Friday, May 6, 2011

இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் : அமெரிக்கா போல தாக்குதல் நடத்த நினைத்தால்......


அமெரிக்காவின் அடிவருடியாக வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான், அமெரிக்க ஆயுதங்களை குப்பைபோல குவித்து வைத்திருக்கிற தைரியத்தில் பிற நாடுகளை மிரட்டிப் பார்க்கிறது.

பின்லேடன் பாகிஸ்தானில் இல்லையென்றும், அவன் இறந்து போய்விட்டான் எனவும் இருவேறு மாற்றுக் கருத்துகளை பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கு தெரியாமலேயே அந்த நாட்டுக்குள் புகுந்த அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மற்றும் அவனது கூட்டாளிகளை சுட்டுக் கொன்று கடலில் வீசியெறிந்து ஒரு சகாப்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தனர். இதனால், உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

திகைத்துப் போனது பாகிஸ்தான். அமெரிக்காவிற்கு எதிராக, அதன் அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுக்க துணியாத அல்லது முடியாத தைரியசாலிதான் பாகிஸ்தான் இது அமெரிக்க துணையோடு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை மிரட்டிப் பார்க்கிறது.

பின்லேடனை சுட்டுக்கொல்ல அமெரிக்கா நடத்தியது போலவே தன்னிச்சையாக தாக்குதல் நடத்த இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகள் முயற்சித்தால் பயங்கரமான பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கிறது.

இதற்கிடையே, இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், `பின்லேடனை கொல்ல அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலை போலவே தாக்குதல் நடத்தும் சக்தி இந்திய ராணுவத்துக்கும் உள்ளது' என தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷிர் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர், எங்களுடைய நாட்டில் வீரம் மிகுந்தவர்கள் அதிகமாக உள்ளனர். ( அமெரிக்காவிற்கு எதிராக இவர்களின் வீரம் மிகுமா? மிகாதா? )

இப்போது நடந்தது போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறும் என்ற ரீதியில் எல்லைக்கு அப்பால் இருந்து கொண்டு ராணுவம், விமானப்படை போன்றவற்றின் மூத்த அதிகாரிகள் கூறி வருகின்றனர். அது போன்ற சம்பவம் அல்லது தவறான கணக்கீடால் தாக்குதல் நடைபெற்றால் மிகப்பயங்கரமான பேரழிவு ஏற்படும்.

எந்த வகையிலாவது தன்னிச்சையான தாக்குதலை நடத்த எந்தவொரு நாடும் நினைத்தால் அது தவறானதாக அமையும்.

பாகிஸ்தானை பாதுகாக்கும் வகையில் ராணுவம் வலிமையாக இருக்கிறது. பாகிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத தலைவர்களை கொல்ல தாக்குதல் நடத்தப்போவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுவது கவலையான விஷயம். இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் கொள்கையை திசை திருப்பும் வகையில் சில சக்திகளும், அதிகாரிகளும் அறிக்கை வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது.

உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நல்ல முறையாக பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

தீவிரவாத ஒழிப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்றவற்றில் இரு நாடுகளும் கூட்டாக செயல்பட பேச்சு நடந்தது. எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம். மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலானது இந்திய தரப்பின் உளவுத்துறை தவறு அல்லது பாதுகாப்பு தவறு என்றே கருத வேண்டும்.

அபோதாபாத்தில் நடந்த தாக்குதலின்போது, அதிர்ஷ்டவசமாக பெரிய துயரம் நடைபெறவில்லை. ஏனெனில், அந்த பகுதியில் சில ஹெலிகாப்டர்கள் பறப்பதாக தகவல் அறிந்து பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானங்கள் இரண்டு புறப்பட்டு சென்றன.

அல்கொய்தா அமைப்புடன் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது எளிது. ஆனால், அந்த கருத்துகள் பொய்யானவை. அல்கொய்தா மற்றும் தலீபான் தீவிரவாத தலைவர்களை அமெரிக்கா கைது செய்வதற்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்துள்ளது என்று தெரிவித்தார்.

