Wednesday, March 9, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-3.


ஜூலை 29, 1987ஆம் வருடம். ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக 40,000 இந்தியராணுவ வீரர்களைக் கொண்ட IPKF – அமைதி காக்கும் இந்தியப் படை அனறே இலங்கை விரைகிறது. அதன் முதல் கமாண்டராக ஜெனரல் ஹர்கிரத் சிங் பொறுப்பு ஏற்கிறார். இனி அவரது வார்த்தைகளில்,

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே இடையிலான, இந்திய இலங்கை உடன் பாட்டின்படி, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும். இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும்.அனைத்து போராளிக்குழுக்களும், இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் வசம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும். துவக்கத்தில் IPKF கமாண்டரான என்னிடம் கூறப்பட்ட அணுகுமுறை இது தான்.

எனவே நான் விடுதலைப்புலிகளிடமும், அதன் தலைவர் பிரபாகரனுடனும் நல்ல அணுகுமுறையிலும், நட்புமுறையிலும் பழகினேன். தினமும் அவர்களுடன் உட்கார்ந்து கலந்து பேசி டீ சாப்பிடும் அளவிற்கு எங்கள் உறவு சுமுகமாக இருந்தது. ஆனால், பிறகு நடந்தது வேறு. விடுதலைப் புலிகளிட மிருந்து மட்டுமே ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டன. மற்ற போராளிக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதுடன், மேற்கொண்டு ம் இந்திய அரசால் அவர்களுக்கு ஆயுதங்கள் தரப்பட்டன. அந்த போட்டி குழுக்கள், புலிகளை அழிக்கும் பணியில் ஊக்குவிக்கப்பட்டன.

இவ்வாறு அமைதி காக்க வேண்டிய படையை, டபுள் கேம் (இரண்டு வித ஆட்டங்களை) ஆடும்படி இந்திய அரசியல் தலைமை எங்களுக்கு உத்திர விட்டது. எனவே, விடுதலைப் போராளிகளை அழிக்கும் பணியில் IPKF படை துணை போக ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் இதைப்பற்றி வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தபோது, அதை இந்திய அரசு சட்டை செய்ய வில்லை. மாறாக,இந்திய அமைதி காக்கும்படைக்கு இன்னுமொரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிளவையும், அவ நம்பிக்கையையும் உண்டாக்கும் வேலை அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை பலவீனமாக்கி அழித்து ஒழிக்கும்படி அமைதி காக்கும் படைக்கு தில்லியிலிருந்து உத்திரவு கொடுக்கப்பட்டது

புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிப்பது நடவாத காரியம் – தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்கு புலிகளையே நம்பி இருக்கிறார்கள் என்பது எனக்கு (ஜெனரல் ஹர்கிரத் சிங் ) நன்றாகப் புரிந்தது. இதை நான் அப்போதைய இந்தியத் தூதர் ஜெ.என்.தீக்ஷித் திடம் சொன்னபோது அவர் அதை ஏற்பதாக இல்லை. மாறாக, “ஜெனரல் – நான், பிரதமர் ராஜீவ்காந்தியுடன் தில்லியில் நடத்திய பேச்சு வார்த்தைகளில் கிடைத்துள்ள உத்திரவுகளின்படி நான் சொல்வதை நீங்கள் ஏற்று செயல்பட வேண்டும். புலிகளிடம் சமாதானப் பேச்சுநடத்துவதைக் கைவிட்டு விட்டு மிரட்டி அடிபணிய வைக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாக தீக்ஷித் திடமிருந்து 1987 செப்டம்பர் மாதம் 14/15 தேதி இரவு கிடைத்த உத்திரவு, என்னை நிலை குலையச் செய்தது.

நான் பிரபாகரனையும் மற்றவர்களையும், அவ்வப்போது தோன்றும் பிரச்சினை களைப்பற்றி விவாதித்து சுமுகமுடிவுகளை எடுக்க, தேவைப்படும்போது இரவு நேரங்களில் 12 மணி வாக்கில் சந்திப்பது வழக்கம்.

1987 செப்டம்பர் 14/15ந் தேதி இரவு, அப்போது இலங்கையில் இந்திய தூதராக இருந்த ஜெ.என்.தீக்ஷித் “பேச்சு வார்த்தை நடத்த வரும்போது பிரபாகரனை கைது செய்யுங்கள் - முடியவில்லை என்றால் - சுட்டு வீழ்த்துங்கள். என்று என்னிடம் கூறினார்.

அதற்கு நான், “பிரபாகரன் இந்திய ராணுவத்தின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த வருகிறார். வெள்ளைக்கொடி ஏந்தி பேச்சு வார்த்தை நடத்த வருபவர்களை சுடுவது ராணுவத்திற்கு இழுக்கு. அத்தகைய செயல்களில் ஈடுபட நாங்கள் தயாரில்லை. மேலும் நீங்கள் போடும் உத்திரவை நான் ஏற்க வேண்டிய அவசியமில்லை- எனக்கு உத்திரவு போட வேண்டியவர்கள் ராணுவத் தலைமையகத்தில் இருக்கிறார்கள் என்றேன்.

எனக்கு ராஜீவ் உத்திரவு கொடுத்திருக்கிறார், என்றார் தீக்ஷித்.

நான் “உங்கள் உத்திரவை ஏற்பதற்கில்லை. என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

ஜெனரல் ஹர்கிரத்சிங் , இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய தளபதிபொறுப்பில் இருந்தவர். ரிடையர் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு அவர் கொடுக்கும் பேட்டி யில், எழுதும் புத்தகத்தில் கூறுபவை நம்பத் தகுந்ததாகத் தானே இருக்கும்? (இதன் பின்னர் ஜெனரல் ஹர்கிரத் சிங், விடுதலைப்புலிகளுடன் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஜனவரி, 1988-ல் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப் பட்டார் )

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு, போரிடுவதை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்த குறைகளைத் தீர்த்து வைக்க IPKF சார்பில் எந்தவித நடவடிக் கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரான, 25 வயது இளைஞன் பார்த்திபன் ராசையா என்கிற இயற்பெயரைக் கொண்ட லெப்டினண்ட் கேனல் திலீபன் 5 அம்ச கோரிக்கைகளை IPKF முன் வைத்து, அவற்றை நிறைவேற்றக் கோரி, காந்தீய வழியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

வடக்கிலும், கிழக்கிலும் புதிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

அவசர கால சட்டம் நீக்கப்பட வேண்டும்.

ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில், அரசாங்கம் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதை நிறுத்த வேண்டும் என்பனவே அவை.

1987 செப்டம்பர் 15ந்தேதி உண்ணாவிரதத்தைத் துவங்கிய திலீபன் தண்ணீர் கூட அருந்தவில்லை. தமிழீழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் முதல்முறையாக(பிரபாகரனின் சென்னை உண்ணாவிரதத்தைத் தவிர்த்து ) காந்தீய வழியில் உண்ணாவிரதம் இருந்து புதிய வழியில், சாத்வீக முறையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை இந்திய அரசு இதை சற்றும் கண்டுகொள்ள வில்லை.

தில்லி அரசியல் தலைமை - இதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் கூறியது. திலீபனின் உண்ணாவிரதம் பற்றிய செய்திகள் அவ்வப்போது புலிகளின் செய்திஊடகங்களிலும்,வானொலியிலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்ததால், திலீபனின் உண்ணாவிரதம் தமிழர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த இளைஞர் திலீபன் அவரது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையிலேயே செப்டம்பர் 26ந்தேதி உண்ணாவிரதம் காரணமாகவே துடிக்கத் துடிக்க தன் உயிரைத் துறந்தார். இது விடுதலைப் போராளிகளிடையேயும், ஈழத்தமிழ் மக்களிடையேயும் பெருத்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டு பண்ணியது.

