Monday, August 15, 2011

பிரதமர் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை : அன்னா குழு குற்றச்சாட்டு.



லோக்பால் விவகாரம் குறித்த பிரதமரின் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை என்று அன்னா ஹஸாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது சுதந்திர தின உரையில், நமது நீதித்துறையை வலுவாக்காமல் நம்மால் ஊழலை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. உயர் மட்ட அளவில் ஊழலை ஒழிக்க கடுமையான, வலுவான லோக்பால் சட்டம் தேவை.

அதற்காக பட்டினி கிடப்பது, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது ஊழலை ஒழிக்க உதவாது. இந்தியாவின் நீதித்துறையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்குத் தான் அன்னா குழுவினர் பிரதமரின் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று அன்னா குழுவில் ஒருவரான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிடிஐக்கு கூறியதாவது,

பிரதமர் இறுதி நடுவர் போன்று பேசுகிறார். நீங்கள் போராட்டம் எல்லாம் நடத்தக் கூடாது என்கிறார். இது மக்களின் விருப்பத்திற்கு எதிராக லோக்பால் மசோதாவை அவர்கள் மீது திணிப்பது போன்றதாகும். லோக்பால் மசோதாவை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது தவறு என்கிறார்.

மக்களின் கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அரசின் லோக்பால் மசோதாவை மக்கள் நிராகரித்துள்ளதாகக் கணக்கெடுப்புகளும், வாக்கெடுப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

ஹஸாரே எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற காரணத்தை பிரதமர் தெரிவிக்கவில்லை. ஒரு போலியான மசோதாவை எதிர்த்து தான் இந்த போராட்டம். அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவுக்கு பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை பிரதமர் தெரிவிக்கவில்லை என்றார்.

ஹசாரே உண்ணாவிரதம் தேவையற்றது : ஊழலை ஒழிக்க வலுவான மசோதா ; சுதந்திர தின விழாவில் மன்மோகன்சிங் பேச்சு.

ஹசாரே உண்ணாவிரதம் தேவையற்றது:   ஊழலை ஒழிக்க  வலுவான மசோதா;   சுதந்திர தின விழாவில் மன்மோகன்சிங் பேச்சு

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நமது நாட்டில் உள்ள சிலர் அரசுக்கு இடையூறு ஏற்படுத்த நினைக்கிறார்கள். இதனால் நாட்டின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நம்மிடம் உள்ள தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியிலான வேறுபாடுகளை கடந்து நாட்டு நலனுக்காக நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும். மக்கள் நலனுக்காக விரைவில் நாங்கள் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர உள்ளோம்.

ஊழல் வழக்குகளில் மத்திய அரசு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அது நாட்டின் வளர்ச்சியை கேள்விக் குறியாக்கும் வகையிலான ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடக் கூடாது. ஊழலைத் தடுக்க வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர விரும்புகிறோம். தற்போதைய லோக்பால் சட்ட விதிகளை ஏற்காதவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் போன்றவைகளை நடத்துவதை கைவிட வேண்டும்.

ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் பல வழிகளில் நடவடிக்கை தேவை. ஒரே ஒரு பெரிய நடவடிக்கை மூலம் ஊழலை வேரறுத்து விட முடியாது. எந்த அரசிடமும் அத்தகைய மேஜிக் இல்லை. எனவே வலுவான லோக் பால் சட்டம் தேவை.

இந்த சட்டம் தொடர்பாக முரண்பாடான கருத்துக்கள் எழுந்திருப்பது எனக்குத் தெரியும். அத்தகையவர்கள் பாராளுமன்றம், அரசியல் கட்சிகள் அல்லது பத்திரிகைகளிடம் கூட தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இதைவிடுத்து சிலர் கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க நினைப்பது தேவையற்றது. உண்ணா விரத போராட்டங்களால் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழல் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இதற்காக பாராளுமன்றத்தில் விரைவில் லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும். அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கடந்த சில மாதங்களில் பல ஊழல் விவகாரங்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சில வழக்குகளில் மத்திய அரசு பணியாளர்கள் ஊழலில் தொடர்புடைய குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கி உள்ளனர்.

