Thursday, March 10, 2011

வீணாகும் தாணியங்கள்

அ.முத்துக்கிருஷ்ணன்.


மதுரை நகரத்து தெருக்களில் தினந்தோறும் நான் சந்திக்கும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. தெருக்களில் பிச்சை எடுத்து அலையும் பசியின் ரேகைகள் படிந்த முகங்கள் காணும் இடமெல்லாம் விரவியுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பலகாரக்கடைகள், உணவு விடுதிகள், ஜவுளிக்கடை வாயில்கள் என எங்கும் அவர்களின் அழுகையும் முனகலும் அவலமாய் ஒலிக்கிறது. அவர்கள் ஏன் இத்தனை ஆயிரம் மைல் தொலைவு பயணித்து இங்கு வந்து பிச்சை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி என் மனதில் பல காலமாக இருந்தது.

பல சமயங்களில் அவர்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறேன். சில சமயம் அது நிகழ்ந்தும் உள்ளது. இவர்கள் பெரும்பான்மையாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், குஜராத், சத்திஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம் என மத்திய இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள். மழை பொய்த்தது, விவசாயக் கூலி வேலை இன்மை, தொழில்- வேலை வாய்ப்பு இல்லை, விவசாயக் கடன், வறுமை என இதை ஒத்த காரணங்களாகவே அனைவரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும், எங்கள் வீட்டு குதிர்களில் எந்தத் தானியமும் இல்லை. ஆகையால் அதனை- தானியத்தை- தேடி வந்தோம்” என்றார் கச்சிதமான வார்த்தைகளில். இதன் பின்னர் நான் விவசாயத் தற்கொலை, வறுமை, பசி, இடப்பெயர்வு என எத்தனையோ பிரதிகளை வாசித்தபோதும், அவை அனைத்தும் எனக்கு சுருக்கமாக இந்த வார்த்தைகளில் கூறிய பெரியவரின் பார்வைக்கு மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. இவர்களில் பெரும்பகுதியானவர்கள் விவசாயக் கூலிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உயிர் பிழைத்து எப்படியேனும் வாழ்ந்திட முற்படும் இவர்களை வாழ்க்கை தொலை தூரங்கள் வரை அலைக்கழிக்கிறது. ஒருவேளை இவர்கள் தங்களின் ஊர்களிலேயே இருந்திட நேர்ந்தால், அது இன்னும் ஒரு தற்கொலையாக அரசு ஆவணங்களில் பதிவு பெற்று இருக்கக்கூடும். பசி மனிதனை எத்தனை கொடூரமாக வதைக்கிறது என்பதற்கு இந்த நூற்றாண்டின் ரத்த சாட்சியாக விளங்குபவர்கள் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள். ஆனால் அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக நம் மனதில் பெரும்வலியுடன் ஒரு குறியீடாக முதலில் தங்கியவர்கள் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதி மக்கள்.

1980களில் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதியைப் பற்றிய சித்திரங்கள் பல இந்தியாவின் மையங்கள் நோக்கி வந்தன. வறுமையின் பல வடிவங்கள் அங்கு எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்பது செய்திகளாக, முகப்பு கட்டுரைகளாக தேசிய நாளிதழ்களில் அச்சேறின. முதன்முதலில் பணிதாவின் கதைதான் பெரும் அதிர்ச்சியை விதைத்தது. அதனை அடுத்து 1984ல் ஒரிசாவின் ஆங்கூல் மாவட்டத்தின் பதிபஹால் கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா பஹேரா (35) தனக்குப் பிறந்த குழந்தையை ரூ.10/-க்கு விற்றார். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அவள் அதற்குக் கூறிய விளக்கம்: ‘ஊர்வசி (10), பன்பாசி (2) ஆகிய என் இரு குழந்தைகள் பட்டினியில் வாடி சாகக்கிடக்கின்றன, அவர்களுக்கு உணவளிக்கவே என் ஒரு மாதக் குழந்தையை விற்றேன்.’ இந்த வார்த்தைகள் போதுமானவை ஒரு தேசத்தை உலுக்க. ஆனால் இவ்வாறான எந்தக் குரலுக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த தேசம் செவிமடுக்கவில்லை. அதே 1980ல் ஒரு தேசிய நாளிதழ் ஒரிசாவின் நிலையை இந்த உலகுக்கு உணர்த்த ஒரு பெண்ணை ரூ.2000/-க்கு விலைக்கு வாங்கி, இங்குள்ள நிலையை நாட்டிற்குப் பெரும் பரபரப்பாக உணர்த்தியது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தின.

2001ல் இந்தியாவின் 13 மாநிலங்களில் பசி - வறுமையால் மக்கள் செத்து மடிவது பதிவு செய்யப்பட்டது. அந்த சமயம் பி.யு.சி.எல். அமைப்பு அன்று தேசம் வசம் இருந்த உணவு தானிய இருப்புகளையும், அந்த தானியங்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தைப் பெற்றது. அப்பொழுது அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவைகளை மனிதன் உட்கொள்ள முடியாமல் போகும் நிலையைத் தடுத்து, பசியால் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே என்றது வழக்கு. நீதிபதிகளும் அன்று இதனை ஒத்த பார்வையுடைய தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் பிரதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களது அலுவலகங்களுக்கு எதிரில் உள்ள தேனீர்க்கடைகளுக்கு வடை சுருட்ட அனுப்பினார்கள்.

வறுமையும் பசியும் இந்திய விளிம்புநிலை மக்களின் தனிச்சொத்தாக நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்நிலை, அவர்களின் வறுமையைக் கணக்கிடும் சுதந்திரங்கள் என பலவற்றை ஆராய பல கமிட்டிகளை இந்திய அரசு நியமித்தவண்ணம் உள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி இந்திய ஜனத் தொகையில் 37% பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகத் தெரிவித்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா குழு இந்திய ஜனங்களில் 77% பேர் ஒரு நாளில் ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது. அடுத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது. இவை எல்லாம் வறுமையை அல்லது மக்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ளப் போதுமான குறியீடுகளாக விளங்கும்போதும் இவை எதுவும் ஆட்சியில்-நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளில் விழுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வறுமை, பஞ்சம்கூட ஒருவிதத்தில் பல ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும் அரிய சந்தர்ப்பங்களே. பசியால் வாடுபவனுக்கு உடனடியாக இனி உணவு அளித்தால்தான் அடுத்த அரசு அமைக்கும் கமிட்டிக்கு முன்பாக அவன் ஆஜராகிப் பேச இயலும் என்பது தான் எதார்த்த நிலை.

இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடுவது 6 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான். இந்த இடத்தில் சிலருக்கு 1947, இந்தியா, காந்தி, நாடு, முதுகெலும்பு போன்ற வார்த்தைகள் மனதில் வரக்கூடும். பசுமைப் புரட்சியை இங்கு செயல்படுத்த காரணமானவர்கள் அன்று சொன்ன முதன்மைக் காரணம், ‘இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின்தங்கியுள்ளது, சமூகத்தில் மக்கள் பலர் பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கவே பசுமைப் புரட்சி.’ இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தில்லி அமைச்சக அலுவலகங்களும், மாநிலங்களில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவருக்கும் இதே உணவு தானியத்தின் உற்பத்தியில் ஈடுபட்டு பட்டினியால் வாடுபவர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் இன்று விநியோகம்சார் கோளாறுகள் குறித்து திருவாய் மலர்வதில்லை. இந்தியாவின் மக்களை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப ரகம் பிரித்து, விதவிதமான வண்ணங்களில் அட்டை கொடுத்து உணவு தானியங்களை வழங்க வேண்டிய ஏற்பாடுகள் இருக்கிறது. ஆனால் அதன் பலன் எவ்வாறு உள்ளது.

