Thursday, December 1, 2011

பாவம் தமிழன் ! - பழ. நெடுமாறன்.



கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.

தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.

2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.

1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.

எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.

ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.

அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.

தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.

முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.

அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.

இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.

அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.

காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.

பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.

புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.

தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.

பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?

மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):

தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.

ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.

பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன்.

நன்றி - தினமணி

Wednesday, November 30, 2011

ஹம்சாசனம், மயூராசனம், உஸட்டாசனம்.

ஹம்சாசனம்.
ஹம்சாசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி வஜ்ராசனத்தில் அமருங்கள். முழங்காலை சற்று அகலமாக பக்கவாட்டில் விரித்து, இரு கைகளையும் தரையில் ஊன்றவும். இரு கால்களையும் மெதுவாக பின்புறம் நீட்டுங்கள். இருகால்களின் பெருவிரல்களும் தரையில் படுமாறு இருக்கட்டும். இரு முழங்கைகளின் மேல் உடல்பாரத்தை நிலை நிறுத்தவும். அடுத்தபடியாக, உடலை 25 டிகிரி என்கிற அளவில், காலில் இருந்து தலை வரை நிறுத்தி, நிமிர்ந்து பார்க்க எத்தனியுங்கள்.

பயன்கள்:

ஆன்மிக குணம் மேலோங்கும். வாயுத்தொல்லை, தொந்தி, குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் வராது. மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.


மயூராசனம்.
மயூராசனம்

செய்முறை:

குத்தவைத்து உட்காரவும். இரண்டு கைகளையும் இரண்டங்குல இடைவெளிவிட்டு, தரையில் பதிக்கவும். இரு முழங்கைகளின் மேலும், முதுகை சற்று மேல்நோக்கி தூக்குங்கள். தொப்புளின் அடிப்பகுதி, முழங்கை மேல் இருக்கட்டும். கால்களை மெதுவாக நீட்டி, தலையை நிமிர்த்தியநிலையில், 15 விநாடிகள் ஆசனத்தில் இருங்கள். அதற்கு பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

முகம் அழகு பெறும். நரை, திரை பாதிப்புகள் நெருங்காது. இளமை நீடிக்கும். புத்திர பேறுக்கான ஆசனமிது. ஜனன உறுப்புகனின் இயக்கம் சீராக இருக்கும். விந்து கெட்டிப்படும். விரை வீக்கம் குணமாகும். பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி, துரிதமாக அமையும். கர்ப்பப்பை-மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

குறிப்பு:

மயூராசனம் செய்வோருக்கு போகஇச்சை கட்டுப்படும். கட்டுக்கடங்காத காம-குரோத எண்ணம் மாறி, சாந்த சொரூபியாக-ஒழுக்கம் மிகுந்தவர்களாக திகழுவர். பயம் வேண்டாம். இச்சை கட்டுப்படுமே தவிர, அற்றுப்போகாது. ராட்சச எண்ணங்கள் மாறி சாத்வீக எண்ணம் மேலோங்கும்.


உஸட்டாசனம்.
உஸட்டாசனம்

செய்முறை:

விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். இடுப்பை மெதுவாக தூக்கி நிமிர்ந்து, அல்லது முழங்காலில் நின்றபடியே சற்று பின்னால் வளையுங்கள். வலதுகையால் வலதுகுதிகாலையும், இடதுகையால் இடதுகுதிகாலையும் பிடிக்கவும். தலையை சற்று தளர்வாக பின்னால் தொங்கவிடுங்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்மேபாது- முதுகின் மேற்புற பகுதி மற்றும் பிருஷ்டபாகம், கால் பகுதி ஆகியவை, நீள்சதுரவடிவில் அமைய வேண்டும்.

பயன்கள்:

இடுப்பு மெலியும். வாய்வு தொல்லை, அல்சர் வராது. மலச்சிக்கல் நீங்கும். இதய நோய்கள் வராது.

