Sunday, December 25, 2011

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன ? : சோ பரபரப்பு பேட்டி.

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி கேள்விகளுக்கு எழுத்தாளர் “சோ” பதில் அளித்துள்ளார்.

கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.

பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில் தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.

எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்

கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?

ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.

கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?

ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.

கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?

ப:- இன்னொரு அதிகாரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.

கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?

ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?

ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.

இவ்வாறு மாலை மலர் நிருபர் கேட்டதற்கு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வை புறக்கணித்தது கேரளா.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முல்லைப்பெரியாறு அணையில் 2 கட்டங்களாக ஆய்வு செய்தனர். அப்போது அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண் படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தொழில் நுட்ப குழுவில் இடம் பெற்று உள்ள வல்லுநர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் முதலில் இடுக்கி அணை மற்றும் அதன் அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய காலை 9.30 மணியளவில் தேக்கடி படகு துறைக்கு வந்தனர். பின்னர் தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

அவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எம்.சம்பத்குமார், உதவி பொறியாளர் பழனிச்சாமி, கேரள மாநில முல்லைப் பெரியாறு செல் தலைவர் பொறியாளர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர், கேரள அணை பாதுகாப்பு துணை பொறியாளர் லத்திகா, டோமி ஜார்ஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

நிபுணர் குழுவினர் மற்றும் தமிழக, கேரளப் பொறியாளர்கள் குழு அணையின் பின்பகுதியில் உள்ள கேலரிக்கு சென்று அடிப்பகுதியை பார்வையிட்டனர். அடிக்கடி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் 7 துளைகள் போட்டு ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளையும் அப்போது பார்வையிட்டனர்.

அணையில் துளைகள் இடும் பகுதிகளை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, கேரள பொறியாளர் லத்திகா அணையில் வேறு சில இடங்களையும் மற்றும், தாங்கள் குறிப்பிடும் பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை தொழில்நுட்பக் குழுவினர் ஏற்கவில்லை.

இதையடுத்து பொறியாளர் லத்திகா நிருபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தொழில் நுட்ப குழுவினர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவற்றை கேட்க மறுக்கின்றனர். அணைப்பகுதிகளில் நாங்கள் பார்வையிட சொல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மறுக்கின்றனர். அதனால் நாங்கள் இந்த ஆய்வை புறக்கணிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட தொழில் நுட்ப குழுவினர் அதிருப்தி அடைந்தனர். கேரள அதிகாரிகளை அழைத்து நீங்கள் இதுபோல் செயல்படக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுங்கள் என்று கண்டனம் தெரிவித்தனர். அதற்கு கேரள அதிகாரிகள், இந்த ஆய்வில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதனால் ஆய்வை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறினார்கள். இதனால் லேசாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மத்திய குழுவினர் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் கேரள அதிகாரிகள் குற்றம் சாட்டியதால் ஆய்வு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கேரளத்தினரின் இந்த செயலைப் பொருட்படுத்தாமல் தொழில்நுட்பக் குழுவினர் அணையை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர் மாலையில், தமிழக மதகு பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மாலை ஆறரை மணியளவில் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடி திரும்பினர். அதன்பிறகு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கேரள - தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொழில் நுட்ப குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இன்று முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்யும் தொழில்நுட்பக் குழுவினர் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து வைகை அணையைப் பார்வையிடுகின்றனர். பின்னர் அவர்கள் மதுரை செல்கிறார்கள்.

Saturday, December 24, 2011

முல்லைப் பெரியாறு: இறுதிகட்ட ஆய்வைத் தொடங்கியது நிபுணர் குழு.



முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தொழில் நுட்ப குழு இன்று காலை இறுதிகட்ட ஆய்வைத் தொடங்கியது.

இந்தத் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் குமுளி அருகேயுள்ள தேக்கடியில் இருந்து காலை 9.45 மணிக்கு படகின் மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டது.

