Sunday, May 15, 2011

டெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு.



டெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு இன்று சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்பொழுது சோனியாவிடம் ஜெயலலிதாவும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸக்கு இடையே கூட்டணி ஏற்பட்டதற்குப் பிறகு சோனியாகாந்தியும் ஜெயலலிதாவும் இடையே எவ்வித சந்திப்பும் நிகழவில்லை. இந்நிலையில் சோனியாகாந்தி, வலியவந்து ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறியிருப்பதால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் கூறிய காரணம் :

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூறியபோது, "தமிழகத்தில் ஊழலும், விலைவாசி உயர்வுமே தோல்விக்குக் காரணம்' என்று தெரிவித்தனர். இந்த இருவரின் பேட்டியால் திமுக ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்தது. இந்நிலையில் அதிமுகவுடன் காங்கிரஸ் நெருங்கி வருவது போன்ற நிகழ்வு திமுகவை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேரில் சந்திப்பு?

மாநிலஅரசின் திட்டங்களுக்காக மத்தியஅரசின் நிதியைப் பெற திட்டக் குழு துணைத் தலைவரை ஒவ்வொரு மாநில முதல்வரும் சந்திப்பது வழக்கம். அதன்படி, முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவும், தில்லி சென்று திட்டக் கமிஷனிடம் மாநிலத்தின் திட்டங்களைத் தெரிவித்து நிதியைக் கோருவார். அப்போது சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு இன்று சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்மூலம் அவர் சோனியாவை சந்திப்பது உறுதியாகியுள்ளது.


திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது :

சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர், ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிக வலுவான அந்தக் கூட்டணி உடைந்தது.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பிடித்தது. 2004 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்தக் கூட்டணி 40க்கு 40 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக காரணமாக அமைந்தது. அடுத்து 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணி வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா தீவிரமாக முயன்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் பேசுவதைக் கூட சோனியா தவிர்த்துவிட்டதால் அந்தக் கூட்டணி உருவாகவில்லை.



இந்நிலையில் திமுகவை ஒழித்துக் கட்டுவது என்ற வேலையை காங்கிரசின் அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல்காந்தி ஆரம்பித்தார். திமுகவுக்கு எல்லா வகையிலும் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு பேருதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

இதனால் திமுகவை கழற்றிவிட சோனியாவும்-ராகுலும் முடிவு செய்துவி்ட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவுடனான பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சிகளை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு தேநீர் விருந்து தர உள்ளார் சோனியா. இதற்காக டெல்லி வருமாறு ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ராகுல்காந்தியும் பங்கேற்று ஜெயலலிதாவை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வரும் வேலையை தீவிரப்படுத்துவார் என்று தெரிகிறது.

1999ம் ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியுடன் இணைந்து சோனியாவுக்கு ஜெயலலிதா தேநீர் விருந்து தந்ததும், இருவரும் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியைக் கவிழ்த்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ஆயுதம் தந்தது
ம், குழந்தைகள் உள்பட 20,000 தமிழர்கள் ஒரு மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டபோதும், கருணாநிதி அமைதி காத்தார். காரணம், இதைக் கண்டித்தால் சோனியா-ராகுல் காந்திக்கு கோபம் வரும் என்பதால்.

நாம் சண்டை போட்டால் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி போட்டுவிடும் என்பதால் 2011 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழர் விரோத செயல்களுக்கு முழு அளவில் துணை போனார்.

இப்போது தமிழகத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவிட்ட திமுகவால் இனி தனக்கு பயனில்லை என்பதால் அதை காங்கிரஸ் தூக்கி வீச உள்ளது.

பதவிக்காக காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி செய்த துரோகங்களை எல்லாம் மறைக்க முயன்ற திமுகவுக்கு இந்த தண்டனை நிச்சயம் தேவையே.


தயாரிப்பாளர் சங்க திடீர் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன்.


தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இராம.நாராயணன் தலைமையில் செயல்பட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. உள்ளிட்டோர் அடங்கிய போட்டிக் குழு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.

இராம. நாராயணன் ராஜிநாமா:

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை இராம.நாராயணன் ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சொந்த அலுவல்கள் காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, கே.ஆர்.ஜி. தலைமையிலான குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. முறையாக தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

திடீர் தலைவர்:

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, முதல்வராக பொறுப்பேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயும், சந்திரசேகரனும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, மாலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தலைவராக சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரூ.67.50 அதிர வைத்த பெட்ரோல் விலை உயர்வு : பல்வேறு அமைப்புகள் கண்டனம்.


பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.

மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆட்சியில் இல்லாதபோது ஜெயலலிதா அடிக்கடி இக்கருத்தை வலியுறுத்தியதையும், கருணாநிதி மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து, பெட்ரோல் விலையை ஓரளவு குறைத்ததும் நினைவுக்கு வந்து போகிறது.