Saturday, November 19, 2011

இந்தப் புவியே ஜெயலலிதா புகழ் பாடட்டும் ! கலைஞர் கருணாநிதி கடிதம் !



திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற செயல்

தமிழ்நாட்டு மக்களின் ஏமாளித்தனத்தின் காரணமாக எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்ட ஜெயலலிதா, வந்ததும் வராததுமாக வரவு செலவு திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியை சுமத்திவிட்டு, அத்துடன் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல காரியங்களையெல்லாம் தொடர்ந்து கெடுத்து வரும் முயற்சியை மேலும் தொடர்ந்து, ''ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற'' செயலாக இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு, பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியவில்லை

''உயரப் போகிறோம்'' என்றுதானே அவருக்கும், அவர் அணியின் வேட்பாளர்களுக்கும் அபரிதமான வாக்குகளை அளித்து அரியாசனத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அய்யோ பாவம். நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியாமல், ஜெயலலிதா படும் பாட்டையும், அவர் மக்களை படுத்தி வைக்கும் பாட்டையும் ஏழை, நடுத்தர மக்கள் இதயம் வெடித்து சாகிற அளவுக்கு வரி உயர்வு, கட்டண உயர்வு, விலை உயர்வு என்று இப்படி உயர்வு, உயர்வு எனக்கூறி தமிழக ஏழைபாழைகளை குழியில் தள்ளி வேடிக்கைப் பார்க்கும் விளையாட்டை அல்லவா இப்போது அவர் நடத்தி வருகிறார்.

மக்களை பழிவாங்கும் காரியத்தை நடத்திக்கொண்டே, அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார்.

மக்கள் தலையில் இந்தச் சுமைகளையெல்லாம் ஏற்றி வைத்துள்ள ஜெயலலிதா, தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்ற வரையில் இதற்கெல்லாம் காரணம் கடந்த கால திமுக ஆட்சிதான், அந்த ஆட்சியில் கடன் பளு அதிகமாகிவிட்டது, அவற்றைக் குறைக்கத் தான், என்று பழியை நம்மீது போட்டியிருக்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மைதான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழையெளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் கழக ஆட்சியிலே அதிகப்படுத்தவில்லை.

ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக, கொடுமைப்படுத்த அல்ல

ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக இருப்பதே தவிர, அவர்களைப் கொடுமைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்தி அதிலே இன்பம் காண்பதற்காக அல்ல. கழக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் நிறுவனங்களுக்குள்ள கடன் சுமைகளைக் குறைக்க இந்த கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்த வேண்டுமென்று என்னிடமும் கூறுவார்கள். ஆனால் பொதுமக்கள்தானே, அதை ஏற்க வேண்டும்? அவர்கள் எங்கே போவார்கள்? அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்றுதான் கூறியிருக்கிறேன்.

யார் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன, மக்கள்தானே இந்த உயர்வுகளையெல்லாம் சந்திக்கப்போகிறார்கள், ஏற்றுங்கள் கட்டணங்களை, அதிலும் ஒரே நேரத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் கட்டணம் என்று அறிவிக்கலாம் என்று சொல்கின்ற மனப்பான்மை எனக்கில்லை. ஏனென்றால் என் இதயத்தில் இரக்கம் இருக்கிறது.

மூத்த அமைச்சர்களாவது முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா?

ஒரு அரசு சிந்திக்க வேண்டாமா? ஒரே நேரத்தில் இந்த மூன்று கட்டணங்களையும் உயர்த்தினால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், மாதச் சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலவு 500 ரூபாய் அதிகமானால் எப்படி அவர்களால் சமாளிக்க முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? மற்ற மூத்த அமைச்சர்களாவது இதுபற்றி முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா? அமைச்சரவைக் கூட்டம் அதற்காகத்தானே நடந்தது. கொலு பொம்மைகளைப் போல வீற்றிருந்து, பாராட்டுக்களை, புகழுரைகளை வழங்குவதிலேயே கவனத்தைச் செலுத்துவது மட்டும் நல்லதா?

குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை

இந்த உயர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்களில் திருவள்ளூரைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர், விலை உயர்வு காரணமாக, இனி குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை, மீண்டும் கற்காலத்திற்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பத் தலைவி, விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர், பட்ஜெட்போட்டு குடும்பம் நடத்துபவர்கள் மிகவும் சிரமப்படுவர் என்று கூறியிருக்கிறார்.

''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார்

ஜெயலலிதா தனது அறிக்கையில் இறுதியாக வெள்ளம் வரும் முன்பே அணை போட வேண்டும், மரணப் படுக்கையில் உள்ள இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால், அவை செயலற்றுவிடும் என்பதற்காகத்தான் இந்த முடிவினை மேற்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

உண்மையில் அவர் ''ஆக்சிஜன்'' தருக்கிற முயற்சியில் ஈடுபடவில்லை. பொதுமக்கள் தலையிலே இந்தச் சுமைகளையெல்லாம் சுமத்தி, இதுவரை அவர்களுக்குச் செலுத்தப்பட்டு வந்த ''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார் என்பது தான் உண்மையாகும்.

இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகிய மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றி அவர்கள் தலைகளை நொறுக்கிட வைத்த பெருமைக்குரியவர் ஜெயா என்று இந்தப் புவியே அவர் புகழ் பாடட்டும்.

இவ்வாறு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.

Friday, November 18, 2011

வாமதேவ ஆசனம், ஸ்வஸ்திகா ஆசனம், ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்.

வாமதேவ ஆசனம்.
வாமதேவ ஆசனம்

செய்முறை:

வஜ்ராசனநிலையில் அமரவும். இடுப்பை இடப்பக்கமாக கீழே சரிந்து உட்கார்ந்து, மேலிருக்கும் வலதுகாலை, அப்படியே பின்னால் கொண்டு போங்கள். அதாவது, பிருஷ்டபாகம் முழுவதுமாக பின்னால் போகவேண்டும். இடது முழங்காலை தொடையோடு ஒட்டியிருக்குமாறு மடியுங்கள். அடுத்தபடியாக இரண்டு கால் விரல்களையும், கரங்களின் உதவியோடு ஒன்றிணையுங்கள் அடுத்த படியாக, இதுபோல் பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

மூட்டு பிடிப்பு, கால்பாத வலி, குதிகால் வலி மற்றும் முழங்கால் மூட்டு வீக்கம் மறையும். திருமணமான பெண்களுக்கு இடை, தொடையில் அதிக சதை போட்டு பிருஷ்டங்கள் பெரிதாகும். தினந்தோறும் வாமதேவ ஆசனம் செய்துவந்தால், `மெலிய வேண்டிய' அத்தனை உறுப்புகளும் மெலிந்து உடம்பு சிக் அழகோடு திகழும். பருவ பெண்களுக்கு யானையின் துதிக்கை போல, வாளிப்பான கால்கள் அமையும்.


ஸ்வஸ்திகா ஆசனம்.
ஸ்வஸ்திகா ஆசனம்

செய்முறை:

இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். வலதுகாலை மடக்கி, இடது முழங்கால் பின்புறசந்தில் வையுங்கள். வலது முழங்கால் பின்புற சந்தில், இடது கால் மடங்கிய நிலையில் இருக்கட்டும். இரண்டு கைகளையும் முழங்காலின் மேல், மாற்றி வைத்து நிமிர்ந்து உட்காரவேண்டும்.

பயன்கள்:

முழங்கால்-மூட்டுவலி நீங்கும். இடுப்பு எடை, அடித்தொடை சதை குறையும். இது தியான ஆசனங்களில், குறிப்பிடத்தக்க ஒன்று!


ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்.
ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலதுகாலை மட்டும் செங்குத்தாக முன்னோக்கி நீட்டவும். அப்போது உங்களின் இரு கைகளும், வலது உள்ளங்காலை மேவியநிலையில், கும்பிட்டபடி இருக்கட்டும். இந்த நிலையில் மூச்சு இயல்பாக இருக்க வேண்டும். ஆசனத்தை கலைத்து இயல்பு நிலைக்கு வாருங்கள். அடுத்த படியாக, இடதுகாலை மாற்றி போட்டு, முன்புபோல ஆசனத்தை செய்யவும்.

