Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வி திட்டம் தொடருமா? கல்வியாளர்கள் கருத்து.

ஆட்சி மாற்றம்:    சமச்சீர் கல்வி    திட்டம் தொடருமா?    கல்வியாளர்கள் கருத்து

10-ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் இந்த ஆண்டு நடை முறைப்படுத்த வேண்டாம் என்று நர்சரி, பிரைமரி சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பிற்கு சமச்சீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு மற்ற 8 வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இதற்காக 8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளிகளும், ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தக் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

அதே நேரத்தில் சமச்சீர் பாடத் திட்டம் தரம் குறைவாக இருப்பதாகவும், இந்த தரத்தில் இருந்தால் உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளில் நம்முடைய மாணவ-மாணவிகள் வெற்றி பெற இயலாது. இதனால் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

ஒரே நேரத்தில் 8 - வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அமல் படுத்து வதை தவிர்க்க வேண்டும்.

படிப்படியாக செயல்படுத்த வேண்டும் 10-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு நடை முறைப்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:-

சமச்சீர் பாடத்திட்டத்தில் நிறைய பிழைகள் உள்ளன. உலகத் தமிழ் மாநாட்டில் இடம் பெற்ற கவிதைகள், முன்னாள் முதல் - அமைச்சர் கதைகள் இடம் பெறுகின்றன. மேலும் பாடப்புத்தகமும் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் 10-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு சமச்சீர் திட்டம் செயல்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு நடை முறைப்படுத்தலாம். சமச்சீர் கல்வி திட்டம், கல்வி கட்டண விவகாரத்தில் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள், கல்வி அதிகாரிகள் ஆகியோரிடம் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

இந்த பிரச்சினையில் அவசரம் காட்டாமல் சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டு முதல் முழுமையாக செயல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தனியார் பள்ளி கல்வி கட்டணம் முறைப்படுத்தப்பட்டு ஒரு சில நாட்களில் அறிக்கை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவை தேடித் தந்துள்ளது.

அதனால் சமச்சீர் கல்வி திட்டம், பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயம் போன்றவற்றில் புதிய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஜூன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பாக பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகம் வினியோகம் செய்யப்பட வேண்டும்.

புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசு கொண்டு வந்த இந்த கல்வி திட்டங்களை புதிய அரசு நடை முறைப்படுத்துமா? அல்லது இதில் மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்துமா? என்பது பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது. சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் எவ்வளவு வேண்டும் என்ற பட்டியலும் பெறப்பட்டு புத்தகம் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினையைப் புதிய அரசு எடுக்கப் போகிற யுக்தி என்ன என்பதை அனைத்து தரப்பினரும் கல்வியாளரும் உற்று நோக்குகிறார்கள்.

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து ; தமிழக அரசு முடிவுக்கு பெற்றோர், மாணவ - மாணவிகள் வரவேற்பு.

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து;   தமிழக அரசு முடிவுக்கு பெற்றோர்,   மாணவ-மாணவிகள் வரவேற்பு

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழக அமைச்சரவை முடிவு எடுத்தது அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர்களும், மாணவ - மாணவி களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். கோவை ஸ்ரீசவுடேஸ்வரி வித்யாலாய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் முதல் மாணவி எஸ். பிரார்த்தனா கூறியதாவது:-

சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்துவது தள்ளிப் போடப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எல்லோருக்கும் பொதுவான பாடத் திட்டம் என்பதில் உடன்பாடில்லை. தேர்வுகளில் மிக எளிதாக அதிக மதிப்பெண்களை பெற முடிந்தாலும், கல்வியின் தரம் எதிர்பார்த்தப்படி இல்லை. மெட்ரிக்குலேஷன் முறையை அமுல்படுத்தப்படுவதையே நான் வர வேற்கிறேன்.

8-ம் வகுப்பு மாணவி எஸ்.நிருபமா:-

எங்கள் வகுப்பு மாணவர்களிடம் சமச்சீர் கல்வி திட்டம் எப்படியிருக்குமோ என்று ஒரு பதட்டமான மனநிலை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டம் இந்த வருடம் நிறுத்தி வைக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். இந்த வருடம் பல புதிய அறிவு தகவல்களை நாங்கள் பெற முடியும். இது பொதுக்கல்வி திட்டத்தில் இல்லை. அது மெட்ரிக் குலேஷன் பள்ளி பாடத் திட்டத்தை ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவே அறிவை கொடுப்பதாக உள்ளது.

வியாபாரி எச்.ஸ்ரீதர்:-

எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் அது மாணவர்களுக்கு அதிக அளவில் அறிவை அளிக்கும் திட்டமாக இருக்க வேண்டும். சமச்சீர் கல்வி திட்டம் கல்வியின் தரத்தை உயர்த்துவதாக இருந்திருந்தால் எல்லா பெற்றோர்களும் அதனை வரவேற்று இருப்போம். ஆனால் அதற்கு மாறாக அது கல்வியின் தரத்தை கீழே கொண்டு வந்து விட்டது.

