Wednesday, January 11, 2012

"நானோ' தொழில்நுட்பம் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி : அப்துல் கலாம் யோசனை.



"நானோ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியிலிருந்து பூமிக்கு சூரிய ஒளிசக்தியைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளிடம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.

சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் லேசர் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கருத்தரங்கை திங்கள்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:

மனிதர்கள் பயன்படுத்துவதைவிட ஒரு லட்சம் கோடி அதிகமான சக்தியை சூரியன் வெளியேற்றுகிறது. அதில் ஒரு சிறு பகுதியையாவது சேமிக்க முடிந்தால், எதிர்காலத்தில் நமது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

விண்வெளியில் சூரிய ஒளி சக்தியைச் சேமிப்பது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பூமியில் சூரிய ஒளி சக்தியைச் சேமிப்பதற்கும், விண்வெளியில் சேமிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய ஒளி சக்தியைச் சேகரிக்கலாம். பூமியில் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை மட்டுமே சேகரிக்க முடியும். அதேபோன்று, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் விண்வெளி சூரிய ஒளி சக்தி நிலையங்கள் பாதிக்கப்படாது.

விண்வெளியில் சூரிய ஒளி சக்தியைச் சேகரிக்க மூன்று அமைப்புகள் மிக முக்கியமானவை. சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், பூமியில் அந்த சக்தியைப் பெறுவதற்கான நிலையம், விண்வெளியிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி சக்தியைக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் முக்கியம்.

விஞ்ஞானிகளுக்கு சவால்கள்: விண்வெளியிலிருந்து சூரிய ஒளி சக்தியைப் பெறுவது தொடர்பான சில சவாலான யோசனைகளை உங்கள் முன்வைக்கிறேன். விண்வெளியிலிருந்து மரபுசாரா எரிசக்தியைப் பெறுவது சாத்தியமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்வெளியில் சேகரிக்கப்படும் எரிசக்தியை எவ்வாறு பூமிக்குக் கொண்டுவருவது என்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.

நுண் அலைகள் மூலமாகவோ, லேசர் அலைக்கற்றை மூலமாகவோ சூரிய சக்தியை பூமிக்கு அனுப்ப முடியுமா என்று ஆராயலாம். "நானோ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பேட்டரிகளைக் கொண்டு விண்வெளியிலிருந்து எரிசக்தியை பூமிக்குக் கொண்டுவரலாம்.

இந்த "நானோ' பேட்டரிகளில் ரசாயான அல்லது எலெக்ட்ரிக் எதிர்வினைகளின் மூலம் சக்தியைப் பூமிக்குக் கொண்டுவர முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம். "நானோ' தொழில்நுட்பத்தின் மூலமாகவோ, லேசர் தொழில்நுட்பத்தின் மூலமாகவோ சூரிய சக்தியை பூமிக்குக் கொண்டுவருவது குறித்து இங்குள்ள விஞ்ஞானிகள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

லேசர் தொழில்நுட்பம்: லேசர் ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தபோது, உற்பத்தித் துறையிலிருந்து மருத்துவத் துறை வரை அனைத்துத் துறைகளிலும் இந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. வரும் 2020-க்குள் சிறிய மூலக்கூறுகளைக் கண்டறியும் வகையில் மிக நுண்ணிய லேசர் ஒளிக்கற்றைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் வடிவமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளரான மணிலால் பூமிக், கார்பன் மோனாக்சைடு லேசரைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு, லேசர் தொழில்நுட்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று விஞ்ஞானிகள் கூறும் அளவுக்கு அவரது கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருந்தது.

அவரைப் போன்று ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்களையும், விஞ்ஞான மேதைகளையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தவும், கொண்டாடவும் தருணம் வந்துள்ளது என்றார் அவர்.


Saturday, January 7, 2012

சிங்களப் பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டலில் கருணா கும்மாளம் ( படங்கள் )



இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா.

ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார்.

உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார். பின்னர் ராஜபக்சே அரசிடம் விலை போனார்.

கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின்னர் 2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார்.

சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. அவரை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி. இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார் கருணா.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு இருக்கும் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளன.

கருணாவின் சுயரூபத்தை பாருங்கள் என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழினத்தை காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.







Thursday, January 5, 2012

நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு.

தூத்துக்குடியில் நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு

தூத்துக்குடியில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு கிழக்கே மெயின் ரோட்டில் வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் மது அருந்தி விட்டு, ரோட்டில் நடனம் ஆடினர். போதை தலைக்கு ஏறியதும் அவர் 3 பேரும் அந்த வழியே நடந்து சென்ற பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கை கொடுத்தும், அவர்களுக்கு முத்தம் கொடுத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து கேட்டால் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறினர். அவர்களின் இந்த முறையற்ற செயலினால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், அந்த 3 பேரையும் தாக்கினர். தர்ம அடிவிழ தொடங்கியதும், 3 வெளிநாட்டினரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனிஸ்லாஷ் பாண்டி, வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்கள் பிடியில் இருந்த வெளிநாட்டினர் 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஞான் டக்ளஸ் மகன்கள் ரோஸ் பிராஞ்சிஸ் (வயது 48), ஜான் பிராஞ்சிஸ் (47) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பொது இடத்தில் அசிங்கமாக பேசி அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக அவர்கள் இருவர் மீதும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ராணி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். வெளிநாட்டினர் 2 பேருக்கும் தலா ரூ.1500 அபராதம், கட்ட தவறினால் ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆனால் அவர்கள் இருவரும் அபராதத்தை முழுமையாக செலுத்தாததால் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மயக்க மருந்து டாக்டர் சேதுலட்சுமி, ஆபரேஷன் செய்தது சரியா ?


மகேஷ், மனைவி நித்யா. ------------------------- டாக்டர் சேதுலட்சுமி.

ஆட்டோ டிரைவரால் வெட்டிக் கொல்லப்பட்ட பெண் டாக்டர் சேதுலட்சுமி வெறும் மயக்க மருந்து நிபுணர் தான்.

ஆனால் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார். இது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேஷின் மனைவி நித்யா (26). 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீர் என்று வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை டாக்டர் சேதுலட்சுமியின் சுபம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நித்யாவை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாகவும் அதை உடனே அபரேஷன் செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி ஆபரேஷனும் செய்து குழந்தையை எடு்ததுள்ளார்.

அப்போது நித்யாவின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மகேஷ் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் நித்யா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷே டாக்டர் சேதுலட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட டாக்டர் வெறும் மயக்க மருந்து நிபுணர் என்றும், ஆபரேஷன் செய்யும் அதிகாரம் இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் மகப்பேறு டாக்டரும் கிடையாது, அறுவை சிகிச்சை செய்யும் அதிகாரமும் கிடையாது இருப்பினும் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார் என்று ஒரு பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்டர் சேதுலட்சுமியின் கவனக் குறைவு மற்றும் பணத்தாசையால் தான் நித்யா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து நித்யாவின் மாமியார் கனகலட்சுமி கூறுகையில், ரூ.10,000 டெபாசிட் தொகை கட்டினால் மட்டுமே நித்யாவைப் பார்ப்பேன் என்று சேதுலட்சுமி பிடிவாதமாகத் தெரிவித்தார். சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் காக்க வைத்தார். மகேஷ் வந்து பணத்தை கட்டிய பிறகே சிகிச்சை அளித்தார் என்றார்.

இது குறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், 25 வாரமேயான குழந்தையை வெளியே எடுக்கும் ஆபரேஷனை ஐசியுவில் வைத்து செய்திருக்க வேண்டும். ஒரு மகப்பேறு மருத்துவர் தான் அந்த ஆபரேஷனை செய்திருக்க வேண்டும் தவிர ஒரு மயக்க மருந்து நிபுணர் செய்திருக்கக் கூடாது என்றார்.