பயன்கள்:

கால் சம்பந்தமான நோய்கள் வராது. இடுப்பு, தொடை எடை குறையும். குதிகால் வெடிப்பு, பாதவலி இருந்தால் பறந்துபோகும். யானைக்கால் வியாதியை தடுக்கும், மிகச்சிறந்த ஆசனமிது!

Thursday, November 17, 2011

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செய்த மதிப்பெண் முறை மாற்றம் சட்ட விரோதமானது. உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தேர்வு மதிப்பீடு முறையை கொண்டு வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவர்கள், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜெனரல் சர்ஜரி என்ற ஒரு தேர்வு உள்ளது. அதில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன்படி, ஜெனரல் சர்ஜரி தேர்வு என்பது கிளினிக்கல் சர்ஜரி (செய்முறை), ஆர்த்தோ கிளினிக்கல் (செய்முறை) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

இதன்படி கிளினிக்கல் சர்ஜரி (செய்முறை) தேர்வில் 100-க்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களும், ஆர்த்தோ கிளினிக்கல் (செய்முறை) தேர்வில் 50-க்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும் பெற்றால் மட்டுமே தேர்ச்சி அளிக்கப்படும் என்று மதிப்பெண் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். ஜெனரல் சர்ஜரி தேர்வில் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதே இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதியாகும். அதன்படி நாங்கள் தேர்ச்சி பெற தகுதி பெற்றிருக்கிறோம்.

இந்த விதிமுறைக்கு முரணாக, அந்தப் பாடத்தை இரண்டாகப் பிரித்து, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தால் நாங்கள் தேர்ச்சி பெற இயலவில்லை. இந்த மாற்றம் சட்ட விரோதமாகும்.

எனவே, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீது கடந்த ஜூன் மாதம் விசாரணை நடத்திய நீதிபதி என். ஜோதிமணி, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.



இதனை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நர்மதா சம்பத், கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு முறையில் மாற்றம் செய்யவில்லை. நவீன மருத்துவ உலகில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் புலமை பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெனரல் சர்ஜரி பாடத்தில் ஒரு பகுதியில் கவனம் செலுத்தும் மாணவர்கள், ஆர்த்தோ போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து விடுகின்றனர்.

எனவே, ஆர்த்தோ உள்பட மருத்துவப் படிப்பின் எல்லா பகுதிகளிலும் மாணவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று வாதிட்டார்.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ். தங்கசிவன், நடப்பு கல்வி ஆண்டு மத்தியில் இந்த முறையை கொண்டு வந்ததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பாடத்தை இரண்டாகப் பிரித்து தேர்வு நடத்துவதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்ற முடிவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வாறு வந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதிகள் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய மதிப்பீட்டு தேர்வு முறையானது இந்திய மருத்துவ கல்வி கவுன்சில் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது.

மேலும் இந்த புதியமுறை தன்னிச்சையாக உள்ளது. ஆகவே, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்து தனி நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு செல்லும். பல்கலைக்கழகத்தின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். எனினும், ஆர்த்தோ போன்ற மருத்துவப் படிப்பின் எல்லா பிரிவுகளிலும் மாணவர்களை கவனம் செலுத்தச் செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் கலந்தாலோசித்து, பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முடிவை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போது மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றம் சட்ட விரோதமானது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Wednesday, November 16, 2011

சித்தாசனம், சுகாசனம், மாலாசனம்.

சித்தாசனம்.
சித்தாசனம்

செய்முறை:Justify Fullவலதுகாலை மடக்கி உடலோடு ஒட்டிவைத்து, குதிகால் அடிவயிற்றில் படுவதுபோல் நிலைநிறுத்துங்கள். அதன்மேல் இடதுகால், மடிந்திருக்கட்டும். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். உங்களின் இடது உள்ளங்கையின் மேல், வலது புறங்கை (பைரவி முத்திரை) இருக்கட்டும். கண் பார்வையை கூர்மையாக்கி, அப்படியே மூக்கு நுனியை பாருங்கள்.

