Saturday, December 3, 2011

கடல் எல்லையை சுட்டி காட்டும் கருவியை கண்டுபிடித்த சென்னை மாணவர்களின் வேதனை.

சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு : தேசிய அளவில் அங்கீகாரம்

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.

கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது.

இதை தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாகும் !



நாளந்தா பதிப்பகத்தின் 'தந்தையும், தம்பியும்' புத்தக வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். உறுதியாக உள்ள முல்லை பெரியாறு அணையை உடைக்க சதி நடக்கிறது.

ஆனால் மத்திய அரசோ மெத்தனம் காட்டுகிறது. கேரளாவுக்கு சாதகமாக நடக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியாவே துண்டு துண்டாகிவிடும் ஆபத்து உள்ளது. இதை மத்திய அரசும், கேரளாவும் புரிந்து கொள்ள வேண்டும், என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Friday, December 2, 2011

சோனியா காந்தியின் அவசர முடிவு ஏன் ? ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போவார்களா ?



இந்தியாவில் வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வரவும், ரூபாய்க்கு எதிரான டாலரின் விலைமதிப்பைக் குறைக்கவும், ரிடெயில் (சிறு வணிகம்) துறையில் - 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று திருமதி சோனியா காந்தி அவர்களின் ஆலோசனைப்படி மத்திய அரசு அவசர அவசரமாக ஒரு முடிவை எடுத்துள்ளது.

ஏன் இந்த அவசர முடிவு ?

இது குறித்து 2005-06ல் தொகுக்கப்பட்ட சில புள்ளி விவரங்கள் இவை -

இந்தியாவில் -
விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் - 60.5 %
உற்பத்தித் துறையில் – 16.8%
சர்வீசஸ்(வர்த்தகம் போன்ற இதர பணிகளில்) -22.7%

சராசரி வளர்ச்சி விகிதம் -
விவசாயம் -2.7%
உற்பத்தி – 6.53%
இதர துறைகள் -7.9 %

இந்தியாவில் உழைக்கும் மக்களில்
வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் -7 %.
அதாவது சுமார் 4 கோடி பேர்.
நாட்டின் மொத்த உற்பத்தித்திற்னில்
அவர்கள் பங்கு -14%

சென்ற வாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள 100% அந்நிய முதலீட்டை சில்லரை வணிகத்தில் அனுமதிப்பது என்கிற முடிவால் 1 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்கிறது மத்திய அரசு. அதாவது 4 கோடி பேர் வேலை இழப்பார்கள். அதற்கு பதிலாக 1 கோடி பேருக்கு வேலை கிடைக்கும்.

பெட்டிக்கடை, மளிகைக்கடை, அண்ணாச்சி கடை, வாரச் சந்தைகள், காய்கறிக்கடை, தெருவண்டி வியாபாரி, வீட்டு வாசலில் கூடைகளில் காய்கறி -கோயம்பேடு மார்க்கெட், காந்தி மார்க்கெட், எல்லாமே அப்படியே தான் இருக்கும் - இப்போதைக்கு.

ஸ்லோ பாய்சன் கொடுத்தால் -கொஞ்சம் கொஞ்சமாக தானே செத்துப் போவார்கள். எனவே அடுத்த 10 ஆண்டுகளில் விஷம் வேலை செய்யும் !

கொஞ்சம் கொஞ்சமாக இவை எல்லாம் மறையும். அமெரிக்க “வால் மார்க்கெட்டின்” வால்கள் நம் நாடு எங்கும் முளைக்கும்.

தினக்கூலி வாங்குபவர்கள் - குப்பனும், சுப்பனும், சூப்பர் மார்க்கெட்டில் போய் மளிகை வாங்க முடியுமா ? இப்போதே பிக் பஜாரும், ரிலயன்ஸும் வந்தவுடனேயே பாதி மளிகைக் கடைகள் காணாமல் போய் விட்டன.

(இப்போதைக்கு 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள 53 நகரங்களில் மட்டும் தான் என்று மத்திய அரசு சொன்னாலும், கொஞ்ச நாட்கள் கழித்து அந்த 10 ஐ 5 ஆகவோ, 2 ஆகவோ மாற்றுவதை யார் தடுக்க முடியும் ?)