IPKFக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின.

இங்கே விரோதம் வலுக்கிறது.

இந்த விரோதம் துவங்கவும், தொடர்ந்து வளரவும் ராஜீவ் காந்தியே முக்கிய காரணமாகிறார் என்பது கவனிக்கத் தகுந்தது.

அக்டோபர் 4, 1988. பாயிண்ட் பெட்ரோவிற்கு அருகே, கடலில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இலங்கை கடற்படை வழிமறித்துப் பிடித்தது. அதில் 17போராளிகள் இருந்தனர். போராளிகளின் முக்கியத் தலைவர்களான லெப்டினண்ட கேனல் குமரப்பாவும், புலேந்திரனும் அதில் அடங்குவர். ஒப்பந்தத்திற்கு முன்னதாக சில கொலை வழக்குகளின் காரணமாக தேடப்பட்டு வந்த இவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் விலை அறிவித்து இருந்தது சிங்கள அரசு. இப்போது சிக்கிய இவர்கள் மீது மேற்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்கு ஆயுதங்களைக் கள்ளத்தனமாக கடத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியது இலங்கை அரசு. விசாரணைக்காக, இவர்களை கொழும்பு கொண்டு செல்லப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுபட்டு விட்டதாகவும், ஆயுதங்களைக் கடத்தியதாக இலங்கைஅரசு குற்றம்சாட்டுவது வடிகட்டிய பொய் என்றும் கூறி உடனே அவர்களை விடுவிக்குமாறு IPKF கமாண்டர் ஹர்கிரத் சிங்கிடம் கேட்டது புலிகள் அமைப்பு.

ஹர்கிரத் சிங்கின் சார்பாக, அவரது துணைத் தளபதி IPKF பிரிகேடியர் பெர்னாண்டஸ் பொறுப்பேற்றுக்கொண்ட இந்த நிகழ்வு பற்றி அவரே கூறி இருப்பது .

உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்த பிரிகேடியர் பெர்னாண்டஸ் 17 கைதிகளையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அவர்களை பலாலி விமான தளத்திற்கு அனுப்பி வைத்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த இலங்கை ராணுவத்திடம் பேச்சு வார்த்தை நிகழத்திய பிறகு, போராளிகள் பலாலி விமான தளத்தில் பயணிகள் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களைச் சூழ்ந்துகொண்டு உள் வளையத்தில் AK- 47 துப்பாக்கிகளுடன் இலங்கை ராணுவம் இருந்தது. வெளிவட்டத்தில் இந்திய ராணுவம் இருந்தது. போராளிகளிடம் இருந்த ஆயுதங்கள் ஏற்கெனவே பறிக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் 5ந்தேதி காலை பிரிகேடியர் பெர்னாண்டஸுக்கு கிடைத்த தகவல் அவரை நிம்மதி இழக்கச் செய்தது. ஆம் -இலங்கை ராணுவம் போராளிகளை கொழும்புக்கு கொண்டு போகப்போவதாக அறிவித்தது. காலையில் கொழும்பி லிருந்து பலாலி வரும் இலங்கை ஆகாயப்படை விமானத்தில் போராளிகளை ஏற்றிச்செல்லப்போவதாகத் தெரிந்தது.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் துரிதமாகச் செயல்பட்டார். இந்த தருணம் வரை – எதைச் செய்தாவது, IPKF போராளிகளைக் காப்பாற்றி விடுவிக்கவே விரும்பி செயல்பட்டது. இலங்கை விமானம் தரை இறங்கியவுடன், அது மீண்டும் மேலெழும்பாத வண்ணம் ஓடுபாதையில் அதைச்சுற்றி நான்கு புறங்களிலும், IPFK ன் BMP கவச போர் வாகனங்கள் விரைவாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

இலங்கை ராணுவம் கடுங்கோபம் கொண்டது. எந்த நேரத்திலும் இரு தரப்பாருக்கும் சண்டை நிகழக்கூடிய சூழ்நிலை உருவானது.

இந்த சம்பவத்தை நினைவுகூறும்போது கூறுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் -

“பத்தே நிமிடங்களில் இலங்கைப் படையை மௌனிக்கச் செய்து விட்டு 17 போராளிகளையும் கவச வாகனங்களில் ஏற்றிச்சென்று பத்திரமாக விடுதலை செய்திருக்க எங்களால் முடிந்திருக்கும் .

ஆனால் – துரதிருஷ்டவசமாக தில்லி அரசியல் தலைமையிலிருந்து, அவசரமான கட்டளை ஒன்று பறந்து வந்தது. “உங்களை யார் இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னது ? உடனடியாக விலகி இருங்கள். இலங்கை ராணுவம் விரும்புவதைச் செய்யட்டும்” என்று. எங்கள் இயலாமையை எண்ணி வருந்துவதை விட வேறோன்றும் செய்ய முடியவில்லை எங்களால் “.

ஆம் – உடனடியாக சம்பவ இடத்திலிருந்து நகர்வதைத் தவிர IPKF ஆல் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் – போராளிகளிடம் சென்று விஷயத்தை விளக்கி விட்டு, தன் இயலாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மிகுந்த வருத்தத்துடன் வெளியேறினார்.

விளைவு – இலங்கை ராணுவம் 17 போராளிகளையும் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்க, அத்தனை பேரும் சயனைடு அருந்தி உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது.

தெரிந்தே, ராஜீவ் காந்தி எடுத்த இந்த முடிவு - போராளிகளை இலங்கை அரசுக்கு பலி கொடுப்பது என்கிற முடிவு.

விரோதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும், இந்திய அரசின் மீதும், IPKF மீதும் கடும் கோபம் கொண்டனர். உடனடியாக வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. சில மணி நேரங்களுக்குள்ளாகவே விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாம்களின் மீது தாக்குதல்களை நிகழ்த்தினார்கள்.

புலிகளை அடக்க முடியவில்லை என்றால் IPKF எதற்கு என்று ஜனாதிபதி ஜெயவர்த்தனே கேட்க,

முழு பலத்துடன் விடுதலைப்புலிகளை அடக்கவும், அழிக்கவும், தில்லியிலிருந்து உத்திரவு வந்தது.

விரோதம் தொடர்கிறது.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

Tuesday, March 8, 2011

பத்ம வியூகம்.

மனுஷ்ய புத்திரன்


தி.மு.க. தலைவரின் இப்போதைய நிலையை பத்மவியூகத்தில் இருக்கும் அபிமன்யூவின் நிலையுடன்தான் ஒப்பிடமுடியும். அரசியல் சாணக்கியர் தனது மதிநுட்பத்தின் எல்லா ஆயுதங்களையும் பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். மிகவும் நெருக்கடியான அரசியல் சந்தர்ப்பங்களை மிகவும் சாதுர்யமாகக் கடந்து வந்தவர் அவர். அதிகாரத்திற்காகக் காத்திருக் கவும் நீண்ட போராட்டத்தை நடத்தவும் தயங்காதவர். ஆனால் இன்று அவர் கையில் இருக்கும் துருப்புச் சீட்டுகளில் ஒவ்வொன்றாகப் பிடுங்கப் படுகின்றன. அவருடைய ரத்த பந்தங்களாலும் நீண்ட கால அரசியல் தோழர்களாலும் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்த்துத் தாக்குவதற்கான அவரது படையரண்கள் ஒவ்வொன்றாகச் சேதப்படுத்தப் படுகின்றன. வரப்போகும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா இல்லையா என்பதை விட முக்கியமான கேள்வி, ஒரு குடும்பத் தலைவராக, கட்சித் தலைவராக அவரது அதிகாரம் உறுதிப்படுமா என்பதுதான். ஒவ்வொரு நாளும் அவருக்குக் கெட்ட சேதிகளுக்குப் பஞ்சமே இல்லை. அவர் மறக்க விரும்புகிற சம்பவங்களுக்கும் குறைவேதுமில்லை.

