Tuesday, April 5, 2011

சொன்னதைச் செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றிய கருணாநிதியை மீண்டும் தேர்ந்தெடுங்கள்-சோனியா.

சொன்னதைச் செய்து, வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்வர் கருணாநிதியையும், திமுகவையும், திமுக கூட்டணிக் கட்சிகளையும் மீண்டும் தேர்வு செய்யுங்கள். திமுக கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சென்னை தீவுத் திடலில் இன்று திமுக கூட்டணிக் கட்சிகளின் பிரமாண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் கூறியதாவது:

இந்தியாவின் முதன்மையான, முக்கியமான, முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் துறையிலே, வாகன உற்பத்தியிலே முன்னணியில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தியத் திருநாட்டில், தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தமிழகம் தொழில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் சாப்ட்வேர் துறையிலும் முன்னணியில் உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, தேயிலை உற்பத்தியில் முதன்மையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரத் துறையிலும் முன்னணியில் உள்ளது. தமிழகம் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறப்பான நிலையில் உள்ளது.

தமிழ்நாடு இன்று குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பதில், நலத் திட்டங்கள் அளிப்பதில், பெண்களுக்கு திருமண நிதியுதவி அளிப்பதில், கர்ப்பிணிப் பணிகளுக்கு நலம் செய்வதில், அங்கன்வாடிகளை அமைப்பதில், வயது முதிர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில், ஏழைகளுக்கு பல திட்டங்களை நிறைவேற்றுவதில் கருணாநிதி அரசு அற்புதமாக பணியாற்றி வருகிறது.

மத ஒருமைப்பாடு, இனங்களுக்கிடையே இணக்கமாக வாழ்கிற பண்பு, அது மட்டுமல்ல, தலித் மக்களுக்கும், பின் தங்கியவர்களுக்கும் திமுக அரசு செய்து வரும் அற்புதமான உதவியைப் பார்த்து பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சாத்தியமானதற்குக் காரணம், கருணாநிதி அரசு இந்த சாதனைகளைச் செய்யக் காரணம், மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கொடுத்து வரும் ஒத்துழைப்பும், அளித்து வரும் அனுசரணையும்தான். இதன் காரணமாகத்தான் திமுக அரசு 2006ம் ஆண்டுக்கு ஆட்சிக்கு வந்தபோது ரூ. 9675 கோடியாக இருந்த மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு, 2010-11ல் ரூ. 17,500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்போது புதிய அரசைத் தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறீர்கள். சென்ற முறை சாதனைக்காக வாக்களித்தீர்கள். அதைப் போல வாக்குறுதிகளுக்காக வாக்களித்தீர்கள். இந்த முறையும், கடந்த காலத்தில் செய்த சாதனைகளை மீண்டும் நிறைவேற்ற, வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மீண்டும் பாராட்டும் வகையில், மீண்டும் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைச் சொன்னபடி நிறைவேற்றிய இவர்களுக்கு வாக்களியுங்கள்.

நமது அண்டை நாட்டிலே தமிழ் மக்கள் படும் சிரமங்கள் உங்களது இதயத்தைத் தொட்டது போல எனது இதயத்தையும் அது தொட்டுள்ளது. அந்த பிரச்சினை குறித்து நாங்களும் கவலையுடன்தான் உள்ளோம். கொடுத்த உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். ஏராளமான பணத்தை இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்காக கொடுத்துள்ளோம். 50,000 வீடுகளை புதிதாக கட்டித் தருகிறோம். அது மட்டுமல்லாமல், இலங்கைத் தமிழர்கள் தன்மானத் தோடும், எல்லா உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அரசியல் சட்டத் திருத்தத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தமிழக மீனவர்கள் சிலர் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளது பெரும் வருத்தம் தருகிறது. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாது என்பதை உறுதியாக சொல்கிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் முதல்வர் கருணாநிதியின் கடுமையான உழைப்பின் காரணமாக, சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் முன்னேறும் வகையில் திமுக ஆட்சி செய்து வருகிறது. அது தொடர வேண்டும். காங்கிரஸ் மட்டுமல்லாமல், கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சோனியா காந்தி.

