Thursday, May 12, 2011

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு அமைதிப் புரட்சி.

ஜி. சுந்தரராஜன்



நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக அமைந்திருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால், தேர்தல் என்றால் தொடர் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், டிஜிட்டல் பேனர்கள், பட்டாசு, சாரம் ஆகியவை இல்லாமல் குறுகிய இடைவெளியில் மக்களுக்கு அதிக அளவு பாதிப்பு இல்லாத தேர்தலாக அமைந்தது, மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்துள்ளது.

இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தனித்துவம் உண்டு. எந்தக் கட்சித் தலைவரும் எல்லாத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யவில்லை. ஓரளவுக்கு மிக அதிகமான தொகுதிகளில் பிரசாரம் செய்தவர் என்கிற பெருமை துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கக்கூடும்.

ஏப்.13-ம் தேதி தமிழகம் முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற்றது. அதுவும் அதிக அளவு மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலைப் பொறுத்தவரை திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் நாளன்று அமைதி காத்தனர்.

ஆளும் கூட்டணியினர் தேர்தல் நாளன்று மக்களைச் சந்தித்து வாக்களிக்க அழைக்காததால், எந்தக் கிராமத்திலும் எவ்வித சண்டை சச்சரவின்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. மக்கள் சுதந்திரமாக வாக்களித்ததைக் காண முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் முன்பே திமுக, பாமக ஏஜெண்டுகள் பூத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடைபெற்றது.

ஏப்.13-ம் தேதி வாக்குப்பதிவு நாளனறு காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட நேரம் காலதாமதமாக 8 மணியைக் காட்டியதால் 10 முதல் 20 நிமிடங்கள் வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகளைவிட வாக்காளர்களே வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குக் கிராமங்களில்கூட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு காணப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து முடியும்வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது இந்தத் தேர்தலில்தான் என்பதை வாக்குச்சாவடிகளில் இருந்த பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். தேநீர் அருந்தவோ, சாப்பிடவோகூட நேரமில்லாமல் இடைவெளி இன்றி இந்தத் தேர்தலில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அமைதியாக வாக்களித்தனர் என வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு நேரம் முடிந்தபின்னும் வாக்குச்சாவடிக்குள் இருந்த வாக்காளர்கள் டோக்கன் பெற்று, மாலை 6,7 மணி வரை வாக்களித்தனர்.

கிராமப்புறங்களில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலின்றி இத்தேர்தலில் சுதந்திரமாகவும், சுயமாகவும் வந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியாலோ அல்லது அதிருப்தியாலோ எந்தக் கட்சியினரும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அழைத்து வரும் செயலில் ஈடுபடவில்லை.

எந்தத் தேர்தலிலும் இல்லாமல் இத்தேர்தலில் சற்று வித்தியாசமாகத் தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்புடன் மக்கள் தானாகவே சென்று அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி புதிய வாக்காளர்கள், அதாவது முதன்முறையாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய அளவில் வாக்களிக்க வரிசையில் வந்து நின்றது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததுபோலவே இந்த இளைய தலைமுறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கு கொண்டனர் என்பதுதான் இந்தத் தேர்தலில் காணப்பட்ட மிகப்பெரிய மாற்றம்.

அதேபோல, தேர்தல் என்று சொன்னாலே, வாக்குச்சாவடியிலிருந்து சற்று தூரத்தில், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின், சுயேச்சைகளின் ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலுடன் பூத் சிலிப்பும் கையுமாக நின்று கொண்டிருப்பார்கள். இந்த முறை அந்தத் தொந்தரவே கிடையாது.

அப்படியே சிலர் வாக்காளர் பட்டியலுடன் நின்று கொண்டிருந்தாலும்கூட, வாக்காளர்கள் அவர்களைச் சட்டையே செய்யாமல் வாக்குச்சாவடிக்குள் தேர்தல் ஆணைய பூத் சிலிப்புடன் நுழைந்தது, ஓர் இன்ப அதிர்ச்சி.

ஆளும்கட்சியினர் வழங்கிய இலவசம் மற்றும் திட்டங்களால் வாக்களித்தார்களா அல்லது ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி ஆகியவற்றால் ஆட்சி மாற்றம் தேவை என்பதால் அதிக அளவு ஆர்வத்துடன் வாக்களித்தார்களா என்பது மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் 600 பேர் சாவு.