அப்போது, தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

இந்த ஆய்வின்போது, ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கக் கூடாது என்று ஆய்வுக்குழுவுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிகட்ட ஆய்வு...

முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இடுக்கி மாவட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக பிரசாரம் செய்வதோடு, பல இடங்களில் சேத தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களையும் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது.

இதற்காக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வு செய்தனர். அப்போது 2 கட்டமாக ஆய்வு நடந்தது. அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண்படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் இறுதிக்கட்ட ஆய்வில் ஈடுப்பட்டுளனர்.

கொச்சிக்கு விமானம் மூலம் நேற்று வந்தக் குழுவினர் இருவரும் கார் மூலம் இடுக்கி அணைக்கு சென்றனர். அங்கு, இடுக்கி அணையை பார்வையிட்டுவிட்டு, அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து குழுவினர் தேக்கடிக்கு சென்று இரவு தங்கினார்கள். இன்று முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டனர். அணை பகுதி மற்றும் மதகு, பேபி அணை, அதன் அருகில் உள்ள எர்த் டேம் என்ற பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

அணையின் உறுதித்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.

அணையின் இறுதிக்கட்ட ஆய்வாக அணைக்கு அடியில் உள்ள மண்ணை எடுத்து பரிசோதனை செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 2 ராட்சத டிரில்லிங் எந்திரங்கள் அணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஒரு எந்திரம் துளையிடுவதற்காகவும், மற்றொரு எந்திரம் துளையிட்ட இடத்தை மீண்டும் அடைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அந்த எந்திரங்களை வைத்து அணையில் 7 இடங்களில் 30 அடி ஆழத்துக்கு துளையிட்டு கீழே இருக்கும் மண்ணை எடுத்து பரிசோதிக்கப்பட இருக்கிறது.

அதன்மூலம் அணையின் உறுதித்தன்மை எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறியமுடியும். பரிசோதனைக்காக துளையிட்டு மண் எடுக்கும் பணி, தொழில்நுட்ப குழுவினர் முன்னிலையில் நடக்கிறது.

ஒரேநாளில் மண் எடுக்கும் பணி முடியவில்லை என்றால் மறுநாளும் அதை தொடருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை தொழில்நுட்ப குழுவினர் முழுமையாக பார்வையிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த மண் பரிசோதனைக்கு பிறகு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதால், இதுவே இறுதிக்கட்ட ஆய்வாக கருதப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்ப குழுவினர் ஞாயிற்றுக்கிழமை வைகை அணைக்கு சென்று பார்வையிடுகின்றனர். அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பேரணை மற்றும் வாய்க்கால்களை பார்வையிடுகிறார்கள்.

எனக்கு எதிராக 'பொய் சாட்சி' : சிபிஐ மீது ஆ.ராசா குற்றச்சாட்டு.



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனக்கு எதிராக 'பொய் சாட்சி'யை சிபிஐ உருவாக்கியுள்ளதாக, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான ஆ.ராசா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனி உதவியாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவர் சாடசியம் அளித்தார்.

ஆ.ராசாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ராசா அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வந்ததாக கூறினார்.

அப்போது, நீதிமன்றத்தில் சந்தோலியா (ராசாவின் முன்னாள் உதவியாளர்) அருகில் இருந்த ஒரு நபரை சுட்டிக்காட்டி, அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிபதியிடம் புகார் கூறினார். இதனால், நீதிமன்றம் பரபரப்பானது.

பின்னர், கொலை மிரட்டல் விடுத்தவர் என ஆசிர்வாதத்தால் புகார் கூறப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது சிபிஐக்கு தெரியவந்தது.

ராசா குற்றச்சாட்டு...

இந்த நிலையில், சிபிஐ-யின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசிர்வாதம் ஆச்சாரியை ராசா சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, நேற்றைய தினம் நடந்தவை அனைத்தையும் நாடகம் என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த வழக்கில் சிபிஐ பொய்யாக உருவாக்கியுள்ள சாட்சியம்தான் ஆசீர்வாதம் ஆச்சாரி. அவர் சொல்வது அனைத்தும் தவறானவை. நேற்று கூட அவர் அரங்கேற்றிய கொலை மிரட்டல் நாடகத்தை நீங்கள் அறிவீர்கள்.