பொது விநியோக முறை என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்தியாவில் அது எப்படி செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் மிக முதன் மையானதாக, பலமானதாக, சாமானிய ஜனங்களின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டிய துறை அது. நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது அதில் பொருட்களை வாங்கும் உரிமையை அவர்கள் வீட்டில் வேலைக்காரிகளின் அட்டையாக’ விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் இன்று கோடானுகோடி மக்களின் நிலை அப்படி இல்லை. இன்றும் ரேஷன் கடைகளில் பெரும் வரிசை நின்றபடியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்கிறது. எப்பொழுது அரிசி போடுவார்கள், எப்பொழுது மண்ணெண்ணை ஊற்றுவார்கள், ஜீனியை இந்தமாதம் வாங்கிவிட முடியுமா என்பது எல்லாம் இன்று ஆய்வு செய்ய வேண்டிய தலைப்புகளாகவே உள்ளன. ஒரு ரேஷன் கடையின் இந்த விபரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்தவர் என்றால், அரசு அலுவலகங்களில் அரசாணைகளைப் பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர் போல் உங்களின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏறக்கூடும்.

இந்தியா முழுமையிலும் ரேஷன் கடைகளில் மக்கள் ஒன்றுபோலத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு பொருட்களை சிட்டை போட்டு வழங்குபவரின் கருணைக்காக காத்திருக்க வேண்டும். எல்லா கடைகளிலும் ஒருவர் இருப்பார். அவர் அந்தப் பகுதியின் அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு புள்ளியின் நேசத்திற்குரியவராக இருப்பார். எப்பொழுது சரக்கு வரும், எப்பொழுது அதனைக் கடத்துவது, கள்ளச்சந்தையில் விற்பது, வரும் மக்களுக்குப் பெயரளவில் சில பொருட்களைப் போட்டுவிட்டு மிச்சத்தைப் பதுக்குவது என இது தேசம் முழுமைக்கும் இபிகோ போல ஒன்றாகவே உள்ளது, சமமாகவே உள்ளது. பொருட்கள் வாங்காதவர்களின் அட்டைகளில் அதை வாங்கியது போல் நொடிகளில் இவர்கள் குறிக்கும் பாங்கைப் பார்க்கும்போது சி.ஐ. படித்தவர்களை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றே தோன்றுகிறது. நம் வீட்டுப் பெண்கள் இரண்டு கிலோ ஜீனியைக் கூட நகரங்களில் பெற்றுவிட முடியும், ஆனால் தொலை தூரங்களில் வசிக்கும் இந்த நாட்டின் முதுகெலும்புகளுக்கு எல்லாம் இன்று இது ஒரு கனவே. மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாத கனவு, அவமானங்கள் நிறைந்த - வலி நிறைந்த, தழும்பேறிய கனவு. அது கிடக்கட்டும், யாருக்கு இப்பொழுது அது பற்றி எல்லாம் கவலை? இந்த முது கெலும்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று சுருக்கமாகப் பார்க்கலாம்.

இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். உலகில் தினசரி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14,900 குழந்தைகள் சாகின்றன. அதில் இந்தியாவில் மட்டும் தினசரி 5000 குழந்தைகள் செத்து மடிகின்றன. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன.

உலகின் மிகப் பின்தங்கிய 26 ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் உழல்பவர்களை விட அதிகமானவர்கள் இந்தியாவில் வறுமையில், பட்டினியில் உதடுகள் காய்ந்து, உதவிக்கரம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் ஏறக்குறைய 30 கோடிப் பேரின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த 30 கோடிப் பேரைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது வெற்றுச் சொல். அந்த வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வெள்ளையனின் பிடியில் இருந்த அடிமை இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி அனுபவித்ததே இல்லை. ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப அங்கு 800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும், ஆனால் அங்கு இப்பொழுது 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்ட 2468 பேரில், ஏறக்குறைய 2000 பேர் அரசு வேலையை உதறிவிட்டு, பெருநகரங்கள் நோக்கிப் பயணப்பட்டனர். ரயில்வேயின் மிகவும் அடிமட்ட, கூலி குறைவான 38000 வேலை இடங்களுக்கு சமீபத்தில் 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் மத்திய இந்திய நிலப்பரப்பை பற்றிய சித்திரம். .

இந்தியாவின் மிக பணக்காரர்கள் 100 பேர் வசம், நம் நாட்டின் மொத்த GDPயின் 25% சொத்துகள் உள்ளது. உலகின் மிகவும் Vulnerable நாடுகளின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பின்புலத்தில் 2009 குடியரசு தினத்தில் பிரதிபாபாட்டில் தேசிய உணவு உத்தரவாதச் சட்டம் பற்றிப் பேசியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நபர் ஒன்றுக்கு கிலோ ரூ.3க்கு 25ளீரீ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். பிரதிபாவின் பேச்சு இந்தியாவின் 47% பேருக்கு வாக்குறுதியை வழங்கியது. ஆனால் விடிவை வழங்கவில்லை. இது போன்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர். விதர்பா பகுதிக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அங்கு பல வாக்குறுதிகளை வழங்கி வந்தார். அதனை நம்பி வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

மன்மோகனின் வருகைக்குக் பின் தற்கொலைகள் கூடியதாகப் பல புள்ளிவிபரங்களை எடுத்துரைத்தார் பி.சாயிநாத். இப்படித்தான் உள்ளதுநிலை. அதன் பின் தற்கொலை செய்துகொன்ட பலர் தாங்கள் விட்டுச் சென்ற குறிப்புகளைப் பிரதமருக்குத்தான் எழுதியிருந்தார்கள்.

கடந்த மே மாதம் மத்தியப் பிரதேசத்தின் கணே நகரத்தில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் டன் கோதுமை திறந்தவெளியில் அழுகிப் போக, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நமக்கு ஒளிபரப்பின. அடுத்த அறுவடை நெருங்குவதால் புதிய தானியங்களை வைக்க இடம் வேண்டும். அதனால் கையிருப்புள்ள தானியங்களைக் கடலில் கொட்டிவிடலாம் என்று ஆலோசிக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசின் கையிருப்பில் இருக்க வேண்டியது 27 மில்லியன் டன் தானியங்கள். ஆனால் அரசின் கையில் இருந்ததோ 55 மில்லியன் டன். இப்படிப்பட்ட சூழலில்தான் பி.யு.சி.எல். சார்பாக வழக்குபதிவு செய்தார் கொலின் கொன்சால்வேஸ். ஆகஸ்டு 12ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் அரசிற்கு ஆலோசனை அல்ல, மாறாக உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஒன்று குறைந்த விலையில் பசியால் வாடுபவர்களுக்குத் தானியங்களை வழங்குங்கள் அல்லது இலவசமாக உடனடியாக வழங்குங்கள் என்றது தீர்ப்பு. இருப்பினும் மெல்ல செப்டம்பர் 3ஆம் தேதி, 2.5 மில்லியன் டன் அடுத்த 6 மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று வேண்டா வெறுப்பாகக் கூறியது மைய அரசு. இது எல்லாம் அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார் மன்மோகன்.

அமெரிக்கா கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் இந்த குமாஸ்தாவுக்கு, இந்திய நீதிமன்றம் எப்பொழுதாவது தப்பிக்கூறும் இந்த வார்த்தைகளைச் சகிக்க முடியவில்லை. அரசு மக்களைப் பட்டினியால் கொல்ல முடிவு செய்தால் பின் யார்தான் அதில் தலையிட முடியும்? பெருநகரங்களில் மால்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏர்போர்ட்கள், மென்பொருள் பூங்காக்கள் கட்டப் போதுமான மானியங்களை வழங்க மத்திய அரசால் முடியும். ஆனால் உணவு தானியங்களைச் சேமிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இயலாது. அரசு இனி உணவு தானிய கிட்டங்கிகளைத் தன் செலவில் கட்டக் கூடாது என ஆலோசனை வழங்கிய பன்னாட்டு நிறுவனம்தான் இங்கு பல களங்களை, பெரும் குளிரூட்டிகளை நிறுவி வருகிறது.