மாநில அரசு பணியாளர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாங்கள் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த ஊழல் வழக்கு விசாரணைகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து நான் விரிவாக பேசக் கூடாது.

ஊழல் நமக்கு சவாலாக உள்ளது. இது தொடர்பான விவாதங்கள் நம்பிக்கையை பிரதிபலிக்க வேண்டும். இந்த சவால்களை நம்மால் வெற்றிக் கொள்ள முடியும். ஊழல் பல வடிவங்களில் உள்ளது. சில சமயங்களில் சாதாரண மக்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசு அதிகாரிகளின் பைகளில் போய் சேர்ந்து விடுகிறது. சில சமயம் அரசு பணியாளர்கள், தனியாருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். அரசு பணி திட்ட ஒப்பந்தங்கள் தவறான மனிதர்களுக்கு தவறான முறைகளில் வழங்கப்பட்டு விடுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் தொடர அரசு அனுமதிக்காது. அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படும் போது சாதாரண மக்களுக்கு எந்த அநீதியும் நடக்காது என்பது இனி உறுதி செய்யப்படும். இதற்காக விரைவில் புதிய நில கையகப்படுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். நாடெங்கும் அனைத்து மட்டங்களிலும் கல்வியை மேம்படுத்த புதிய கல்வி கழகம் உருவாக்கப்படும்.

நக்சலைட் தீவிரவாதம் ஒடுக்கப்படும். சர்வதேச அளவில் எண்ணை விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக நமது நாட்டில் அத்தியாவசியமான பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது தான் அரசின் கடமை ஆகும். சில சமயம் நாட்டுக்கு வெளியில் உள்ள சக்திகள் காரணமாகவும் விலை உயர்வு ஏற்படுகிறது.

சமீப காலமாக பெட்ரோலிய பொருட்கள், உணவு தானியங்கள், எண்ணை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து விட்டது. பணவீக்கம் குறிப்பாக உணவு பண வீக்கம் கடந்த சில மாதங்களாக அதிகமாக உள்ளது. பொது பண வீக்கமும், உணவு பண வீக்கமும் இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. இது சாதாரண மக்களின் வாங்கும் சக்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக பணவீக்க சூழ் நிலையை நாம் கடந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் விலைவாசி உயர் வைக்கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதே வரும் மாதங்களில் அரசின் மிக முக்கிய கடமையாக இருக்கும். பொது நலத்திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்த வேண்டியது அவசியம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் நிலங்களை சார்ந்து வாழ்பவர்களின் நலன்பாதுகாக்கப் பட வேண்டும்.

இதற்காக 117 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் மாற்றப்படும். இதற்கு வரைவு மசோதா தயாரிக் கப்பட்டுள்ளது. விரைவில் இதில் ஒருமித்த கருத்து உரு வாக்கப்படும். எனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் நிறைய சாதனைகளை செய்துள்ளது. இந்த சாதனை தொடரும்.

மும்பையில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் நாம் கண்காணிப்பில் சாதாரணமாக இருக்கக் கூடாது என்பதை எச்சரிப்பது போல உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் தீவிரவாதத்தை எதிர்ப்பது நீண்ட கால போராட்டமாக உள்ளது.

நக்சலைட் தீவிரவாதமும் நாட்டு வளர்ச்சிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நக்சலைட்டுக்களை ஒழிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நக்சலைட் தீவிர வாதம் வேரறுக்கப்படும். நக்சலைட்டுக்கள் உள்ள 60 பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் பகுதிகள் கொண்ட மாவட்டங்களில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.3300 கோடி செலவிடப்படும்.

உலக பொருளாதாரம் தற்போது மந்தமாக உள்ளது. இந்த நிலையில் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நாம் முழுமையாக புரிந்து கொண்டு செயல் படா விட்டால், அது நாட்டின் பாதுகாப்பையும் செழு மையையும் பாதிப்பதாக அமைந்து விடும். உலக அளவில் நமது பொருளாதாரம் சக்தி வாய்ந்ததாக இருப்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன.

