Monday, July 11, 2011

மும்பை குண்டு வெடிப்பில் காயம் : 3 ஆண்டு கோமாவில் இருந்த வாலிபருக்கு நினைவு திரும்பியது.

மும்பை குண்டு வெடிப்பில் காயம்: 5 ஆண்டு கோமாவில் இருந்த வாலிபருக்கு நினைவு திரும்பியது

மும்பையில் 2008-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பில் 188 பேர் பலியானார்கள். 817 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரெயிலில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பராக் சவாந்த் (32) என்ற தனியார் நிறுவன ஊழியர் பலத்த காயம் அடைந்தார். அவரது நெற்றி, தலை, மார்பு போன்ற பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. தலையில் அடிபட்டதால் மூளையிலும் சேதம் ஏற்பட்டது. அவர் மீரா சாலையில் உள்ள பக்திவேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. சுயநினைவை இழந்து “கோமா” நிலையை அடைந்தார். பின்னர் அவர் இந்துஜா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் இழந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் வந்து பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டனர். மனைவி கூட இவரை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் அவருக்கு திடீரென நினைவு திரும்பியது. அவர் கோமாவில் இருந்து மீண்டிருப்பது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. நேற்று போன் மூலம் தனது பெற்றோருடன் பராக் பேசினார். 5-வது மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டு நலம் விசாரித்தார். நன்றாக படிக்கிறாளா? என்றும் கேட்டார்.

இது அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பராக் உடன் உரையாடினர். இன்னும் சிறிது நாட்களில் பராக் முழுமையாக குணமடைந்து விடுவார் என்றும், இது மருத்துவ அதிசயம் என்றும் இந்துஜா ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு இல்லை : பாகிஸ்தானுக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிறுத்தம் ; அமெரிக்கா நடவடிக்கை.

தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு இல்லை: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி நிறுத்தம்; அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்க அந்நாட்டுக்கு அமெரிக்கா ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதவி வழங்கி வருகிறது. ராணுவ தளவாடங்கள் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுகின்றன. எனவே, தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த ரூ.4 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அதற்கான அறிவிப்பை ஒபாமா அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதை வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகி பில்தலே டெலிவிஷனில் உறுதி செய்தார்.

அது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அமெரிக்க பயிற்சியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். மேலும், ராணுவத்துக்கு அளிக்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

1,20,000 டாலர் ஊழல் குற்றச்சாட்டில் கபில் சிபல் : சிஏஜி.

ஊழல் குற்றச்சாட்டில் கபில் சிபல்: சிஏஜி

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஊழல் விவகாரத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றது இந்த சூழ்நிலையில் மீண்டும் மற்றொரு ஊழல் விவகாரத்தில் சிக்கி உள்ளார் மத்திய தொலைத் தொடர்புத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல்.

இந்த முறைகேடு குறித்த தகவலை (சிஏஜி) மத்திய தலைமைக் கணக்கு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கபில் சிபல், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தபோது, அமெரிக்காவில் செட்டிலான 5 லட்சம் இந்திய வம்சவாளி தொழிலாளர்கள் குறித்த டேட்டா பேஸை(தரவுத்தளம்) உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 கட்டமாக இந்தப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள், விதி மீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

அதாவது விதிமுறைகளுக்குப் புறம்பாக, பொது நிதி விதிகளுக்கு மாறாக, மேரிலேன்ட்டைச் சேர்ந்த பீனிக்ஸ் ரோஸ் எல்எல்சி என்ற நிறுவனத்தை சிபல் தேர்வு செய்து அந்த நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்துள்ளார் என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பணிக்கான செலவுத் தொகையாக 1,20,000 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் பணியை ஏற்றுக் கொண்ட அந்த அமெரிக்க நிறுவனம், 3 ஆண்டுகளிலேயே தனது வேலையை அப்படியே நிறுத்தி விட்டது. அதாவது இலக்கு குறிக்கப்பட்ட பணியில் 16 சதவீதத்தை மட்டுமே அது செய்து அத்துடன் நிறுத்தி விட்டது.

ஆனால் முதல் கட்டப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்திற்கு திட்ட செலவுத் தொகையில் பெரும்பாலான பணத்தை கபில் சிபல் ஒதுக்கி விட்டார்.

2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25,000 டாலர், ஆகஸ்ட் மாதம் 26,200 டாலர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 38,000 டாலர் என பெரும் தொகையை அந்த நிறுவனத்திற்கு சிபல் ஒதுக்கியுள்ளார்.

மொத்தம் 20,000 பேரின் தகவல்களை முதல் கட்டத்தில் அந்த நிறுவனம் முடித்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 3300 பேர் குறித்த தகவல்களை மட்டுமே அது திரட்டியிருந்தது. அதிலும், எட்டே எட்டு பேரின் தகவல்களை மட்டுமே அது டேட்டா பேஸில் ஏற்றியிருந்தது.

முதல் கட்டப் பணிகளின் இலக்கை அந்த நிறுவனம் சரிவர நிறைவேற்றாத நிலையில், 2வது கட்டப் பணிக்காக அந்த நிறுவனத்திற்கு 30,000 டாலரை அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒதுக்கியது மிகவும் முறைகேடானது என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள சிஏசியின் முதன்மை இயக்குநர்தான் இந்த முறைகேட்டை கண்டுபிடித்து அதுகுறித்த அறிக்கையை சிஏஜிக்கு அனுப்பியுள்ளார்.

இந்த தேவையில்லாத பண விரையத்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட ஒருவருக்கு சாதகமாக அறிவியல் தொழில்நுட்பத் துறை செயல்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் கே.சி. திவிவேதிதான் ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆனால் இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை அளித்தவர் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று சிஏஜி தெளிவாக கூறியுள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்த சிஏஜியின் அறிக்கை வருகிற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யபடவுள்ளது. இந்த புதிய முறைகேடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மேலும் ஒரு தலைவலியே ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு குறித்து கபில் சிபல் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா படப்பிடிப்புக்கான பூஜை நடந்தது.


தமிழ் சினிமாவில் மாடர்ன் தியேட்டர்ஸ் பங்கு மகத்தானது. தமிழில் முதல் பேசும் உருவானது இங்குதான். பெயர் கவி அகல்யா. முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களையும் உருவாக்கியது இதே மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

எம்ஜிஆர், என்டிஆர், கருணாநிதி, ஜானகி எம்ஜிஆர் என நான்கு முதல்வர்களின் முதல் படங்களை உருவாக்கிய பெருமை இந்த மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு.

1935-ல் நிறுவப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ், 180 தமிழ் படங்கள், 1 இந்திப் படம், 1 ஆங்கிலப் படம், பல தென்னிந்திய மொழிப் படங்களின் தயாரிப்புக் கூடமாக திகழ்ந்தது. காளி கோயில் கபாலி என்ற படத்தோடு தனது தயாரிப்புப் பணியை நிறுத்திக் கொண்டது.

அதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் குடியிருப்புப் பகுதியாக மாறிப் போனது. இன்று மிச்சமிருப்பது மாடர்ன் தியேட்டர்ஸின் கம்பீரமான முகப்புப் பகுதி மட்டுமே.

ஒருகாலத்தில் சினிமாவின் தலைமைப் பீடமாகத் திகழ்ந்த அந்தப் பிரதேசத்தின் நினைவுகளை அசைபோட தமிழ் சினிமா ஆர்வலர்கள் இப்போதும் தவறுவதில்லை. சிலர், மாடர் தியேட்டர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றும் தங்கள் படங்களின் துவக்க காட்சியை இங்கே வைப்பதும் உண்டு.

அந்த வகையில், சமீபத்தில் 'அழகு மகன்' என்ற சினிமா படப்பிடிப்புக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸில் நடந்தது.

இதில் நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயக்குமாரி, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ், நடிகர்கள் இளவரசு, சிங்கம்புலி, இயக்குனர் கவுதமன், ஆசைத்தம்பி, விஜய்ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிஐடி சகுந்தலா கூறுகையில், "சேலம் மாடர்ன் தியேட்டர்ஸை வாழ்நாளெல்லாம் மறக்கமாட்டேன். சாகும்போது கூட மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவுடன் தான் சாவேன். அந்தளவிற்கு என் வாழ்க்கையிலும், என்னை போல் மற்றவர்கள் வாழ்க்கையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் அங்கம் வகித்துள்ளது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தையும் நாங்கள் மறக்க மாட்டோம். பல கலைஞர்களை உருவாக்கிய மாமனிதர். அவர் கையால் குட்டுப்பட்டவர்கள் தான் இன்று திரையுலகில் இருப்பவர்கள். பல சாதனை கலைஞர்களை இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான் உருவாக்கி இருந்தது. இந்த இடத்தில் நிற்பதையே பெருமையாக கருதுகிறேன்," என்றார்.

விழாவில் கலந்து கொண்ட சங்கர் கணேஷ், "மாடர்ன் தியேட்ர்ஸின் மிச்சமாக இப்போதுள்ள இந்த முதப்புப்பகுதிதான் தமிழ் சினிமாவின் அடையாளம். மாடர்ன் தியேட்டர் தயாரித்த பல படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் பணியாற்றிய இந்த இடத்தில் நிற்பதே பெருமை," என்றார்.

எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்.



அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டு உள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகைஉண்டு.அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்திசெய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.

உடல் எடையை குறைக்கும்

உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.

தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டை நோய் குணமடைகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒரு வித நோயையும் வராமல் தடுக்கிறது.

எலும்புகளை பலப்படுத்தும்

அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்

வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

சீமை அத்திப்பழம்

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண் குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.

சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்.

Sunday, July 10, 2011

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல் !



தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி, இன்னமும் சில நாட்கள் நீடித்திருக்கக்கூடும். அப்படி நீடிக்காமல், அவசர அவசரமாக கடந்த வியாழக் கிழமையே ‘மங்களம்’ பாடவேண்டி வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, கனிமொழியில் வக்கீல் எடுத்து வைத்த வாதம் என்று இப்போது தெரியவந்துள்ளது.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வருகின்றது. இதில் கைதான யாருக்குமே ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிரான முழுமையான குற்றப் பத்திரிகையும் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் Preliminary அறிக்கை ஒன்றை வைத்தே சி.பி.ஐ. விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த விஷயத்தை கனிமொழியின் வக்கீல், அடிக்கடி நீதிபதிக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் சி.பி.ஐ. முழுமையான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாத நிலையில், கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ.யை நீதிபதி சைனி பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டார். “குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் முழுமையான குற்றப் பத்திரிகையை நீங்கள் தாக்கல் செய்யவில்லை?” என்று கேட்டார் அவர்.

அதற்கு சி.பி.ஐ.யின் வக்கீல், “வேறு சில முக்கிய சம்பவங்களையும் நாம் குற்றப் பத்திரிகையில் இணைக்க வேண்டியுள்ளது. அதற்கான சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனால்தான் தாமதம்” என்றார்.

இந்தப் பதிலுடன் நீதிபதி திருப்தியடையவில்லை. சி.பி.ஐ.யின் வக்கீலைப் போட்டுக் குடைந்து தள்ளிவிட்டார்.

“நீங்கள் குற்றப் பத்திரிகையைத் தாமதிப்பதைப் பார்த்தால் வேறு உள்நோக்கம் இருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டுள்ள 14 பேரையும், தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உங்களது விருப்பமா? அதற்காகத் தாமதம் செய்யப்படுகின்றதா?”

“இல்லை. ஆவணங்கள் முழுமையடையவில்லை. புதிய தகவல்கள் சேர்க்கப்படவுள்ளன”

இந்த இடத்தில் குறுக்கிட்ட கனிமொழியின் வக்கீல், “எனது கட்சிக்காரருக்கு (கனிமொழி) அவரைக் கைது செய்வதற்கு என்ன காரணம் என்று ஆதாரம் காட்டும் சப்போர்ட்டிங் டாக்குமென்ட் ஏதும் வழங்கப்படவில்லை என்று ஞாபகப் படுத்துகிறேன்” என்று, கத்தி செருகினார்.

சி.பி.ஐ. வக்கீலின் பக்கமாகத் திரும்பிய நீதிபதி, “அந்த ஆவணங்கள் எங்கே?” என்றார். “ கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய ஆவணங்கள் சரியாக இருந்த காரணத்தால் அல்லவா அவர்களை கைது செய்தீர்கள்? அந்த ஆவணங்கள் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அந்த ஆவணங்களை ஏன் இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை?”

“அந்த ஆவணங்களை ரிலீஸ் செய்தால், அதிலுள்ள விபரங்களை வைத்து சிலர் உஷாராகி விடுவார்கள் என்ற ப்ரீ-காஷனில்தான் அவை வழங்கப்படவில்லை”

“அந்த ‘சிலர்’ கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 14 பேரில் இருக்கிறார்களா?”

இதற்கு பதில் சொல்ல சில விநாடிகள் எடுத்துக்கொண்ட சி.பி.ஐ. வக்கீல், “இல்லை. வெளியே இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

“அப்படியானால், அவர்கள் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?” என்று கேட்டார் நீதிபதி சைனி.

இதற்கு சி.பி.ஐ. வக்கீலிடமிருந்து பதிலில்லை.

அதையடுத்து நீதிபதியிடமிருந்து உஷ்ணமான வார்த்தைகள் வந்து விழுந்தன. “இது ஒரு விதிமுறைகளுக்கு உட்பட்ட சட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படவேண்டிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். அல்லது அந்த ஆவணங்கள் ரெடியாகும் வரை அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. அதற்கு மேலும் நீங்கள் தாமதம் செய்தால், கோர்ட் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!” என்றார்.

இதைக் கேட்ட சி.பி.ஐ. தரப்பு, ஆடிப்போனது. நிலைமை சிக்கலாகுவதைப் புரிந்துகொண்டு மறுநாளே புதிய ப்ரீலிமினரி டிராஃப்ட் ஒன்றைத் தாக்கல் செய்தது.

இப்படி, மறு நாள் சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், ‘வெளியே இருக்கும்’ நபர் ஒருவரின் பெயரும் சேர்க்கப் பட்டிருந்தது.

அந்தப் பெயர்-

‘மத்திய அமைச்சர்’ தயாநிதி மாறன்!

சி.பி.ஐ.யின் இந்தக் குற்றப் பத்திரிகையில் தயாநிதி மாறனின் பெயர் இணைக்கப்பட்ட பின்னர்தான், தொடர்ந்தும் அவரை அமைச்சர் பதவியில் வைத்திருக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. தயாநிதியின் பதவி பறிபோனது!

கனிமொழியில் வக்கீல் பிரஷர் கொடுக்காமல் இருந்திருந்தால், தயாநிதியின் பெயரை அவசர கதியில் உள்ளே கொண்டுவந்திருக்காது சி.பி.ஐ.! இன்னமும் சில நாட்களுக்காவது தயாநிதியின் அமைச்சர் பதவி நிலைத்திருக்கலாம்.

சரி. கனிமொழியின் வக்கீல் இந்த மூவை ஏன் செய்தார்? பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காகிப் போனதா? அல்லது.. அல்லது.. வேண்டுமென்றே தயாநிதியின் பதவிக்கு சங்கு ஊதினாரா?

viruvirupu.com

தில்ஷனை சுட்டதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கைது. உண்மைக் குற்றவாளி யார் ?