தீவிரவாதத்தின் பிறப்பிடமாக, சில அமைப்புகளுக்கு இருப்பிடமாக பாகிஸ்தான் இருக்கும் வரையில், அமெரிக்காவின் காலைகழுவிக் கொண்டு, அதன் உள்ஆதரவோடு பிறநாடுகளிடம் தனது சீற்றத்தை இப்படித்தான் காட்டிக் கொண்டிருக்கும்.

Thursday, May 5, 2011

கத்திரி வெயில் தொடங்கியது : திருத்தணியில் 109 டிகிரி தமிழகம் தகித்தது.


தமிழகத்தில் கத்திரி வெயிலின் தொடக்க நாளான புதன்கிழமை, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 ஊர்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி வெயில் தகித்தது.

திருப்பதியிலும் 109 டிகிரி வெயில்: இந்த ஆண்டில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி அளவாக வெயில் சுட்டெரித்தது. இதேபோல, ஆந்திரத்தில் நிஜாமாபாத், திருப்பதி ஆகிய இடங்களிலும் இதே அளவு வெயில் கொளுத்தியதோடு, அனல் காற்று வீசியது.

இதர முக்கிய இடங்களில் புதன்கிழமை பதிவான வெப்பநிலை (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருநெல்வேலி, வேலூர் 106, சென்னை, திருச்சி 104, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுச்சேரி 102, காரைக்கால், 100,சேலம், திருப்பத்தூர் 99, தருமபுரி 97, தூத்துக்குடி, கோயம்புத்தூர் 95.

கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் மழை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டிய போதும், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் அளவுக்கு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதற்கு அடுத்தபடியாக சங்ககிரி, பாலக்கோடு ஆகிய இடங்களில் 80 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):

மாரண்டஹல்லி, கரூர் பரமத்தி, சூளூர் (கோவை மாவட்டம்) 70, ஏற்காடு 60, தாளவாடி 50, தருமபுரி, ஓகேனக்கல், அருப்புக்கோட்டை 40, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், வாடிப்பட்டி, மதுரை, வாழப்பாடி, ஆத்தூர், பவானிசாகர், சத்தியமங்கலம், குளித்தலை, பாப்பிரெட்டிபட்டி 30, ஊத்தங்கரை, தளி, கிருஷ்ணகிரி, கோபிச்செட்டிபாளையம், பென்னாகரம், ராசிபுரம், சேலம் 20, கொடைக்கானல், பழனி, வேடசந்தூர், அரூர், கரூர், மேட்டுப்பாளையம், அன்னூர், துறையூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி 10.

இன்று மழை பெய்ய வாய்ப்பு: தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நகரில், வியாழக்கிழமை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைகோ வலியுறுத்தல் : அதிவேக ஈணுலை திட்டத்தை கைவிட வேண்டும்.


கடந்தகால அனுபவங்களைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை அணு ஆபத்தில்லாத நாடாகக் கொண்டு வர வேண்டியது நமது கடமை என்பதால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக ரீதியிலான அதிவேக ஈணுலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ரூ. 5,600 கோடி மதிப்பீட்டில் அதிவேக ஈணுலை இரண்டு 500 மெகா வாட் உற்பத்தியை எதிர்வரும் 2012-இல் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பால்தேவ் அவர்களும், சுபாஸ் சந்திரஷேதல் அவர்களும் கூட்டாக இணைந்து கடந்த ஏப்ரல் 30 சனிக்கிழமை அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறியுள்ளனர்.

இதில் மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கும் வகையில் அதே குறுகிய நிலப்பரப்பில் வர்த்தக ரீதியில் தலா 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்திய அதிவேக ஈணுலை இரண்டு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கல்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அணு உலைகள் பூமிக்கு அடியில் 185 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன என்றும் விபத்து ஏற்பட்டால் பூமிக்கு அடியிலேயே புதைந்து போய்விடும் என்றும் துவக்கத்தில் சொன்னவர்கள், இன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும், அதிவேக ஈணுலை (பாவினி) நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் சொல்லி இருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஜப்பானின் புகுஷிமா கடல் மட்டத்திலிருந்து இதைவிட அதிக உயரத்திலும் தூரத்திலும் இருந்தும் பாதிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

நமது நாட்டின் மொத்த மின் தேவையில் அணுசக்தியின் மூலம் ரூ 3 மட்டுமே கிடைக்கின்றது. ஆனால், இதன் மூலம் வரும் ஆபத்து என்றால் ஒட்டுமொத்த இந்தியாவே பாதிப்புக்கு உள்ளாகும்.

காரணம், மின் உற்பத்தியின்போது அணுக்களை மோதவிட்டு அதன்மூலம் மின் விசையைப் பெறும்போது சுற்றுப்புறச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. குறிப்பாக, காற்றில் புளுட்டோனியம், அயோடின், சிசியம், ஸ்ட்ரான்ஷியம், ருத்தினியம் போன்றவை அதிகப்படியாகக் கலந்திருப்பதால் புற்றுநோய் போன்ற குணப்படுத்தப்பட முடியாத கொடிய நோய்கள் உருவாகும்.

கதிர்வீச்சைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லை.

இதுவரை கல்பாக்கம் அணு உலையின் மின் உற்பத்திக் கலன்களைக் குளிர் விப்பதற்குக் கடல்நீரைப் பயன்படுத்தி மறுசுழற்சி மூலம் கடலில் விட்டு வந்ததால் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கல்பாக்கம், கூடங்குளம் புதிய அணு உலைகளின் தொழில்நுட்பம் தண்ணீருக்குப் பதிலாக எளிதில் தீப்பற்றக் கூடிய சோடியத்தைப் பயன்படுத்துவதாக இருப்பது கடலில் எப்போதாவதுதான் ஆழிப் பேரலை சுனாமி வந்து ஆபத்தை உருவாக்கும்; ஆனால், சோடியம் எப்போதும் எரிந்து ஆபத்தை உருவாக்கக் கூடியது என்பதை மறுக்க முடியாது.

அதிலும் ஜப்பானின் புகுஷியா அணு உலைகள் அருகருகே இருந்ததாலும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மற்றதிலும் வெகு சீக்கிரத்தில் ஆபத்து உருவாகி உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே, இதிலிருந்து நாம் படிப்பினை பெறவில்லை என்றால்

நம்முடைய தலையில் நாமே எரியும் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொள்வது போலாகும்.

எனவே, கல்பாக்கத்தில் சிறிய நிலப்பரப்பில் எற்கனவே பல அணு உலைகள் அருகருகே இருக்கும்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலைகளை அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அபாயத்தை விளைவிக்கும். புதிதாக வர்த்தக ரீதியில் அதிவேக ஈணுலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். இருக்கின்ற அணு உலைகளை ஆபத்தில்லாததாகத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

வட இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த ரத்தினகிரி மாவட்டம், ஜெய்தாபூரில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணு உலையை எதிர்த்துப் போராடி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகித் தொடர்ந்து அவர்கள் போராடிக் கொண்டு உள்ளனர்.

எனவே, வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக ஈணுலை மின்சாரம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேசப் போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக் கூடும். எனவே, நம்மை அழித்து உரமாக்கித் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழக மக்களுக்குப் பயன் பெறாமல், நமக்குத் தண்ணீர் தர மறுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்குப் பயனையும், நமக்குக் கதிர்வீச்சு நோயினையும் தந்திடுமேயானால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இதை எதிர்த்துப் போராட வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி வழக்கில் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன் : கனிமொழி.



2ஜி ஊழல் வழக்கை சட்டரீதியாக சந்தித்து தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

இது மிக, மிக கடுமையான குற்றச்சாட்டு. இதில் இருந்து வெளியில் வருவோம். தவறு செய்யவில்லை என நிரூபித்து இந்த வழக்கில் இருந்து வெளியில் வருவேன் என கனிமொழி தெரிவித்தார்.

சட்டரீதியாக அந்த வழக்கை எதிர்ப்போம். நானும் கூட்டு சேர்ந்து சதிசெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. சட்டரீதியாக அதை எதிர்ப்போம் என கனிமொழி தெரிவித்தார்.