அவர்களின் இடத்தில்தான் மைய அரசு பெரும் வாடகை கொடுத்து தன் சேமிப்பை வைத்துள்ளது. 5 வருடமாக இருந்த அந்தக் குத்தகையை 10 வருடமாக கடந்த பட்ஜட்டில்தான் பிரணாப் முகர்ஜி மாற்றினார். உணவு உத்தரவாத சட்டம் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் வார்த்தைகள் இவை: சமூகத்தின் பின்தங்கியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள் என இவர்கள் பசியால், பட்டினியால் வாடாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை. அது மாநில அரசோ - மத்திய அரசோ, இதனை எந்தக் கொள்கை துணையுடனும் நீங்கள் நிறைவேற்றலாம். அது உங்களின் முடிவே. தானியங்கள் வீணாகக்கூடாது, எலிகளை விட அதனைப் பட்டினியால் சாகக்கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். இது ஒன்றே இந்த நீதிமன்றத்தின் பேராவல். இந்தக் கணக்கிடப்பட்ட ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க அரசிற்குத் தேவையான மானியம் ஆண்டிற்கு வெறும் ரு.56,000 கோடி மட்டுமே. ஆனால் 2010-11இல் ஒதுக்கப்பட்ட தொகை ரு.28,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையைக்கூட பல மாநிலங்கள் இலவச திட்டங்களுக்கு செலவிட்டது தனிக்கதை. தேவையான நிதியை ஒதுக்காமல் புலம்பும் மத்திய அரசு இந்த ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடி ருபாய் .

இந்த சலுகைகளில் ஒரு பாதியை அளித்தால் ஒரு பெரும் மனித சமூகத்தின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும் பொருளாதார உற்பத்தியின் காத்திரமான மனிதவளமாக அவர்கள் திகழ்வார்கள். மீண்டும் மீண்டும் வயிறு பசித்துக் கிடக்கும் இந்த மக்களை அரசு ஒரு சுமையாகவே கருதுகிறது. கிரிக்கெட் பேரங்களில் அலையும் நம் உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு இதை எல்லாம் யாராவது புரிய வைத்தால் உசிதம். அவர் கிரிக்கெட் வீரர்களின் வீட்டு நாய்களுக்கான உணவுக்கு இறக்குமதிவரியை ரத்து செய்வதில் பிசியாக அலைகிறார்.

மத்திய அரசு வறுமை மற்றும் பசி, பட்டினியைப் போக்க 22 திட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக நடை முறைப்படுத்தி வருகிறது. இதைவிட பசி- பட்டினியைப் போக்க ஒரு அமைச்சகம் தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும், மத்திய பிரதேசத்தில் போபால் விஷவாயு தொடர்பாக ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் பசியால் வாடும் போது அவர்களுக்குத் தேவைப்படும் அன்றாட தானியத்தை ஏற்றுமதி செய்யும் அரசை எப்படி வகைப்படுத்துவது. இதைப் போலவே நம் அரசிற்கு சற்றும் குறைவில்லாதவர்களாக, நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கம் முதல் பணக்காரர்கள் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. ஆடம்பர கல்யாணங்கள் முதல் இலையில் 25-35 வகை பலகாரங்கள் அடுக்கும் சாதாரன கல்யாணங்கள் வரை உணவைச் சற்றும் மதிக்காத ஒரு தலைமுறை நகரங்களில் வசித்து வளர்ந்து வருகிறது. இவர்களுக்கும் கூட உணவை வீணடிப்பது என்பது தங்களின் பகட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.

கொலின் கொன்சால்வேஸ் அந்த வழக்கில் 67,000 டன் தானியங்கள் அழுகி வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது 2 லட்சம் பேருக்கு ஆறு மாதத்திற்கு உணவளிக்கப் போதுமானது. இதுவரை இந்திய அரசால் இப்படி வீணடிக்கப்பட்ட தானியங்களின் மூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் மனிதன் நிலாவுக்கு நடந்தே போய் வரலாம். அப்படிச் செய்தால் ஆயிரம் ஆயிரம் கோடிகள் நிலாவுக்குச் செல்ல ராக்கெட் ஆராய்ச்சியின் செலவு மிச்சம்தானே. தானியங்களை வழங்காவிட்டால் பரவாயில்லை. மன்மோகன் அவர்களே, நிலாவுக்காவது போய்வர ஏற்பாடு செய்யுங்கள்.

Wednesday, March 9, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-3.


ஜூலை 29, 1987ஆம் வருடம். ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக 40,000 இந்தியராணுவ வீரர்களைக் கொண்ட IPKF – அமைதி காக்கும் இந்தியப் படை அனறே இலங்கை விரைகிறது. அதன் முதல் கமாண்டராக ஜெனரல் ஹர்கிரத் சிங் பொறுப்பு ஏற்கிறார். இனி அவரது வார்த்தைகளில்,

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே இடையிலான, இந்திய இலங்கை உடன் பாட்டின்படி, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும். இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும்.அனைத்து போராளிக்குழுக்களும், இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் வசம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும். துவக்கத்தில் IPKF கமாண்டரான என்னிடம் கூறப்பட்ட அணுகுமுறை இது தான்.

எனவே நான் விடுதலைப்புலிகளிடமும், அதன் தலைவர் பிரபாகரனுடனும் நல்ல அணுகுமுறையிலும், நட்புமுறையிலும் பழகினேன். தினமும் அவர்களுடன் உட்கார்ந்து கலந்து பேசி டீ சாப்பிடும் அளவிற்கு எங்கள் உறவு சுமுகமாக இருந்தது. ஆனால், பிறகு நடந்தது வேறு. விடுதலைப் புலிகளிட மிருந்து மட்டுமே ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டன. மற்ற போராளிக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதுடன், மேற்கொண்டு ம் இந்திய அரசால் அவர்களுக்கு ஆயுதங்கள் தரப்பட்டன. அந்த போட்டி குழுக்கள், புலிகளை அழிக்கும் பணியில் ஊக்குவிக்கப்பட்டன.

இவ்வாறு அமைதி காக்க வேண்டிய படையை, டபுள் கேம் (இரண்டு வித ஆட்டங்களை) ஆடும்படி இந்திய அரசியல் தலைமை எங்களுக்கு உத்திர விட்டது. எனவே, விடுதலைப் போராளிகளை அழிக்கும் பணியில் IPKF படை துணை போக ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் இதைப்பற்றி வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தபோது, அதை இந்திய அரசு சட்டை செய்ய வில்லை. மாறாக,இந்திய அமைதி காக்கும்படைக்கு இன்னுமொரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிளவையும், அவ நம்பிக்கையையும் உண்டாக்கும் வேலை அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை பலவீனமாக்கி அழித்து ஒழிக்கும்படி அமைதி காக்கும் படைக்கு தில்லியிலிருந்து உத்திரவு கொடுக்கப்பட்டது

புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிப்பது நடவாத காரியம் – தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்கு புலிகளையே நம்பி இருக்கிறார்கள் என்பது எனக்கு (ஜெனரல் ஹர்கிரத் சிங் ) நன்றாகப் புரிந்தது. இதை நான் அப்போதைய இந்தியத் தூதர் ஜெ.என்.தீக்ஷித் திடம் சொன்னபோது அவர் அதை ஏற்பதாக இல்லை. மாறாக, “ஜெனரல் – நான், பிரதமர் ராஜீவ்காந்தியுடன் தில்லியில் நடத்திய பேச்சு வார்த்தைகளில் கிடைத்துள்ள உத்திரவுகளின்படி நான் சொல்வதை நீங்கள் ஏற்று செயல்பட வேண்டும். புலிகளிடம் சமாதானப் பேச்சுநடத்துவதைக் கைவிட்டு விட்டு மிரட்டி அடிபணிய வைக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாக தீக்ஷித் திடமிருந்து 1987 செப்டம்பர் மாதம் 14/15 தேதி இரவு கிடைத்த உத்திரவு, என்னை நிலை குலையச் செய்தது.

நான் பிரபாகரனையும் மற்றவர்களையும், அவ்வப்போது தோன்றும் பிரச்சினை களைப்பற்றி விவாதித்து சுமுகமுடிவுகளை எடுக்க, தேவைப்படும்போது இரவு நேரங்களில் 12 மணி வாக்கில் சந்திப்பது வழக்கம்.