தி.மு.க. என்ற இயக்கம் அதிகாரத்தில் இருந்தபோதும் இல்லாதபோதும் தமிழக அரசியலிலும் சில சமயம் இந்திய அரசியலிலும் ஒரு பேரரசைப்போல கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு கணக்கு இருக்கிறது. எந்தப் பேரரசும் ஒரு அரை நூற்றாண்டுக் காலத்தில் அதன் உச்சத்திற்குச் சென்று பிறகு சிதையத் தொடங்கும் என்பதுதான் அது. தமிழக அரசியலின் பேரரசர் தனது வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கிவிட்டாரா? ஒரு முகாலாயப் பேரரசைப்போல அவர் சொந்த நிழலாலேயே சூழப்பட்டிருக்கிறாரா?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற அடையாளத்தைப் படிப்படியாக சிதைத்ததை அவர் கண்முன் காண நேர்ந்தது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்த அவர் அந்த மொழியின் பெயரால் ஒரு மாநாட்டை முன்னூறு கோடி ரூபாய் செலவில் நடத்தி ஓராண்டு கூட நிறைவடையவில்லை; அதன்மேல் தூசி படிந்து யாருடைய நினைவிலும் அது இல்லாமல் போய்விட்டது. கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் இலவச தொலைக்காட்சி, மருத்துவக் காப்பீடு, நூறு நாள் வேலைத்திட்டம், ஒரு ரூபாய் அரிசி என மிகவும் வசீகரமான மக்கள் நலத் திட்டங்களால் தமது அரசாங்கம் படிப்படியாக அடைந்த புகழின் வெளிச் சத்தை ஊழலின் புழுதிப் புயல் இவ்வளவு சீக்கிரமாக வந்து மூடும் என்று அவர் கற்பனை செய்திருக்க மாட்டார். ஈழத் தமிழர் போராட்டத்தை நசுக்குவதற்கு காங்கிரஸ் மேற்கொண்ட சதிகளோடு, ஆட்சி அதிகாரம் கருதி அவர் செய்து கொண்ட சமரசங்களுக்காக வரலாற்றின் ஊழ்வினை அவரைப் பழிவாங்கு கிறது.

சோனியாகாந்தி நேற்று எப்படி பிரபாகரனை அழிப்பதற்காக ஒரு ரகசிய வளையத்தை உருவாக்கினாரோ, அதேபோல்தான் இன்று தி.மு.க.வை அழிப்பதற்கும் உருவாக்கியிருக்கிறார். மத்தியில் தி.மு.க.வோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்ட சந்தர்ப்பத்திலோ அல்லது தமிழகத்தில் தி.மு.க. அரசு காங்கிரஸ் தயவை நம்பியிருந்த சந்தர்ப்பத்திலோகூட ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காத காங்கிரஸ், இன்று கூட்டாட்சி கேட்டு தி.மு.க. தலைவரின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்குகிறது. தமிழக அரசியலில் எவ்வளவோ காலமாக எந்தப் பிரசன்னமும் இல்லாமல் இருந்த காங்கிரஸ் இன்று தன்னை ஒரு தீர்மானிக்கும் சக்தியாகக் காட்டிக்கொள்கிறது. காற்றுகூட உள்ளே புக முடியாமல் இரண்டு திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வந்த தமிழகத்தின் ஆட்சி பீடத்தை நோக்கி காங்கிரஸ் பின் வாசல் வழியாக முன்னேறுகிறது. கருணாநிதி மிரட்டலுக்கும் அவமதிப்புகளுக்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார். இது அவருக்குப் பழக்கமில்லாதது. ஆனால் இப்போது வழியேதும் இருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸை எந்த தயக்கமும் இன்றி ‘கெட்அவுட்’ சொன்ன அவர், இன்று அவரை வலிய அழைத்து அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக முப்பத்தோரு இடங்களைக் கொடுக்க வைப்பது பயத்தைத் தவிர வேறென்ன?

தி.மு.க.வை ஊழல் என்ற பொறியில் எவ்வளவு சிக்கவைக்க முடியுமோ சிக்க வைத்து தன்னை முழுமையாக அண்டியிருக்கச் செய்யும் ஒரு சூழலை காங்கிரஸ் உருவாக்கியிருக்கிறது. அதனுடைய நோக்கம், தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது மட்டுமல்ல. தி.மு.க.வைச் சிதைப்பதன் மூலமே தான் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இங்கே உருவெடுக்க முடியும் என்பதை அது அறிந்திருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை கருணாநிதியின் வாரிசுகளே எதிர்காலத்தில் காங்கிரஸுக்கு உருவாக்கிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு விதமான தொகுதிப் பங்கீடுகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார். முதலாவதாக காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகளு டனான தொகுதிப் பங்கீடு. இதே வரிசையில் அவர் தமது கட்சிக்குள் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்கிற வரிசையில் உள்ஒதுக்கீட்டையும் செய்தாக வேண்டும். ஒரு விமானத்தை ஒரே நேரத்தில் ஆறுபேர் ஆறுதிசைகளில் ‘ஹைஜாக்’செய்வது போன்ற அபத்த நாடகக் காட்சி இது. குடும்ப அரசியலிலும் அதிகார அரசியலிலும் தொடர்ந்து சமரசத்தை மேற்கொள்ளக்கூடிய ஒருவர், கடைசியில் அடையக்கூடிய இடம் என்ன வென்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

இதை எல்லாவற்றையும் மீறி யாரும் எதிர்பாராத விதத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதுபோல வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வரும் என்று கருணாநிதி நம்பக்கூடும். அந்த நம்பிக்கை வீணானது என்று சொல்லிவிட முடியாது. எவ்வாறு இன்று இந்திய அரசியல் அதிகாரத்தைப் பல்வேறு சிறுசிறு காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாகத் தீர்மானிக்கிறதோ அதேபோல தமிழகத்திலும் நடக்கலாம். விலைவாசி பிரச்சினையோ, ஊழலோ ஒருவருக்கு வாக்களிப்பதை தீர்மானிப்பதிலிருந்து நமது அரசியல் மனோபாவம் வெகுதூரம் கடந்து வந்துவிட்டது. மக்கள் இன்று மிகவும் குறுகலான நோக்கங்களின் அடிப்படையில் தமது தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது, அவற்றைப் பற்றிய பொது கருத்துகளை உருவாக்கிக் கொள்வது வாக்களிக்கச் செல்லாத மத்தியதர வர்க்கத்தின் மனோபாவம் ஆகிவிட்டது. தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பே தொகுதிகள்தோறும் கட்டுக்கட்டாக கரன்சிகள் வந்து இறங்கத் தொடங்கிவிட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யக்கூடிய தில்லுமுல்லுகள் பற்றி எழுந்த சர்ச்சைகள் அப்படியே கண்டுகொள்ளாமல் மறைக்கப்பட்டுவிட்டன. சாதி, பணம், தில்லுமுல்லுகளால் வெற்றி தோல்விகளில் எந்த நேரத்திலும் வித்தியாசங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு ஜனநாயகத்தில் பொதுப் பிரச்சினை சார்ந்து மக்கள் அலைகள் உருவாகாது என்பதே உண்மை. ஒருவேளை தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தால்கூட அது ஸ்பெக்ட்ரமின் விளைவாக இருக்காது; மாறாக, தேர்தல் உத்திகளில் செய்த தவறாகவே அது இருக்கும்.

வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிற விமர்சகர்கள் அதற்கு மாற்றான ஒரு அரசியல் சக்தியை மனப்பூர்வமாக சுட்டிக்காட்ட முடிகிறதா என்பது முக்கியமான கேள்வி. இன்று தி.மு.கவின் குற்றங்களுக்காக தண்டனையை வேண்டுபவர்கள் மக்களின் நிவாரணத் திற்காக சொல்லகூடிய மாற்றுத் திட்டம்தான் என்ன? தி.மு.கவை விட சிறந்த ஆட்சியை தமிழக மக்களுக்கு தரப்போகிறவர்கள் ஜெயலலிதாவும் விஜயகாந்துமா? அல்லது காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதன் வாயிலாக ஏதேனும் ஒரு கட்சி நல்லாட்சியைத் தந்துவிட முடியுமா? ஊழல், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் முடிவுகளை எடுத்தல், எதேச்சதிக்காரம் என்பனவற்றில் ஜெயலலிதா இணையில்லாத முன்னுதாரணங்களை ஏற்படுத்தியவர். விஜயகாந்த் தனது தேர்தல் அறிக்கையினை அல்லது கட்சியின் கொள்கையினை எந்தச் சொற்களால் எழுதப்போகிறார் என்பது இதுவரை யாருக்கும் புரியாத ஒரு புதிர். தேர்தலில் வென்றால் தன் மனைவிக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று அவர் இப்போதே கோருவதாக செய்திகள் வருகின்றன.

காங்கிரஸ் இந்திய ஜனநாயகத்தின் ஒரு புரையோடிப்போன புண்.

ராமதாசும் திருமாவளவனும் குறிப்பிட்ட சாதிகளின் பிரதிநிதிகளாகவே என்றென்றும் பார்க்கப்படுவார்கள். பிற தலைவர்கள் இவர்களைவிட அதிக சாதிய சாய்மானம் கொண்டவர்களாக இருந்த போதிலும்கூட. இனி நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் நடிகர் விஜய் அல்லது கார்த்திக் மட்டுமே. இவர்களுக்கு இடையே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் வேறு வழியில்லாத ஒரு தெளிந்த வாக்காளன் பார்வையில் இப்போதும் தி.மு.கவே முன்னிலை பெறும்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைந்து ஸ்டாலின் முதல்வரானால் அழகிரி அவருக்கு ஒரு நிரந்தர கொடுங்கனவாக மாறுவார். அதேசமயம் ஸ்பெக்ட்ரம் என்ற சுருக்குக் கயிறு தற்காலிகமாக தி.மு.க.வின் கழுத்திலிருந்து கழற்றப்படும். கபில்சிபல் போன்ற யாராவது ஒரு போலி வழக்கறிஞர் இதை ஒரு கட்டுக்கதை என்று சான்றிதழ் அளிப்பார். இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆக்டோபஸ் கரங்கள் ஆ.ராசாவையும் தாண்டி பலரையும் நோக்கி நீள்வதால் இந்தப் பிரச்சினையைப் படிப்படியாக மூடி மறைப்பதற்கு எல்லோருமே ஒரு பரஸ்பர ரகசிய உடன்படிக்கைக்கு வருவார்கள்.

இவையெல்லாம் இந்த நாளின் உத்தேசங்கள் மட்டுமே. அடுத்த ஒரு மாதத்திற்குள் இன்னும் சில காட்சிகள் அரங்கேறலாம். ஏதாவது ஒன்று திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க. தலைவருக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொண்டு வரலாம்.

கருணாநிதி உளியின் ஓசை, இளைஞன் போன்ற படங்களுக்கு எழுதும் வசனங்கள் அல்ல அவரது முன் இருக்கும் சவால். வைரமுத்து, பா. விஜய் போன்ற அரசவை கவிஞர்களின் நட்பும் இணக்கமும் அவரது அறிவார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யப் போவதில்லை.

முதுபெரும் தலைவர் தனது இயக்கத்தின் வரலாற்றில் இன்னொரு யுத்தத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய அரசியல் வாழ்க்கையில் அவருக்கு அதிர்ஷ்டம் எப்போதும் கூடவே வந்திருக்கிறது. ஆனால் அவர் விரும்பு வதைவிட கொஞ்சம் தாமதமாக.

Saturday, March 5, 2011

விடிவதற்கு(ள்) எதுவும் நடக்கலாம்.


திமு.க .கூட்டணியில், பா.ம.க.வுக்கு - 31, விடுதலை சிறுத்தைக்கு - 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு - 7 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு - 3 , மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு - 1 ஆக 52 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 182 தொகுதிகள் தி.மு.க. கைவசம் உள்ளது.

அ.இ.அ.திமு.க .கூட்டணியில், தே.மு.தி.க. - 41 , புதியதமிழகம் - 2 , மனிதநேய மக்கள் கட்சி - 3 , இந்திய குடியரசு கட்சி - 1 , பார்வேர்டு பிளாக் - 1, அணைத்திந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் -1 ஆக 49 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 185 தொகுதிகள் அ. தி.மு.க. கைவசம் உள்ளது. இன்னும் இரண்டு கம்யூனிஸ்டுகள் , ம.தி.மு.க. பாக்கியுள்ளது தோராயமாக - 45 தொகுதிகள் ஒதுக்குவதாக் கணக்கிட்டால் மீதம் 140 தொகுதிகள் அ.இ.அ.திமு.க கைவசம் உள்ளது

இந்நிலையில் இன்று 05-03-2011 நடைபெற்ற தி.மு.க உயர்மட்ட குழு கூட்டத்தில் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகப் போவதாக முடிவாகியுள்ளது. ஆக தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையை எட்டியுள்ளது.

மத்திய அரசில் இருந்து விலக தி.மு.க. முடிவு செய்தது பற்றி, ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொறுத்திருந்து பார்ப்போம் என்றாராம்.

மத்திய நிதியமைச்சர், பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

குலாம் நபி ஆசாத் கூறுகையில், திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்கிறார்.

தனது முடிவை தி.மு.க. அறிவித்த பின்னர், கூட்டணியை தொடருவதற்காக பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தன்னிடம் சொன்னதாக சி.என்.என்.ஐ.பி.என். சேனல்ல ராஜ்தீப் சர்தேசாய் கூறுகிறார்.

அ.தி.மு.க. பக்கம் போகமுடியாத சூழலில் துரைமுருகன் சொன்னது மாதிரி 234 தொகுதிகளிளும் காங்கிரஸ் போட்டியிடுமா?

மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ்க்கு தரமுடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அங்கே காங்கிரஸ் என்ன செய்யும்?

ஆக ராகுல் ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. பார்ப்போம் விடிவதற்குள் எதுவும் நடக்கலாம். ராகுல் ராசிதான் தெரியுமே!

வை.அருள்மொழி.

Friday, March 4, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-2.


கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத்தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதிகள் இழைத்த கொடுமைகளை விவரமாகக் கூறும் வலைத் தளங்கள் நிறைய இருக்கின்றன.

எனவே நான் அந்த விவரங்களுக்குள் போகவில்லை. சுருக்கமாக -

அன்று முதல் – இன்று வரை இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் அனைத்துமே ஈழத்தமிழர்களுக்கு எதாவது ஒரு வகையில் துரோகம் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவாக – எப்போதாவது இந்தியா எதாவது செய்ய முயற்சித்தால், அந்த தமிழர்களுக்குப் பரிந்து பேச வந்தால் நேரடியாக இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் தைரியம் இல்லாததால், சுற்றி வளைத்து எந்த விதத்திலாவது இந்திய அரசுக்கு சிக்கலை உருவாக்குவதிலேயே இலங்கைஅரசு முனைப்புடன் இருந்துள்ளன.