வால் மார்க்கெட் கடைகளில் என்ன கிடைக்கும் ? அமெரிக்க அழகு சாதனங்கள், சோப்புகள், ஜெர்மனியில் தயாராகும் எலெக்ட்ரானிக் சாதனங்கள், சீனாவில் தயாரிக்கப்படும் அனைத்து வித சாதனங்களும், அன்றாட சமையலறை உபகரணங்களும்,

ஆஸ்திரெலியாவிலிருந்தும் டென்மார்க்கிலிருந்தும் பால் பொருட்கள், (கடைசியாக இந்திய கிராமங்களிலிருந்து அரிசி, கோதுமை, காய்கறிகளும் )

நம் நாட்டு பிஸ்கட், டூத்பேஸ்ட், ஹார்லிக்ஸ், போர்ன்விடா ஆகியவற்றுடன் அமெரிக்க, சீன தயாரிப்புகளும் வந்து குவியும். கோகா கோலாவும், பெப்சியும் வந்ததும் நம் உள்ளூர் குளிர்பானங்களுக்கு ஏற்பட்ட கதி இந்த பொருட்களுக்கும் ஏற்படும்.

நேரடி வெளிநாட்டு மூலதனம் என்றால் அமெரிக்கர்கள் டாலர்களாக இங்கே கொண்டு வந்து கொட்டுவார்கள் எனவே ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு குறையும் என்று மத்திய அரசு சொல்கிறது.

கொக்கு தலையில் வெண்ணையை வைத்து, அது உருகி வழிந்து கண்ணை மறைக்கும்போது அந்த கொக்கைப் பிடித்து விடலாம் என்று நமது மத்திய அரசு சொல்கிறது. அமெரிக்கர்கள் என்ன பைத்தியக்காரர்களா ? சும்மா இங்கே பணத்தை கொண்டு வந்து கொட்டுவதற்கு ?

தற்போது “வால் மார்ட்”நிறுவனம் அமெரிக்காவில் பங்குதாரர்களுக்கு மூலதனத்தில் (equity) 21% லாபம் கொடுத்து வருகிறது. இதற்கு குறையாத அளவில் இந்தியாவிலும் லாபம் சம்பாதிக்கத் தானே இங்கு வருகிறார்கள். இந்தியர்களைச் சுரண்ட வரும் அமெரிக்க முதலாளிகளுக்கு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது மத்திய அரசு.

அங்கு போணியாகாத பொருட்களை எல்லாம் இங்கு நம் தலையில் கட்டி, கொள்ளை லாபம் அடித்துக் கொண்டு போகப்போகிறார்கள்.

5 வருடங்களுக்கு முன் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் அவர்கள் சொன்ன வார்த்தை இது -

“உற்பத்தியாளர்களுக்கும் (விவசாயிகளுக்கும்) இறுதி உபயோகிப்பாளர்களுக்கும் இடையில் உள்ள செயல்பாடுகள் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. எனவே இங்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முன் நாம் நிறைய யோசிக்க வேண்டும் “

5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் 35 நகரங்களில் வால்மார்ட் நிறுவனம் அனுமதிக்கப்பட்டால், அது சுமார் 10,195 பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.அதே சமயம் அதனால் ஏற்கெனவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 43,254 பேர் வேலை இழக்க நேரிடும்.

அதாவது சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் புதிதாக வேலை வாய்ப்புகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஏற்கெனவே இந்த துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர் வேலையை இழப்பர்.

இத்தகைய கொடுமைகளுடனாவது இது தேவையா ?

மத்திய அரசு ஏன் பிடிவாதமாக, அவசர அவசரமாக இதைச் செய்கிறது ?

இந்த மூன்றில் எதாவது ஒன்று தான் (அல்லது மூன்றுமே கூட ) காரணமாக இருக்க முடியும் என்கிறார்கள் இது பற்றி விவரம் தெரிந்தவர்கள் -

1) விலைவாசி உயர்வு, கருப்பு பணம் பற்றி பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் விவாதங்களை திசை திருப்ப -

2) வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை, வெள்ளையாக்கி அந்நிய முதலீடாக இந்தியாவிற்குள் கொண்டு வர -

3) அண்மையில் காங்கிரஸ் தலைமையை சந்தித்த சில வெளிநாட்டு விசேஷ விருந்தினர்களின் அழுத்தமான ஆலோசனையாக – (இதை டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மட்டுமே உறுதி செய்ய முடியும்!)

இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும் சரி - எதிர்ப்பை மீறி பிடிவாதமாகக் திணிக்க முயன்றால் இது காங்கிரஸ் கட்சியின் ஒரு தற்கொலை முயற்சியாகவே முடியப் போகிறது.

Thursday, December 1, 2011

மகாராஷ்டிராவில் கர்நாடக மக்களுக்கு எதிராக கலவரம் வெடிப்பதைத் தடுக்க முடியாது. பால்தாக்கரே.



பிரபல கன்னட எழுத்தாளரும், ஞானபீட விருது பெற்றவருமான சந்திரசேகர கம்பராவின் மராத்தியர்கள் குறித்த கருத்துக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மகாராஷ்டிராவில் வசிக்கும் கர்நாடக மக்களுக்கு எதிராக கலவரம் வெடிப்பதை தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தனது கட்சிப் பத்திரிக்கையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளதாவது:

கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள மராத்தி மக்கள் குழப்பம் விளைவிக்க பிறந்தவர்கள் என்றும், அவர்கள் மராத்தியில் படிக்க விரும்பினால் மகாராஷ்டிராவிற்க்குப் போக வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார் கம்பரா.


எட்டு கோடி மராத்தி மக்கள் சார்பில் நான் ஞான பீட கமிட்டியைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், கம்பராவுக்கு அளிக்கப்பட்ட ஞானபீட விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே.

லட்சக்கணக்கான கர்நாடக மக்கள் பல்வேறு தொழில்களில் மும்பையிலும், மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளிலும் ஈடுபட்டுள்ளனர், இங்கு வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஹோட்டல் தொழிலையே உடுப்பியைச் சேர்ந்தவர்கள்தான் கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரையும் சொந்த மாநிலத்திற்கேத் திரும்பிப் போங்கள் என்று நாங்கள் கூறினால் என்னாகும்?.

மொழி என்பது யாருடைய எதிரியும் அல்ல என்பதை கம்பரா நினைவில் கொள்ள வேண்டும். கிரிஷ் கர்னாட், டாக்டர் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி, பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல் ஆகியோர் மராத்தியர்களின் மனதைக் கவர்ந்தவர்கள் என்பதை கம்பரா மறந்து விடக் கூடாது.

கர்நாடகத்தை ஆட்சி புரிந்து வருபவர்கள், மராத்தியர்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வரும் குண்டர்களை கட்டி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இங்கு (மகாராஷ்டிராவில்) தீப்பொறி கிளம்புவதை தடுக்க முடியாது.

மராத்தியர்களைத் தாக்கும் குண்டர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். நாங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இதைக் கூறுகிறோம். இதைச் சொல்வதன் மூலம் நாங்கள் ஆண்மையற்றவர்கள் என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

பால் தாக்கரேவின் இந்த எச்சரிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாவம் தமிழன் ! - பழ. நெடுமாறன்.



கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.

தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.

2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.

1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.

எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.

ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.

அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.

தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.

முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.

அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.

இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.

அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.

காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.

பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.

புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.

தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.

பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?

மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):

தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.

ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.

பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன்.

நன்றி - தினமணி

Wednesday, November 30, 2011

ஹம்சாசனம், மயூராசனம், உஸட்டாசனம்.

ஹம்சாசனம்.
ஹம்சாசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி வஜ்ராசனத்தில் அமருங்கள். முழங்காலை சற்று அகலமாக பக்கவாட்டில் விரித்து, இரு கைகளையும் தரையில் ஊன்றவும். இரு கால்களையும் மெதுவாக பின்புறம் நீட்டுங்கள். இருகால்களின் பெருவிரல்களும் தரையில் படுமாறு இருக்கட்டும். இரு முழங்கைகளின் மேல் உடல்பாரத்தை நிலை நிறுத்தவும். அடுத்தபடியாக, உடலை 25 டிகிரி என்கிற அளவில், காலில் இருந்து தலை வரை நிறுத்தி, நிமிர்ந்து பார்க்க எத்தனியுங்கள்.