1987 செப்டம்பர் 14/15ந் தேதி இரவு, அப்போது இலங்கையில் இந்திய தூதராக இருந்த ஜெ.என்.தீக்ஷித் “பேச்சு வார்த்தை நடத்த வரும்போது பிரபாகரனை கைது செய்யுங்கள் - முடியவில்லை என்றால் - சுட்டு வீழ்த்துங்கள். என்று என்னிடம் கூறினார்.

அதற்கு நான், “பிரபாகரன் இந்திய ராணுவத்தின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த வருகிறார். வெள்ளைக்கொடி ஏந்தி பேச்சு வார்த்தை நடத்த வருபவர்களை சுடுவது ராணுவத்திற்கு இழுக்கு. அத்தகைய செயல்களில் ஈடுபட நாங்கள் தயாரில்லை. மேலும் நீங்கள் போடும் உத்திரவை நான் ஏற்க வேண்டிய அவசியமில்லை- எனக்கு உத்திரவு போட வேண்டியவர்கள் ராணுவத் தலைமையகத்தில் இருக்கிறார்கள் என்றேன்.

எனக்கு ராஜீவ் உத்திரவு கொடுத்திருக்கிறார், என்றார் தீக்ஷித்.

நான் “உங்கள் உத்திரவை ஏற்பதற்கில்லை. என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

ஜெனரல் ஹர்கிரத்சிங் , இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய தளபதிபொறுப்பில் இருந்தவர். ரிடையர் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு அவர் கொடுக்கும் பேட்டி யில், எழுதும் புத்தகத்தில் கூறுபவை நம்பத் தகுந்ததாகத் தானே இருக்கும்? (இதன் பின்னர் ஜெனரல் ஹர்கிரத் சிங், விடுதலைப்புலிகளுடன் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஜனவரி, 1988-ல் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப் பட்டார் )

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு, போரிடுவதை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்த குறைகளைத் தீர்த்து வைக்க IPKF சார்பில் எந்தவித நடவடிக் கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரான, 25 வயது இளைஞன் பார்த்திபன் ராசையா என்கிற இயற்பெயரைக் கொண்ட லெப்டினண்ட் கேனல் திலீபன் 5 அம்ச கோரிக்கைகளை IPKF முன் வைத்து, அவற்றை நிறைவேற்றக் கோரி, காந்தீய வழியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

வடக்கிலும், கிழக்கிலும் புதிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

அவசர கால சட்டம் நீக்கப்பட வேண்டும்.

ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில், அரசாங்கம் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதை நிறுத்த வேண்டும் என்பனவே அவை.

1987 செப்டம்பர் 15ந்தேதி உண்ணாவிரதத்தைத் துவங்கிய திலீபன் தண்ணீர் கூட அருந்தவில்லை. தமிழீழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் முதல்முறையாக(பிரபாகரனின் சென்னை உண்ணாவிரதத்தைத் தவிர்த்து ) காந்தீய வழியில் உண்ணாவிரதம் இருந்து புதிய வழியில், சாத்வீக முறையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை இந்திய அரசு இதை சற்றும் கண்டுகொள்ள வில்லை.

தில்லி அரசியல் தலைமை - இதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் கூறியது. திலீபனின் உண்ணாவிரதம் பற்றிய செய்திகள் அவ்வப்போது புலிகளின் செய்திஊடகங்களிலும்,வானொலியிலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்ததால், திலீபனின் உண்ணாவிரதம் தமிழர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த இளைஞர் திலீபன் அவரது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையிலேயே செப்டம்பர் 26ந்தேதி உண்ணாவிரதம் காரணமாகவே துடிக்கத் துடிக்க தன் உயிரைத் துறந்தார். இது விடுதலைப் போராளிகளிடையேயும், ஈழத்தமிழ் மக்களிடையேயும் பெருத்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டு பண்ணியது.

IPKFக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின.

இங்கே விரோதம் வலுக்கிறது.

இந்த விரோதம் துவங்கவும், தொடர்ந்து வளரவும் ராஜீவ் காந்தியே முக்கிய காரணமாகிறார் என்பது கவனிக்கத் தகுந்தது.

அக்டோபர் 4, 1988. பாயிண்ட் பெட்ரோவிற்கு அருகே, கடலில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இலங்கை கடற்படை வழிமறித்துப் பிடித்தது. அதில் 17போராளிகள் இருந்தனர். போராளிகளின் முக்கியத் தலைவர்களான லெப்டினண்ட கேனல் குமரப்பாவும், புலேந்திரனும் அதில் அடங்குவர். ஒப்பந்தத்திற்கு முன்னதாக சில கொலை வழக்குகளின் காரணமாக தேடப்பட்டு வந்த இவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் விலை அறிவித்து இருந்தது சிங்கள அரசு. இப்போது சிக்கிய இவர்கள் மீது மேற்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்கு ஆயுதங்களைக் கள்ளத்தனமாக கடத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியது இலங்கை அரசு. விசாரணைக்காக, இவர்களை கொழும்பு கொண்டு செல்லப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுபட்டு விட்டதாகவும், ஆயுதங்களைக் கடத்தியதாக இலங்கைஅரசு குற்றம்சாட்டுவது வடிகட்டிய பொய் என்றும் கூறி உடனே அவர்களை விடுவிக்குமாறு IPKF கமாண்டர் ஹர்கிரத் சிங்கிடம் கேட்டது புலிகள் அமைப்பு.

ஹர்கிரத் சிங்கின் சார்பாக, அவரது துணைத் தளபதி IPKF பிரிகேடியர் பெர்னாண்டஸ் பொறுப்பேற்றுக்கொண்ட இந்த நிகழ்வு பற்றி அவரே கூறி இருப்பது .

உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்த பிரிகேடியர் பெர்னாண்டஸ் 17 கைதிகளையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அவர்களை பலாலி விமான தளத்திற்கு அனுப்பி வைத்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த இலங்கை ராணுவத்திடம் பேச்சு வார்த்தை நிகழத்திய பிறகு, போராளிகள் பலாலி விமான தளத்தில் பயணிகள் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களைச் சூழ்ந்துகொண்டு உள் வளையத்தில் AK- 47 துப்பாக்கிகளுடன் இலங்கை ராணுவம் இருந்தது. வெளிவட்டத்தில் இந்திய ராணுவம் இருந்தது. போராளிகளிடம் இருந்த ஆயுதங்கள் ஏற்கெனவே பறிக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் 5ந்தேதி காலை பிரிகேடியர் பெர்னாண்டஸுக்கு கிடைத்த தகவல் அவரை நிம்மதி இழக்கச் செய்தது. ஆம் -இலங்கை ராணுவம் போராளிகளை கொழும்புக்கு கொண்டு போகப்போவதாக அறிவித்தது. காலையில் கொழும்பி லிருந்து பலாலி வரும் இலங்கை ஆகாயப்படை விமானத்தில் போராளிகளை ஏற்றிச்செல்லப்போவதாகத் தெரிந்தது.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் துரிதமாகச் செயல்பட்டார். இந்த தருணம் வரை – எதைச் செய்தாவது, IPKF போராளிகளைக் காப்பாற்றி விடுவிக்கவே விரும்பி செயல்பட்டது. இலங்கை விமானம் தரை இறங்கியவுடன், அது மீண்டும் மேலெழும்பாத வண்ணம் ஓடுபாதையில் அதைச்சுற்றி நான்கு புறங்களிலும், IPFK ன் BMP கவச போர் வாகனங்கள் விரைவாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

இலங்கை ராணுவம் கடுங்கோபம் கொண்டது. எந்த நேரத்திலும் இரு தரப்பாருக்கும் சண்டை நிகழக்கூடிய சூழ்நிலை உருவானது.

இந்த சம்பவத்தை நினைவுகூறும்போது கூறுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் -

“பத்தே நிமிடங்களில் இலங்கைப் படையை மௌனிக்கச் செய்து விட்டு 17 போராளிகளையும் கவச வாகனங்களில் ஏற்றிச்சென்று பத்திரமாக விடுதலை செய்திருக்க எங்களால் முடிந்திருக்கும் .

