்தம் தனி - ராஜமார்த்தாண்டன்
21. திருப்பத்தூர் - ராஜேந்திரன்
22. திருவண்ணாமலை - எ.வ.வேலு
23. கீழ்ப்பென்னாத்தூர் - பிச்சாண்டி
24. ஆரணி - சிவானந்தம்
25. வந்தவாசி - கமலக்கண்ணன்
26. வானூர் - புஷ்பராஜ்
27. விழுப்புரம் - பொன்முடி
28. விக்கிரவாண்டி - ராதாமணி
29. திருக்கோவிலூர் - தங்கம்
30. சங்கராபுரம் - உதயசூரியன்
31. பண்ருட்டி - சபா ராஜேந்திரன்
32. கடலூர் - இள.புகழேந்தி
33. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
34. திருவிடைமருதூர் தனி- கோவி செழியன்
35. கும்பகோணம் - கா.அன்பழகன்
36. திருவையாறு - செல்லக்கண்ணன்
37. தஞ்சாவூர் - எஸ்.எம்.உபயதுல்லா
38. ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி
39. கீழ்வேளூர் தனி - மதிவாணன்
40. மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா
41. திருவாரூர் - மு.கருணாநிதி
42. நன்னிலம் - இளங்கோவன்
43. திருச்சி மேற்கு - கே.என்.நேரு
44. திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி
45. திருவெறும்பூர் - சேகரன்
46. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்
47. லால்குடி - சவுந்திரபாண்டியன்
48. மண்ணச்சநல்லூர் - செல்வராஜ்
49 துறையூர் - பரிமளா தேவி
50. பெரம்பலூர் - பிரபாகரன்
51. குன்னம் - சிவசங்கரன்
52. அரவாக்குறிச்சி - கே.சிபழனிச்சாமி
53. கிருஷ்ணராயபுரம் தனி - காமராஜ்
54. குளித்தலை - இரா.மாணிக்கம்
55. கந்தர்வக்கோட்டை - கவிதைப்பிதத்ன்
56. விராலிமலை - எஸ்.ரகுபதி
57. புதுக்கோ்டடை - பெரியண்ணன் அரசு
58. கெங்கவல்லி தனி - சின்னத்துரை
59. ஏற்காடு - தமிழ்செல்வன்
60. சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு - சிவலிங்கம்
62. வீரபாண்டி - வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு - ராஜேந்திரன்
64. ராசிபுரம் தனி - வி.பி.துரைசாமி
65. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி
66. குமாரபாளையம் - செல்வராஜ்
67. பென்னாகரம் - இன்பசேகரன்
68. பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன்
69. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன்
70. தளி - ஒய்.பிரகாஷ்
71. மேட்டுப்பாளையம் - அருண் குமார்
72. கவுண்டம்பாளையம் - டிபி சுப்பிரமணியம்
73. கோவை வடக்கு - வீரகோபால்
74. கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி
75. கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன்
76. தாராபுரம் தனி - ரா.ஜெயந்தி
77. திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி
78. மடத்துக்குளம் - சாமிநாதன்
79. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமி
80. அந்தியூர்- என்கேகேபி ராஜா
81. பவானிசாகர் தனி - லோகேஸ்வரி
82. கூடலூர் தனி - திராவிடமணி
83. குன்னூர் - ராமச்சந்திரன்
84. மேலூர் - ராணி ராஜமாணிக்கம்
85. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
86. திருமங்கலம் - மணிமாறன்
87. உசிலம்பட்டி - ராமசாமி
88. மதுரை மத்தி - எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா
89. மதுரை மேற்கு - கோ.தளபதி
90. பழனி - செந்தில்குமார்
91. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
92. நத்தம் - விஜயன்
93. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி
94. ஆண்டிப்பட்டி - மூக்கையா
95. கம்பம் - கம்பம் ராமகிருஷ்ணன்
96. பெரியகுளம் தனி - அன்பழகன்
97. போடிநாயக்கனூர் - லட்சுமணன்
98. திருவாடானை - சுப தங்கவேலன்
99. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
100. திருப்பத்தூர் - கே.என்.பெரியகருப்பன்
101. ராஜபாளையம் - தங்கபாண்டியன்
102. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி - துரை
103. சாத்தூர் - கடற்கரை ராஜ்
104. சிவகாசி - வனராஜா
105. அருப்புக்கோட்டை - கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்
106. திருச்சுழி - தங்கம் தென்னரசு
107. மானாமதுரை தனி - தமிழரசி
108. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
109. சங்கரன் கோவில் தனி - உமா மகேஸ்வரி
110. தென்காசி - கருப்பசாமி பாண்டியன்
111. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
112. பாளையங்கோட்டை - மைதீன்கான்
113. தூத்துக்குடி - கீதா ஜீவன்
114. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
115. ஒட்டப்பிடராம் - ராஜா
116. ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா
117. கன்னியாகுமரி - சுரேஷ் ராஜன்
118 நாகர்கோவில் - மகேஷ்
119 பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன்
விஜயகாந்த் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு
விஜயகாந்த் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு
அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. விஜயகாந்திடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன. இதுதொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்துடன் தா.பாண்டின், ஜி.ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, சேதுராமன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் அங்கு கூடிய தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஜெயலலிதாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். செருப்பால் சரமாரியாக அடித்தனர்.