பின்னர் திமுக கூட்டணி வேட்பாளர்களை சோனியா காந்தி அறிமுகப்படுத்தினார். முதல் நபராக அதிமுகவிலிருந்து திமுகவுக்கு கட்சி மாறி வந்து தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.கே.சேகர்பாபு அறிமுகப் படுத்தப்பட்டார். பின்னர் சென்னையில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்-சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை.


தமிழர்களின் உயிரைக் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்-சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை

தமிழர்களின் உயிர்ப் பிரச்சினையான கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வரின் பேச்சு:

மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை தேசியமயமாக்க மத்திய அரசு அதிகார வரம்புக்குட்பட்டு செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு நதிகளை தேசியமயமாக்குவது மட்டுமே நீண்ட காலத் தீர்வாக அமையும். எனவே அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக தென்னக நதிகளையாவது இணைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான முழு நிதியுதவியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

செம்மொழி தகுதி தமிழ் மொழிக்கு அளிக்கப்பட்ட வரலாறு குறித்து புரிய வைக்க வேண்டியதில்லை. அந்தத் தகுதியை தமிழுக்குத் தர வேண்டும் என்று 100 ஆண்டுகளாக தமிழகம் கோரி வந்தது. சூரியநாராயண சாஸ்திரி அறிவித்த அந்தத் திட்டம் அன்று நிறைவேறாமல், பல ஆயிரக்கணக்கான புலவர்கள், அறிஞர்கள் எல்லாம் நினைத்தும் நடைபெறாமல் போன அது, தி்முக ஆட்சியில், நான் முதல்வராகப் பொறுப்பேற்றகாலத்தில், சோனியாவை சந்தித்து, தமிழகத்திற்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்டபோது, தமிழை செம்மொழி அந்தஸ்து கொண்ட மொழியாக அரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டு தமிழை செம்மொழியாக அரிவித்தார். அந்த அறிவிப்பு மகததானது, மாபெரும் அறிவிப்பு, சரித்திரப் பிரசித்தி பெற்றது என்பதை விளக்கத் தேவையில்லை. அதற்காக இன்றும் தமிழக மக்கள் சோனியாவை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இன்னொன்றும் கேட்கிறேன். தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக ஆக்கிட வேண்டும்.இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அமைவதற்கான பெருமையை உரிமையை எங்களுக்கு வழங்கிட வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

கல்வி மாநிலப் பட்டியலில் இல்லாமல் மத்திய அரசு பட்டியலில் இணைக்கப் பட்டிருக்கிறது இடைக்காலத்தில். அதை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கக் வேண்டும் என்று சான்றோர்கள், ஆன்றோர்கள், பெரியோர்கள், கல்வியாளர்கள் கோரி வருகின்றனர். அதை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழுவின் பரிந்துரைகள் மற்றும் கல்வி வல்லுநர்கள் வலியுறுத்துகிறபடி கல்வியை மாநில அரசுப் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும். அதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வர கோருகிறேன்.

இலங்கையுடன் 1974ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் தேவாலாயத்தில் வழிபடுவதற்கும் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் 1976ம் ஆண்டு அவை திரும்பப் பெறப்பட்டதால் அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்ச்சிகளாக அதிகரித்துள்ளன. கச்சத்தீவை திரும்பப் பெறப்படுவதற்கான உதவிட வேண்டும். இது உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல, தமிழர்களின் உயிர்ப் பிரச்சினை. எனவே இரக்கத்தோடு இதில் தலையிட்டு ஆவண செய்ய வேண்டும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் 2006ல் தொடங்கி நிறைவடையும் நேரத்தில் மதவாத காரணங்களைக் காட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இன்னும் தீர்வு ஏற்படாமல் உள்ளது. காவிரிப் பிரச்சினையிலும் நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல பாலாறுப் பிரச்சினையும் உச்சநீதிமன்றத்தில்தான் உள்ளன. இந்த வழக்குகளில் வாய்தாவுக்கு வாய்தா வழங்கி நீதியைத் தாமதப்படுத்தும் நிலையை மாற்ற, இந்த வழக்குகள் உண்மைகளை உணர்ந்து, உரிய முறையிலேயே ஒழுங்கானமுறையிலே நடைபெறுவதுற்கு என்ன செய்லலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுத்தால்தான் அராஜகம், அநாகரீகமாக தலையிடுவது ஏற்படாமல் அமைதியைக் காக்க முடியும். இதை அறிவுரையாக சொல்லவில்லை. எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.