ஆனால் – துரதிருஷ்டவசமாக தில்லி அரசியல் தலைமையிலிருந்து, அவசரமான கட்டளை ஒன்று பறந்து வந்தது. “உங்களை யார் இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னது ? உடனடியாக விலகி இருங்கள். இலங்கை ராணுவம் விரும்புவதைச் செய்யட்டும்” என்று. எங்கள் இயலாமையை எண்ணி வருந்துவதை விட வேறோன்றும் செய்ய முடியவில்லை எங்களால் “.

ஆம் – உடனடியாக சம்பவ இடத்திலிருந்து நகர்வதைத் தவிர IPKF ஆல் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் – போராளிகளிடம் சென்று விஷயத்தை விளக்கி விட்டு, தன் இயலாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மிகுந்த வருத்தத்துடன் வெளியேறினார்.

விளைவு – இலங்கை ராணுவம் 17 போராளிகளையும் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்க, அத்தனை பேரும் சயனைடு அருந்தி உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது.

தெரிந்தே, ராஜீவ் காந்தி எடுத்த இந்த முடிவு - போராளிகளை இலங்கை அரசுக்கு பலி கொடுப்பது என்கிற முடிவு.

விரோதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும், இந்திய அரசின் மீதும், IPKF மீதும் கடும் கோபம் கொண்டனர். உடனடியாக வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. சில மணி நேரங்களுக்குள்ளாகவே விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாம்களின் மீது தாக்குதல்களை நிகழ்த்தினார்கள்.

புலிகளை அடக்க முடியவில்லை என்றால் IPKF எதற்கு என்று ஜனாதிபதி ஜெயவர்த்தனே கேட்க,

முழு பலத்துடன் விடுதலைப்புலிகளை அடக்கவும், அழிக்கவும், தில்லியிலிருந்து உத்திரவு வந்தது.

விரோதம் தொடர்கிறது.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

Tuesday, March 8, 2011

பத்ம வியூகம்.

மனுஷ்ய புத்திரன்


தி.மு.க. தலைவரின் இப்போதைய நிலையை பத்மவியூகத்தில் இருக்கும் அபிமன்யூவின் நிலையுடன்தான் ஒப்பிடமுடியும். அரசியல் சாணக்கியர் தனது மதிநுட்பத்தின் எல்லா ஆயுதங்களையும் பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். மிகவும் நெருக்கடியான அரசியல் சந்தர்ப்பங்களை மிகவும் சாதுர்யமாகக் கடந்து வந்தவர் அவர். அதிகாரத்திற்காகக் காத்திருக் கவும் நீண்ட போராட்டத்தை நடத்தவும் தயங்காதவர். ஆனால் இன்று அவர் கையில் இருக்கும் துருப்புச் சீட்டுகளில் ஒவ்வொன்றாகப் பிடுங்கப் படுகின்றன. அவருடைய ரத்த பந்தங்களாலும் நீண்ட கால அரசியல் தோழர்களாலும் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்த்துத் தாக்குவதற்கான அவரது படையரண்கள் ஒவ்வொன்றாகச் சேதப்படுத்தப் படுகின்றன. வரப்போகும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா இல்லையா என்பதை விட முக்கியமான கேள்வி, ஒரு குடும்பத் தலைவராக, கட்சித் தலைவராக அவரது அதிகாரம் உறுதிப்படுமா என்பதுதான். ஒவ்வொரு நாளும் அவருக்குக் கெட்ட சேதிகளுக்குப் பஞ்சமே இல்லை. அவர் மறக்க விரும்புகிற சம்பவங்களுக்கும் குறைவேதுமில்லை.

தி.மு.க. என்ற இயக்கம் அதிகாரத்தில் இருந்தபோதும் இல்லாதபோதும் தமிழக அரசியலிலும் சில சமயம் இந்திய அரசியலிலும் ஒரு பேரரசைப்போல கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு கணக்கு இருக்கிறது. எந்தப் பேரரசும் ஒரு அரை நூற்றாண்டுக் காலத்தில் அதன் உச்சத்திற்குச் சென்று பிறகு சிதையத் தொடங்கும் என்பதுதான் அது. தமிழக அரசியலின் பேரரசர் தனது வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கிவிட்டாரா? ஒரு முகாலாயப் பேரரசைப்போல அவர் சொந்த நிழலாலேயே சூழப்பட்டிருக்கிறாரா?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற அடையாளத்தைப் படிப்படியாக சிதைத்ததை அவர் கண்முன் காண நேர்ந்தது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்த அவர் அந்த மொழியின் பெயரால் ஒரு மாநாட்டை முன்னூறு கோடி ரூபாய் செலவில் நடத்தி ஓராண்டு கூட நிறைவடையவில்லை; அதன்மேல் தூசி படிந்து யாருடைய நினைவிலும் அது இல்லாமல் போய்விட்டது. கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் இலவச தொலைக்காட்சி, மருத்துவக் காப்பீடு, நூறு நாள் வேலைத்திட்டம், ஒரு ரூபாய் அரிசி என மிகவும் வசீகரமான மக்கள் நலத் திட்டங்களால் தமது அரசாங்கம் படிப்படியாக அடைந்த புகழின் வெளிச் சத்தை ஊழலின் புழுதிப் புயல் இவ்வளவு சீக்கிரமாக வந்து மூடும் என்று அவர் கற்பனை செய்திருக்க மாட்டார். ஈழத் தமிழர் போராட்டத்தை நசுக்குவதற்கு காங்கிரஸ் மேற்கொண்ட சதிகளோடு, ஆட்சி அதிகாரம் கருதி அவர் செய்து கொண்ட சமரசங்களுக்காக வரலாற்றின் ஊழ்வினை அவரைப் பழிவாங்கு கிறது.

சோனியாகாந்தி நேற்று எப்படி பிரபாகரனை அழிப்பதற்காக ஒரு ரகசிய வளையத்தை உருவாக்கினாரோ, அதேபோல்தான் இன்று தி.மு.க.வை அழிப்பதற்கும் உருவாக்கியிருக்கிறார். மத்தியில் தி.மு.க.வோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்ட சந்தர்ப்பத்திலோ அல்லது தமிழகத்தில் தி.மு.க. அரசு காங்கிரஸ் தயவை நம்பியிருந்த சந்தர்ப்பத்திலோகூட ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காத காங்கிரஸ், இன்று கூட்டாட்சி கேட்டு தி.மு.க. தலைவரின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்குகிறது. தமிழக அரசியலில் எவ்வளவோ காலமாக எந்தப் பிரசன்னமும் இல்லாமல் இருந்த காங்கிரஸ் இன்று தன்னை ஒரு தீர்மானிக்கும் சக்தியாகக் காட்டிக்கொள்கிறது. காற்றுகூட உள்ளே புக முடியாமல் இரண்டு திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வந்த தமிழகத்தின் ஆட்சி பீடத்தை நோக்கி காங்கிரஸ் பின் வாசல் வழியாக முன்னேறுகிறது. கருணாநிதி மிரட்டலுக்கும் அவமதிப்புகளுக்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார். இது அவருக்குப் பழக்கமில்லாதது. ஆனால் இப்போது வழியேதும் இருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸை எந்த தயக்கமும் இன்றி ‘கெட்அவுட்’ சொன்ன அவர், இன்று அவரை வலிய அழைத்து அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக முப்பத்தோரு இடங்களைக் கொடுக்க வைப்பது பயத்தைத் தவிர வேறென்ன?