டாக்டர் மன்வீண்கவுர்:-

பாடத்திட்டத்தின் சரித்திரம், பூகோளம் போன்ற பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அல்லாத பிற மொழிகளை இரண்டாம் மொழியாக கற்க வாய்ப்பில்லாமல் உள்ளது. எனது மகளின் பல நண்பர்கள் தமிழை தவிர வேறு மொழி இத்திட்டத்தில் கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாததால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாறி செல்ல தொடங்கி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும்

பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 14-ந்தேதி வெளியானது. 7.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதபவர்கள் விடைத்தாள் நகல் பெற்றுக்கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

விடைத்தாள் நகல் பெற விரும்புவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 16-ந்தேதி முதல் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் நகல் கேட்டு மாணவ- மாணவியர்கள் விண்ணப்பித்தனர்.

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன. தமிழகம் முழுவதும் விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட குறைந்த மார்க் பெற்றதாக கருதிய மாணவ- மாணவிகள் இந்த முறை அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு 65,000 பேர் பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். இந்த வருடம் அதை விட கூடுதலாக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்பப்பங்கள் சென்னை தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை ஆய்வு செய்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்குவதற்கான பணி தொடங்கியது. எந்தெந்த மாவட்டத்தில் இருந்துவிடைத்தாள் கேட்டு இருக்கிறார்களோ அவரது பதிவு எண்ணை வைத்து அதற்கு போடப்பட்ட டம்மி எண்ணை கண்டுபிடித்து அந்த பாடத்தின் விடைத்தாள் திருத்திய மையத்தில் இருந்து கொண்டு வரப்படும்.

அதன் பின்னர் அவை ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த பணி முடிய குறைந்தது 20 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் மாநில பள்ளியில் விடைத்தாள் நகல் வழங்கும் பணி நடக்கிறது. ஜூன் 2-வது வாரத்தில் விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு தபாலில் கிடைக்கும். அதற்கான பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம்: 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனை.

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம்: 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனை; கூடுதலாக 5000 அச்சடிப்பு

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது.

17 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 9 நாட்களாக விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஜூன் 2-ந்தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுவரையில் 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து வருவதால் விண்ணப்பம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க மருத்துவ தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதலாக 5 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக இருப்பதாக தேர்வு குழு செயலாளர் டாக்டர் ஷீலாகிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

முதல்கட்டமாக எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 25 ஆயிரம் அச்சடித்து வழங்கப்பட்டன. இதில் 22 ஆயிரம் இதுவரை விற்பனையாகி உள்ளது. விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் எல்லா மருத்துவ கல்லூரி களிலும் விண்ணப்பம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக இருக்கின்றன.

டிப்ளமோ நர்சிங் படிப்பதற்கு 15 ஆயிரம் விண்ணப்பம் வழங்கப்பட்டு விட்டன. இதனால் மேலும் 4 ஆயிரம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சாரா படிப்புகளுக் கான விண்ணப்பம் 9 ஆயிரம் அச்சடித்து வினியோகிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கூடுதலாக 6 ஆயிரம் விண்ணப்பம் அச்சடிக்கப் படுகிறது. கடந்த வருடம் 20 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம் : ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்.

ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு.

மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இவ்வளவு பெயரி துயரச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குறியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு.


சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் மாணவர் நலனுக்கு எதிரான அதிமுக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது மற்ற வகுப்புகளுக்கும் சேர்த்து 200 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு எதிரானது என்றும், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு 25.05.2011 அல்லது 26.05.2011 அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் சக்திவேல்,

சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைத்ததைத்தொடர்ந்து நாங்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைப்பதினால் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் சமுதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மனுதாக்கல் செய்துள்ளோம் என்றார்.



டெல்லியில் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு.


திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை சந்திப்பதற்காக கருணாநிதி டெல்லி வந்துள்ளார். திகார் சிறையில் நேற்று அவர் கனிமொழியையும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

கனிமொழி கைது நடவடிக்கையாலும், தமிழகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியாலும் திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு சீர்குலைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கான பொறுப்பாளரான ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று இன்று சந்தித்தார்.

''உண்மையை உணர்ந்துள்ளார் கருணாநிதி, உறவு பாதிக்கப்படாது'':

இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய குலாம் நபி, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டதால் திமுக-காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிடவில்லை, தலையிடாது.

ஒரு பெண் என்ற வகையில் கனிமொழி சிறையில் இருப்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வருத்தமடையச் செய்துள்ளது. ஆனால், இதில் யாரும் ஏதும் செய்ய முடியாது என்பதே உண்மை.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதையும், இதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதியும் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார். கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, அரசியலை மிகச் சிறப்பாக உணர்ந்தவர். இந்த விஷயத்திலும் அவர் உண்மை நிலையை புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதில் காங்கிரசும் ஏதும் செய்ய முடியாது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்றார்.

ஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:

அதேபோல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

கனிமொழி நலமாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தை சட்டரீதியில் எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் கருணாநிதி என்னிடம் தெரிவித்தார் என்றார்.

நேற்றிரவு கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இணை - அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

நாராயணசாமி பொறுப்பு வகிக்கும் பெர்சனல் துறையின் கீழ் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கனிமொழியை முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.