சந்தோலியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அவருக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டது. ஆசிர்வாதம் ஆச்சாரி பொய் சாட்சியம் என்பதற்கு இதுவே சான்று," என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஓ.பி.சைனி கூறுகையில், "அவர் (ஆச்சாரி) மிரட்டல் பற்றி முன்பு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அப்படி ஏற்கெனவே சொல்லி இருந்தால், அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம், இந்த வழக்கில் பலருக்கும் ஜாமீன் கிடைத்திருக்காது," என்றார்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை சாட்சிகளிடம் தாம் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை என்று தெரிவித்து இருந்த ஆ.ராசா, வியாழக்கிழமையில் இருந்து குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் நாளை மக்கள் திரள் போராட்டம்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக் கோரி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் மக்கள் திரள் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தியும், தேனி மாவட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சென்னை மெரினா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மக்கள் திரள் போராட்டம் நடைபெறுகிறது.

'மே பதினேழு' இயக்கம் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன், கவுதமன், சேரன், முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி வேல்முருகன், திருமுருகன், ஓவியர் வீர சந்தானம் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்றும், புதிய அணை கட்ட மாட்டோம் என்றும் 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவோம் என்றும் கேரளம் முடிவெடுக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் புதிய புதிய வடிவங்களைப் பெறும்.

அதனால்தான் நாளை 25-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் மாலை 3 மணி அளவில் தமிழக உரிமை காக்கும் உணர்வாளர்கள் மக்கள் திரளாக பங்கேற்க மே 17 இயக்கத்தினரும், கலை உலக விற்பன்னர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகமெல்லாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் திரள்கிறோம் "நிதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்றார் ஏசு பெருமான்.

முல்லைப் பெரியாறில் தமிழ் நாட்டுக்கு நீதி நிலைக்க வேண்டும் என்ற பசிதாகத்தோடு பங்கேற்போம். ஆராயாது, தவறான தீர்ப்பளித்த வேந்தனை எதிர்த்து எரிமலையாய் சீறினாள் கண்ணகி இன்றோ, உண்மையைத் தெரிந்து கொண்டே அதற்கு மாறாக அநீதி செய்யும் மத்திய அரசை எதிர்க்கவே தமிழகத்தின் சீற்றத்தைக் காட்ட கடற்கரையில் திரண்டிடுவோம். கட்சி அடையாளங்களையும், கட்சிக் கொடிகளையும் தவிர்க்க வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

Friday, December 23, 2011

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தல்.



முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் இருமாநிலங்களிடையே பதற்றம் எழுந்துள்ள நிலையிலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவது குறைந்தபாடில்லை.

கோவை மாவட்ட செக்போஸ்ட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்றுமணல்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றனவாம்.

திருச்சி, கரூர் ஆற்றுமணல்

கேரளா மாநிலத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு விவரமாக தடைவிதித்துள்ளது. இதனால் அங்கு வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவற்கு மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் மணல் தேவையை நிறைவு செய்வது தமிழ்நாடுதான். பால், காய்கறி உள்ளிட்டவை போக தமிழகமக்கள் மணலையும் கேரளாவுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணல் லாரிகள் மூலமாக பல்லடம் வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் திமுக கொடியுடன் மணல் கடத்திய லாரிகள் தற்போது அதிமுக கொடியுடன் செக்போஸ்ட் போலீசாரின் ஆசியுடன் மீண்டும் மணல் கடத்தப்படுகிறதாம். இந்த கடத்தலுக்கு ஆளுங்கட்சியினரும் ஆதரவாக உள்ளதால் அவர்களுக்கும் மாமூல் கொடுத்துவிட்டு மணலை கடத்துகின்றனர் கடத்தல்காரர்கள்.