பயன்கள்:

ஆன்மிக குணம் மேலோங்கும். வாயுத்தொல்லை, தொந்தி, குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் வராது. மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.


மயூராசனம்.
மயூராசனம்

செய்முறை:

குத்தவைத்து உட்காரவும். இரண்டு கைகளையும் இரண்டங்குல இடைவெளிவிட்டு, தரையில் பதிக்கவும். இரு முழங்கைகளின் மேலும், முதுகை சற்று மேல்நோக்கி தூக்குங்கள். தொப்புளின் அடிப்பகுதி, முழங்கை மேல் இருக்கட்டும். கால்களை மெதுவாக நீட்டி, தலையை நிமிர்த்தியநிலையில், 15 விநாடிகள் ஆசனத்தில் இருங்கள். அதற்கு பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

முகம் அழகு பெறும். நரை, திரை பாதிப்புகள் நெருங்காது. இளமை நீடிக்கும். புத்திர பேறுக்கான ஆசனமிது. ஜனன உறுப்புகனின் இயக்கம் சீராக இருக்கும். விந்து கெட்டிப்படும். விரை வீக்கம் குணமாகும். பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி, துரிதமாக அமையும். கர்ப்பப்பை-மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

குறிப்பு:

மயூராசனம் செய்வோருக்கு போகஇச்சை கட்டுப்படும். கட்டுக்கடங்காத காம-குரோத எண்ணம் மாறி, சாந்த சொரூபியாக-ஒழுக்கம் மிகுந்தவர்களாக திகழுவர். பயம் வேண்டாம். இச்சை கட்டுப்படுமே தவிர, அற்றுப்போகாது. ராட்சச எண்ணங்கள் மாறி சாத்வீக எண்ணம் மேலோங்கும்.


உஸட்டாசனம்.
உஸட்டாசனம்

செய்முறை:

விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். இடுப்பை மெதுவாக தூக்கி நிமிர்ந்து, அல்லது முழங்காலில் நின்றபடியே சற்று பின்னால் வளையுங்கள். வலதுகையால் வலதுகுதிகாலையும், இடதுகையால் இடதுகுதிகாலையும் பிடிக்கவும். தலையை சற்று தளர்வாக பின்னால் தொங்கவிடுங்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்மேபாது- முதுகின் மேற்புற பகுதி மற்றும் பிருஷ்டபாகம், கால் பகுதி ஆகியவை, நீள்சதுரவடிவில் அமைய வேண்டும்.

பயன்கள்:

இடுப்பு மெலியும். வாய்வு தொல்லை, அல்சர் வராது. மலச்சிக்கல் நீங்கும். இதய நோய்கள் வராது.

Saturday, November 19, 2011

இந்தப் புவியே ஜெயலலிதா புகழ் பாடட்டும் ! கலைஞர் கருணாநிதி கடிதம் !



திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற செயல்

தமிழ்நாட்டு மக்களின் ஏமாளித்தனத்தின் காரணமாக எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்ட ஜெயலலிதா, வந்ததும் வராததுமாக வரவு செலவு திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியை சுமத்திவிட்டு, அத்துடன் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல காரியங்களையெல்லாம் தொடர்ந்து கெடுத்து வரும் முயற்சியை மேலும் தொடர்ந்து, ''ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற'' செயலாக இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு, பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியவில்லை

''உயரப் போகிறோம்'' என்றுதானே அவருக்கும், அவர் அணியின் வேட்பாளர்களுக்கும் அபரிதமான வாக்குகளை அளித்து அரியாசனத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அய்யோ பாவம். நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியாமல், ஜெயலலிதா படும் பாட்டையும், அவர் மக்களை படுத்தி வைக்கும் பாட்டையும் ஏழை, நடுத்தர மக்கள் இதயம் வெடித்து சாகிற அளவுக்கு வரி உயர்வு, கட்டண உயர்வு, விலை உயர்வு என்று இப்படி உயர்வு, உயர்வு எனக்கூறி தமிழக ஏழைபாழைகளை குழியில் தள்ளி வேடிக்கைப் பார்க்கும் விளையாட்டை அல்லவா இப்போது அவர் நடத்தி வருகிறார்.