தலித் புத்த மதத்தினருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் உரி்மைகள் அலிக்கப்பட்டுள்ளது. அதேபோல தலித் கிறிஸ்தவர்களும் ஆதி திராவிட மக்களுக்கான சலுகைகளை கோரி வருகிறன்றனர். அதேபோல, கல்வி, வேலையில் சிறுபான்மையினர் உரிய சலுகைளை பெறுவதற்காக ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரையை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்குச் சமமான உரிமையை, ஆட்சி அதிகார அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் கூட அதை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும், சோனியாவுக்கு உண்டு என்பதால் விரைவிலேயே அதை செய்து முடித்து தமிழர்களின் நெஞ்சங்களில் பால் வார்க்க வேண்டும் என்றார் கருணாநி

விஜய்காந்த் 'ஆஃப்' அடித்தாலும் 'ஃபுல்' அடித்தாலும்-ராமதாஸ்.


'ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்' என்று விஜய்காந்த் பேசியுள்ளார். அவர் 'ஆஃப்' அடித்தாலும் சரி இல்லை 'ஃபுல்' அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது தேர்தல் ஆணையத்திடம் நேர்மையும் பாரபட்சமற்றத் தன்மையும் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் அந்த நேர்மை இல்லை.

தமிழகத்தில் மட்டுமே கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சோதனைகளை சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் ஏன் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை?.

மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ள சகாயம் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்கிறார். ஆர்.டி.ஓ. மிரட்டி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது புகார் கொடுக்கச் சொல்கிறார். ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதா அவர் வேலை?.

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் செல்லும் இடங்களில் என்னுடன் வருபவர்களை வைத்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளேன். அனைவருமே திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைத்தான் சொல்லி வருகின்றனர்.

திமுக தலைமையிலான கருணாநிதி ஆட்சியில் செய்தவை எல்லாம் இனியவை நாற்பது. அதிமுக ஆட்சி செய்தவை எல்லாம் இன்னா நாற்பது.

அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டபோது நானும், தமிழக முதல்வர் கருணாநிதியும் அதை கடுமையாக எதிர்த்தோம். ஆனால் அதிமுகவில் இருந்து யார் இதனை எதிர்த்தனர்?.

அதிமுக கூட்டணியில் நிதானமிழந்துப் பேசி வரும் நடிகர் ஒருவர் 'ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். அவர் 'ஆஃப்' அடித்தாலும் சரி இல்லை 'ஃபுல்' அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அரிதாரம் பூசிக் கொண்டு மாலை 5 மணிக்கு மேல் மேடையில் தோன்றுபவர்கள் அல்ல.

வேட்பாளரை மேடையில் அடிப்பவர் நாளை எம்எல்ஏ ஆனால் சட்டப் பேரவைத் தலைவரைக் கூட அடிப்பார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது முற்றிலும் சரியான கருத்து என்றார் ராமதாஸ்.

இந் நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெ.அன்பழகனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில், இந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்தேன். இந்த முறை ஜெ.அன்பழகனை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். தி.மு.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சில ஊடகங்கள்தான் ஆட்சி மாற்றம் வரும் என்று திரித்து கொண்டிருக்கின்றன. ஆட்சி மாற்றம் எப்படி வரும்? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. அதி புத்திசாலிகள். அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள்.

நான் எல்லா மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சியோடும், தெளிவோடும் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் எல்லா தரப்பு மக்களையும் கேட்டால் கலைஞருக்குத்தான் வாக்களிப்போம் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஆட்சி மாற்றம் எப்படி வரும்?.

கலைஞர் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதா 2 முறை முதல்வராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா?, அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம்.

தேர்தல் ஆணையம் அதிமுகவக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை தினம் தினம் புள்ளி விபரத்தோடு கூறி வருகிறோம். திமுக கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. இந்த கூட்டணியில் நான், கலைஞர், சோனியா, திருமாவளவன் எல்லோரும் இன்று மாலையில் ஒரே மேடையில் பேசப் போகிறோம்.

