Saturday, May 7, 2011

கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார் - ராம்ஜேத்மலானி.


கலைஞர் தொலைக்காட்சியை கனிமொழி கட்டுப்படுத்தவில்லை என்பதை நம்ப முடியவில்லை என்றும், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஆசிப் பல்வா மூலம் வந்த ரூ. 214 கோடி பணத்தை, ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் தான் திருப்பித் தந்துள்ளனர். முதலில் லஞ்சமாக வாங்கிய இந்தப் பணத்தை, கடனாக வாங்கியது போல காட்டி திருப்பித் தந்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது திமுக எம்பி கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை. நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத்குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது. ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை.

கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

இந் நிலையில் இன்றும் இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்தது. அப்போது ராம்ஜேத்மலானி கூறுகையில், கருணாநிதியின் மகள் என்பதால் கனிமொழியை குறி வைக்கிறார்கள். அவருக்கு மகளாகப் பிறந்தது கனிமொழியின் துரதிஷ்டமா? என்றார்.

அவருக்குப் பதிலளித்துப் பேசிய சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித், கலைஞர் தொலைக்காட்சியை கனிமொழி கட்டுப்படுத்தவில்லை என்பதை நம்ப முடியவில்லை, அந்த வாதத்தை ஏற்கவும் முடியவில்லை. கலைஞர் டிவியில் பங்குதாராராக உள்ள யாரோ ஒருவர் அதை நிச்சயம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குதாரரும் டிபி ரியாலிட்டி தலைவருமான ஆசிப் பல்வா மூலம் தான் ரூ. 214 கோடி வந்துள்ளது. ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் தான், அந்தப் பணத்தை வட்டியோடு சேர்த்து கலைஞர் டிவி திருப்பித் தந்துள்ளது. முதலில் லஞ்சமாக வாங்கிய இந்தப் பணத்தை, கடனாக வாங்கியது போல காட்டி திருப்பித் தந்துள்ளனர்.

மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரை விட கனிமொழிக்குத் தான் ராசா நெருக்காக இருந்தார் என்றார். சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித்.

உலக வெப்பமயமாதல் அதிகரிப்பால் சுனாமி, நிலநடுக்கம்.


உலக வெப்பமயமாதல் அதிகரிப்பால் சுனாமி, நிலநடுக்கம்: ஜப்பான் நாட்டு பெண் விஞ்ஞானி வேதனை

உலக வெப்பமயமாதல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று ஜப்பான் நாட்டு பெண் விஞ்ஞானி கூறினார்.

மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வனச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை மிதப்படுத்துதல்' பற்றிய ஒருநாள் கருத்தாய்வை நடத்தியது.

கருத்தாய்வில், கனடா நாட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானி ஆன்ட்ரு கோடன் கூறியதாவது:

உலகில் கனடாவில் வனவளம் அதிகமாக உள்ளது. கனடா வன வளங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் சிறப்பான முறையில் அமைந்து நிலவளம், நீர்வளம் பாதுகாக்கப்படுகிறது. வனவளங்களை பாதுகாக்கவும், உலக வெப்பமயமாதலை தடுக்கவும் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றிய ஆராய்ச்சிகளை இந்தியாவில் மேற்கொள்ள, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானியும், ரெயின்போ குழந்தைகள் வனகூட்டுக்குழு அமைப்பின் தலைவருமான எமிகா காமினோமொரி கூறியதாவது:

இன்று உலகவெப்பமயமாதலை தடுப்பதின் மூலம், வனவளங்கள் மற்றும் மனித உயிர்கள் காப்பாற்றப்படும். வனச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை மிதப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை, இன்றைய தலைமுறையினரான குழந்தைகள் இடையே ஏற்படுத்த வேண்டும். ரெயின்போ அமைப்பு 9 நாடுகளில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

உலக வெப்பமயமாதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுனாமி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்பட்டு மனித உயிர்இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றார்.

கனிமொழி கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் தயாராகும் திகார் - ரோஹினி சிறைகள்...


கனிமொழி கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் டெல்லியில் உள்ள திகார் மற்றும் ரோஹின் சிறைச்சாலைகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

ஒருவேளை இன்றைய விசாரணை முடிவில் கனிமொழி கைது செய்யப்பட்டாரல் அவரை முதலில் திகாருக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் ரோஹினி சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு மாற்றுவார்களாம். இதற்காகவே இந்த இரு சிறைச்சாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமேதும் இல்லை என்றும், அவரிடம் போதுமான அளவு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், நேரடியாக அவர் நீதிமன்றக் காவலில்தான் வைக்கப்படுவார் என்றும் சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானிகள் வேலைநிறுத்தம் வாபஸ் : 800 விமானிகள் இரவு முதல் வேலைக்கு திரும்புவதாக அறிவிப்பு.


10 நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது, ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமானிகள் வேலைக்கு திரும்பினார்கள்.

ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கிடையே சீரான சம ஊதியம், நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மத்திய அரசின் எந்தவித மிரட்டலுக்கும் விமானிகள் பணியவில்லை. மாறாக கைதுக்கும் நாங்கள் தயார் எனும் ரீதியில் போராட்டக் களம் இருந்த்து.

இந்த நிலையில், விமானிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கும், விமானிகள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரவு 10 மணி்க்கு உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, விமானிகள் கடந்த 10 நாட்களாக நடத்தி வந்த தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இதனால் 800-க்கும் அதிகமான விமானிகள் இரவு முதல் வேலைக்கு திரும்புவதா கவும் கூறினார்.

அரசாங்கத்தின் யோசனையை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதற்காக விமானிகளுக்கு நன்றி தெரிவித்தார் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி.

விமானிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து 3 பேர் கமிட்டி பரிசீலித்து 3 மாதங்களில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றார்.

அல்-காய்தா இயக்கம் பின்லேடன் மரணத்தை உறுதிபடுத்தியது .


ஒசாமா பின் லேடன் மரணத்தை அல்-காய்தா இயக்கம் உறுதிபடுத்தி ள்ளது.

இஸ்லாமிய இணையதள குழுக்களுக்கு அல்-காய்தா அனுப்பியுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சைட்" என்னும் இணையதள கண்காணிப்பு நிறுவனம் இத்தகவலை கண்டறிந்து மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

ஒசாமாவை கொன்றதற்காக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதன் கூட்டு நாடுகளை பழிவாங்கப் போவதாகவும், ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அல்-காய்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ஒசாமாவின் ரத்தம் அமெரிக்கர்களையும் அவர்களின் முகவர்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு சாபமாக துரத்தும். அவர்களது மகிழ்ச்சி கவலையாக மாறும். ஒசாமாவுக்காக குரல் எழுப்ப முன்வருமாறு பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமியர்களை கேட்டுக் கொள்கிறோம். துரோகிகளாலும் திருடர்களாலும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கவும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை விலக்கவும் முன்வருமாறு கோருகிறோம்." என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் அமெரிக்காவின் நாடகமா ?


ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன?

* தாக்குதல் நடத்திய வீரர்கள் யார் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

* உலகின் மிகப்பெரும் தீவிரவாதி என்று கூறப்படும் ஒரு நபரைத் தாக்கும்போது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர் தாக்குதலில் ஒரு சிறு காயம்கூட ஏற்படாமல் போனது எப்படி?

* சோவியத் ரஷ்யாவையே எதிர்த்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்குப் படைப் பட்டாளத்தை கொண்டிருந்த ஒருவருக்கு, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது பாதுகாவலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு ஆளில்லை என்பதையும் நம்ப முடியவில்லையே?

* பின்லேடன் கொலை செய்யப்பட்டபின் அது குறித்த ஆதாரங்கள் ஏதும் அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்படவில்லையே, ஏன்?

* பின்லேடன் முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளதுபோல் ஒரேயொரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் போலியானது என அறியப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி உட்பட பிரபல சர்வதேச ஊடகங்களிலிருந்து அவசரம் அவசரமாக அப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, "பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியிட முடியாது" என ஒபாமா அறிவித்துள்ளார். காரணம் என்ன?

* பின்லேடன் தங்கியிருந்த படுக்கையறையின் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டில் பக்கத்தில் ரத்தம் உரைந்துள்ள காட்சியினை மட்டும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது. அந்த அறையின் ஜன்னல்களிலோ சுவர்களிலோ தாக்குதல் நடந்ததற்கான குண்டுகள் பாய்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. வெளியிலிருந்து உள்ளேயிருப்பவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, உள்ளேயிருப்பவர் குண்டு தாக்குதலுக்கு இரையானால், அவரின் இரத்தம் ஜன்னல் பக்கத்திலிருந்தே சிதற வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் கட்டிலின் பக்கத்தில் மட்டும் இரத்தம் உரைந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?

* இரவில் தாக்குதல் நடத்தியது போன்று ஒரு வீடியோ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் (குண்டுகள் வெடித்ததால் ஏற்படும்) நெருப்பு பிளம்புகள் பற்றி எரிவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்குப்பின் கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் தாக்குதலாலோ தீயினாலோ ஏற்பட்ட சேதத்தைக் காண முடியவில்லையே? அது எப்படி?

* உலகில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த அல்காயிதா இயக்கத்தலைவர் பின்லேடன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்திருக்க வாய்ப்பு உண்டா? ஒன்று அவர்மீது இதுவரை கூறப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை?

* பின்லேடன் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ, ஒரு பெண்ணைக் கேடயமாக பின்லேடன் பயன் படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியாமல், சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக, பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒருவரை உயிரோடுப் பிடிக்க முடியாதா?

பின்லேடன் கொல்லப்பட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தப்பின்னர் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களிலிருந்தும் அமெரிக்க அதிபரின் முரண்பாடான அறிவிப்புகளிலிருந்தும் இத்தனை சந்தேகங்களும் எழுந்துள்ளன. பின்லேடன் விஷயத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க சிஐஏ செய்த சில தில்லுமுல்லுகளும் இதற்கு முன்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கவை.

இன்று 2011, மே மாதம் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரிமை கோரும் நிலையில், 2003லேயே பின்லேடன் இறந்து விட்டதாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பேனசிர் பூட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த செய்தியினை முதலில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

இரு நாட்டு அதிபர்களின் 8 ஆண்டுகள் இடைவெளியிலான இந்த இரு அறிவிப்புகளில் எந்த அறிவிப்பு உண்மை? எந்த அறிவிப்பு பொய்? இருவரில் யார் பொய்யர்?

பின்லேடனைக் கொலை செய்யும் விஷயத்தில் பொய்யுரைத்து உலக மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் பின்லேடன் கொல்லப்பட்டாரா? இல்லை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு நல்ல உரமிட்டு வளர்த்துவிட்டதற்குப் பிரதிபலனாக, ஒரு பக்கம் கொல்லப்பட்டதாக மேட்டரை மூடிவிட்டு, மறுபக்கத்தில் பின்லேடன் சுதரந்திரமாக உலவ வழிவகை செய்யப்பட்டுள்ளதா?

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ரஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, தான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு, நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத் துவங்கினார்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.

சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, "தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.

இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோவால் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் வாதத்துக்கு, ஒசாமாவி டமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட மிரட்டல் வீடியோ டேப்புகள் வலு சேர்த்தன.

ஆனால், அந்த வீடியோக்கள் அமெரிக்க சிஐஏவால் தயாரிக்கப்பட்ட போலி வீடியோ டேப்புகள் என்று நுட்பரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிரூபிக்கப்பட்டன.

அமெரிக்க அரசு வெளியிட்ட ஒசாமாவின் பொய் வீடியோக்களில் சில:

பின்லேடன் மிரட்டல் விடுவதாகவும் பின்லேடன் அறிக்கை என்ற பெயரிலும் வீடியோவே வெளியிட்டு உலகை முட்டாளாக்கிய அமெரிக்க சிஐஏவுக்கு, இல்லாத ஒருவரை இருப்பதாகவும் இருப்பவரை இறந்து விட்டவராகவும் ஒரு செட்டப் நாடகத்தை நடத்திக்காட்டுவதும் அதற்கு ஆதாரமாக எல் கே ஜி மாணவனுக்குரிய தகுதிகூட இல்லாத நபர்களை வைத்து, போட்டோஷாப் கைங்கர்யத்தில் போட்டோக்களைத் தயாரித்து உலாவிடுவதும் பின்னர் குட்டு உடைந்தால், உடனேயே அதனை அதிகாரம் பயன்படுத்தி நீக்க வைப்பதும் பெரிய காரியங்களா என்ன?

இதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட்அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது!

எது எப்படியோ, இன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இது மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும்!

அதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை! அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள்!

ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில்,

"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்!"


வீடியோக்களுடன் காண :

http://www.inneram.com/2011050616257/doubts-about-bin-laden-murdervideos

பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல.


பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல், மற்றும் ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் வடக்கு வாசிரிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் இரண்டு முறை நடத்தியதில் 17 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த தாலிபான்கள் இந்த தாக்குதலால் பெருங்கொந்தளிப்பிற்கு ஆளானார்கள்.

அமெரிக்காவின் மகிழ்ச்சி நீடிக்காது; அது விரைவில் சோகத்தை தழுவும்.

அமெரிக்காவையும், உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் அமெரிக்கர்களின் உயிர் களையும் சாபமாய் அல்கொய்தா துரத்தும். என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

மேலும் பின்லேடன் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டு, உறுதி செய்த அல்கொய்தா, விலைமதிப்பில்லாத பின்லேடன் இரத்தத்திற்கு, அமெரிக்கா பழிவாங்கப்பட்டு பலியாகும். என்று அறிவித்தனர்.

ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது.

இம்முறை பாகிஸ்தான் தலைநகரமான பாக்தாத் மீது ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இதில் 21பேர் கொல்லப்பட்டனர்.

அதிர்ச்சியில் பாகிஸ்தான்.

பின்லேடன் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் பாகிஸ்தான் செய்வதறியாது உறைந்து போயிருந்தது. அமெரிக்காவின் அத்துமீறல் ஒருபுறம். இஸ்லாமியர்களின் குமுறல் மறுபுறம்.

இஸ்லாமிய முறைப்படி பின்லேடன் உடல் அடக்கம் நடைபெறவில்லை என்றும், இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியருக்கு அமெரிக்கா செய்த துரோகம் என்று குற்றம்சாட்டி குமுறியது அல்கொய்தா.

இந்நிலையில் பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் படஉள்ளது.

இந் நிகழ்வுகளால் பின்லேடன் இருந்த இடம், வாழ்ந்த இடம், இறந்த இடம், உடல் புதைக்கப் பட்ட இடம், என்று எதுவும் அவன் நினைவாக இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பது தெளிவாகிறது.