Sunday, July 24, 2011

தமிழகத்து பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும்.



“தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்காமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் கேஸ் கிடைக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், டீசல், விலையேற்றம்?” என்றும்,

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் கேஸ் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று 23-ம் தேதி சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் காவிரிப் படுக்கையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்காமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் தாராளமாக கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதை போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை (ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாய் மாநிலமாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

இப்போது காவிரிப் படுக்கையை இந்திய அரசு திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 லட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றது. அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும் போது எத்தனை லட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

No comments: