Saturday, July 9, 2011

டெலிபோன் ஒட்டுக் கேட்பு ; 168 ஆண்டுகால பத்திரிகை மூடப்படுகிறது.

டெலிபோன் ஒட்டு கேட்பு இங்கிலாந்து பிரதமரின்    உதவியாளர் கைது;    168 ஆண்டு பத்திரிகை மூடப்படுகிறது

இங்கிலாந்தின் பிரபல பத்திரிகை நியூஸ் ஆப் த வேல்டு. இது 168 ஆண்டு காலம் பழமைவாய்ந்த புகழ் பெற்றப் பத்திரிகை. குற்றம் மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இப்பத்திரிகை இணைப்பு பகுதி டேப்லாஸ்டு வடிவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது.

இதற்கிடையே அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் பிரபலங்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, டெலிபோன் ஒட்டு கேட்பு மூலம் தகவல்களை பெற்று செய்தி களை வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், ஆப்கானிஸ்தான் போரில் உயிரிழந்த இங்கிலாந்து வீரர்கள் மற்றும் விளையாட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கியது போன்ற தகவல்களை வெளியிட்டது. மேலும் தனிப்பட்ட நபர்களின் செல்போன் களையும் வழி மறித்து தகவல்களை திரட்டி செய்தி வெளியிட்டது.

இது போன்று கடந்த 6 ஆண்டுகளாக இப்பத்திரிகை சர்ச்சையில் சிக்கி இருந்தது. இப்பத்திரிகையின் செயலுக்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டார். விசாரணையில் டெலிபோனில் ஒட்டு கேட்டு செய்தி வெளியிட்டது உண்மை என்றும், அதற்காக ரூ.7 ஆயிரம் கோடி லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கவ்ல்சன் கைது செய்யப்பட்டார். இவர் அப்பத்திரிகையில் 2003 முதல் 2007-ம் ஆண்டு வரை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் பிரதமர் டேவிட் கேமரூனின் முன்னாள் மீடியா உதவியாளராகவும் இருந்துள்ளார். தற்போது இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

நியூஸ் ஆப் தி வேல்டு பத்திரிகையின் உரிமையாளர் ரூபர்ட் முர்டோக்கால், தற்போது இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து 168 ஆண்டுகளாக நடத்தி வந்த இந்த பத்திரிகை நாளை 10-ந்தேதி முதல் மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை உரிமையாளர் ரூபர்ட்முர் டோக்கால் வெளியிட்டார்.

தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி லெப்டினெட் கர்னல் அஜித்சிங்.



சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காந்தி நகர் குடிசை பகுதியை சேர்ந்த சிறுவன் தில்ஷன் சில நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கடந்த 7 நாட்களாக விசாரணை நடத்தியும் தில்ஷன் கொலையில் எந்த துப்பும் துலங்கவில்லை

சிறுவன் தில்ஷன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை வைத்து, துப்பு துலக்கி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ராணுவ அதிகாரிதான் குற்றவாளி என்கின்றனர்.

ராணுவத்தின் தரப்பிலோ சிறுவன் தில்ஷான் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளான சிறுவர்கள், தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை அடையாளம் காட்டினர். அவர் லெப்டினெட் கர்னல் அஜித்சிங் என்னும் பஞ்சாபியர் ஆவார்.

அவர் சம்பவ நேரத்தில் தான் அங்கு இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் செல்போன் டவர் ரிப்போட்படி அவர் அங்கிருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சிறுவனை சுட்டுக் கொன்றது எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவர் சட்டத்தின் முன்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழகத்தின் குரலாகும்.

இந்த நிலையில் டி.ஜி.பி. ராமானுஜம் சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். துப்பாக்கி சூடு நடந்த ராணுவ பகுதியில் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ராணுவ கமாண்டிஸ் மேஜர் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளைக்குள் சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படுகிறார்.