அணைப்பிரச்சினையிலும் தொடரும் கடத்தல்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் இருமாநிலங்களிடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மணல் கடத்தல் லாரிகள் மட்டும் எப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவருகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

தமிழக பதிவு எண்களுடன் கூடிய லாரிகளில் மணல் கடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், தற்போது ஆந்திரா, புதுச்சேரி பதிவு எண்களை கொண்ட லாரிகளை கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்துகின்றனர்.

கடத்தல் வாகனங்களின் ஒரிஜனல் பதிவு எண் பலகைகள் மோசடியான முறையில் மாற்றப்பட்டு ஆந்திரா, கர்நாடக பதிவு எண்களுடன் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள் வழிமறித்தால், போலி பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி தப்பி விடுகின்றனர்.

லாரியில் கடத்தப்படும் மணல் மீது தார்பாலின் போட்டு மறைத்து, அதன்மேல் "கிரஷர் டஸ்ட் மண்' (கருப்பு மண்) போட்டு மூடி கடத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

விண்ணைத் தொடும் விலைவாசி - தத்தளிக்கிறது கேரளா !



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதனால் அங்கு பல அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அரசு மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

சாதாரண அணைப் பிரச்சினையை கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை போல மாற்றி விட்டது கேரள அரசு. தேவையில்லாமல் அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களை கொந்தளிக்கும் வகையில் பேசப் போக தற்போது அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கேரளாவில் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் சமூக விரோதிகள்.

இதன் விளைவு -தமிழகத்தில் இதுவரை யாரும் எதிர்பாராத பதிலடி. எங்கு பார்த்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுகிறார்கள் தமிழக மக்கள். உண்ணாவிரதம், பேரணி, கடையடைப்பு, கேரளக்காரர்களின் கடைகள் உடைப்பு, மறியல் என சகலவிதமான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

தேனி மாவட்டம்தான் போராட்டத்தில் முன்னணியில் உள்ளது. இங்கு கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேனி என கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதுமே வீறு கொண்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிலும் பல நகரங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் குழுமி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். சலூன் கடைக்காரர்கள், ஆட்டோடிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், சலவைத் தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், வியாபாரிகள், வக்கீல்கள், மாணவர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது தரப்பு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு போராட்டங்கள் தொய்வின்றி நடந்து வருகின்றன.

அதேபோல அரசியல் கட்சிகளும் கூட போராடி வருகின்றன. அதிமுகவைத் தவிர அத்தனை கட்சிகளுமே ஒரு சுற்றுப் போராட்டத்தை முடித்து விட்டன.

இந்தப் போராட்டங்கள் போதாது என்று பல்வேறு வகையான பொருளாதார முற்றுகையும் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து காய்கறி, பால், ஆடு, மாடுகள் என எதுவுமே கேரளாவுக்கு போவதில்லை. அத்தனையும் நிறுத்தப்பட்டு விட்டது.

அதேபோல சரக்கு லாரிகளும் கேரளாவுக்குப் போகாது என்று லாரி புக்கிங் ஏஜென்டு சங்கம் கூறி விட்டது. இதனால் சரக்கு லாரிகள் கேரளாவுக்குப் போகவில்லை.

அதேபோல மாநிலத்தின் பல பக்கங்களிலும் பல்வேறு வகையான பொருட்கள் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தங்களுக்காகத்தானே பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் கேரளாவுக்குள் கொண்டு வரப்படுகிற சரக்கு வாகனங்களையும் கேரளக்காரர்கள் தாக்கி வருவதால் இந்த நிறுத்தம்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து தற்போது கறிக்கோழிகளை அனுப்புவதை நிறுத்தி விட்டனராம். காரணம், கோழிகளைக் கொண்டு போகிற வாகனங்களைத் தாக்கியதால். இதனால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து குறிப்பாக பல்லடத்திலிருந்து கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கறிக் கோழிகள் கேரளாவுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதேபோல பிற பொருள் போக்குவரத்தும் கூட பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.