எழுபதுகளில் - எண்பதுகளில் - பனிப்போர் தொடர்ந்து இருந்து வந்த காலங் களில், இந்தியா ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த நேரம். அமெரிக்கா பாகிஸ்தானைக் கையில் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு தன்னால் இயன்ற வகையில் எல்லாம் தொந்திரவுகள் கொடுத்து வந்த காலம்.

அந்த சமயத்தில் - இலங்கை அரசும் திரிகோணமலையில் இந்தியாவுக்கு விரோதமாக அமெரிக்காவுக்கு ராணுவ தளம் அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டியது.

தமிழ்ப்போராளிகள் சிறு சிறு குழுக்களாக சிங்கள அரசை எதிர்த்து வந்த நேரம். இலங்கை அரசுக்கு எதிராக இந்த போராளிக்குழுக்களை வளர்த்து விட்டால், இலங்கை அரசை ஒரு கட்டுக்குள் வைக்கலாம் என்று நினைத்த இந்திரா அம்மையார் தமிழ்ப் போராளிக்குழுக்கள் அனைத்துக்கும் தமிழ் நாட்டில் ஆயுதப் போராட்டத்திற்கான பயிற்சியைக் கொடுத்து ஆயுதங்களுடன் அவர்களை இலங்கை செல்ல ஊக்குவித்தார். இலங்கை அரசுக்கு எதிரான அவர்களது போராட்டங்களுக்கு மறைமுகமான ஆதரவைக் கொடுத்தார்.

இந்திரா தமிழ்ப் போராளிகளை வளர்த்து விட்டது இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுக்கு தொல்லை கொடுக்கத்தானே தவிர தனி ஈழம் அமைத்துக் கொடுக்க அல்ல.

தனித் தமிழ் ஈழம் அமைவதில் இந்திராவுக்கு விருப்பமில்லை. அது தமிழ் நாட்டில் பிரிவினை வாதத்துக்கு வழி கோலும் என்றே அவர் நினைத்திருந்தார். இந்தியா தன் சுயநலத்திற்காகவே தங்களை வளர்க்கிறது என்பதை பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் உணர்ந்தே இருந்தனர்

1984-ல் இந்திரா மறைந்தார். ராஜீவ் பிரதமர் பொறுப்புக்கு வந்தார். இந்தியா -இலங்கை உறவில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்பட்டன.

இந்திராவுக்கு இருந்த அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் ராஜீவுக்கு இல்லை. இலங்கைத தமிழர்களின் பிரச்சினைகளோ, அங்கு போராடும் தமிழ் மக்கள் படும வேதனைகளோ அவருக்குப் புரியவே இல்லை.

லண்டனில் படித்து, விமானியாகத் தொழில் ஏற்று, காதல் மணம் புரிந்து, மனதுக்குப் பிடித்த வகையில் சந்தோஷமாக வாழ்ந்த பணக்கார இளைஞர் அவர்.

என்றாவது ஒரு நாள், தான்அரசியலுக்கு வரக்கூடும் என்று அவர் கனவிலும் கூட நினைத்திராததால், நம்மைச் சூழ்ந்துள்ள அரசியலையோ, கடந்த கால வரலாறுகளையோ அவர் அறிந்திருக்கவில்லை.

இந்திரா எந்த காரணங்களுக்காக ஈழப்போராளிகளை ஊக்குவித்து வந்தார் என்பதை அவர் உணரவில்லை.

அனுபவமும், திறமையும் வாய்ந்த பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற வயதான தமிழ் அதிகாரிகளை அவருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை எல்லாம் வெளியேற்றினார்.

தனக்குப் பிடித்த அதிகாரிகளை, அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். துரதிருஷ்டவசமாக அவர்கள் அத்தனை பேரும் மலையாளிகளாகவும்,
தமிழர் விரோதிகளாகவுமே அமைந்தார்கள்.

இலங்கை அரசு தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி எதிர்பார்த்தார். பிராந்திய வல்லரசான இந்தியா விரும்புகிற வழியில்இலங்கை நடக்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார்.

அதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஒத்து வரவில்லை. இலங்கை அரசுக்கு பெருத்த தலைவலியாக இருந்த தமிழ்ப் போராளிக் குழுக்களை கட்டுப்படுத்தி இலங்கையில் உள்நாட்டு அமைதி ஏற்ப தான் உதவி செய்தால், ஜனாதிபதி ஜெயவர்த்தனே தனக்கு கட்டுப்படுவார், இலங்கை தனக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று ராஜீவ் நினைத்தார்.

எனவே ஈழப்போராளிகளை, போர் நிறுத்தம் செய்ய வைத்து, ஆயுதங்களையும் ஒப்படைக்கச் செய்வதாக ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனேவுக்கு உறுதிஅளித்தார். இதற்கு அடிப்படையாக இந்தியா -இலங்கை நாடுகளிடையே ஒரு ஒப்பந்தம் போடுவது என்றும் இந்த ஒப்பந்தம் நிறைவேறும் விதத்தில், இந்தியா ஒரு அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி உதவுவது என்றும் இருவருமாகப் பேசி முடிவெடுத்தனர்.

தமிழர் பிரச்சினையைப் பற்றி ராஜீவ் காந்திக்கு தெளிவான பார்வை கிடையாது என்கிற நிலையில், இலங்கையின் முக்கிய போராளிக் குழுவான விடுதலைப் புலிகளை – பிரபாகரனை கலந்து ஆலோசியாமலே ராஜீவும் ஜெயவர்த்தனே யும் மட்டுமே கலந்து பேசி, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் எப்படியும் இதற்கு ஒப்பமாட்டார்கள் என்று ஜெயவர்த்தனேவிற்கு நன்கு தெரியும். எனவே இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பிளவை உண்டு பண்ணி அவர்களிடையே விரோதத்தை வளர்க்கும் விதமாகவே ஜெயவர்த்தனே இந்த ஒப்பந்தத்தை உருவாக்க தீவிரமாக முயற்சித்தார். இந்த பின்னணியை அறியாத ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே விரித்த வலையில் வலியப் போய் விழுந்தார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்றும், தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் வடகிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் பரவலாக அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும். அனைத்துபோராளிக்குழுக்களும் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் (IPKF) வசம் ஒப்படைக்க வேண்டும்.

இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து போராளிக் குழுக்களையும் இந்தியா திம்புவில் அழைத்து வைத்துப் பேசியது.

தமிழர்களுக்குத் தேவையான சுயாட்சியைத் தான் பெற்றுத் தருவதாகவும், அனைத்துப் போராளிக்குழுக்களும், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதானத்திற்கு உடன்பட வேண்டும் என்று ராஜீவ் வற்புறுத்தினார். மற்ற சில குழுக்கள் உடன்பட்டாலும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பு இதற்கு உடன்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

ராஜீவுக்கு இது தன்மானப் பிரச்சினை ஆயிற்று.

ஆத்திரமும், கோபமும் இங்கே தலையெடுக்கின்றன.

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, பிரபாகரனுடன் பேசவிரும்புவதாக புலிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

என்ன பணி என்று கூறப்படாமலே, 6 விமானங்கள் அடங்கிய இந்திய விமானப்படைப்பிரிவு ஒன்று தில்லியிலிருந்து முதலில் பெங்களூருக்கும் பின்னர் அங்கிருந்து சூலூருக்கும் விரைந்து அனுப்பப்பட்டது. பின்னர் குரூப் கேப்டன் அஹுலுவாலியா தலைமையில் இரண்டு MI-17 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலிருந்து இலங்கையிலுள்ள பலாலி விமான தளத்தை சென்றடைந்தன. இந்திய விமானப்படை விமானம் ஒன்று இலங்கை பலாலி விமான தளத்தில் இறங்கியது இதுவே முதல் தடவை.