தி.மு.க.புதிய மந்திரி யார்? மத்திய மந்திரி சபை 11-ந் தேதி மாற்றம் ; கருணாநிதியுடன் பிரணாப்முகர்ஜி ஆலோசனை.

தி.மு.க.புதிய மந்திரி யார்? மத்திய மந்திரி சபை 11-ந் தேதி  மாற்றம்;கருணாநிதியுடன் பிரணாப்முகர்ஜி ஆலோசனை

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் தற்போது 33 காபினெட், 45 ராஜாங்க மந்திரிகள் உள்ளனர். காபினெட் அந்தஸ்து மந்திரிகளாக இருந்த மம்தா பானர்ஜி, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்பட சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த இலாகாக்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் சிலர் இலாகா தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில மந்திரிகளின் செயல்பாடுகள் மீது பிரதமர் மன் மோகன்சிங்குக்கு திருப்தி இல்லை. எனவே மத்திய மந்திரி சபையை முழுமையாக மாற்றி அமைக்க அவர் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பல சுற்று ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுத்துள்ளார். அதன்படி நிதி (பிரணாப்முகர்ஜி), உள்துறை (ப.சிதம்பரம்), பாதுகாப்பு (ஏ.கே.அந்தோணி), வெளியுறவுத் துறை (எஸ்.எம்.கிருஷ்ணா) ஆகிய 4 துறைகளை மட்டும் மாற்றாமல் மற்ற இலாகாக்களுக்கு மந்திரிகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மத்திய மந்திரி சபையில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. 3 காபினெட், 4 ராஜாங்க மந்திரிகளை பெற்றிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கியதால் 2 மந்திரிகள் (ஆ.ராசா, தயாநிதி மாறன்) பதவியை ராஜினாமா செய்தனர். அந்த 2 காபினெட் அந்தஸ்து மந்திரி பதவி தி.மு.க.வுக்கு மீண்டும் கிடைக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ். விஜயன் இருவரும் காபினெட் மந்திரிகளாக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. ராஜாங்க மந்திரிகளில் பழனிமாணிக்கத்துக்கு பதில் டி.கே.எஸ்.இளங்கோவனை தனிப்பொறுப்புடன் கூடிய மந்திரியாக்க தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியும், தங்கபாலும் இன்று பகல் 10 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றனர். அவர்களை டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி, தயாநிதிமாறன் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்றனர்.

பிரணாப்முகர்ஜிக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மந்திரிசபை மாற்றம் தொடர்பாக சோனியாவின் கருத்துக்களை கருணாநிதியிடம் பிரணாப்முகர்ஜி விளக்கிக் கூறினார்.

தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர விரும்புவதாக பிரணாப்முகர்ஜி கூறியதாக தெரிகிறது. தி.மு.க. தரப்பில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்பட தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மந்திரி பதவி வேண்டாம் ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு பதில் புதிய மந்திரி பதவி எதையும் கேட்கப் போவதில்லை என்று தி.மு.க. நேற்று அறிவித்தது.

பிரணாப் முகர்ஜியிடமும் இன்று அதே கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது, தி.மு.க. சார்பில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது. தி.மு.க. எடுக்கும் முடிவு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைவர்களுக்கு, தி.மு.க.வின் நிலையையும், மன உணர்வையும் தெளிவு படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய மந்திரி சபை மாற்றத்துக்கான ஏற்பாடுகள் டெல்லியில் ஓசையின்றி தொடங்கி விட்டன. நாளை மறுநாள் (11-ந்தேதி) மந்திரிசபை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், அஜித்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் ஆகிய 2 கட்சிகள் மந்திரி சபையில் சேர்க்கப்பட உள்ளது.

லல்லு பிரசாத் மீண்டும் காபினெட் மந்திரி ஆகிறார். அவருக்கு இரும்பு எக்கு துறை ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கவர்னர்களாக இருக்கும் சிவராஜ்பாட்டீல், பரத்வாஜ் இருவரும் மீண்டும் மத்திய மந்திரி ஆக வாய்ப்புள்ளது.