அந்த கூட்டணியை நினைத்து பாருங்கள். அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் தினமும் தள்ளாடி கொண்டு எதை எதையோ உளறுகிறார். இப்படி ஒரு கட்சி. பாவம் நடிகர் கட்சியின் தொண்டர்கள்.

படித்தவர்கள் 500 பேரிடம் கருத்து கேட்கிறார்கள். பொதுவாக படித்தவர்கள் அது சரியில்லை, இது சரியில்லை என்றுதான் சொல்வார்கள். இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. இந்த பருப்பெல்லாம் வேகாது. வெல்லப் போவது தி.மு.க. கூட்டணிதான். கலைஞர் 6வது முறையாக முதல்வர் ஆவது உறுதி என்றார்.

காங்கிரசுடன் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி சூசகம்.

இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை மறைமுகமாகக் குறி்ப்பிட்டார் முதல்வர் கருணாநிதி .

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருதப்படும் நிலையில் முதல்வரின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

வடசென்னையில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகே நடைபெற்றது.

அதில் பேசிய முதல்வர் கருணாநிதி,டெல்லியில் இருந்து நாம் கேட்பது எல்லாம் தாமதமாகத்தான் வரும். அதுபோலத்தான் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தாமதமாக வந்திருக்கிறார் (விமானம் தாமதமானதால் கூட்டத்துக்கு தாமதமாக வந்தார் ஆசாத்). டெல்லியில் இருந்து தாமதமாக வரும் என்றாலும், தட்டாமல் வரும், தாராளமாக வரும்.

விமானம் தாமதமாக வந்ததால்தான் குலாம் நபி ஆசாத் தாமதமாக வந்தார். இந்த தாமதத்தை நான் விரும்புகிறேன். ஏனென்றால், கூட்டணி கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் பேசுவதை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்த ஆட்சியை தொடர செய்ய வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?, 6வது முறையாக தொடர வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் உரைத்திருக்கிறார். அதற்கு அடையாளமாகத் தான் இந்த தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது.

வேறு இடங்களிலும் கூட்டணி அமைகிறது. ஆனால், அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சி, திமுக வெற்றிக்காக பாடுபடும் சூழல் இங்கு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். இது தேர்தலுக்காக சொல்வது அல்ல.

ஜனநாயகத்தை காப்பாற்றும் அறப்போராட்டம் நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 6வது முறையாக அல்ல, 7வது, 8வது முறை என்றாலும் மாநில முன்னேற்றத்தை எண்ணிப்பார்ப்பதுதான் ஒரு கட்சியின் குறிக்கோள் ஆகும்.

நாம் மாநில கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்கவில்லை. இதில், சமுதாய இயக்கங்கள் உள்ளன. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி உள்ளது. ஏனென்றால், நமக்கு தேவையானதை மாநில கட்சியே உருவாக்கிக்கொள்ள முடியாது. மத்திய அரசுடன் உறவு கொண்டு காரியம் சாதிக்க இந்த இணைப்பு தேவை.

காங்கிரஸ் கட்சியுடன் இணைவது பெருமை என்ற காரணத்திற்காக அல்ல. எங்கள் உரிமையை மீண்டும் வலியுறுத்த இந்த கூட்டணி தேவை. இது தேர்தலுக்கான கூட்டணி. பதவிக்கான கூட்டணி அல்ல. அப்படி எந்த ஒரு கட்சியும் உருவாக கூடாது. அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அண்ணா பலமுறை வலியுறுத்தி கூறியது.

மக்களுக்காக சேவை புரிய, நல்ல திட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சியுடனான உறவு தேவைப்படுகிறது. கடந்த கால சேவைகளை யாரும் மறக்க முடியாது. 100 ஆண்டு காலமாக பரிதிமாற் கலைஞர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தேவை என்று கேட்டு வந்தார். அதற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்திருக்கிறது.

முதல்வராக இருக்கும் நான், மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கையும், சோனியா காந்தி யை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்று, ஒன்று இரண்டு முறை வலியுறுத்தி அந்த வாய்ப்பை பெற்றோம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தவுடன், சோனியா காந்தி எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பெருமை உங்களை மட்டுமே சார்ந்தது என்று கூறியிருந்தார். செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்கு காங்கிரஸ் கட்சியுடன் கொண்ட உறவுதான் காரணம்.