நமது நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விலைவாசி உயர்வு பிரச்சினையை சமாளிக்க முடியும். சமீப காலமாக உணவு தானிய உற்பத்தி சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி 241.56 மில்லியன் டன் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சாதனைக்காக நான் விவசாயிகளைப் பாராட்டுகிறேன்.

பருப்பு வகைகள், கோதுமை, எண்ணை வித்துக்களின் உற்பத்தியும் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவு தானியங்கள், சர்க்கரை மற்றும் பருத்தி வகைகளை நாம் ஏற்றுமதி செய்ய இன்று பரிந்துரைகள் வந்துள்ளன. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விரைவில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும்.

உள்நாட்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விவசாயத்தில் இரண்டாவது பசுமை புரட்சி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். விவசாய உற்பத்தி இன்னும் அதிகரித்தால் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். அது போல கல்வி இல்லாமையும், வறுமையும் தொடர்ந்து சவாலாக இருக்கிறது. ஆரம்ப கல்வி என்பது நமது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

பதினோராவது ஐந்தாண்டு திட்டம் கல்வி திட்டமாக இருந்தது. அது போல 12-வது ஐந்தாண்டு திட்டம் சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் நமது வளர்ச்சி பணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்ள 8 அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் சுற்றுச் சூழல் ஆய்வுக்கான பணி தொடங்கும். தொழில் அதிபர்கள் புதிய தொழில்களை தொடங்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

வீரபாண்டி ஆறுமுகம் மீது புதிய நிலஅபகரிப்பு புகார்.

முன்னாள் அமைச்சர்   வீரபாண்டி ஆறுமுகம் மீது   புதிய நிலஅபகரிப்பு புகார்

சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் சேலம் சாரத கல்லூரி ரோடு பிரிமியர் ரோலர் மில் நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் சேலம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவில் நிலத்தை அபகரித்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீது புதிய புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் இடைப்பாடி கவுண்டம்பட்டி ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில் பரம்பரை பூசாரியாகவும், அறக்கட்டளை தலைவராகவும் உள்ளேன். இந்த கோவில் எனது குடும்பத்துக்கு உயில் மூலம் பாத்தியப்பட்டது. வன்னிய குல சத்திரியர் அய்யனாரப்பன் அறக்கட்டளை நிறுவப்பட்டு பதிவு செய்து நிர்வகித்து வரப்பட்டது. இது எங்களது குடும்ப கோயிலாகும்.

இந்த கோயிலுக்கு செல்வதற்கு வழித்தடம் மற்றும் பொங்கல் வைக்க இடமோ இல்லை. அதனால் 4.25 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன். இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோருக்காக கல்லூரி கட்ட வேண்டியுள்ளது. ஆகவே ரூ. 12 லட்சம் வாங்கிக் கொண்டு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துவிடு என்று எடப்பாடி தி.மு.க. நகர செயலாளர் ஜெய பூபதி கேட்டார். நான் மறுத்து விட்டேன்.

2009- ஆம் ஆண்டு கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது காரில் என்னை 4 பேர் அழைத்துக் கொண்டு பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் என்னிடம் ரூ. 12 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஜெயபூபதி பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடு, இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, தி.மு.க. நகர செயலாளர் ஜெயபூபதி ஆகியோர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். நிலம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் என்னுடைய சகோதரன் ஆறுமுகம் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டேன். அதன் பிறகு போலீசார் என்னையும் தம்பியையும் அழைத்து பேசினார்கள். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு நிலத்தை கொடுத்து விடு, இல்லையென்றால் உன்மீது பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டினார்கள்.

கோயிலில் பூஜை செய்யவும் விடமாட்டோம் என்றனர். நான் மறுத்ததால் கோயில் சாவியை பறித்துக் கொண்டு, அங்கிருந்த பஞ்சலோக சிலையையும் எடுத்துச் சென்றுவிட்டனர். ஆகவே அய்யனாரப்பன் கோயில் சொத்து, பஞ்சலோக சிலைகள், கோயிலுக்காக வாங்கிய 4,25 ஏக்கர் நிலம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா, எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் ஜெயபூபதி உள்பட 29 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

இந்த புகார் மனுவை எஸ்.பி. மயில்வாகனன் உடனடியாக சங்ககிரி டி.எஸ்.பி. ராமசாமிக்கு அனுப்பி வைத்தார். அவரது உத்தரவின் பேரில் இடைப்பாடி இன்ஸ்பெக்டர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்.