பயன்கள்:

பூரண உடல்நலம் கிட்டும். மனக்குழப்பங்கள் அகலும். புத்தர் தவம் செய்து புனிதம் பெற்ற ஆசனமிது. சிந்தனையில் தெளிவில்லாமல் உழல்பவர்கள், குழப்பத்தில் இருப்போர் அனைவரும், சித்தாசனத்தின் வாயிலாக, சிந்தனை தெளிவை பெறலாம்.


சுகாசனம்.
சுகாசனம்

செய்முறை:

விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். முதலில் வலதுகாலை மடக்கி உடலோடு ஒட்டிவையுங்கள். வலது காலின் மேல் இடதுகால் இருக்கட்டும். முதுகு தண்டை நிமிர்த்தி உட்கார்ந்த நிலையில், `சின் முத்திரை'யோடு, அந்தந்த பக்கத்து முழங்காலில் உள்ளங்கை மேலே தெரியுமாறு வையுங்கள். இதில் அவரவர்களுக்கு சுமமான நேரம் வரை இருக்கலாம். அதற்கு பிறகு, பழைய நிலைக்கு வரலாம். மாற்று ஆசனமாக கால் மாற்றி செய்யவேண்டும்.

பயன்கள்:

இது தியான ஆசனங்களில் ஒன்று. முழங்கால், மூட்டு வலி குணமாகும்.


மாலாசனம்.
மாலாசனம்

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி குத்தவைத்து உட்காரவும். இரு முழங்காலையும் விரித்து, குனிந்து உடம்பை முன்னோக்கி கொண்டு வாருங்கள். இரண்டு கைகளும் முழங்காலுக்கு வெளிப்பக்கமாக சுற்றியநிலையில், முதுகுப் பக்கத்தோடு ஒன்றிணையட்டும்.

பயன்கள்:

உடல் எடை அளவோடு இருக்கும். கால்கள் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும். மூலம், விரைவீக்கம் குணமாகும். மார்பு எலும்புகள் நன்கு விரியும். திரண்ட தோள்கள் அமையும். இடுப்பு சுருங்கும். பெண்களுக்கு பிடியிடை கிட்டும்.

Tuesday, November 15, 2011

எம்.பி.பி.எஸ். மாணவர்களின் வாழ்க்கையில் வேண்டுமென்றே விளையாடும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன்.



புதிய மதிப்பெண் விதிமுறையால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் 1300பேர் தோல்விக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து தோல்வியடைந்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

9-11-2011 அன்று இறுதி விசாரணைக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிற்கு இந்த வழக்கு வந்தது.

முன்னதாக சென்னை மற்றும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய மாணவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்யை சந்தித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் விதிமுறையை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று, அவரது உத்தரவின்படி புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்தது.

உயர் நீதிமன்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்களிடம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நர்மதாசம்பத், பழைய முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிட அரசு கூறிய ஆலோசனையை ஏற்று, புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்வதாக கூறினார்.

இதனைக் கேட்டு கடுங்கோபம் கொண்ட தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்கள், வழக்கறிஞர் நர்மதாசம்பத்திடம் எங்களது மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி இவ்வழக்கில் அளித்த தீர்ப்பை நீங்கள் மதிக்கவில்லை., ஆனால், அதே நேரத்தில் அரசாங்கம் கூறியது என்று புதிய மதிப்பெண் விதிமுறையை திரும்பப்பெறுகிறீர்கள். நாங்கள் சொன்னதும் இதைத்தானே! எங்கள் உத்தரவிற்கு என்ன மதிப்பு கொடுத்தீர்கள் என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.

பின்னர், முதல்தாள்-100, இரண்டாம்தாள்-100 இவற்றின் கூடுதலான 200மதிப்பெண்ணிற்கு, 100மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்னும் பழையமதிப்பெண் முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிட ஆணை பிறப்பித்தார்.