3வது அணி அமையுமா? விஜயகாந்த் பதில்
தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியில் வந்த இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையை முறியடிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 3வது அணி அமைப்பது குறித்து பேசி முடிவு எடுப்போம் என்றார்.
இதேபோல் 3வது அணி அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அனைத்துக் கட்சிகளுடன் பேசிவிட்டு தான் 3வது அணி பற்றி முடிவெடுக்கப்படும். மூன்றாவது அணி அமைப்பது பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றார்.
ஜெ.வுடன் சமரசம் இல்லை: தா.பாண்டியன்
மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையை முறியடிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 3வது அணி அமைப்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுகவுடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் வைகோ
அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை ஈடுபட்டுள்ளது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது அணியில் மதிமுகவையும் இணைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதனால் வேலூர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வைகோ, அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தே.மு.தி.க.வை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான் ! .
யாருமே இந்த கோணத்தில் யோசித்துப் பார்த்திருக்க முடியாது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். அந்த அளவுக்கு தனது முக்கியமான எதிரிக்கு சரியான ஆப்பு வைத்திருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி இதுவரை இருந்து வந்த ஒரே எதிரி திமுகவும், கருணாநிதியும் மட்டுமே. அவர்கள் நிரந்தர எதிரி என்பதால் பெரிய விஷயம் இல்லை. ஆனால் சமீப காலமாக அதிமுகவுக்கு முளைத்து வந்த மிகப் பெரிய எதிரி, முக்கிய எதிரி தேமுதிக.
தேமுதிக உதயமாகி, அது தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது முதல் அந்தக் கட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது அதிமுக மட்டுமே. அதிமுகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து உண்டு இல்லை என்று பண்ணி விட்டது தேமுதிக. திமுகவின் வாக்குகளையும் கொஞ்சம் போல கடித்தாலும், கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ அதிமுகதான்.
எனவேதான் இந்த தேர்தலில் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தரப்பு கடுமையாக முயன்று வெற்றியும் பெற்றது. இந்த வேலையைப் பார்த்தவர் ஆர்எஸ்எஸ் சார்பு கொண்ட அந்த பத்திரிக்கையாளர் தான்.
திமுகவை வலிமையோடு எதிர்க்கத்தான் ஜெயலலிதா, விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துள்ளார் எனறு எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்க ஜெயலலிதாவின் திட்டமோ வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.
அது - முக்கிய எதிரியான திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால், புதிதாக முளைத்த எதிரியான தேமுதிகவை பலவீனப்படுத்தி, பள்ளத்தில் விழ வைக்க வேண்டும் என்பது. அதைத்தான் தற்போது ஜெயலலிதா சிறப்பாக செய்து முடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மிக சாதுரியமாக ஜெயலலிதா விரித்த வலையில் தானாக வந்து விழுந்து சிக்கி மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.
ஜெயலலிதாவின் திட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்...
1. தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்ப்பது, கேட்கிற தொகுதிகளை கொடுப்பதாக கூறுவது, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, கடைசி நேரத்தில் கை கழுவி விடுவது.
2. விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் ஓட்டுக்கள்தான். எனவே, கூட்டணிக்குள் விஜயகாந்த் வந்து விட்டாலே அவரது வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.