விருப்பம் இல்லாமலே பிரபாகரன் வற்புறுத்தப்பட்டு அந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். அங்கிருந்து அந்த ஹெலிகாப்டர் திருச்சியை அடைந்தது. திருச்சியிலிருந்து ஒரு விசேஷ ராணுவ விமானத்தில் பிரபாகரன் தில்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

தில்லியில், அசோகா ஓட்டலின் மேல்தளத்தில் பிரபாகரன் கிட்டத்தட்ட சிறையில் வைக்கப்பட்டது போல் தங்க வைக்கப்பட்டார். ஒப்பந்த நகல் அவரிடம் அளிக்கப்பட்டது. அவர் அதில் கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். பிரபாகரன் மறுத்தபோது – ஒப்பந்த நகலில் கையெழுத்திடாமல் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

பிரபாகரன் முற்றிலும் எதிர்பாராத ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த ஒப்பந்தத்தை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பது, தற்கொலைக்கு ஒப்பாகும் என்பது அவரது உறுதியாக எண்ணம். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ளாத ராஜீவ் காந்தியின் போக்கு அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

இங்கு தான் விரோதம் ஆரம்பிக்கிறது.

தன் அன்னை வளர்த்து விட்ட”பசங்க” தானே இவர்கள். தன் சொல்லுக்கு கட்டுப்படாமல் போவதா என்று ராஜீவிற்கு கோபம்.

இந்திரா சொல்லி ஆரம்பிக்கக்ப்பட்டதல்ல ஈழ விடுதலைப் போராட்டம். தொடர்ந்து சிங்களப் பெரும்பான்மையாளர்களால் துன்புறுத்தப்பட்டு வந்த தமிழர்கள் விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், வாழ்வதற்காக துவக்கப்பட்ட இயக்கம்,

இந்திரா பயிற்சி கொடுத்து ஊக்குவித்தார் என்கிற காரணத்தால், இயக்கத்தின் அடிப்படையான தனிஈழ லட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியுமா என்பது புலிகளின் – பிரபாகரனின் வினா.

இது வரை இலங்கை அரசு போட்ட எவ்வளவோ ஒப்பந்தங்களை தமிழர்கள் பார்த்தாயிற்று. இலங்கை அரசு எதையும் நடைமுறையில் நிறைவேற்றாது என்பது தமிழர்களின் அனுபவம்.

எனவே தனித் தமிழ் ஈழத்திற்கு குறைவாக எதற்கும் விடுதலைப்புலிகள் தயாரில்லை என்பது பிரபாகரனால் எடுத்துக்கூறப்பட்டது.

ராஜீவ் காந்தி தன் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. விடுதலைப் புலிகளின் லட்சிய வேட்கையையும், தாகத்தையும் புரிந்து கொள்ள அவர் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டே ஆக வேண்டும். இல்லையேல் பலப்பிரயோகத்திற்கு உட்படுவீர்கள் என்பது அவர் பயமுறுத்தல்.

இறுதியில், அந்த இடத்தை விட்டு வெளியேற வேறு வழி இல்லாததால், பிரபாகரன் ஒப்புக்கொள்வதாகக் கையெழுத்திட்டார்.

இங்கு விரோதம் மேற்கொண்டு வளர்கிறது !

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரபாகரன் ஒப்பந்தம் ராஜீவ் காந்தியால் தம் மீது எப்படி திணிக்கப்பட்டது என்பதையும் தான் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதையும் ஈழத் தமிழ் மக்களுக்குத் தெரிவித்து, சுதுமலையில், அம்மன் கோயில் திடலில் 04/08/1987 அன்று நிகழ்த்திய உரையின் சாரம் -

“நமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத்தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படை களுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப் படைகள் ஏற்கின்றன.

எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப்பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

Thursday, March 3, 2011

காற்றில் பரவும் நீரிழிவு நோய்


காற்று மாசுபடுதலால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தானே பரவும் என்று நினைத்தால் அது தவறு. காற்றில் உள்ள மாசு நீரிழிவு நோயினையும் உண்டு பண்ணுகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் வகை 2 நீரிழிவு நோய்க்கும், இரத்த நாடி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு எனக் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாசுப்பட்ட காற்றினை சுவாசித்து வருவதால் நமக்கும் இத்தகைய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மருத்துவர் மோகன் தெரிவிக்கையில், ” நமது வாழ்க்கை மாற்றமும், உணவுப் பழக்க வழக்கமுமே நீரிழிவு நோயினை கொண்டுவந்ததாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் அது முற்றிலும் தவறு. நீரிழிவு நோய் வருவதற்கு அது மட்டுமே காரணம் இல்லை, நல்ல வாழ்க்கை நலத்தைப் பேணுபவர்களுக்குக் கூட நீரிழிவு வருகிறது ” என்றார். காற்றில் உள்ள கடுமையான மாசுத்துகள்கள் நமது உடலில் உள்ள இன்சுலினைத் தாக்குகின்றது, அது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்துவிடுகின்றன என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் குறிப்பாக நகரங்களில் நீரிழிவு நோய் அபாயகரமாக பரவி வருகின்றன். இதற்கு முக்கிய காரணமே மாசுப் பட்ட காற்று தான். சென்னைப் போன்ற இந்திய மாநகரங்களில் காற்றில் கலந்துள்ள PM2.5 அமெரிக்க நகரங்களை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்க நகரங்களிலேயே இதன் மாசு அதிகம் எனக் கணித்துள்ள ஆய்வாளர்கள். சென்னையின் இந்த மாசு பன்மடங்கு அதிகம் இருப்பதால், சென்னையில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டிப்பாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்பாக அரசும், மக்களும் போதிய விழிப்புணர் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கும் செயலாகும். அதே போல காற்றின் மாசைக் கட்டுப்படுத்தவோ, ஆய்வறியவோ போதிய நடவடிக்கைகளும், வசதிகளும் இல்லாமல் இருப்பது இன்னொரு வகையில் பின்னடைவே !


இக்பால் செல்வன்.

Wednesday, March 2, 2011

தங்கபாலுவும் பிரபாகரனும்....






பெரியதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

Tuesday, March 1, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-1.

ராஜீவ் காந்தி மறைந்து 19 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.

பிரபாகரன் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசால் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய அரசே சொல்லுகிறது. (எவ்வளவு பேர் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது வேறு செய்தி) இரண்டு பேரும் மறைந்து விட்டதாகக் கருதப்படும் இன்றைய நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரையும் சார்ந்து நிகழ்ந்த பல சம்பவங்கள் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சிகள் ஆகின்றன.

ராஜீவ் காந்தி மரணத்தைப் பொறுத்த வரையில், மக்களுக்கு, அது ராஜீவ் குடும்பத்திற்கு விடுதலைப்புலிகளால் இழைக்கப்பட்ட கொடிய அநீதி என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுக் காலங்களில் இந்த சம்பவத்தின் ஒரு கோணம் மட்டுமே மக்களின் மனதில் பதிந்து இருக்கிறது. பதியப்பட்டு இருக்கிறது.

சரித்திர நிகழ்வுகளுக்கு எப்போதுமே பல கோணங்கள் உண்டு.ஒவ்வொரு கோணத்திலும் வித்தியாசமான பார்வைகளும் காட்சிகளும் கிடைக்கும். இது வரை இந்த சம்பவத்தைப் பற்றி ஒரே கோணத்தில் அனைவரும் பேசி வந்ததால், இது விஷயத்தில் மாறுபட்ட கோணங்களும் இருக்கக்கூடும் என்பதே பலருக்கு தோன்றவில்லை. சிலருக்கு அப்படித் தோன்றினாலும், அதைப்பற்றி பேசவோ, எழுதவோ தயங்குகிறார்கள்.