தி.மு.க.வை ஊழல் என்ற பொறியில் எவ்வளவு சிக்கவைக்க முடியுமோ சிக்க வைத்து தன்னை முழுமையாக அண்டியிருக்கச் செய்யும் ஒரு சூழலை காங்கிரஸ் உருவாக்கியிருக்கிறது. அதனுடைய நோக்கம், தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது மட்டுமல்ல. தி.மு.க.வைச் சிதைப்பதன் மூலமே தான் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இங்கே உருவெடுக்க முடியும் என்பதை அது அறிந்திருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை கருணாநிதியின் வாரிசுகளே எதிர்காலத்தில் காங்கிரஸுக்கு உருவாக்கிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு விதமான தொகுதிப் பங்கீடுகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார். முதலாவதாக காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகளு டனான தொகுதிப் பங்கீடு. இதே வரிசையில் அவர் தமது கட்சிக்குள் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்கிற வரிசையில் உள்ஒதுக்கீட்டையும் செய்தாக வேண்டும். ஒரு விமானத்தை ஒரே நேரத்தில் ஆறுபேர் ஆறுதிசைகளில் ‘ஹைஜாக்’செய்வது போன்ற அபத்த நாடகக் காட்சி இது. குடும்ப அரசியலிலும் அதிகார அரசியலிலும் தொடர்ந்து சமரசத்தை மேற்கொள்ளக்கூடிய ஒருவர், கடைசியில் அடையக்கூடிய இடம் என்ன வென்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

இதை எல்லாவற்றையும் மீறி யாரும் எதிர்பாராத விதத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதுபோல வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வரும் என்று கருணாநிதி நம்பக்கூடும். அந்த நம்பிக்கை வீணானது என்று சொல்லிவிட முடியாது. எவ்வாறு இன்று இந்திய அரசியல் அதிகாரத்தைப் பல்வேறு சிறுசிறு காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாகத் தீர்மானிக்கிறதோ அதேபோல தமிழகத்திலும் நடக்கலாம். விலைவாசி பிரச்சினையோ, ஊழலோ ஒருவருக்கு வாக்களிப்பதை தீர்மானிப்பதிலிருந்து நமது அரசியல் மனோபாவம் வெகுதூரம் கடந்து வந்துவிட்டது. மக்கள் இன்று மிகவும் குறுகலான நோக்கங்களின் அடிப்படையில் தமது தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது, அவற்றைப் பற்றிய பொது கருத்துகளை உருவாக்கிக் கொள்வது வாக்களிக்கச் செல்லாத மத்தியதர வர்க்கத்தின் மனோபாவம் ஆகிவிட்டது. தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பே தொகுதிகள்தோறும் கட்டுக்கட்டாக கரன்சிகள் வந்து இறங்கத் தொடங்கிவிட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யக்கூடிய தில்லுமுல்லுகள் பற்றி எழுந்த சர்ச்சைகள் அப்படியே கண்டுகொள்ளாமல் மறைக்கப்பட்டுவிட்டன. சாதி, பணம், தில்லுமுல்லுகளால் வெற்றி தோல்விகளில் எந்த நேரத்திலும் வித்தியாசங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு ஜனநாயகத்தில் பொதுப் பிரச்சினை சார்ந்து மக்கள் அலைகள் உருவாகாது என்பதே உண்மை. ஒருவேளை தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தால்கூட அது ஸ்பெக்ட்ரமின் விளைவாக இருக்காது; மாறாக, தேர்தல் உத்திகளில் செய்த தவறாகவே அது இருக்கும்.

வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிற விமர்சகர்கள் அதற்கு மாற்றான ஒரு அரசியல் சக்தியை மனப்பூர்வமாக சுட்டிக்காட்ட முடிகிறதா என்பது முக்கியமான கேள்வி. இன்று தி.மு.கவின் குற்றங்களுக்காக தண்டனையை வேண்டுபவர்கள் மக்களின் நிவாரணத் திற்காக சொல்லகூடிய மாற்றுத் திட்டம்தான் என்ன? தி.மு.கவை விட சிறந்த ஆட்சியை தமிழக மக்களுக்கு தரப்போகிறவர்கள் ஜெயலலிதாவும் விஜயகாந்துமா? அல்லது காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதன் வாயிலாக ஏதேனும் ஒரு கட்சி நல்லாட்சியைத் தந்துவிட முடியுமா? ஊழல், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் முடிவுகளை எடுத்தல், எதேச்சதிக்காரம் என்பனவற்றில் ஜெயலலிதா இணையில்லாத முன்னுதாரணங்களை ஏற்படுத்தியவர். விஜயகாந்த் தனது தேர்தல் அறிக்கையினை அல்லது கட்சியின் கொள்கையினை எந்தச் சொற்களால் எழுதப்போகிறார் என்பது இதுவரை யாருக்கும் புரியாத ஒரு புதிர். தேர்தலில் வென்றால் தன் மனைவிக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று அவர் இப்போதே கோருவதாக செய்திகள் வருகின்றன.

காங்கிரஸ் இந்திய ஜனநாயகத்தின் ஒரு புரையோடிப்போன புண்.

ராமதாசும் திருமாவளவனும் குறிப்பிட்ட சாதிகளின் பிரதிநிதிகளாகவே என்றென்றும் பார்க்கப்படுவார்கள். பிற தலைவர்கள் இவர்களைவிட அதிக சாதிய சாய்மானம் கொண்டவர்களாக இருந்த போதிலும்கூட. இனி நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் நடிகர் விஜய் அல்லது கார்த்திக் மட்டுமே. இவர்களுக்கு இடையே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் வேறு வழியில்லாத ஒரு தெளிந்த வாக்காளன் பார்வையில் இப்போதும் தி.மு.கவே முன்னிலை பெறும்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைந்து ஸ்டாலின் முதல்வரானால் அழகிரி அவருக்கு ஒரு நிரந்தர கொடுங்கனவாக மாறுவார். அதேசமயம் ஸ்பெக்ட்ரம் என்ற சுருக்குக் கயிறு தற்காலிகமாக தி.மு.க.வின் கழுத்திலிருந்து கழற்றப்படும். கபில்சிபல் போன்ற யாராவது ஒரு போலி வழக்கறிஞர் இதை ஒரு கட்டுக்கதை என்று சான்றிதழ் அளிப்பார். இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆக்டோபஸ் கரங்கள் ஆ.ராசாவையும் தாண்டி பலரையும் நோக்கி நீள்வதால் இந்தப் பிரச்சினையைப் படிப்படியாக மூடி மறைப்பதற்கு எல்லோருமே ஒரு பரஸ்பர ரகசிய உடன்படிக்கைக்கு வருவார்கள்.

இவையெல்லாம் இந்த நாளின் உத்தேசங்கள் மட்டுமே. அடுத்த ஒரு மாதத்திற்குள் இன்னும் சில காட்சிகள் அரங்கேறலாம். ஏதாவது ஒன்று திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க. தலைவருக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொண்டு வரலாம்.

கருணாநிதி உளியின் ஓசை, இளைஞன் போன்ற படங்களுக்கு எழுதும் வசனங்கள் அல்ல அவரது முன் இருக்கும் சவால். வைரமுத்து, பா. விஜய் போன்ற அரசவை கவிஞர்களின் நட்பும் இணக்கமும் அவரது அறிவார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யப் போவதில்லை.

முதுபெரும் தலைவர் தனது இயக்கத்தின் வரலாற்றில் இன்னொரு யுத்தத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய அரசியல் வாழ்க்கையில் அவருக்கு அதிர்ஷ்டம் எப்போதும் கூடவே வந்திருக்கிறது. ஆனால் அவர் விரும்பு வதைவிட கொஞ்சம் தாமதமாக.

Saturday, March 5, 2011

விடிவதற்கு(ள்) எதுவும் நடக்கலாம்.


திமு.க .கூட்டணியில், பா.ம.க.வுக்கு - 31, விடுதலை சிறுத்தைக்கு - 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு - 7 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு - 3 , மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு - 1 ஆக 52 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 182 தொகுதிகள் தி.மு.க. கைவசம் உள்ளது.

அ.இ.அ.திமு.க .கூட்டணியில், தே.மு.தி.க. - 41 , புதியதமிழகம் - 2 , மனிதநேய மக்கள் கட்சி - 3 , இந்திய குடியரசு கட்சி - 1 , பார்வேர்டு பிளாக் - 1, அணைத்திந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் -1 ஆக 49 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 185 தொகுதிகள் அ. தி.மு.க. கைவசம் உள்ளது. இன்னும் இரண்டு கம்யூனிஸ்டுகள் , ம.தி.மு.க. பாக்கியுள்ளது தோராயமாக - 45 தொகுதிகள் ஒதுக்குவதாக் கணக்கிட்டால் மீதம் 140 தொகுதிகள் அ.இ.அ.திமு.க கைவசம் உள்ளது

இந்நிலையில் இன்று 05-03-2011 நடைபெற்ற தி.மு.க உயர்மட்ட குழு கூட்டத்தில் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகப் போவதாக முடிவாகியுள்ளது. ஆக தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையை எட்டியுள்ளது.