ஜெனிவா,லிபியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் அதில் இருந்த 600 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராகப் புரட்சி நடந்து வருகிறது. புரட்சியாளர்களை ஒடுக்க கடாபி அரசு ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களையும், புரட்சியாளர்களையும் பாதுகாக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் லிபிய ராணுவம் மீது விமானம் மூலம் குண்டு வீசுகிறது. அங்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் குழப்பமான சுழ்நிலை நிலவுகிறது. உயிருக்கு பயந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

லிபியாவில் புரட்சி நடப்பதற்கு முன்பு அங்கு சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை செய்து வந்தனர். புரட்சி வெடித்த பின்னர் இங்குள்ள ஆப்பிரிக்க மக்கள் பாதுகாப்புக்காகவும், நல்ல வேலை தேடியும் அருகில் உள்ள இத்தாலி நாட்டுக்கு கப்பலில் திருட்டுத்தனமாக செல்கின்றனர். லிபிய ராணுவம் பலரை துப்பாக்கி முனையில் கப்பலில் ஏற்றி நாடு கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இப்படி அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றுவதால் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை 600 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு சிறிய கப்பல் இத்தாலிக்கு சொந்தமான லம்பிடிசா தீவை நோக்கி சென்றது. நடுக்கடலில் சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய கப்பல் பாரம் தாங்காமல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 600 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டானர். இதில் பலர் சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களில் 3 படகுகள் கடலில் மூழ்கி 800 பேர் வரை இறந்துவிட்டனர். கடத்தல்காரர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அதிகான மக்களை சிறிய கப்பலில் ஏற்றி வருவதால் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 5 கப்பல்களில் 2400 பேர் இத்தாலியின் லக்பிடிசா தீவுக்கு வந்துள்ளனர்.

இது பற்றி லிபியா அதிபர் கடாபியின் அதிகார பூர்வ பேச்சாளர் கூறியது:

லிபிய அதிபர் கடாபியின் அரசை கவிழ்ப்பதற்காக புரட்சிக்காரர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன. அதன் விளைவாகத் தான் ஐரோப்பிய நாடுகளுக்குள் இங்கிருந்து மக்கள் ஊடுருவுகின்றனர். எங்கள் நாட்டின் கடற்கரை பகுதி தினசரி நேட்டோ விமானங்களால் குண்டு வீசி தாக்கப்படுகிறது. இதனால் எங்கள் நாட்டில் இருந்து கப்பலில் செல்பவர்களை தடுக்க முடியவில்லை என்றார் அவர்.

உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தமிழக வாலிபர் தற்கொலை.


துபாயில் உலகின் உயரமான கட்டடத்திலிருந்து குதித்து சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. 2,716 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 160 மாடிகளைக் கொண்டது. இதில் 45 மற்றும் 108 மாடிகளில் வீடுகளும், மற்ற 158 மாடிகளிலும் கார்ப்ரேட் நிறுவன அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் அராப் டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவன அலுவலகம் 120வது மாடியில் உள்ளது.

அதியமான் தன் சொந்த ஊருக்கு வர விடுமுறை கேட்டார். ஆனால் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் விரகத்தி அடைந்த அவர் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு 147வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவரது உடல், சிதறியது. 39 மாடிகள் வரை சுவரில் மோதியவாரே வந்த அவரது உடல் 108வது மாடியின் பால்கனியில் வந்து விழுந்தது. போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு விசாரணையும் முடிந்த பிறகே அவரது உடலை இந்திய தூதரகம் மூலம் அராப் டெக் நிறுவனம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் உயரமான கட்டிடத்தில் நடந்துள்ள முதல் தற்கொலை சம்பவம் இதுவாகும்.

அல் காய்தாவின் அடுத்த இலக்கு ஒபாமாவின் பாட்டி?