நாளை விலைவாசி உயர்வுக்கும் இதே பதிலைச் சொல்லுவாரோ காக்கும் கரங்கள் புரட்சித்தலைவி.

பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த விலை உயர்வு அனைத்துப் பிரிவு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாடு தரைவழிப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் ஆர். சுகுமார்:

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன என்று கூறி பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே நஷ்டம் என்பதில் உண்மையில்லை. பொதுமக்களின் நலன் கருதாமல் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறும் நோக்கிலேயே இவ்வாறு பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

இப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதால் எல்லா பொருள்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். இதன் பெரும் சுமை சாதாரண மக்களின் மேல் விழும்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்வை மேற்கொள்ள அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்.

வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்: அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இப்போது பெட்ரோல் விலையைக் குறைப்பதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு ரூ. 16-ம் மாநில அரசுக்கு ரூ.14-ம் வரியாகக் கிடைக்கிறது. இவ்வாறு ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் மட்டும் ரூ. 30 வரியாக வசூல் செய்வது என்பது மிகப் பெரும் மோசடியாகும்.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க வேண்டுமானால் பெட்ரோலின் விலையை உயர்த்தத் தேவையில்லை. மாறாக பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் விலக்கிக் கொண்டாலே போதும் இதனால் எல்லா பொருள்களின் விலையும் 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துவிடும்.

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் (சிஐடியு): இந்தக் கடுமையான பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலிய எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் பெரும் முதலாளிகள், லாபத்தை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது.

எனவே, ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 16) எங்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


பெட்ரோல் விலை உயர்வு: சிபிஎம் கண்டனம்

மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதற்கு மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்துள்ளது. லிட்டருக்கு ரூ.5.50 உயர்த்திருப்பது நடுத்தர, உழைக்கும் மக்களை கடுமையாக பாதிக்கும்.பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதை மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மாநில செயற்குழு குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


பெட்ரோல் விலை உயர்வு: ராமதாஸ் எதிர்ப்பு


பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு ஆண்டுக்குள் பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை விட மிகவும் அதிகமாகும். பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறைக்காமல் சுமையை மக்கள் மீது சுமத்துவது சரியல்ல. எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் இருந்தால் அதையும் கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

அத்துமீறி விமானங்கள் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம் : அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்.

தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேடோ படைகளையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரிக்கிறது.

11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

"பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும்' என்று தீர்மானம் எச்சரிக்கிறது.

சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒசாமா பின் லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபட்டாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.

"அபட்டாபாத் நகரில் மே 2-ம் தேதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்?

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்? சர்வதேசச் சட்டத்தையே மீறியிருக்கிறார்கள்.

அபட்டாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் பின் லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும்சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செüத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

டுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிகள் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது, அல்லது நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெüஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

சூட்கேஸ்களில் புலி குட்டிகளை கடத்திய பயணி.

விமான நிலையத்தில் சூட்கேஸ்களில் புலி குட்டிகளை கடத்திய பயணி

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது முதல் வகுப்பில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணி ஒருவரின் சூட்கேஸ்களை சோதனையிட்டபோது அதில் புலிக்குட்டிகளும், சிறுத்தை குட்டிகளும் இருந்தன.

இதைப்பார்த்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பயணி புலிக்குட்டிகளை தாய்லாந்தில் இருந்து துபாய்க்கு கடத்தி செல்ல இருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்தப் பயணியை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட புலிக்குட்டிகளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிரவாத ஆதரவு பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கோரிக்கை.

தீவிரவாத ஆதரவு பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கோரிக்கை

சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது அந்த நாட்டு உளவுபடைக்கு தெரியுமா என்ற சந்தேகம் உலகமக்களிடையே உள்ளது.

இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு பதில் பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை பரப்பி வருகின்றனர். பாகிஸ்தானில் இன்னும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை பிடிப்பதில் கவனம் செலுத்தாத பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் தாக்குதலை மட்டும் கண்டித்தது.

பின்லேடனை சுட்டுக் கொன்றதால் பாகிஸ்தான் அரசும் அந்த நாட்டில் உள்ள அணு உலைகளும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதை அமெரிக்கா உதவியின்றி பாகிஸ்தான் முறியடிப்பது கஷ்டம் என்று பல்வேறு நாட்டின் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஆதரவு நாடு. எனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவே தீவிரவாதத்துக்கு துணைபோகும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் பதிலடியாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்கா இதனை ஏற்கும் நிலையில் இல்லை.

இதற்கிடையே பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

செம்மொழி நூலகம் அதிரடியாக மாற்றம்.

பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை: செம்மொழி நூலகம் வேறு இடத்திற்கு மாற்றம்

2011 பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறையாக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார்.

இந்த நிலையில், பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை அமைக்கப்படுகிறது. அதற்காக சட்டப்பேரவை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.

மேலும் பழைய தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த செம்மொழி தமிழாய்வு மையப் பெயர்பலகை மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.