பிருஷ்டகோணாசனம், ஜானுசீராசனம், பரிவர்த்தன ஜானுசீராசனம், மகாமுத்ரா.

பிருஷ்டகோணாசனம்.
பிருஷ்டகோணாசனம்

செய்முறை:

இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். கைகளிரண்டையும் பின்னால் சரிக்கவும். வலதுகாலை தூக்கி, இடதுபக்கம் போடுங்கள்.

அடுத்தபடியாக, இடக்காலை தூக்கி வலப்பக்கம் வையுங்கள். இரண்டு நிலையிலும் இயல்பான சுவாசம், அமலில் இருக்கட்டும்.

பயன்கள்:

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மகப்பேறுக்கு பின் அடிவயிறு பெருத்தல், கர்ப்பப்பை இறக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.


ஜானுசீராசனம்.
ஜானுசீராசனம்

செய்முறை:

இருகால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். இடதுகாலை மடக்கி, வலது அடித்தொடையில் படியுமாறு, உடலோடு ஒட்டி வைக்கவும். முழங்கால் தரையோடு தரையாக படிந்திருக்கவேண்டும்.

இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கியநிலையில், முன்னோக்கி குனியுங்கள். இதற்குள் வலதுகாலை கொண்டுவரவும். நெற்றியால் வலது முழங்காலைத் தொடுங்கள். அடுத்தபடியாக ஆசனத்தை கலைத்து, இடப்பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

கால் பிடிப்பு, வாதம், மூட்டு வலி நீங்கும். இடுப்பு பிடிப்பு, முழங்கால் வீக்கம் நீங்கும். நரம்பில் கெட்ட ரத்தம் கட்டுதல் (வெரிகோஸ் வெயின்) நோய் வராது.


பரிவர்த்தன ஜானுசீராசனம்.
பரிவர்த்தன ஜானுசீராசனம்

செய்முறை:

இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். இடது பாதத்தை மடக்கி, வலது அடித்தொடையில் பதியவைக்கவும். இடுப்புக்கு மேல்பகுதியை வளைத்து, நீட்டிய வலதுகாலை கோர்த்த கைகளால் பிடியுங்கள். அப்போது உங்களின் பார்வை,மேல் நோக்கிய நிலையில் இருக்கட்டும். அடுத்தபடியாக-பக்கம் மாற்றியும், இதேபோல் செய்யுங்கள்.

பயன்கள்:

குண்டானவர்களுக்கு மெலிவு கிட்டும். மார்பு விரியும். மூச்சு சம்பந்தமான நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, முதுகு- எலும்பு வலி போகும். பெருத்த இடை, சிறுத்த மார்பகம் உள்ள கன்னிகளுக்கு மிகவும் அவசியமான ஆசனம்.



மகாமுத்ரா.
மகாமுத்ரா

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். இரு கைகளையும் பின்னால் கொண்டுபோகவும். உங்களின் இடது மணிக்கட்டை, வலதுகை பிடித்திருக்கட்டும். சற்றே முன்னோக்கி குனிந்து நெற்றியால், முழங்காலுக்கு முன்பாக உள்ள தரையை தொடுங்கள். கவனம், இரு முழங்காலும் சேர்ந்தே இருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து, ஆசனத்தைக் கலைத்துவிடலாம்.

பயன்கள்:

குதி கால் வலி, முழங்கால் பிடிப்பு, முதுகு - எலும்பு வலி, பெருந்தொந்தி, வாயுத்தொல்லை நீங்கும்.

ஸ்டெம் செல்கள் சிகிச்சை முறையில் புதிய மைல்கல் : பார்வை இழப்பு சரிசெய்யப்படும் .