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி உறவுமுறையான ஒருவருக்கு ஆப்ரிக்க அல் காய்தா பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இதையடுத்து கென்யாவில் உள்ள அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவை அடிப்படையாகக் கொண்ட அல் காய்தா பிரிவான அல் ஷபாப் அமைப்பு, ஷாரா ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் அவரது வீட்டைச் சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கென்ய போலீசார் தெரிவித்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் ஒபாமா பாட்டியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது அல் ஷபாபின் எச்சரிக்கை வெளியானதில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர் வீடு உள்ள ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ரோந்துப் பணியில் ஈடுபட போதுமான அதிகாரிகள் உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் 88 வயதான ஒபாமாவின் பாட்டி, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலைப்படவில்லை. கூடுதல் பாதுகாப்பு குறித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

அச்சுறுத்தல் எதுவும் எந்தவிதத்திலும் என்னுடைய வாழ்க்கை பாதிக்காது என ஷாரா ஒபாமா தெரிவித்தார்.

அச்சுறுத்தலால் என்னுடைய நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது. கூடுதல் பாதுகாப்பு வழங்க அரசு முடிவெடுத்தால் அதற்கு நாங்கள் உடன்படுகிறோம் என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் கடற்பிரதேசம் திடீரென சிவப்பு நிறமாக மாற்றம்.


இலங்கையில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் திடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக அந்த கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பூரில் 60,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு.


உலகிலேயே அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நாடாக சிங்கப்பூர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் வேறு எந்த நாட்டையும் விட சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிக அளவிலான ஆட்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளன.

குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அதாவது 60,000 இந்தியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம்.

2011ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேரை வேலைக்கு தேர்வு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதத்தினர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 20 சதவீதத்தினர், அதாவது 60,000 பேரை இந்தியாவிலிருந்து தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

சிங்கப்பூரில் அனைத்துத் துறைகளிலும் நல்ல வளர்ச்சி இருப்பதால் ஆளெடுப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதே இதற்குக் காரணம். மேலும் பல நிறுவனங்களும் இந்தியர்களை அதிகம் விரும்புகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு வங்கிகளின் பிராந்திய தலைநகராக சிங்கப்பூர்தான் விளங்குகிறது. இது போக முன்னணி நிதி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், சுகாதாரம், எண்ணை நிறுவனங்கள் என பல தரப்பு நிறுவனங்களும் சிங்கப்பூரில் தான் தங்களது பிராந்திய தலைமையிடங்களை வைத்துள்ளன.

இவை அனைத்தும் தற்போது சிங்கப்பூரில் தங்களது பணிகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளன.

புதிதாக இந்த ஆண்டு தேர்வு செய்யப்படவுள்ள 3 லட்சம் பேரில் 40 சதவீதத்தினர் சிங்கப்பூரிலேயே பணியமர்த்தப்படுவர். மற்றவர்கள் ஆசியா பசிபிக் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 1.6 லட்சம் பேர் பலி.

இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 1.6 லட்சம் பேர் பலி

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2010) நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் 1.6 லட்சம் பேர் இறந்தனர். இது 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 35 ஆயிரம் பேர் அதிகம் ஆகும். அந்த ஆண்டில் 1.25 லட்சம் பேர் பலியாகி இருந்தனர்.

சாலை விபத்துக்களில் 5 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு 10 காரணங்களில் சாலை விபத்தும் ஒன்றாக உள்ளது.

நாட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. 2004-ல் பதிவு செய்யப்பட்ட 720 லட்சம் வாகனங்களில் 71 சதவீதம் இரு சக்கரவாகனங்கள் ஆகும்.

போக்குவரத்து அமைச்சகம் 2009-ல் அளித்த அறிக்கையில் 22.4 சதவீத விபத்துக்கள் ஏற்பட இரு சக்கர வாகனங்களே காரணம் என தெரிய வந்துள்ளது. 20.2 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி காயம் அடைகிறார்கள்.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகமும், சாலை போக்குவரத்து துறையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

சாலை விபத்துக்கள் அதிகரிக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை. இதில் அரசியல்விதிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்தால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கையும், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் 13 ஆயிரம் பேர் பலியாகிறார்கள். சாலை விபத்து இறப்புகளை தடுக்க 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் நேற்று பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளன. “சாலை பாதுகாப்பு 10 ஆண்டு 2010- 2020-ம் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உலகிலேயே அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்த எந்த திட்டத்தையும் அரசு முன்வைக்கவில்லை. உலக நாடுகள் நேற்று சாலை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தபோது இந்தியா அதை வெள்ளிக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்தது. இப்போது அது இந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.