3. விஜயகாந்ததை கூட்டணி வலையில் சிக்க வைப்பதன் மூலம் அவரது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, கடைசியில் அவரையும் பலவீனப்படுத்தி கூட்டணியிலிருந்து அவராகவே வெளியேறும் நிலையை ஏற்படுத்துவது ஜெயலலிதாவின் திட்டம்.
4. தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைப்பது.
இதுதான் ஜெயலலிதாவின் தற்போதைய அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னணிக் காரணமாக கூறப்படுகிறது.
தற்போது ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.
தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி அல்லது வெளியேறினாலும் சரி அல்லது யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் சரி, விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு இருக்காது என்பது ஜெயலலிதா மற்றும் அவரது ஆஸ்தான ஆலோசகர்களின் எண்ணமாகும்.
இந்த கோணத்தில்தான் ஆரம்பத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைகளில் ஒருவித தாமதத்தை அதிமுக கையாண்டதாகவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கடைசி வரை உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் அனைவருடனும் பேசியதன் மூலம், அனைவரும் வேறு கூட்டணிக்குப் போக முடியாத நிலையையும் ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நேற்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. அதாவது வேறு 'ஆப்ஷனே' இல்லாமல் செய்து விட்டார் ஜெயலலிதா.
ஒரு வேளை தேமுதிகவை இழுக்காமல், மற்ற கட்சிகளுக்கும் கேட்ட தொகுதிகளை தர முடியாது என்று முன்பே கூறியிருந்தால், தற்போது வெகுண்டெழுந்துள்ள அனைவரும் (இடதுசாரிகள் தவிர்த்து) காங்கிரஸை தனியாக கூட்டிக் கொண்டு போய் தனிக் கூட்டணி அமைத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பார்கள்.
ஆனால் அது நடந்து விடக் கூடாது என்பதால்தான் மிக மிக கவனமாக, காங்கிரஸ், திமுக தொகுகிப் பங்கீடு, ஒதுக்கீடு முடியும் வரை காத்திருந்து கவனமாக காய் நகர்த்தி சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்த மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு அதிமுகவுக்கு பயன்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அடி மிகப் பெரிய அடி என்பது மட்டும் உண்மை.
நிச்சயம் திமுகவே கூட ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அயர்ந்து போயிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
Wednesday, March 16, 2011
வைகோ – ஒரு அரசியல் அனாதை.
ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.
வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விசயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் நவரசத்தில் வைகோதான் சோகத்தின் நாயகனோ?
சில வருடங்களுக்கு முன்பு அநேகமாக 2007 என்று நினைவு. சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம். நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முகமன் சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இனி அவர்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் என்றும் சொன்னார். ஆனால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அந்த வரைக்கும் கொஞ்சம் அடக்கம் இருந்தது உண்மை.
அப்போதே யோசித்தேன். இந்த வனவாசம் இன்னும் 20,25,50 ஆண்டுகள் என்று போனால் நாஞ்சில் சம்பத் வாயில் உலக வரலாறும், உலக கட்டிடங்களும் என்ன பாடுபடும் என்று நினைத்தேன். அதனால்தான் வைகோவின் விசயத்தில் சோகமல்ல, நகைச்சுவையே மேலோங்கி இருக்கிறது என்று மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.
வைகோ குறித்து நடுநிலைமையாளர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. “அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்” என்று அவரை போற்றுகிறார்கள். வைகோவின் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமரிசப்பவர்கள்கூட இந்த விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள். எனினும் இது மிகவும் பிழையான சென்டிமெண்டான மதிப்பீடு என்கிறோம். ஒருவேளை சென்டிமெண்டாக உணர்ச்சிவசப்பட்டு, படுத்தி பேசும் வைகோ குறித்து இப்படித்தான் எண்ணுவார்களோ தெரியாது.
சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை ம.தி.மு.க வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றமில்லை என்றாலும் வைகோவிற்கு இரட்டை இலக்கில் இடங்கள் கிடைக்காது என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 41, சி.பி.எம்முக்கு 12, சி.பி.ஐக்கு 10 பிறகு சின்ன கட்சிகளுக்கு ஒரிரு இடங்களெல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ம.தி.மு.கவின் இடம் குறித்து மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தே.மு.க.தி.க வந்திருப்பதால் அதிக இடம் கொடுக்க முடியாது என்கிறது அ.தி.மு.க. வைகோ இதை உணராமல் இல்லை. எனினும் அவர் 25இல் ஆரம்பித்து 20இல் நின்று இறுதியாக 15வது கொடுங்கள் என்கிறாராம். அம்மாவோ 5இல் ஆரம்பித்து 7,8 என்று நிற்பதாக தகவல். இதனால்தான் புரட்சிப் புயல், புரட்சித் தலைவியை பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாமல் அண்ணாநகர் வீட்டில் முடங்கி கிடக்கிறது.