இந்திய நீதி அமைப்பில் நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் என்ன முடிவுசெய்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்றார் அவர்.

இந்த விவகாரத்தால் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என அவர் மறுத்தார். இந்த விவகாரத்தால் எனது குடும்பம் பிளவுபடவில்லை. திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்பக்கம் எனது குடும்பத்தினர் இருப்பார்கள் என்றார் அவர்.

முன்ஜாமீன் கேட்க மாட்டேன் : இதனிடையே சிஎன்என்-ஐபிஎன் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சிபிஐ தன்னை கைது செய்ய விரும்பினால் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடவிருப்பதாகவும், முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் : பாகிஸ்தான்.


தங்கள் மண்ணில் எந்த நாடாவது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் எச்சரிக்கை விடுத்தார்.

தவறாக கணக்கு போட்டால் பேரழிவு ஏற்படும். தன்னை பாதுகாத்துக் கொள்ள போதுமான தகுதி பாகிஸ்தானிடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என பஷீர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாதில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றன. இது பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு தெரியாமல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்து 3 தினங்களுக்குப் பின் சல்மான் பஷீர் இதுகுறித்து பேசினார்.

ஐஎஸ்ஐயோ, அரசு அமைப்புக்குள் உள்ள சக்திகளோ அல் காய்தாவுடன் சேர்ந்து செயல்பட்டது என்று சொல்வது சுலபம். இது தவறான கருத்து. தவறான குற்றச்சாட்டு. இதை எந்தநிலையிலும் உறுதிப்படுத்த முடியாது என பஷீர் குறிப்பிட்டார்.

இன்னும் 50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்.

50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

உலக மக்கள் தொகை பற்றிய ஆய்வு ஒன்றை ஐ.நா சபை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2060-ம் ஆண்டு 170 கோடியைத் தாண்டும். 2030-ம் ஆண்டு, இந்திய ஜனத்தொகை உலக நாடுகளிலேயே அதிகமாக இருக்கும். பின்னர் மக்கள் தொகை விகிதம் படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் 2060-ம் ஆண்டு, இந்திய மக்கள் தொகை 170 கோடி இருக்கும். 2025-ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தொடும். இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக ஜனத்தொகை 930-ம் கோடியாக இருக்கும்.

2100-ம் ஆண்டு இது 1000 கோடியைத் தாண்டும். இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதி பிறக்கும் முதல் குழந்தை, உலக மக்கள் தொகையின் 700-வது கோடி ஆளாக கணக்கிடப்படுவார். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிருடன் பிடித்த பிறகே என் தந்தையை சுட்டு கொன்றனர் ; பின்லேடனின் 12 வயது மகள் தகவல்.

உயிருடன் பிடித்த பிறகே என்  தந்தையை சுட்டு கொன்றனர்;  பின்லேடனின் 12 வயது மகள் தகவல்

பாகிஸ்தானில் அபோதா பாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடனை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு சுட்டுக்கொன்றனர். பின்லேடனுடன் அவரது மகன் காலித் மற்றும் மகள் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 ஆண்கள் யார் என்று இது வரை அடையாளம் காணப்படவில்லை.

இதற்கிடையே பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அரேபிய தொலைக்காட்சிகள் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டப்படி உள்ளன. நேற்று பின்லேடனின் 12 வயது மகள் தெரிவித்ததாக ஒரு தகவலை அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

அமெரிக்க கமாண்டோ வீரர்கள் பின்லேடனை உயிருடன் பிடித்ததாகவும், அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்தே சுட்டுக் கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. தன் கண் எதிரில் தனது தந்தையை அமெரிக்கர்கள் சுட்டுக் கொன்றதாக அவர் கூறி உள்ளாள்.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது, பங்களாவின் மற்ற அறைகளில் 12 பெண்கள் இருந்தனர். அவர்களை அமெரிக்கர்கள் எதுவும் செய்யவில்லை என்று பின்லேடன் மகள் கூறி உள்ளார். பின்லேடன் மகள் கொடுத்துள்ள இந்த வாக்கு மூலம் காரணமாக பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது முழுமையாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.