ஸ்டெம் செல்கள் சிகிச்சையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் முதல்முறையாக மனிதனிடம் சோதனை அடிப்படையில் அந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு அதன்படி பார்வை இழப்பு, பார்வை குறைபாடு தொடர்பான நோய்கள் சரிசெய்யப்பட இருக்கின்றன. ஆய்வின் முதல் முயற்சியாக, பரம்பரை வழியாக பார்வை இழப்பு ஏற்படும் இளவயது ஆண்கள் மற்றும் பெண்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்களின் கண்களில் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள் உட்செலுத்தப்படுகின்றன. அதே போல் அடுத்த வருடம், வயதானவர்களுக்கு ஏற்படும் வயது தொடர்பான மெகுலர் டிஜெனரேஷன் என்ற ஒரு வகை பார்வை இழப்பு தொடர்பாக வயது முதிர்ந்தவர்களிடம் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சோதனை முதல் கட்டமாக அமெரிக்காவிலும், அதனை தொடர்ந்து இங்கிலாந்திலும் நடைபெறும். இது பற்றி ஆராய்ச்சியாளர் ராபர்ட் லான்சா கூறும் போது, உலகில் முதல்முறையாக ஸ்டெம் செல்கள் உதவியுடன் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த செல்கள் உடலில் உள்ள மற்ற செல்வகைக்கு உருமாறி பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணியினை செய்யும். இந்த சிகிச்சை முறை எங்களுக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு 3 லட்சமாக இங்கிலாந்தில் உள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை இன்னும் 25 வருடங்களில் 10 லட்சமாக உயரும் என கூறப்படுகிறது.

Sunday, August 14, 2011

லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியும் என உறுதியளிப்பாரா ஹஸாரே ? - மத்தியஅரசு கேள்வி.



லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தால் இந்தியாவை விட்டு ஊழலை விரட்டி விட முடியும் என்று உறுதியளிக்க அன்னா ஹஸாரேவால் உறுதியளிக்கத் தயாரா என்று மத்திய அமைச்சர்கள் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில்,

அரசியமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, ஊழல் ஒழிப்பு தொடர்பாக அரசுகள்தான் சட்டம் கொண்டு வர முடியுமே தவிர மற்றவர்கள் அதில் குறுக்கிட அதிகாரம் இல்லை. யாருமே இப்படித்தான் சட்டம் இருக்க வேண்டும் என அரசுகளை நிர்ப்பந்தப்படுத்த முடியாது. தங்களது சுய விருப்புகளுக்கேற்ப ஒரு சட்டத்தை அரசுகள் கொண்டு வர முடியாது. நாடாளுமன்றம்தான் இதை முடிவு செய்ய முடியும்.

அன்னா ஹஸாரே இன்று செய்து கொண்டிருப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். நாடாளுமன்றத்தையே அவர் கேள்வி கேட்கிறார். இது ஏற்றுக் கொள்ளவே முடியாததாகும்.

செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே சொன்ன மசோதாவும் சரி இந்தியாவில் ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.

லோக்பால் மசோதா சட்டமானதுமே இந்தியாவில் ஊழல் ஒழிந்து விடும் என அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உத்தரவாதம் அளிக்க முடியுமா. அன்னா ஹஸாரே குழுவினர் நாட்டை திசை திருப்பி வருகின்றனர் என்றார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ஒவ்வொருவரும் போராட உரிமை இருக்கிறது. அதில் மாற்றமில்லை. ஆனால் இஷ்டப்பட்ட இடத்தில் போராட உரிமை இல்லை.

அன்னா சுய விளம்பரம் தேடுகிறார். டிவி செய்திகள், மீடியாக்களில் தனது முகம் தெரிய வேண்டும் என விரும்புகிறார். பிரதமருக்கு எதிராக தேவையில்லாமல் கொந்தளிக்கிறார்.

மத்திய அரசு ஜனநாயக விரோதமாகநடந்து கொள்வதாக கூறுகிறார். அன்னா ஹஸாரே குழுவினரை விட ஜனநாயக விரோதவாதிகள் யாருமே கிடையாது. அன்னாவின் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்வது யார் என்பதை அவர்களால் விளக்க முடியுமா என்று கேட்டார் சிபல்.