மத்திய அரசில் இருந்து விலக தி.மு.க. முடிவு செய்தது பற்றி, ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொறுத்திருந்து பார்ப்போம் என்றாராம்.

மத்திய நிதியமைச்சர், பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

குலாம் நபி ஆசாத் கூறுகையில், திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்கிறார்.

தனது முடிவை தி.மு.க. அறிவித்த பின்னர், கூட்டணியை தொடருவதற்காக பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தன்னிடம் சொன்னதாக சி.என்.என்.ஐ.பி.என். சேனல்ல ராஜ்தீப் சர்தேசாய் கூறுகிறார்.

அ.தி.மு.க. பக்கம் போகமுடியாத சூழலில் துரைமுருகன் சொன்னது மாதிரி 234 தொகுதிகளிளும் காங்கிரஸ் போட்டியிடுமா?

மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ்க்கு தரமுடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அங்கே காங்கிரஸ் என்ன செய்யும்?

ஆக ராகுல் ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. பார்ப்போம் விடிவதற்குள் எதுவும் நடக்கலாம். ராகுல் ராசிதான் தெரியுமே!

வை.அருள்மொழி.

Friday, March 4, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-2.


கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத்தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதிகள் இழைத்த கொடுமைகளை விவரமாகக் கூறும் வலைத் தளங்கள் நிறைய இருக்கின்றன.

எனவே நான் அந்த விவரங்களுக்குள் போகவில்லை. சுருக்கமாக -

அன்று முதல் – இன்று வரை இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் அனைத்துமே ஈழத்தமிழர்களுக்கு எதாவது ஒரு வகையில் துரோகம் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவாக – எப்போதாவது இந்தியா எதாவது செய்ய முயற்சித்தால், அந்த தமிழர்களுக்குப் பரிந்து பேச வந்தால் நேரடியாக இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் தைரியம் இல்லாததால், சுற்றி வளைத்து எந்த விதத்திலாவது இந்திய அரசுக்கு சிக்கலை உருவாக்குவதிலேயே இலங்கைஅரசு முனைப்புடன் இருந்துள்ளன.

எழுபதுகளில் - எண்பதுகளில் - பனிப்போர் தொடர்ந்து இருந்து வந்த காலங் களில், இந்தியா ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த நேரம். அமெரிக்கா பாகிஸ்தானைக் கையில் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு தன்னால் இயன்ற வகையில் எல்லாம் தொந்திரவுகள் கொடுத்து வந்த காலம்.

அந்த சமயத்தில் - இலங்கை அரசும் திரிகோணமலையில் இந்தியாவுக்கு விரோதமாக அமெரிக்காவுக்கு ராணுவ தளம் அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டியது.

தமிழ்ப்போராளிகள் சிறு சிறு குழுக்களாக சிங்கள அரசை எதிர்த்து வந்த நேரம். இலங்கை அரசுக்கு எதிராக இந்த போராளிக்குழுக்களை வளர்த்து விட்டால், இலங்கை அரசை ஒரு கட்டுக்குள் வைக்கலாம் என்று நினைத்த இந்திரா அம்மையார் தமிழ்ப் போராளிக்குழுக்கள் அனைத்துக்கும் தமிழ் நாட்டில் ஆயுதப் போராட்டத்திற்கான பயிற்சியைக் கொடுத்து ஆயுதங்களுடன் அவர்களை இலங்கை செல்ல ஊக்குவித்தார். இலங்கை அரசுக்கு எதிரான அவர்களது போராட்டங்களுக்கு மறைமுகமான ஆதரவைக் கொடுத்தார்.

இந்திரா தமிழ்ப் போராளிகளை வளர்த்து விட்டது இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுக்கு தொல்லை கொடுக்கத்தானே தவிர தனி ஈழம் அமைத்துக் கொடுக்க அல்ல.

தனித் தமிழ் ஈழம் அமைவதில் இந்திராவுக்கு விருப்பமில்லை. அது தமிழ் நாட்டில் பிரிவினை வாதத்துக்கு வழி கோலும் என்றே அவர் நினைத்திருந்தார். இந்தியா தன் சுயநலத்திற்காகவே தங்களை வளர்க்கிறது என்பதை பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் உணர்ந்தே இருந்தனர்

1984-ல் இந்திரா மறைந்தார். ராஜீவ் பிரதமர் பொறுப்புக்கு வந்தார். இந்தியா -இலங்கை உறவில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்பட்டன.

இந்திராவுக்கு இருந்த அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் ராஜீவுக்கு இல்லை. இலங்கைத தமிழர்களின் பிரச்சினைகளோ, அங்கு போராடும் தமிழ் மக்கள் படும வேதனைகளோ அவருக்குப் புரியவே இல்லை.

லண்டனில் படித்து, விமானியாகத் தொழில் ஏற்று, காதல் மணம் புரிந்து, மனதுக்குப் பிடித்த வகையில் சந்தோஷமாக வாழ்ந்த பணக்கார இளைஞர் அவர்.

என்றாவது ஒரு நாள், தான்அரசியலுக்கு வரக்கூடும் என்று அவர் கனவிலும் கூட நினைத்திராததால், நம்மைச் சூழ்ந்துள்ள அரசியலையோ, கடந்த கால வரலாறுகளையோ அவர் அறிந்திருக்கவில்லை.

இந்திரா எந்த காரணங்களுக்காக ஈழப்போராளிகளை ஊக்குவித்து வந்தார் என்பதை அவர் உணரவில்லை.

அனுபவமும், திறமையும் வாய்ந்த பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற வயதான தமிழ் அதிகாரிகளை அவருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை எல்லாம் வெளியேற்றினார்.

தனக்குப் பிடித்த அதிகாரிகளை, அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். துரதிருஷ்டவசமாக அவர்கள் அத்தனை பேரும் மலையாளிகளாகவும்,
தமிழர் விரோதிகளாகவுமே அமைந்தார்கள்.

இலங்கை அரசு தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி எதிர்பார்த்தார். பிராந்திய வல்லரசான இந்தியா விரும்புகிற வழியில்இலங்கை நடக்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார்.

அதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஒத்து வரவில்லை. இலங்கை அரசுக்கு பெருத்த தலைவலியாக இருந்த தமிழ்ப் போராளிக் குழுக்களை கட்டுப்படுத்தி இலங்கையில் உள்நாட்டு அமைதி ஏற்ப தான் உதவி செய்தால், ஜனாதிபதி ஜெயவர்த்தனே தனக்கு கட்டுப்படுவார், இலங்கை தனக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று ராஜீவ் நினைத்தார்.

எனவே ஈழப்போராளிகளை, போர் நிறுத்தம் செய்ய வைத்து, ஆயுதங்களையும் ஒப்படைக்கச் செய்வதாக ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனேவுக்கு உறுதிஅளித்தார். இதற்கு அடிப்படையாக இந்தியா -இலங்கை நாடுகளிடையே ஒரு ஒப்பந்தம் போடுவது என்றும் இந்த ஒப்பந்தம் நிறைவேறும் விதத்தில், இந்தியா ஒரு அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி உதவுவது என்றும் இருவருமாகப் பேசி முடிவெடுத்தனர்.

தமிழர் பிரச்சினையைப் பற்றி ராஜீவ் காந்திக்கு தெளிவான பார்வை கிடையாது என்கிற நிலையில், இலங்கையின் முக்கிய போராளிக் குழுவான விடுதலைப் புலிகளை – பிரபாகரனை கலந்து ஆலோசியாமலே ராஜீவும் ஜெயவர்த்தனே யும் மட்டுமே கலந்து பேசி, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் எப்படியும் இதற்கு ஒப்பமாட்டார்கள் என்று ஜெயவர்த்தனேவிற்கு நன்கு தெரியும். எனவே இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பிளவை உண்டு பண்ணி அவர்களிடையே விரோதத்தை வளர்க்கும் விதமாகவே ஜெயவர்த்தனே இந்த ஒப்பந்தத்தை உருவாக்க தீவிரமாக முயற்சித்தார். இந்த பின்னணியை அறியாத ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே விரித்த வலையில் வலியப் போய் விழுந்தார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்றும், தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் வடகிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் பரவலாக அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும். அனைத்துபோராளிக்குழுக்களும் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் (IPKF) வசம் ஒப்படைக்க வேண்டும்.

இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து போராளிக் குழுக்களையும் இந்தியா திம்புவில் அழைத்து வைத்துப் பேசியது.

தமிழர்களுக்குத் தேவையான சுயாட்சியைத் தான் பெற்றுத் தருவதாகவும், அனைத்துப் போராளிக்குழுக்களும், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதானத்திற்கு உடன்பட வேண்டும் என்று ராஜீவ் வற்புறுத்தினார். மற்ற சில குழுக்கள் உடன்பட்டாலும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பு இதற்கு உடன்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

ராஜீவுக்கு இது தன்மானப் பிரச்சினை ஆயிற்று.

ஆத்திரமும், கோபமும் இங்கே தலையெடுக்கின்றன.

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, பிரபாகரனுடன் பேசவிரும்புவதாக புலிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

என்ன பணி என்று கூறப்படாமலே, 6 விமானங்கள் அடங்கிய இந்திய விமானப்படைப்பிரிவு ஒன்று தில்லியிலிருந்து முதலில் பெங்களூருக்கும் பின்னர் அங்கிருந்து சூலூருக்கும் விரைந்து அனுப்பப்பட்டது. பின்னர் குரூப் கேப்டன் அஹுலுவாலியா தலைமையில் இரண்டு MI-17 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலிருந்து இலங்கையிலுள்ள பலாலி விமான தளத்தை சென்றடைந்தன. இந்திய விமானப்படை விமானம் ஒன்று இலங்கை பலாலி விமான தளத்தில் இறங்கியது இதுவே முதல் தடவை.

விருப்பம் இல்லாமலே பிரபாகரன் வற்புறுத்தப்பட்டு அந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். அங்கிருந்து அந்த ஹெலிகாப்டர் திருச்சியை அடைந்தது. திருச்சியிலிருந்து ஒரு விசேஷ ராணுவ விமானத்தில் பிரபாகரன் தில்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

தில்லியில், அசோகா ஓட்டலின் மேல்தளத்தில் பிரபாகரன் கிட்டத்தட்ட சிறையில் வைக்கப்பட்டது போல் தங்க வைக்கப்பட்டார். ஒப்பந்த நகல் அவரிடம் அளிக்கப்பட்டது. அவர் அதில் கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். பிரபாகரன் மறுத்தபோது – ஒப்பந்த நகலில் கையெழுத்திடாமல் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

பிரபாகரன் முற்றிலும் எதிர்பாராத ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த ஒப்பந்தத்தை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பது, தற்கொலைக்கு ஒப்பாகும் என்பது அவரது உறுதியாக எண்ணம். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ளாத ராஜீவ் காந்தியின் போக்கு அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

இங்கு தான் விரோதம் ஆரம்பிக்கிறது.

தன் அன்னை வளர்த்து விட்ட”பசங்க” தானே இவர்கள். தன் சொல்லுக்கு கட்டுப்படாமல் போவதா என்று ராஜீவிற்கு கோபம்.

இந்திரா சொல்லி ஆரம்பிக்கக்ப்பட்டதல்ல ஈழ விடுதலைப் போராட்டம். தொடர்ந்து சிங்களப் பெரும்பான்மையாளர்களால் துன்புறுத்தப்பட்டு வந்த தமிழர்கள் விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், வாழ்வதற்காக துவக்கப்பட்ட இயக்கம்,

இந்திரா பயிற்சி கொடுத்து ஊக்குவித்தார் என்கிற காரணத்தால், இயக்கத்தின் அடிப்படையான தனிஈழ லட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியுமா என்பது புலிகளின் – பிரபாகரனின் வினா.

இது வரை இலங்கை அரசு போட்ட எவ்வளவோ ஒப்பந்தங்களை தமிழர்கள் பார்த்தாயிற்று. இலங்கை அரசு எதையும் நடைமுறையில் நிறைவேற்றாது என்பது தமிழர்களின் அனுபவம்.

எனவே தனித் தமிழ் ஈழத்திற்கு குறைவாக எதற்கும் விடுதலைப்புலிகள் தயாரில்லை என்பது பிரபாகரனால் எடுத்துக்கூறப்பட்டது.

ராஜீவ் காந்தி தன் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. விடுதலைப் புலிகளின் லட்சிய வேட்கையையும், தாகத்தையும் புரிந்து கொள்ள அவர் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டே ஆக வேண்டும். இல்லையேல் பலப்பிரயோகத்திற்கு உட்படுவீர்கள் என்பது அவர் பயமுறுத்தல்.

இறுதியில், அந்த இடத்தை விட்டு வெளியேற வேறு வழி இல்லாததால், பிரபாகரன் ஒப்புக்கொள்வதாகக் கையெழுத்திட்டார்.

இங்கு விரோதம் மேற்கொண்டு வளர்கிறது !

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரபாகரன் ஒப்பந்தம் ராஜீவ் காந்தியால் தம் மீது எப்படி திணிக்கப்பட்டது என்பதையும் தான் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதையும் ஈழத் தமிழ் மக்களுக்குத் தெரிவித்து, சுதுமலையில், அம்மன் கோயில் திடலில் 04/08/1987 அன்று நிகழ்த்திய உரையின் சாரம் -

“நமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத்தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படை களுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப் படைகள் ஏற்கின்றன.

எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப்பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

Thursday, March 3, 2011

காற்றில் பரவும் நீரிழிவு நோய்


காற்று மாசுபடுதலால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தானே பரவும் என்று நினைத்தால் அது தவறு. காற்றில் உள்ள மாசு நீரிழிவு நோயினையும் உண்டு பண்ணுகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் வகை 2 நீரிழிவு நோய்க்கும், இரத்த நாடி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு எனக் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாசுப்பட்ட காற்றினை சுவாசித்து வருவதால் நமக்கும் இத்தகைய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மருத்துவர் மோகன் தெரிவிக்கையில், ” நமது வாழ்க்கை மாற்றமும், உணவுப் பழக்க வழக்கமுமே நீரிழிவு நோயினை கொண்டுவந்ததாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் அது முற்றிலும் தவறு. நீரிழிவு நோய் வருவதற்கு அது மட்டுமே காரணம் இல்லை, நல்ல வாழ்க்கை நலத்தைப் பேணுபவர்களுக்குக் கூட நீரிழிவு வருகிறது ” என்றார். காற்றில் உள்ள கடுமையான மாசுத்துகள்கள் நமது உடலில் உள்ள இன்சுலினைத் தாக்குகின்றது, அது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்துவிடுகின்றன என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் குறிப்பாக நகரங்களில் நீரிழிவு நோய் அபாயகரமாக பரவி வருகின்றன். இதற்கு முக்கிய காரணமே மாசுப் பட்ட காற்று தான். சென்னைப் போன்ற இந்திய மாநகரங்களில் காற்றில் கலந்துள்ள PM2.5 அமெரிக்க நகரங்களை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்க நகரங்களிலேயே இதன் மாசு அதிகம் எனக் கணித்துள்ள ஆய்வாளர்கள். சென்னையின் இந்த மாசு பன்மடங்கு அதிகம் இருப்பதால், சென்னையில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டிப்பாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்பாக அரசும், மக்களும் போதிய விழிப்புணர் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கும் செயலாகும். அதே போல காற்றின் மாசைக் கட்டுப்படுத்தவோ, ஆய்வறியவோ போதிய நடவடிக்கைகளும், வசதிகளும் இல்லாமல் இருப்பது இன்னொரு வகையில் பின்னடைவே !


இக்பால் செல்வன்.

Wednesday, March 2, 2011

தங்கபாலுவும் பிரபாகரனும்....






பெரியதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.