சமீபத்தில் மேல்-சபை எம்.பி. ஆகி உள்ள அசோக் கங் குலிக்கு அறிவியல் தொழில் நுட்ப துறையை கொடுக்க பிரதமர் மன்மோகன்சிங் தீர்மானித்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும், இளம் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் மந்திரி சபை மாற்றம் இருக்கும்.

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த தயாநிதி .



2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் களைச் சந்திக்கவில்லை. அதேபோல திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்தபோதும் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதி வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே சென்றார்.

2ஜி ஊழலில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று அவர் சென்னை திரும்பினார். நேற்று இரவு அவர் சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள், டிவி கேமராமேன்கள் உள்ளிட்டோர் குழுமியிருந்தனர்.

ஆனால் அந்த வழியாக தயாநிதி மாறன் வரவில்லை. மாறாக விமானம் ஏற வருவோர் நுழையும் பகுதி வழியாக வெளியேறினார். இதைப் பார்த்த செய்தியாளர்கள் அங்கு ஓடினர். ஆனால் தயாநிதி மாறனுடன் திரளாக வந்திருந்த தனியார் பாதுகாப்புப் படையினர், செய்தியாளர்களையும், கேமராமேன்களையும் பிடித்துத் தள்ளி விட்டு தயாநிதி மாறனை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதனால் செய்தியாளர்கள் கடும் கோபமடைந்தனர். அந்த இடத்தில் இருந்த விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டரை அணுகி, விமான நிலையத்திற்குள் எப்படி தனியார் பாதுகாவலர்களை அனுமதிக்கலாம் என்று முறையிட்டனர். ஆனால் அவராலோ பதில் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில், இரவு எட்டரை மணியளவில் கோபாலபுரம் வந்தார் தயாநிதி மாறன். அங்கும் செய்தியாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர். இதைப் பார்த்த தயாநிதி மாறன், முன் வாசல் வழியாக செல்லாமல் புற வாசல் வழியாக கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்தார். அதேபோல கிளம்பும்போதும் அதே போலவே சென்றார்.

மொத்தத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தார் தயாநிதி மாறன்.

Friday, July 8, 2011

ராசா, தயாநிதிக்கு பதில் யாருக்கும் பதவியில்லை திமுக முடிவு !



தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குப் பதில் திமுகவிலிருந்து யார் அமைச்சராக்கப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காலியாகவுள்ள ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்களுக்கு திமுக சார்பில் யாரையும் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

5 ஆக சுருங்கிய திமுகவின் பிரதிநிதித்துவம்

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு மொத்தம் 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணை அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் தற்போது தயாநிதி மாறன், ராசா ஆகிய இரு கேபினட் அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர். மு.க.அழகிரி மட்டுமே கேபினட் அமைச்சராக இருக்கிறார். 7 பேராக இருந்த திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக குறைந்து விட்டது.

இந்த நிலையில் ராசாவுக்குப் பதில் வேறு யாரையும் திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இதுவரை சேர்க்கவில்லை. அதே நேரத்தில் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு ஒரு திமுக எம்.பிக்கு பதவி தர காங்கிரஸ் தயாராக உள்ளது. அதற்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு திமுகவுக்கு அது கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

பாலு மீது பிரதமர் அதிருப்தி

திமுக சார்பில் டி.ஆர்.பாலுவை கேபினட் அமைச்சராக விருப்பம் தெரிவிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாலுவுக்கு அமைச்சர் பதவிதர பிரதமர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் பாலு. ஆனால் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் அவரை சேர்க்க பிரதமர் மறுத்து விட்டார். அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆதரவு தெரிவித்ததால் பாலுவுக்கு பதவி கிடைக்கவில்லை. மு.க.அழகிரி அமைசசரவையில் சேர்க்கப்பட்டதால்தான் பாலுவுக்கு இடம் இல்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் பாலுவை அந்த இடத்திற்குக் கொண்டு வர திமுக நினைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போதும் பாலு மீது பிரதமர் அதிருப்தியில் உள்ளதால் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு காலத்தில் டெல்லியில் திமுகவின் முகங்களாக திகழ்ந்தவர்கள், நேற்று பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரையும் சேர்ப்பதில்லை