இவ் வழக்கில் ஒரு பிரிவினர் 200க்கு 100மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று தோல்விக்குள்ளாக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்வைத் தந்தது. அவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுவிட்டதால் தங்கள் மனுக்களை திரும்பப் பெறுவதாகக் கூறினார்கள்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் மேற்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே விதிமுறையை ரத்து செய்வதாகக் கூறியது. எனவே நீதிபதி வழக்குகள் ஆனைத்தையும் தள்ளுபடி செய்தார்.

அதிர்ச்சியுற்ற மாணவர்களின் மற்றோரு பிரிவினர் கோரிக்கை வேறுமாதிரியானது. அதாவது, முதல்தாள்-100, இரண்டாம்தாள்-100, வாய்மோழித்தேர்வு-100. இம்மூன்றின் கூடுதலான 300மதிப்பெண்ணிற்குக்கு 150மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்னும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதியினை சுட்டிக்காட்டி, இவ்விதிப்படியும் தேர்ச்சி வேண்டும் என்றனர்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டு உணவு இடைவேளைக்கு சென்றுவிட்டார்.

பிற்பகல் வாதத்தின் முடிவில் அவர்களின் கோரிக்கையும் ஏற்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதிகள்படி இவர்களுக்கும் தேர்ச்சியினை வழங்க உத்தரவிட்டார். மேலும் இதுநாள் வரை இம்மாணவர்களுக்கு வருகைப் பதிவையினையும் தர தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கினை முடித்தார்.

புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்த பிறகு, திருத்தப்பட்ட தேர்வு முடிவில் 85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.



தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவை நவம்பர் 13 - ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிட்டது

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளின்படி 70 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய மதிப்பெண் முறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை. இதனால்தான் மீண்டும் 30 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தரப்பிலும், மாணவர்கள் தரப்பிலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படாததால் அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாகிறார். எனவே அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம் என்று அறிவித்தனர்.

பெற்றோர்களோ, எம்.பி.பி.எஸ். மாணவர்களின் வாழ்க்கையில் வேண்டுமென்றே விளையாடுகிறார் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன். எங்களக்கு இது இரண்டுமாத மன உளைச்சள். இதற்கு தீர்வுகாணமல் விடப்போவதில்லை என்றனர்.

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களைப் போலவே இறுதி ஆண்டு முடித்த மாணவர்களுக்கும் புதிய மதிப்பெண் முறையால் பாதிப்பு ஏற்படவே அவர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பழைய மதிப்பெண் முறைப்படி இவர்கள் அனைவரும் தேர்ச்சியுற்றவர்கள் என்றும், எனவே இவர்கள் அனைவரையும் பயிற்சி மருத்துவராக பணிபுரிய உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பு வழங்கி இரண்டு மாதமாகிறது,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இதுவரை எங்களை பயிற்சி மருத்துவராக பணிபுரிய அனுமதிக்கவில்லை. இதுவும் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்றனர்.

புதியவிதி முறையால், எம்.பி.பி.எஸ். மாணவர்களைத் தொடர்ந்து பல்மருத்துவம் பயிலும் பி.டி.எஸ். மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களும் போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

இதுபோலவே, இந்தியமருத்துவம் பயிலும் மாணவர்களும், மருத்துவ துணைப் படிப்பான செவிலியர் பயிலும் மாணவர்களும் புதியவிதி முறையினை எதிர்த்துப் போராடுகின்றனர்.

இப்படிச் சுற்றிச்சுற்றி அதிருப்தியின் விளிம்பில் இருக்கும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன் என்ன செய்யப்போகிறார்?

திருத்தப்பட்ட தேர்வு முடிவில் இந்த ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடுவதில் தவறான முறை கடைப்பிடிக்கப்பட்டு மீண்டும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வேண்டுமென்றே மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன், தானாக முன்வந்து தனது பதவியை இராஜினமா செய்யும்வரை விடப்போவதில்லை என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சன் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.