மெட்ரோ ரயில் திட்டம், முடிவடையும் நிலையில் உள்ள சேது சமுத்திர திட்டம் போன்றவை நிறைவேற மத்திய அரசுடன் நாம் கொண்டுள்ள உறவுதான் காரணம். மனஸ்தாபம் இல்லாத நிலை காரணத்தினால்தான் இந்த வாய்ப்பு உருவாகி உள்ளது.

திட்டங்களை வகைப்படுத்தி, வழிப்படுத்தி, சொல்ல வேண்டிய நேரத்திலே அதை சொல்லி நிறைவேற்றி வருகிறோம். திராவிட நாடு இதழில், அண்ணா எழுதிய கடிதத்தில், மாநில சுயாட்சிக்காக மத்திய அரசுடன் மோதிக்கொள்ள மாட்டேன். மத்திய அரசுடன் மோதினால் மக்களுக்குத்தான் நஷ்டம். இதில், வாதிட்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருக்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா கம்யூனிஸ்டுகளும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நான் என்ன செய்தேன், எத்தனை முறை டெல்லி வந்து பேசினேன் என்று கேட்கிறார்கள்.

விலைவாசி உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான் என்று நான் சொல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதை நான் செய்யவில்லை. நேற்று கூட மத்திய அரசை பற்றி குறை கூறி கம்யூனிஸ்டு கட்சிகள் எழுதிய கட்டுரையை நான் படித்தேன். டெல்லிக்கு நான் அடிமை என்று கூறியிருக்கிறார்கள். நான் டெல்லிக்கு செல்வதே கம்யூனிஸ்டு கட்சிக்கு பிடிக்கவில்லை.

டெல்லிக்கு யார் அதிகமுறை சென்றார்கள் என்பதை நாம் கணக்கு எடுப்போமா?. நாங்கள் எதையும் மத்திய அரசிடம் நட்புரீதியாக பெற விரும்புகிறோம். `உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்பது திமுகவின் கொள்கை. அதனால்தான், பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பலர் நம்முடன் சேர்ந்துள்ளனர்.

இந்த உறவு நீடிக்க, உரிமை நிலைநாட்டப்பட, தமிழகத்தின் தேவை நிறைவேற்றப்பட காங்கிரசுடனான உறவு மேலும் மேலும் வலுவடைய வேண்டும்.

இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் எங்களுடைய இதயத்தின் ஒற்றுமைக்கேற்ப இணைந்து, மத்திய அரசிடமிருந்து உரிமைகளைக் கேட்டுப்பெறுவோம் என்றார் கருணாநிதி.

குலாம் நபி ஆசாத் பேச்சு:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், இந்தியாவில் பல முதல்வர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் யாரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை. ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய ஒரே தலைவராக கருணாநிதி விளங்குகிறார்.

இதற்கு உதாரணமாக இந்தியாவிலே எந்த மாநிலமும் செய்யாத வகையில் ரூ.1க்கு கிலோ அரிசி என்று திட்டம் வகுத்து மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தற்போது தேர்தல் அறிக்கையிலும் ஆட்சிக்கு வந்தால் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என்று அறிவித்திருக்கும் ஒரே தலைவரும் அவரே.

பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி யிருக்கிறார். சத்துணவில் ஒரு முட்டை வழங்கி தற்போது அதை அதிகப்படுத்தி யிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலமும் இதுவரையில் செய்யாத அளவிற்கு தமிழக மக்களுக்கு இலவச கலர் டி.விகள், இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கியிருக்கிறார்.

குடிசைகளில் வாழும் 21 லட்சம் ஏழை மக்களுக்கு கான்கீரிட் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் உயர் சிகிச்சை பெற வழி வகுத்து இருக்கிறார். விவசாய கடன் ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார். இதை எந்த மாநிலமும் செய்ததில்லை. இந்த பெருமை தமிழகத்திற்கு மட்டுமே உண்டு.

அதே போல் மத்திய அரசும் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இப்படி எண்ணற்ற மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

மக்களின் வாழ்வு நிலை உயர திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும். வறுமை நீங்க, மகிழ்ச்சி பொங்க வேண்டுமென்றால் கலைஞர் 6வது முறையாக முதல்வராக வேண்டும். மக்களுக்காக வாழும் கருணாநிதி தலைமையிலான அரசு மீண்டும் வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ஆசாத்

பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியும - இலங்கை அதிபர் ராஜபக்சேவும்.