எல்லாரும் பேசத் தயங்கும் இந்த விஷயத்தைப் பற்றி விவரமாகப் பேச வேண்டும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். எனவே தான் இந்த தலைப்பு. எப்போது ஒரு சம்பவம் சரித்திரம் ஆகி விட்டதோ அதன் பின்னர் அதை பல்வேறு கோணங்களிலும் அலசிப் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஏன் இது நடந்தது ? இது எப்படி நடந்திருக்கக்கூடும் ? இதன் பின்னணி என்ன என்பது இன்றைய தமிழ் இளைஞர்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராஜீவ் காந்தி – இந்திராவின் புதல்வர், ஜவஹர்லால் நேருவின் பேரன் – தாயும் பிரதம மந்திரியாக இருந்தவர். தாத்தாவும் பிரதம மந்திரியாக இருந்தவர். பரம்பரை பணக்காரர். born with silver spoon என்று கூறுவார்களே அது போல் சகல வசதிகளுடன் பிறந்தவர் - வாழ்ந்தவர். டேராடூன் பப்ளிக் ஸ்கூலில் படிப்பு. லண்டனில் மேற்படிப்பு. தனக்குப் பிடித்த தொழில் – விமானியாகப் பணி. படிக்கும்போதே இத்தாலி நாட்டுப்பெண்ணுடன் காதல். பின்னர் காதலித்த பெண்ணுடனே திருமணம். பெண்ணும், ஆணுமாக இரண்டு அழகான குழந்தைகள். வாழ்க்கையில் துன்பத்தையே அறியாதவர்.

பிற்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனவே சமகால அரசியலைப் பற்றியோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றியோ தற்செயலாக அரசியலுக்கு வரும் வரை ஏதும் அறியாதவர். நல்ல புத்திசாலி. ஆனால் பிடிவாதக்காரர். தான் நினைப்பது நடந்தே தீர வேண்டும் என்று விரும்புபவர்.

அன்னை இந்திராவின் திடீர் மரணத்தால், மக்களிடையே பெருத்த அனுதாபத்தையும், அதன் காரணமாக தேர்தலில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெரும் அளவிற்கு மக்களின் ஆதரவையும் பெற்றவர். மிக இளைய வயதிலேயே 110 கோடி மக்களின் முழு ஆதரவைப்பெற்ற தலைவனாக உருவாகி 5 வருடங்கள் இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்தவர். இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்.

பிரபாகரன் – திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வர். தந்தை யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு உத்தியோகத்தில் இருந்த, மிக மிக எளிமை யான நேர்மையான மனிதர். பிரபாகரன் -சிறு வயதிலிருந்தே சிங்களஇனவெறி யர்களின் அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டே வளர்ந்தவர்.துன்பப்படும் மக்களிடையே வாழ்ந்தவர்.அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டவர். தமிழர்கள் இந்தக் காடையர்களின் கொடுமையிலிருந்து விடுபடும் நாள் எப்போது வருமோ என்று துடித்தவர் - தவித்தவர்.

தன் முன்னோடிகளாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும், பகத் சிங்கையும் ஏற்றுக்கொண்டவர். இனவெறி சிங்கள அரசாங்கத்திடமிருந்து விலகி தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ ஒரே வழி - தனித் தமிழ் ஈழம் அமைவது தான் என்று உறுதியாக நம்பியவர். தன்னை நம்பி வந்த இளைஞர்களுடன் சேர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்கியவர். சிங்கள அரசை எதிர்த்து, பல போர்முனைகளில் வென்று, கணிசமான அளவிற்கு ஈழ மண்ணை மீட்டு, சுதந்திர தமிழ் ஈழம் கனவல்ல – நனவு தான் என்று கண்ணில் காட்டியவர். ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் கால சரித்திரத்தில் மட்டுமே நாம் பார்த்த தமிழனின் வீரத்துக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர். எதற்கும், யாரைக்கண்டும் அஞ்சாதவர்.

மிகச்சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு இயக்கத்தை உருவாக்கியவர். எந்தவித தீய பழக்கங்களும் இல்லாத ஒரு கட்டுக்கோப்பான இளைஞர் சமுதாயத்தை தன் வழி காட்டுதலில் உருவாக்கியவர். வன்முறைத் தாக்குதல் அவரது வழி முறைகளில் ஒன்றாக இருந்தபோதும், அவர் மேற்கொண்டசெய்கைகளில் எதுவுமே சுயநலத்திற்காக இருந்ததில்லை. தமிழீழத்தை தன் உயிருக்கும் மேலாக நேசித்தவர். தன் தாய் மண்ணிற்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் சகலவித தியாகங்களையும் செய்தவர்.

இவர்களில் யார் ஹீரோ ? யார் வில்லன் ? இவர் தான் ஹீரோ என்று சிலரும் அவர் தான் ஹீரோ என்று வேறு சிலரும் கூறுவார்கள்.

இந்த இரண்டு பேரும் மட்டும் இணைந்து செயல் பட்டிருந்தால் - தமிழர்களின் கனவு என்றோ நனவாகி இருக்கும் ! ஐக்கிய நாடுகள் சபையில் தனித் தமிழீழத்தின் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருக்கும் !

இவர்கள் இரண்டு பேரையும் மோதவிட்டு தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொண்ட வில்லன் வேறு ஒரு ஆள். கிழட்டு சிங்கள நரி ஜனாதிபதி ஜெயவர்த்தனே !

அனுபவம் இல்லாத , அரசியலில் முதிர்ச்சி பெற்றிராத, இளைஞரான ராஜீவ் காந்தியின் ஈகோவைப் பயன்படுத்திக்கொண்டு, ராஜீவ் காந்தியைத் தன் சதியில் சிக்கவைத்து - பிரபாகரனுக்கும், தமிழீழ மக்களுக்கும் விரோதியாக்கிய நயவஞ்சகன் ஜெயவர்த்தனே !

இந்த விரோதம் உருவானது எப்படி ?

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்திரவு இட்டார் – இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டால் விசித்திரமாக இல்லை ?

ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு பிரபாகரன் தான் முக்கிய காரணமாக இருந்தார் என்கிற செய்தி இருக்கும்போது, மேற்கண்ட தலைப்பு மிகவும் விசித்திரமாகத் தானே இருக்கும் ?

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்திரவு போடும் அளவிற்கு அவர் களிடையே எத்தகைய விரோதம் இருந்தது என்பது ராஜீவ் காந்தி மறைந்து பல வருடங்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது. ஒரு வேளை இந்த விவரங்கள் முதலிலேயே வெளியாகி இருந்தால் – ராஜீவ் கொலையின் பரிணாமமே மாறி இருக்கலாம் – பின்னால் நிகழ்ந்த பல அவலங்கள் கூட நிகழாமல் இருந்திருக்கலாம்.

IPKF - சமாதானத்தை நிலை நிறுத்த இலங்கைக்கு இந்தியா அனுப்பியிருந்த படைக்கு முதல் கமாண்டராக பொறுப்பேற்று இலங்கைக்கு சென்றிருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் என்கிற நேர்மையான, வெளிப்படையான இந்திய ராணுவ தளபதி – அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கொடுத்துள்ள பேட்டியைப் படிக்கும்போது இது வரை நமக்குத் தெரியாத பல செய்திகள், புதிய கோணங்களில் கிடைக்கின்றன !

அவர் கூறியுள்ள செய்தி தான் இது. பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ்காந்தி உத்திரவு இட்டார்.

இந்தத் தலைப்பில் தொடர்ந்து எழுதும் முன்னர் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

ராஜீவிகாந்தியின் இறப்பிற்கு பின் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலங்களும் சொல்லொண்ணாத் துன்பங்கள் எப்பேற்பட்டவை ? இதற்கான காரணங்கள் என்ன ?