ஆனாலும் நண்பர்களே இந்தக்காட்சி இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இரு வருடங்களுக்கு முன்னர் கூட அட்சர சுத்தமாக இப்படித்தான் நடந்தது. அதை கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கில் சென்று பார்ப்போம்.
2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் ம.தி.மு.கவைத் தவிர மற்ற கட்சிகள் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தன. அவர்களுக்குரிய தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டாலும் வைகோவுக்கு ஒதுக்கீடு முடியவில்லை. அ.தி.மு.க நான்கு தருவதாக சொன்னது. வைகோ கராராக ஆறு என்று கேட்டார். அப்போதும் இதே நிலைதான். சோகம்தான்.
அப்போது ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தென்மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவர்கள் ஈழத்தமிழருக்காக சென்னையில் வந்து போராடுவதற்கு இரயிலில் வந்தனர். அவர்களை வரவேற்க வைகோ நிலையம் சென்றார். “ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” என்று மாணவர்கள் முழக்கமிட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த வைகோ செய்வதறியாது திரும்பினார். வெளியே நிருபர்கள் இன்னமும் தொகுதி உடன்பாடு முடியாதது குறித்து கேட்டார்கள். ” அது குறித்து பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று வைகோ வெருட்டென்று போய்விட்டார்.
இந்த மனநிலை ஈழத்தின் சோகத்தினால் வந்ததென்று நீங்கள் தவறாக கருதிவிடக்கூடாது. உண்மையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த வருத்தம்.
ஒரு வழியாக ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் விருதுநகர், தஞ்சை, நீலகிரி, ஈரோடு முடிவாகி வைகோவும் சிரிக்காத முகத்துடன் உம்மென்று ஜெயா அருகில் போஸ் கொடுத்து ஒப்பந்தத்தை காட்டினார். இந்த தொகுதிகளெல்லாம் அ.தி.மு.கவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதது என்பதால் இதில் வெல்ல முடியாதென்பது வைகோவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?
அப்போதும் ஏன் இப்போதும் கூட அவர் தனியாக தேர்தலில் நின்று பார்க்க முடியாது. அத்தகைய வெற்று சவடால் அடிப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை.
ஆனால் அப்படி தனியாக வென்று காட்டுவதற்கென்றுதான் கட்சி ஆரம்பித்தார். 1944- ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.
தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.
தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.
மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்பது தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.
உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.
அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.
இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.
பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.
தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.
இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.
ஈழப் பிரச்சினையில் கூட வைகோ எப்போதும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாதித்து விடலாம் என்ற அணுகுமுறையையே கொண்டிருந்தார். ஒரு சில லாபி வேலைகள் செய்தால் ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பதுதான் அவரது நிலை. முக்கியமாக இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக ஈழப்பிரச்சினைக்கு வில்லனாக இருக்கிறது என்ற முறையில் அவரது அணுகுமுறை என்றும் இருந்ததில்லை.
மேலும் 2009ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை முன்னணிக்கு வந்த போதும் அதை வைத்து மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதில் அதை தேர்தல் முழக்கமாக்கி ஆதாயம் அடைய நினைத்தார். அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வென்றுவிட்டால் ஈழப்போர் முடிவுக்கு வரும் என்று புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவறாக வழிநடத்தியதில் வைகோவுக்கும் பெரும் பங்குண்டு.
முத்துக்குமார் இறந்த பிரச்சினையிலும் அது பெரிய போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக அணிமாறிய வைகோ இந்த தேர்தலில் கிட்டத்தட்ட27 சீட்டுகள் கிடைக்காது என்றாலும் அணிமாற இயலாது என்ற இழிவான நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதில் ஆறு சதவீதம் வாக்குகளும், இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தால்தான் மாநிலக் கட்சி என்ற தேர்தல் க மிஷன் அங்கீகாரம் கிடைக்கும். சென்ற தேர்தலில் பறி போன அந்த அங்கீகாரம் இனி எப்போதும் திரும்பாது என்பதுதான் களநிலவரம். மக்கள் நலன் என்ற அங்கீகாரத்திற்கு துரோகமிழைத்தவருக்கு இந்த டெக்னிக்கல் அங்கீகாரம்தான் தற்போது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாம். எனினும் அவர் இதையும் கடந்து வருவார்.
ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோவின் இலக்குதான் என்ன? அவர் தமிழகத்தில் ஒரு தலைவராக உலா வர வேண்டும். ஊடகங்களில் அவரது கருப்பு மையடித்த மீசை கொண்ட படங்கள் வெளிவர வேண்டும். அவரது அறிக்கைகள் தினசரிகளில் இடம்பெறவேண்டும். சமீபத்தில் கூட உலக மகளிர் தினம், ஜப்பான் சுனாமி குறித்தெல்லாம் அறிக்கை வெளியிட்டார். அதே நேரம் உள்ளுக்குள் அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றை எண் தொகுதிகள்தானா என்று அவர் கொஞ்சமேனும் அழுதிருக்க வேண்டும்.
இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.
மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது இன்று அவர் அரசியல் அனாதையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கும் நாம் வருந்தத் தேவையில்லை. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் எல்லா வகை சீரழிவுகளோடும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவர்களது நிழலில் தங்கி வேலை செய்த வைகோ அவர்களது செல்வாக்கை மிஞ்ச முடியுமா என்ன?
ஆக இந்த இடம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் புறநிலையான காரணங்களும், அகநிலையான காரணங்களும் உண்டு. அதில் வைகோ விரும்பி செய்த பணிகளையே மேலே விமரிசித்திருக்கிறோம். ஆக வைகோ வாய்ப்பு கிடைக்காததால் ஒருபெரிய தலைவராக முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ம.தி.மு.க கட்சியில் சேரும் தகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அதாவது அவரும் அரசியல் அனாதையாக முடிவு செய்து விட்டார். நாமும் நமது அனுதாபங்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.
நன்றி - வினவு
Tuesday, March 15, 2011
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்திதங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல. இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி : தட்ஸ் தமிழ்
போபால் நஞ்சாகும் நீதி
பிரதமர் தன் முதல் வார்த்தையை உச்சரிக்க கனத்த மௌனம் நிலவியது. மத்தியில் இனி விஷவாயு தொடர்பாக புதிய அமைச்சகம் தொடங்கப்படும் என்பது தான் அவரது முதல் அறிவிப்பு.பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, மருத்துவ உதவிகள் செய்வது,நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளை முடக்குவது என பல தளங்களில் அந்தஅமைச்சகம் செயல்படும். தில்லியில் உள்ள கிமிமிவிஷி போல் மிகப்பெரும்மருத்துவமனை 1000 கோடி ரூபாய் செலவில் போபாலில் நிறுவப்படும் எனவும்அதற்கான பணிகள் இந்த வாரமே தொடங்கும் என்றார் அவர். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி விஷவாயு கசிவில் உயிரிழந்த 25,000 பேரின் குடும்பங்களுக்குத் தலா 5லட்சம் ரூபாயை யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்க வேண்டும். அதனைஉடனடியாகப் பெற்றுத்தரும் பணியில் பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபடும்.அத்துடன் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் வழங்கப்படும் என்றார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் வாழ்நாள் முழுக்கமருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தீர்ப்பு, அதற்கானதொகையை மத்திய அரசு பெற்று இந்தப் புதிய மருத்துவமனை மூலம் அந்த சேவைவழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய நிரந்தரஅடையாள அட்டை வழங்கப்படும்.
போபாலுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு அணு விபத்து பொறுப்பு மசோதாவுக்கு உயிர் கொடுக்க முனைகிறது மன்மோகன் அரசு. இந்த மசோதாவைச் சட்டமாக்கக் கோரி அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது நம்மால் வெளிப்படையாகவே காணமுடிகிறது. இந்த மசோதா சட்டமானால் போபாலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்குகளைக்கூட நம்மால் தொடுக்க இயலாது. ஜனநாயகம் வழங்கும் எல்லா உரிமைகளையும் மெல்ல மெல்ல பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளுக்கு அழுத்தம்கொடுத்து அவர்களுக்கேற்றாற்போல் உருமாற்றி வருகிறது. அதன்படி ஒரு அணுஉலையை இந்தியாவில் நிறுவிய நிறுவனத்திற்கும் அந்த உலையில் நடக்கும் விபத்துகளுக்கும் தொடர்பேதும் இல்லை. அதனை இயக்குபவர்களே அதற்குப்பொறுப்பு. காலம் மாறும்போது எல்லாம் தலைகீழாய் மாறுகிறது. அதைவிட வேடிக்கை, விபத்து நடந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கேட்கவே இயலாது. மறுபுறம், கடந்த மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில் பிரிட்டிஷ்பெட்ரோலியம் நிறுவனத்தால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் 11 பேர் மாண்டனர்.அதற்கும் கடல் சுத்திகரிப்பிற்கும் ஒபாமா 500 கோடி ரூபாய் கேட்டு அதன் அதிபரை வெளிப்படையாக மிரட்டுகிறார்.
மக்களின் நம்பிக்கையைப் பெற ஒரு மக்கள் நல அரசு தவறிவருகிறது, இல்லை நாம் தான் இன்னும் இதை மக்கள் நல அரசு என நம்பிஆரம்பத்தில் விவரித்தது போல் கனவு கண்டு வருகிறோமா? அதே 1984ல் நடந்தசீக்கியப் படுகொலைக்குப் புதிய இழப்பீடு திட்டங்களை - ஒதுக்கீடுகளை அரசால் செய்யமுடிகிறது. நக்சல் ஒழிப்பு என்றால் தனியே சிறப்பு பட்ஜட்ஒதுக்கீடுகள் செய்ய முடிகிறது. ஆனால் இப்படியான விளிம்பு நிலை மக்கள்சார்ந்த அழிவுகள், பெரும் திட்டங்களால் ஏற்படுகிற இடப்பெயர்வு என மறுவாழ்வு சார்ந்தயாவற்றுக்கும் அரசு-நீதிமன்றங்கள் ஒன்று போலவே கசந்த மனோபாவத்துடன் நடந்து கொள்கின்றன.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் ஒரு முறை நீதியை உத்தரவாதப்படுத்த தவறியுள்ளது வருத்தத்திற்குரியது.
போபால் வழக்கை மக்கள் சார்பாக அரசு நடத்தினால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மூலதனங்கள் தடுக்கப்பட்டு விடும் என அரசும் முதலாளிகளும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். ஒரு தேசம் அதன் பெரும்பகுதி மக்களைக் கணக்கில் எடுக்காது தன் பயணத்தை தொடர்வது பெரும் இடர்களை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் சார் வளர்ச்சி (G D B) யைஉயர்த்தலாம். ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கையை கடந்த 20ஆண்டுகளில் அது மிகவும் கேவலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
Sunday, March 13, 2011
கலைஞருக்கு ஒரு திறந்த மடல்!
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜ...ரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமை ஆக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்! ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்தி லிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது! ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்?
ஐந்து கொள்கைகள்தான்.
கடவுள் ஒழிய வேண்டும்.
மதம் ஒழிய வேண்டும்.
காங்கிரஸ் ஒழிய வேண்டும்.
காந்தி ஒழிய வேண்டும்.
பார்ப்பான் ஒழிய வேண்டும்.
இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர் என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல் என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்புக்குரியது அல்லவா! பக்திப் பரவசத்தில் கோயில் கோயிலாகச் சுற்றுவது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!
அண்ணா இறுதி நாள் வரை காங்கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப் படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. ‘அண்ணா! அண்ணா! என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்கும். (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிரஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?
‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்? ‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை. என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்கள் குடியேறத்தான் செய்யும். என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி–1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்துவிட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழுரைகள்(!). நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா? என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். ‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா? என்று கேட்கத் தோன்றுகிறது கலைஞரே!
‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை. (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? ‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின் கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே! கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டியில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமையாற்றினீர்கள்.
இப்போது இரண்டாவது முறையாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே! ‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலானாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும். (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றிவிட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார் என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடைபெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான். என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று ‘நகைச்சுவை ததும்பப் பேசியிருக்கிறீர்கள்.
இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானிகளாய் உருமாறிய ரகசியத்தை உருக்குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்களுக்கே இடமிருக்காது கலைஞரே! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை. என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே! ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்தீர்கள்?
மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா? ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலாவை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்! இப்படிக்கு, ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த, தமிழருவி மணியன்.
நன்றி : விகடன்