மக்களை பழிவாங்கும் காரியத்தை நடத்திக்கொண்டே, அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார்.

மக்கள் தலையில் இந்தச் சுமைகளையெல்லாம் ஏற்றி வைத்துள்ள ஜெயலலிதா, தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்ற வரையில் இதற்கெல்லாம் காரணம் கடந்த கால திமுக ஆட்சிதான், அந்த ஆட்சியில் கடன் பளு அதிகமாகிவிட்டது, அவற்றைக் குறைக்கத் தான், என்று பழியை நம்மீது போட்டியிருக்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மைதான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழையெளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் கழக ஆட்சியிலே அதிகப்படுத்தவில்லை.

ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக, கொடுமைப்படுத்த அல்ல

ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக இருப்பதே தவிர, அவர்களைப் கொடுமைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்தி அதிலே இன்பம் காண்பதற்காக அல்ல. கழக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் நிறுவனங்களுக்குள்ள கடன் சுமைகளைக் குறைக்க இந்த கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்த வேண்டுமென்று என்னிடமும் கூறுவார்கள். ஆனால் பொதுமக்கள்தானே, அதை ஏற்க வேண்டும்? அவர்கள் எங்கே போவார்கள்? அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்றுதான் கூறியிருக்கிறேன்.

யார் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன, மக்கள்தானே இந்த உயர்வுகளையெல்லாம் சந்திக்கப்போகிறார்கள், ஏற்றுங்கள் கட்டணங்களை, அதிலும் ஒரே நேரத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் கட்டணம் என்று அறிவிக்கலாம் என்று சொல்கின்ற மனப்பான்மை எனக்கில்லை. ஏனென்றால் என் இதயத்தில் இரக்கம் இருக்கிறது.

மூத்த அமைச்சர்களாவது முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா?

ஒரு அரசு சிந்திக்க வேண்டாமா? ஒரே நேரத்தில் இந்த மூன்று கட்டணங்களையும் உயர்த்தினால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், மாதச் சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலவு 500 ரூபாய் அதிகமானால் எப்படி அவர்களால் சமாளிக்க முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? மற்ற மூத்த அமைச்சர்களாவது இதுபற்றி முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா? அமைச்சரவைக் கூட்டம் அதற்காகத்தானே நடந்தது. கொலு பொம்மைகளைப் போல வீற்றிருந்து, பாராட்டுக்களை, புகழுரைகளை வழங்குவதிலேயே கவனத்தைச் செலுத்துவது மட்டும் நல்லதா?

குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை

இந்த உயர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்களில் திருவள்ளூரைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர், விலை உயர்வு காரணமாக, இனி குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை, மீண்டும் கற்காலத்திற்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பத் தலைவி, விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர், பட்ஜெட்போட்டு குடும்பம் நடத்துபவர்கள் மிகவும் சிரமப்படுவர் என்று கூறியிருக்கிறார்.

''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார்

ஜெயலலிதா தனது அறிக்கையில் இறுதியாக வெள்ளம் வரும் முன்பே அணை போட வேண்டும், மரணப் படுக்கையில் உள்ள இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால், அவை செயலற்றுவிடும் என்பதற்காகத்தான் இந்த முடிவினை மேற்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

உண்மையில் அவர் ''ஆக்சிஜன்'' தருக்கிற முயற்சியில் ஈடுபடவில்லை. பொதுமக்கள் தலையிலே இந்தச் சுமைகளையெல்லாம் சுமத்தி, இதுவரை அவர்களுக்குச் செலுத்தப்பட்டு வந்த ''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார் என்பது தான் உண்மையாகும்.

இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகிய மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றி அவர்கள் தலைகளை நொறுக்கிட வைத்த பெருமைக்குரியவர் ஜெயா என்று இந்தப் புவியே அவர் புகழ் பாடட்டும்.

இவ்வாறு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.