சேதுலட்சுமி அந்த நோயாளியை உடனே வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்க வேண்டுமே தவிர அவராக ஆபரேஷன் செய்திருக்கக் கூடாது என்று மற்றொரு மருத்துவர் தெரிவித்தார்.

Wednesday, January 4, 2012

பெண் டாக்டரை கொலை செய்த ஆட்டோ டிரைவர் - கொன்றது ஏன்?



தூத்துக்குடியில் இரவு சிகிச்சை அளித்து கொண்டிருந்த பெண் டாக்டர் ஒருவர் வாளால் வெட்டியும், குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் துப்பு துலங்கியது.

கர்ப்பிணி மனைவி இறந்ததால் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் வந்து இந்த வெறியாட்டத்தை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகி விட்ட அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெண் டாக்டரை வெட்டிக் கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி 3வது மைல் காமராஜர் நகரை சேர்ந்த பேராசிரியர் திருஞானசம்பந்தம் மனைவி சேதுலட்சுமி. இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றினார். மேலும் தனியாக மருத்துவமனையும் நடத்தி வந்தார். இவரது மகள் பூரணசந்திரிகா அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். மகன் கோபிநாத் டெல்லியில் ஐஏஎஸ் படித்து வருகிறார்

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த மகேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நித்யா. 6 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 30ம் தேதி மதியம் திடீரென்று கை, கால் வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டார். உடனே அவரை மகேஷ் டாக்டர் சேதுலட்சுமியிடம் அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி நித்யா வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது. உடனே ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து என்றார். இதற்கு மகேஷ் சம்மதிக்கவே ஆபரேசன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அதன்பிறகு நித்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனது மனைவியை வேறு மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்வதாகக் கூறிய அவர் நித்யாவை பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு நித்யா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் ஆத்தரிமடைந்த மகேஷ் தனது மனைவி சாவுக்கு டாக்டர் சேதுலட்சுமி தான் காரணம் என்று கருதினார். இதனால், ஆத்திரமடைந்த மகேஷ், டாக்டர் சேதுலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மகேஷை எச்சரித்து அனுப்பினர்.

கடந்த 31ம் தேதி மனைவி உடலை அடக்கம் செய்த பிறகு தனது நண்பர்களை சந்தித்த மகேஷ் அந்த டாக்டரை சும்மா விடக்கூடாது, எனது மனைவி எப்படி துடிதுடித்து இறந்தாளோ அதே போன்று டாக்டரை சாகடிக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார். அவரது நண்பர்கள் குருமுத்து, அப்பாஸ் மற்றும் ராஜாவும் இதற்கு சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து நேற்றிரவு 10.30 மணி அளவில் மகேஷ் தனது நண்பர்கள் இருவருடன் ஆட்டோவில் டாக்டர் சேதுலட்சுமி மருத்துவமனைக்கு சென்றார். நண்பர்கள் இருவர் வெளியில் நின்று கொள்ள, டாக்டர் சேதுலட்சுமி அறைக்குள் நுழைந்த மகேஷ் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் சேதுலட்சுமியை அரிவாளால் கொடூரமாக வெட்டினார். இதில் துடிதுடித்து சேதுலட்சுமி இறந்தார். தடுத்த ஊழியர் வள்ளிக்கும் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

தகவல்அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். தனிப்படையினர் நேற்று காலை குருமுத்து, அப்பாஸ் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

மேலும் மதுரைக்கு தப்ப முயன்ற மகேஷையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிரபல ரவுடியான மகேஷ் மீது 2006ல் ஒரு கொலை வழக்கு, 2008ல் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன .என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை - நிபுணர் குழு. - புதிய அணை, கேரள காங்கிரஸ் பின்வாங்காது.



முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்கும் என்றும், 120 அடியாக குறைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு திட்டவட்டமாக கூறி விட்டது.