பாலுவைச் சேர்க்க காங்கிரஸ் மற்றும் பிரதமரிடம் தயக்கம் காணப்படுவதால் பேசாமல் யாரையும் சேர்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே ராசா மற்றும் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு யாரையும் திமுக பரிந்துரைக்காது என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் விவரம்:

ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி,
நிதித்துறை இணைஅமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,
தகவல் ஒலிபரப்புத்துறை இணைஅமைச்சர் ஜெகத்ரட்சகன்,
சமூக நீதித்துறை இணைஅமைச்சர் நெப்போலியன்,
சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன்.

அனில் அம்பானி, தயாநிதி மாறனையும் 2 ஜி ஊழல் வழக்கில் சேர்க்கக் கோரி வழக்கு.



2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி, தயாநிதி மாறன் ஆகியோரையும் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற அமைப்பு அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், "அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அனில் அம்பானியின் ஒப்புதலின்றி தங்கள் நிறுவனம் சார்பாக அவரது ஊழியர்கள் இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட வாய்ப்பில்லை. எனவே, அவரையும் இவ்வழக்கில் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

"அனில் அம்பானிக்குக் தெரியாமல் அவரது ஊழியர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டிருந்தால் அவர்களை அம்பானி பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைத் திஹார் சிறையில் சந்தித்து இவ்வழக்கை சந்திக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அம்பானி உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம், அலைக்கற்றை ஊழலில் தனக்குள்ள பங்கை தனது ஊழியர்கள் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதை அவர் உறுதி செய்து கொள்கிறார்," என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஏர்செல் ஊழல் விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் இந்த விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்காதலரின் மனைவி கொலை கைதாவாரா? நடிகை நிலா



நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், தமிழ்-தெலுங்கு நடிகையுமான மீரா சோப்ரா என்கிற நிலாவைக் கைது செய்ய ஹரியானா போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.

நடிகை நிலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால் தனது தங்கை ருச்சியை அவரது கணவர் கொலை செய்து விட்டார் என்று ஹரியானா மாநிலம் குர்காவ்னைச் சேர்ந்த ருச்சியின் சகோதரி ஷெபாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலாவைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குர்காவ்ன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ருச்சியின் கணவர் சுமித் தான் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி கூறுகையில், சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ருச்சிக்கும், சுமித்துக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சுமித்தும், அவரது குடும்பத்தாரும் ருச்சியைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இவ்வாறு சித்ரவதை செய்து கொண்டே இருந்தால் ருச்சி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அவர்கள் எண்ணம்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்றார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வரதட்சணைக் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித்தை இபிகோ பிரிவு 304 பி மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

ருச்சி இறப்பதற்கு முன்பு அவருடன் வாக்குவாதம் செய்ததாக ஒப்புக் கொண்டாலும், அவரைத் தான் கொல்லவில்லை என்கிறார் சுமித். மேலும் அவர் கூறுகையில், வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எனக்கும், எனது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு தான் இருந்து வந்தது. கடந்த வாரம் எங்கள் புரோக்கரேஜ் ஹவுஸ் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த நஷ்டத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.

சமீபத்தில்தான் தனக்கு ஒருவர் ஆபாச இமெயில்களை அனுப்பி வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் நிலா என்பது நினைவிருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களி்ல நடித்து வந்த நிலா, பின்னர் வாய்ப்பு குறைந்ததால் டெல்லி போய் செட்டிலாகி விட்டார். தமிழில் இவர் எஸ்.ஜே.சூர்யா மூலம் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.