எண்பதுகளில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்து மக்களிடையே பெருத்த ஆதரவும், உணர்வுபூர்வமான கொந்தளிப்பும் இருந்தது. தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தில் செயல்பட வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

ஆனால் ராஜீவின் மரணத்திற்கு பிறகு சூழ்நிலை முற்றிலுமாக மாறி விட்டது.

ஈழத்தமிழர்களைப் பற்றி பேசவே தமிழக மக்கள் அஞ்ச ஆரம்பித்து விட்டார்கள் ஏன் இந்த அவல நிலை ?

இந்தியாவிற்கு என்று எழுதப்பட்ட சட்டங்கள் (Indian penal code, Crimininal Procedure code etc.) இருக்கின்றன. நீதிமன்றங்கள் இருக்கின்றன. குற்றம் ஏதேனும் நிகழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வாங்கித் தருவது அரசாங்கத்தின் பொறுப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பெண் அந்த விபத்திலேயே மாண்டு போனார். அதற்கு துணையாக இருந்தவர்கள் என்று கருதப்பட்ட பலர், போலீஸாரின் கைகளில் சிக்க விரும்பாமல், தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள். மிச்சம் மீதி இருந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டு, கடந்த 19 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் இதில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று அரசாங்கம் நினைத்தால், சம்பந்தப்பட்ட வர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தட்டும். யார் இதைத் தடுக்கிறார்கள் ?

அதை விட்டு விட்டு, ராஜீவ் காந்தி கொலைக்கு பழி வாங்கும் விதத்தில், ஒரு இனத்தையே, ஒட்டு மொத்த தமிழினத்தையே அழிக்க முற்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

காந்திஜியைக் கொன்றவர் ஒரு மராத்தியர் என்பதற்காக அத்தனை மராத்தியர் களையும் யாரும் கொடுமைப் படுத்தவில்லையே.

பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலராக இருந்த சீக்கியரே சுட்டுக் கொன்றபோது, உடனடியாக தில்லியில் காங்கிரஸ்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு கண்ணில்பட்ட சீக்கியர்களை எல்லாம் கொன்று குவித்தனர். .உண்மையே. ஆனாலும், வேகம் தணிந்த பிறகு அதே சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவரையே பிரதமராக இந்த நாடு ஏற்றுக்கொள்ளவில்லையா ?

மகாத்மா காந்தியின் கொலைக்கு காரணம் அவர் முஸ்லிம் இனத்தவர்க்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு பெருத்த இழப்புகள் ஏற்படக் காரணமாகவும் இருந்தார். என்று இந்துக்களில் ஒரு பிரிவினர் கருதியது தான்.


இதேபோல் இந்திரா அம்மையாரின் கொலைக்கு காரணம் பொற்கோயிலுக்குள் அவர் ராணுவத்தை அனுப்பி களங்கப்படுத்தினார் என்று சீக்கியர்களில் ஒரு பிரிவினர் கோபப்பட்டது தான்.

இதே போல் ராஜீவ் காந்தியின் இறப்பிற்கான காரணம் என்ன என்பதையும் நாம் வெளிப்படையாக விவாதித்து ஒரு தெளிவுக்கு வந்திருக்க வேண்டாமா ?

அதை விட்டு விட்டு, ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு தண்டனை வழங்குவதாக நினைத்துக் கொண்டு – பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, இன்னமும் தொடர்ந்து ஈடுபடுவதை – எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்

இவர்களது பழிவாங்கும் போக்கால் - லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் எப்பேற்பட்ட அவலத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது, இயன்ற விதங்களில் எல்லாம் அவர்களுக்கு ஆன உதவிகளைச் செய்வது மனசாட்சி உள்ளவர்களின் கடமை.

89,000 விதவைகள், ஒன்றரை லட்சம் உடல் ஊனமுற்றவர்கள், சொந்த நாட்டிலேயே அநாதைகளாக அலையும் மூன்று லட்சம் - பெண்கள், முதியவர்கள் – குழந்தைகள் !

ஈழத்தமிழர்களின இத்தனைத் துன்பங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருந்தவர்களை, சட்டம் தண்டிக்காவிடினும், சமுதாயம் தண்டிக்காவிடினும், என்றேனும் ஒரு நாள் அவர்களின் சொந்த மனசாட்சியே தண்டிக்கும் என்பது நிச்சயம். இந்த மாபெரும் அவலத்தை மாற்ற வேண்டும் – இந்த பாவப்பட்ட மக்களின் துயரைப் போக்க அனைத்து விதங்களிலும் செயல்படவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்க மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது.

ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.

ஆனால் மேற்கண்ட செய்தி தலைகீழாக இருக்கிறதே - ஜெனரல் ஹர்கிரத் சிங் சொல்வது போல் பிரபாகரனை சுட்டுக் கொல்ல ராஜீவ் உத்திரவு போட்டாரா ? ஏன் அப்படி ? எத்தகைய சூழ்நிலையில்,ஏன் இது நடந்தது. ஈழப்போராளி களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே அப்படி என்ன விரோதம் ?

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு, முக்கியமாக 30 -35 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினருக்கு இந்த விரோதத்தின் பின்னணி தெரியாது.அரசியலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உன்னிப்பாக கவனித்து வருகிற எனக்கு கூட இந்த இடுகைக்காக தகவல்களைத் தேடும் போதுதான் சில செய்திகள் புதிதாகத் தெரிய வந்தன.

இந்த பின்னணிக்குப் போகும் முன் - ஒரு பழைய தமிழ்ப்படம் பற்றி ஒரு சுருக்கம்.

1954ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த, பாடல்களே இல்லாத, ஒரு சீரியஸான தமிழ்த் திரைப்படம் “அந்த நாள். இன்றைய தலைமுறையினர் அதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஜாவர் சீதாராமன் எழுதி எஸ்.பாலசந்தர் இயக்கிய படம்.

மிகவும் புரட்சிகரமான கதையம்சம் உள்ள அந்த படத்தின் துவக்கத்தில்முதல் சீனிலேயே பிரபல விஞ்ஞானியாக நடிக்கும் சிவாஜி சுட்டுக கொல்லப்படுவார். படம் பார்ப்பவர் நெஞ்சம் பதை பதக்கும். அய்யோ – இவ்வளவு பெரிய விஞ்ஞானியை சுட்டுக் கொன்று விட்டார்களே என்று. சுடுவது யார் - சிவாஜி எதற்காகச் சுடப்பட்டார் என்பதைக் காட்ட மாட்டார்கள். அது தான் கதையே !

இவராக இருக்குமா – இல்லை இவராக இருக்குமோ என்று சிவாஜி கதாபாத்தி ரத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் கொலை செய்திருக்கக்கூடிய வாய்ப்புகளை யூகித்து, சித்தரித்து படம் நகரும். அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் சிவாஜியைக் கொலை செய்வதற்கு தேவையான அளவிற்கு தகுந்த காரணங்கள் இருக்கும்.

கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில், சுடுவது அவரது மனைவியே தான் என்று காட்டுவார்கள். படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் – அடிப்பாவி ! சண்டாளி -கணவனையே கொன்று விட்டாளே என்று திட்டுவார்கள்.

ஆனால் – அதற்கும் உச்ச கட்ட க்ளைமாக்ஸாக அந்த மனைவி ஏன் கட்டிய புருஷனைக் கொன்றாள் என்பதையும் காட்டுவார்கள். கணவனை விட, தன் தாய் நாட்டை அதிகமாக நேசிக்கும் பெண் அவள். கணவனால் தாய் நாட்டுக்கு ஆபத்து வரும்போது, நாட்டைக் காக்க வேறு வழி இல்லாத நிலையில் கணவனையே சுட்டுக்கொன்று விடுகிறாள். படம் இங்கு முடிவடைந்து விடுகிறது.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

நன்றி. விமரிசனம் – காவிரிமைந்தன்