தமிழர்களை அவமதித்த, அமெரிக்கப் பெண் தூதரின் இனவெறிப் பேச்சு : தலைவர்கள் கடும் கண்டனம் .

தமிழர்களை அழுக்கர் என்று கூறிய அமெரிக்க பெண் தூதரை வெளியேற்ற வேண்டும்: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக இருப்பவர் மவ்ரீன் காவ். பெண் அதிகாரியான இவர், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அப்போது அவர் கூறும்போதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக இந்தியா வந்த நான், டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய இடத்தை 72 மணி நேரமாகியும் அந்த ரெயில் போய் சேரவில்லை. இந்த பயணத்தின் போது எனது தோல் தமிழர்களை போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிட்டது என்றார்.

அவரது பேச்சை வட இந்திய மாணவர்கள் பலர் கைதட்டி ரசித்துள்ளனர். ஆனால் மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்களும், தமிழ் மாணவர்களும் இதனை கண்டு கொள்ளாமல் வாயை பொத்திக் கொண்டு இருந்துள்ளனர்.

அமெரிக்க பெண் அதிகாரியின் இந்த பேச்சுக்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

முதல் - அமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க உதவி துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால் 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.

அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகிவிட்டது என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இனவெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்த கையை கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழ்நாட்டில் பணியாற்றிக்கொண்டு தமிழர்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகத்தில் தமிழர்களை பற்றியே இனவெறியுடன் மவுரின் சோவ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்க உதவி துணை தூதரின் இந்தப் பேச்சு தமிழர்களை பற்றிய குரூரமான கற்பனை ஆகும்.

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சவால்விடும் வகையில் தமிழர்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்களை தீண்டத்தகாதவர்களை போல சித்தரித்து அமெரிக்க உதவித்துணை தூதர் பேசியிருப்பதை தன்மானம் உள்ள தமிழர்கள் எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.

அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் ஆடைகளை களைந்து அவமதிக்கும் அமெரிக்கர்களின் இனவெறி தற்போது தமிழகம் வரை நீண்டிருப்பது உணர்வுள்ள தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஈழத்தமிழர் சிக்கல் முதல் அனைத்து விவகாரங்களிலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடுவண் அரசு செயல்பட்டு வருவதாலும், தாராளமயமாக்கல் கொள்கை காரணமாக தமிழர்களிடையே இன உணர்வும், பண்பாட்டு உணர்வும் குறைந்து வருவதாலும்தான் எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இப்படியெல்லாம் பேசுவதற்கான துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வரும் நிலையில், அவரின் பிரதிநிதியாக தமிழகத்தில் இருக்கும் ஒருவர் தமிழர்களை கறுப்பர்கள் என்றும், அழுக்கானவர்கள் என்றும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இனவெறி பேச்சுக்காக மவுரின் சோவ் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். இவரைப்போன்ற பிறவிகள் இனியும் தமிழகத்தில் தங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது. தமிழர்களை அவமதித்த அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கண்டிப்பதுடன், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை:-

அமெரிக்க துணைத் தூதரின் இந்தப் பேச்சு இனவொதுக்கல் தன்மை கொண்ட முறை தவறிய பேச்சு என்பதில் ஐயமில்லை. இதற்காக அமெரிக்க தூதரகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு இங்கிதமற்ற ஒருவர், முக்கியமான பொறுப்பில் இருப்பது இந்திய அமெரிக்க ராஜீய உறவுகளை நிச்சயம் பாதிக்கும். இனவெறியை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழர்களை இழிவு படுத்தியிருக்கும் மவுரீச் சாவ் அம்மையார் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.

அவரை அமெரிக்க அரசு உடனடி யாகத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வரோடு பேச்சு நடத்தினார். ஈழத் தமிழர்கள் குறித்து அப்போது அவர் சாதகமாக கருத்து தெரிவித்தார். ராஜபக்சே அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்க துணைத் தூதரின் இந்த "இன வெறிப் பேச்சு" அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசு அமெரிக்க தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Justify Full