மேலும், நிலநடுக்கத்தால் அணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் ஐவர் குழு விட்டது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையை நவீனத் தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தினால் போதும். புது அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் கேஎம் மாணி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையில் சமீபத்தில் நேரடியாக ஆய்வு நடத்திய தொழில்நுட்ப உறுப்பினர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அளித்த ஆய்வறிக்கை நேற்று ஐவர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக, கேரள வக்கீல்களின் வாதங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதன் முடிவில் கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அறிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் ஆராய்ந்து அளித்த அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அணைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

மேலும், முல்லைப் பெரியாறு, வைகை, சிறுதோணி உள்ளிட்ட அணைகள் சமீபத்திய நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனவா என்று பார்த்த போது, எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இக்கருத்தை ஐவர் குழுவும் ஏற்கிறது.

தத்தேயும், மேத்தாவும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர் என்று கூறி, அவர்களை நீக்க வேண்டுமென்று கேரளா சார்பில் கூறிய புகாரில், உண்மையில்லை. எனவே இரு உறுப்பினர்களையும் குழுவிலிருந்து நீக்க முடியாது. கேரளாவின் புகார் நிராகரிக்கப்படுகிறது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அணையின் நீர்மட்டத்தை குறைப்பதா, வேண்டாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பாக கேரள எம்.பிக்கள் பிரதமருக்கு அளித்த மனு விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையில் உடைப்போ, விரிசலோ இல்லை என்று கேரள அரசின் வக்கீல்களே தெளிவாக கூறியுள்ளனர். எனவே இதையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ஐவர் குழு தனது அறிக்கையை தாக்கல்செய்ய கால அவகாசம் கேட்கப் போவதில்லை. பிப்ரவரி 28ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை குழு தாக்கல் செய்யும். அடுத்த கூட்டம் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறும். அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தமிழகத்திற்குப் பெரும் சாதகம்

ஐவர் குழுவின் இந்த முடிவு தமிழகத்திற்கு பெரும் சாதகமானதாக கருதப்படுகிறது. கேரளா கூறிய அனைத்துப் புகார்களும், குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்பது அம்பலமாகி விட்டதாலும், அதன் குற்றச்சாட்டுக்கள், கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டதாலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழகத்திற்குச் சாதகமாகவே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை - நிபுணர் குழு.

முல்லைப் பெரியாறு அணையை நவீனத் தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தினால் போதும். புது அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தொழில்நுட்ப நிபுணர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அணைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கையை நேற்று முன்தினம் அவர்கள் ஐவர் குழுவிடம் வழங்கினர். நேற்று இந்த ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐவர் குழுத் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்திடம் உறுப்பினர் தத்தே கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. அதில் நிலநடுக்கத்தால் எந்த வகையான பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போதைய அணையை மேலும் பலப்படுத்தினால் போதுமானது. அதற்கு நவீனத் தொழில்நுட்பங்கள் பல உள்ளன. அதைக் கடைப்பிடித்தால் போதும். உச்சநீதிமன்றம் கூறிய பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில் புதிய அணை கட்டுவதற்கான தேவையும் இல்லை, அவசியமும் இல்லை என்றார்.

புதிய அணைக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் - கேரள அமைச்சர் பேச்சு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கேரள நிதியமைச்சர் கேஎம் மாணி கூறினார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. அப்போது புதிய அணைக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு சொந்தமான இடத்தில்தான் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. தார்மீக அடிப்படையில் இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.

உச்சநீதிமன்றத்தின் உயர்நிலை குழுவுக்கு கூட புதிய அணை கட்ட கூடாது என்று கூற உரிமை இல்லை. புதிய அணைக்கான போராட்டத்தில் இருந்து கேரள காங்கிரஸ் பின்வாங்காது.

தற்போது உள்ள அணை மிகவும் பலகீனமாக உள்ளது. இதனால் தான் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. அணை பகுதியில் வசிக்கும் மக்களின் பீதியை போக்க ஓரே வழி புதிய அணை கட்டுவதுதான். கேரள மக்களின் அச்சத்தை தமிழ்நாடும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாணி கூறினார்..