சென்னை இராணுவக் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனை இராணுவ அதிகாரிகள் தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று தில்ஷனின் உறவினர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிய வந்தது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. லெப்டினன்ட் கர்னல் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தான் யாரையும் சுட்டுக் கொல்ல வில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன் பிறகும் சில அதிகாரி களிடம் விசாரணை நடந்தது.

இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் என்பவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தில்ஷனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் நேற்று மதுரைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் பிரவீண், சஞ்சய் ஆகியோர் இறந்த தில்ஷானை அங்கு காரில் வந்த ஒரு நபரே துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் ராணுவ குடியிருப்பில் உள்ளவர்கள்தான் தில்ஷானை சுட்டதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசாரின் விசாரணையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதற்கிடையே தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிறுவனை சுட்டுக் கொன்றவரை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராமராஜை கைது செய்தது பற்றி சி.பி.சி.ஐ.டி. - ஏ.டி.ஜி.பி. சேகர் கூறியதாவது,

சிறுவன் தில்ஷனை கொலை செய்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றுள்ளார்; மேலும் 3 மாதங்கள் ராணுவ குடியிருப்பில் தங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

ராணுவ அதிகாரி ராம்ராஜ் ராணுவ குடியிருப்பு பால்கனியில் இருந்து சிறுவன் தில்ஷனை சுட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்; பின்னர் சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள் வைக்க பயன்படுத்திய பை ஆகியவற்றை கூவத்தில் வீசி உள்ளார்.

ராம்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் 2008ம் ஆண்டுடன் காலாவதியாகி உள்ளது; உரிமத்தை புதுப்பிப்பதற்காக அவர் மனு தாக்கல் செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

கர்னல் ராமராஜ் அளித்த வாக்குமூலம்:

என்னுடைய சொந்த ஊர் மதுரை. நான் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது மகனும் மருமகளும் கடற்படையில் கேப்டனாக உள்ளனர். 22 ரைபிள் துப்பாக்கியை வைத்துள்ளேன்.

சனி, ஞாயிற்றுகிழமைகளில் இந்திரா நகர் பகுதியில் இருந்து சிறுவர்கள் வந்து விளையாடுவார்கள். பாதாம் கொட்டை பறிப்பார்கள். அவர்கள் போடும் சத்தம் எங்களுக்கு இடையூறாக இருந்தது. பகலில் தூங்க முடியவில்லை. மேலும் மரத்தில் இருந்து வீட்டை வேடிக்கை பார்ப்பார்கள். எனக்கு கோபமும் சந்தேகமும் ஏற்பட்டது.

அந்த வெறுப்பில்தான் தில்சனை சுட்டுக் கொன்றேன். சிறுவர்கள் என்னைப் பார்க்கவில்லை. இது எனக்கு சாதகமாகி விட்டது. இரவில் என்னுடைய காரில் சென்று புது நேப்பியர் பாலத்தின் மீது இருந்து துப்பாக்கியை கூவத்தில் வீசி விட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் நேற்று இரவு பைபர் படகில் சென்று அவர் சொன்ன இடத்தில் துப்பாக்கியை தேடினர். செங்குத்தாக விழுந்ததால் உடனடியாக கிடைத்தது. துப்பாக்கி கிடைத்தவுடன், கர்னல் அங்கேயே தலையில் அடித்துக் கொண்டு அழுததாக கூறப்படுகிறது.

முன்னதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளான சிறுவர்கள், லெப்டினெட் கர்னல் அஜித்சிங் என்னும் பஞ்சாபியரே, தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி என்று அடையாளம் காட்டினர்.

அவர் சம்பவ நேரத்தில் தான் அங்கு இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் செல்போன் டவர் ரிப்போட்படி அவர் அங்கிருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறி, மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் இந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு, அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

உண்மைக் குற்றவாளி யார்?