இந்தியர்களை நேசிக்கிறேன் - தவறாகப் பேசவில்லை: அப்ரிதி.

நான் இந்தியர்கள் குறித்து கூறிய கருத்துக்களை மீடியாக்கள் தவறாக வெளிப்படுத்தியுள்ளன. நான் இந்தியர்களை நேசிக்கிறேன், இந்தியாவில் விளையாடிய அனுபவம் அற்புதமானது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி.
Shahid Afridi
Getty Images
உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அளித்த பேட்டியில், இந்தியர்களுக்கு குறுகிய மனசு என்று கூறி விமர்சித்திருந்தார் அப்ரிதி. இந்திய மீடியாக்களையும் கடுமையாக அவர் விமர்சித்திருந்தார்.

ஆனால் தான் அப்படி கூறவில்லை என்று இப்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மீடியாக்கள் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி விடுகிறார்கள். இது வெட்கமாக உள்ளது. இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து விரும்பி வருகிறேன். சில நேரங்களில் அதுகுறித்துக் கூறும்போது ஏதாவது வேறு அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் இப்போது நான் பேசியதையும் தவறாக கூறி வி்ட்டனர்.

இந்தியாவில் விளையாடியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இந்தியர்களை நான் நேசிக்கிறேன். எனது கருத்துக்களை எதிர்மறையாக பார்க்காதீர்கள். இந்திய ரசிகர்களிடமிருந்து எனக்கு எப்போதும் ஆதரவு இருந்து வருகிறது. எனவே இதுபோன்ற சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி இரு நாட்டு மக்களிடையே துவேஷத்தை வளர்த்து விட மீடியாக்கள் காரணமாக அமைந்து விடக் கூடாது

இந்தியாவுக்கு நாங்கள் விட்டுக் கொடுத்துள்ளோம்-ராஜபக்சே பேச்சு.

இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சேவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.

அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்சே. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.

அவர் பேசுகையில், கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.

தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள். எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.

முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பறியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சங்ககரா விலகல்.


இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சங்ககரா விலகல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் இலங்கை தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சங்ககரா ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இருப்பினும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விரும்பினால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில், நடைபெற இருக்கிற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் உடனான டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதியான கேப்டனை தேர்ந்தெடுத்து அவரை தயார் செய்வதற்கு தாம் பதவி விலகுவது வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து எஸ்.வி.சேகர் பிரச்சாரம்.


நடிகரும், எம்.எல்.ஏ.வு மான எஸ்.வி.சேகர் நேற்றிரவு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணிதான் நம்பிக்கையான கூட்டணி. கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்காங்க. அ.தி.மு.க. கூட்டணி பொண்ணு வீட்டுக்காரங்க மாதிரி. பொண்ணு பார்க்க போகும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணுக்கு என்னவெல்லாம் போடு வீங்கண்ணு கேட்டாங்க கழுத்தில் நெக்லஸ் போடுவோம், காதில் கம்மல் போடுவோம் என்று பொண்ணு வீட்டுக்காரங்க சொன்னாங்க.

உடனே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அப்புறம் என்ன போடுவீங்கண்ணு கேட்டாங்க.. அதற்கு பெண் வீட்டுக்காரங்க அடிக்கடி வந்து சண்டை போடுவோம்னாங்க. அது மாதிரிதான் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும். நமக்கு யார் நன்மை செய்றாங்களோ அவங்களுக்கு நாம் நன்மை செய்யணும் இலவச டி.வி., 1ரூபாய் அரிசி, என பல திட்டங்களை தந்த கருணாநிதிக்கு நாம் திருப்பி நல்லது செய்யணும்.

87 வயதிலும் இளைஞர் போல உழைக்கும் கருணாநிதி 6-வது முறை முதல்-அமைச்சரானால் நல்ல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவார். உங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்கேயோ... உள்ள கிராமத்து இளைஞர் ஆனந்தை இங்கே நிறுத்தி உள்ளார். அதுதான் கலைஞர்.ஆனந்தை வெற்றி பெற செய்யுங்கள். அவர் வெற்றி பெற்றால் அமைச்சர் ஆவார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் பேசினார்.