Friday, December 30, 2011

உத்தான பாதாசனம், மகராசனம், புஜபாத பீடாசனம்.

உத்தான பாதாசனம்.
உத்தான பாதாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கைகளையும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டும் தரையோடு படியுமாறு வையுங்கள். முழங்கால் மடங்காமல் பாதங்களை தரைக்கு மேல் ஓரடி உயரம் மட்டும் தூக்கி, அப்படியே 15 வினாடிகள் நிலைநிறுத்துங்கள். அதற்குபிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 தடவைகள் வரை தொடக்கத்தில் செய்தாலே போதுமானது.

பயன்கள்:

அடிவயிற்று உள்ளுறுப்புகளான மூத்திரக்காய்கள், பெண்ணின் கர்ப்பப்பை, சூலகங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றின் செயல்கள், விறுவிறுப்பாகும். தொந்தி, தொடைசதைகள் குறையும்.

பருவ வயதின் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கு `சொப்பன ஸ்கலிதம்' ஏற்படாது.


மகராசனம்.

மகராசனம்

செய்முறை (நிலை-1):

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து தலைக்கு பின்னால் பிடரியில் வைக்கவும். இரு முழங்கைகளையும் தரையோடு படிய வைத்து, இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குத்திட்டு வையுங்கள். இரு பாதங்களையும் 2 அடி தூரம் பக்கவாட்டில் அகட்டிவைக்கவும்.

இரு முழங்கால்களும் வலப்பக்கமாக தரையில் படுமாறு பக்கவாட்டில் கொண்டு செல்லுங்கள். அதே சமயத்தில் தலையை இடதுபக்கமாக திருப்பவும். இதேநிலையில் இடுப்பு-புட்டப் பகுதியை வலப்பக்கம் தூக்கக்கூடாது. அடுத்தபடியாக-இதை அப்படியே, இயல்பான சுவாசத்தில் பக்கம் மாற்றி செய்யவும்.

செய்முறை (நிலை-2):

விரிப்பில் குப்புற படுத்த நிலையில் கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீட்டவும். இடுப்பு, மார்பை தரையோடு படுமாறு வைத்து முகத்தை நிமிர்த்தி மோவாயை கீழேவையுங்கள். வலதுகையை மடக்கி, இடது தோள் பட்டை- இடதுகையையும் மடக்கி, வலது தோள்பட்டையை தொடவும். இந்த நிலையில் இரு கைகளின் முழங்கையும், முதலையின் வாய் போல சேர்ந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து பின்பு சாதாரண நிலைக்கு வரவும்.

பயன்கள்:

சிறுநீரக பிரச்சினைகள் அகலும். முதுகுதண்டில் வலி இராது.


புஜபாத பீடாசனம்.
புஜபாத பீடாசனம்

செய்முறை:

விரிப்பில் தலை வைத்து மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு ஒட்டி தரையில் வைக்கவும். இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குதிகால்களை பிருஷ்ட பாகத்தில் படுமாறு வையுங்கள். கரங்களால் அந்தந்த பக்கத்து கணுக்கால்களை பிடித்து-பாதம், தலை, பிடரி, தோள்களை சற்று தரையில் அழுத்தவும்.

இடுப்பு, முதுகு தண்டு பகுதியை முடிந்தவரை மேல்நோக்கி தூங்குங்கள். இந்த நிலையில் இடுப்பு பகுதியை, முழங்கால் உயரத்துக்கு கொண்டு வரவும். இயல்பான சுவாசத்தில் இருந்து, பழைய நிலைக்கு வந்து ஆசனத்தை கலைத்து விடுங்கள்.

பயன்கள்:

புட்டப் பகுதியில் எடை குறையும். முதுகுவலி இராது. கால் நோய்கள் அணுகாது. மூத்திரக்காய், விந்துப்பை-கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.